WORD OF GOD

WORD OF GOD

Wednesday, February 8, 2012

மனம் அமைதி பெற 5


அன்பானவர்களே. நீங்கள் எத்தனைபேர் இப்போது கவனிக்கிறவர்களாக‌ மாறியிருக்கிறீர்கள் கவனிப்பது கடினமாக இருந்ததா? சுலபமாக இருந்ததா? நிச்சயம் கடினமாகவே இருந்திருக்கும், கவனிப்பதால் பல சரீர உபாதைகள் கூட ஏற்படுவதுண்டு. நான் முதன் முதலாக ஆலோசனை கொடுத்தது தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணுக்கு, அந்த அனுபவம் எனக்கு இன்றும் மறக்க முடியாது, காரணம், பேசியே பழக்கப்பட்ட எனக்கு கவனிப்பது பெரும் சிரமமாக இருந்தது, ஒரு பத்து நிமிடம் அவர்கள் சொன்னதை கூர்ந்து கவனித்ததும் கடுமையான தலைவலிக்கு ஆளானேன், கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர்களோடு அமர்ந்து அவர்கள் சொல்வதை கவனித்தது, அடுத்த நாள் விடுப்பு எடுக்கும் அளவுக்கு கடுமையான தலை வலிக்கு என்னை இட்டு சென்றது. அப்போதுதான் கவனிப்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தேன்.
ஆனாலும் அது எனக்குள் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கியது, ஒருவருடைய துன்பத்தில் நான் பங்கெடுத்த மன நிறைவு எனக்கு உண்டானது. அன்பானவர்களே நம் குடும்ப வாழ்வில் ஏற்படுகிற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம்தான் அது கவனிக்காமல் இருப்பது. 
 
என்னங்க இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? என்கிற மனைவியிடம் என்னமா நடந்தது? என்று பரிவாய் கவனிக்க துவங்குகிறீர்களா? அல்லது ஏண்டி இப்படி நச்சரிக்கிற போய் காபி போட்டு எடுத்துவா என்று கத்துகிறீர்களா?

ஏம்மா இன்னைக்கு ஆஃபிஸ்ல பயங்கர வேலம்மா.. என்று ஆரம்பிக்கும் கணவரிடம் அய்யோ ரொம்ப கஷடப்பட்டுட்டீங்களா? ஏங்க? என்று கணிவாய் கேட்கிறீர்களா? அல்லது இருங்க இந்த சீரியல் முடிஞ்சதும் பேசிக்கலாம் என்று விலகுகிறீர்களா?

கவனிக்காமல் விலகும்போதெல்லாம் உங்களுக்குள் கலவரங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லையா? வன்முறை எங்கே துவங்குகிறது ஒரு சமூகத்தின் குரல் எங்கே கவனிக்கப்படவில்லையோ அங்கே துவங்குகிறது. குடும்பத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் கூட வன்முறையின் மறு வடிவமே எனவேதான் கலவரம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஒரு சமூகமாக இருந்தாலும், தனி மனிதனாக இருந்தாலும் தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை தேடலாக இருக்கிறது, நாம் உடுத்துகிற ஆடை, பேசுகிற வார்த்தைகள், நடை, அனைத்திலும் அடுத்தவர்கள் நம்மை கவனிக்க வேண்டும் என்ற அடிப்படை தேடல்தானே நிறைந்திருக்கிறது. கவனிக்கப்படவில்லை என்றால் ஏமாற்றம் மிஞ்சுகிறதே?......

அதுதான் இன்று குடும்பத்திலும் உறவுகளுடையேயும் நடக்கிறது. எனவே கவனிப்பதே தீர்வு, உடையும் மனங்கள் ஒன்றினைய ஒரே வழி..

ஒருவருக்கொருவர் பேசுவதை பொறுமையாக கவனிப்பது.... ஒருவருக்கொருவர் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுப்பது...

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு.1:19

பயனுற்றால் கருத்துரையிடுங்கள்...

அன்புடன்
ஆருள்திரு..கில்பர்ட் ஆசீர்வாதம்.

Tuesday, January 31, 2012

நாம் தேடுகிறவை நம்மை தேடி வரும்!!!!!!

Text. Mark.1:16-20

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், மீண்டும் இந்த தளம் வாயிலாக உங்களை சந்திக்க செய்த கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், என்னை உற்சாகப்படுத்திய சகோதர சகோதரிக்கு என் நன்றிகள். நம்முடைய தியான பகுதியில், நம்முடைய ஆண்டவர் சீடர்களை தெரிந்தெடுத்த சம்பவத்தை வாசிக்கிறோம்.

அவர் கலிலேயா கரையோரமாய் போகும்போது, அங்கே சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் கண்டு உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன், என் பின்னே வாருங்கள் என்கிறார் உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு அவரை பின்பற்றினார்கள். கொஞ்ச தூரம் போனதும், யாக்கோபையும், அவன் சகோதரன் யோவானையும் கண்டார் அவர்களையும் அப்படியே அழைத்தார் அவர்களும் தங்கள் வலைகளை விட்டு அவரை பின்பற்றினார்கள்.

ஆனால் இது யதார்த்த வாழ்வில் நடக்க கூடியதா, திடீரென ஒருவர் வந்து வேலை செய்துக் கொண்டிருக்கிறவர்களை பார்த்து உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன், வாருங்கள் என்றால் அவரை பின்பற்றி போவார்களா? நான் உங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்களை அழைத்தால் நீங்கள் என் பின்னே வருவீர்களா? சாத்தியமே இல்லையே, பிறகு எப்படி சீடர்கள் இயேசுவை பின்பற்றி போனார்கள்? உண்மையில் இயேசு அவர்களை அழைத்த வரலாறில் பாதியைதான் இங்கே மாற்கு குறிப்பிடுகிறார். லூக்கா சுவிசேஷம் 5 ம் அதிகாரம் 1 முதல் 11 வசனங்கள் வரை உள்ள பகுதியில் இந்த அழைப்பின் முழு வரலாறும் நாம் பார்க்க முடியும்.

இயேசு கலிலேயா கரைக்கு போனார், அங்கே, சீமோனின் படகில் இயேசு பிரசங்கம் செய்தார், பிரசங்கம் முடிந்து ஆண்டவர் தனக்கு படகு கொடுத்தவர்களின் கைகள் வெறுமையாய் இருப்பதை கண்டார், அவர்களை வலையை ஆழத்தில் போட சொன்னார், அதற்கு சீமோன் கூறிய பதில் நாங்கள் இரவு முழுதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆயினும் நீர் சொல்லுகிறபடி செய்கிறேன் என்றான். காரணம் சீமோன் பிறப்பால் ஒரு மீனவன், கடலையும் கரையையும் முழுதும் அறிந்தவன்.

சமீபத்தில் ஒரு போதகர் தன்னுடைய செய்தியிலே ஒரு விஷயத்தை குறிப்பிட்டார், அதாவது தாணே புயல் சமயத்தில் அவர்களுடைய திருச்சபை வாலிபர் கடலால் இழுத்து செல்லப்பட்டாராம், கேள்விப்பட்ட போதகரும் சபையாரும் கடற்கரையில் வாலிபனை தேடி ஓடினார்களாம், அப்போது அங்கே இருந்த ஒரு வயது முதிர்ந்த மீனவர் சொன்னாராம், அவ்ளோதான் சார், இன்னும் 2 நாள்ல சடலம் இந்த இடத்துல கரை ஒதுங்கும், அப்படி இல்லனா 7 நாள்ல அங்க கரை ஒதுங்கும், அப்படி இல்லனா, நீங்க சடலத்த மறந்திடுங்க என்றாராம், தேடிக் கொண்டிருந்த அனைவரும் விழித்தார்களாம், ஆனால் அந்த முதியவர் சொன்ன அதே இடத்தில் இரண்டு நாள் கழித்துதான் வாலிபரின் உடல் கிடைத்ததாம்.

அதாவது கடலின் ஒவ்வொரு அலையும் மீனவர்களோடு பேசும், கடலை முற்றும் அறிந்தவர்கள் மீனவர்கள், எனவேதான் சீமோன் கூறுகிறான், நாங்கள் இரவு முழுவதும் பிரயாசப்பட்டோம், ஒன்றும் அகப்படவில்லை என்று, ஆனால் கடலை அறியாத தச்சனான, ஆண்டவர் ஆழத்தில் வலை வீசுங்கள் என்கிறார், அவரது வார்த்தைக்கு கீழ்படிந்து, வலைவீசினார்கள் வலைகள் கிழியதக்கதாய் படகு அமிழதக்கதாய் மீன்கள் கிடைத்தது, அது மாத்திரமல்ல, பக்கத்தில் இருந்த யாக்கோபு யோவானின் படகையும் அழைத்து அதிலும் மீன்களை கொட்டினார்கள் அதுவும் மூழ்க தக்கதாய் நிறைந்தது.

அவரது மகத்துவத்தை கண்ட பேதுரு அஞ்சி ஆண்டவரே நான் பாவி என்னை விட்டு போய்விடும் என்றான். ஆனால் ஆண்டவரோ, உன்னை மனுஷர்களை பிடிக்கிறவர்களாக்குவேன், என்னை பின்பற்றுங்கள் என்றார், உடனே அவர்கள் தங்கள் வலைகளையும் உறவுகளையும் விட்டு அவரை பின்பற்றினார்கள். இப்படிதான் ஆண்டவர் அவர்களை அழைத்தார், ஆனால் மாற்கு சுவிசேஷகன், இந்த வரலாறையே மறைத்துவிட்டு, அழைத்தார் அவர்கள் வலைகளை விட்டு பின்பற்றினார்கள் என்கிறாரே? ஏன்?

 காரணம் இருக்கிறது, மாற்கு சுவிசேஷம்தான் நான்கு சுவிசேஷங்களில், மிகவும் சிறியது, காரணம் என்னவென்றால், அவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்துள்ளார், அப்படியானால் ஆழத்தில் மீன்கள் கிடைக்க செய்த அற்புதம் முக்கியமில்லையா? என்றால் கொஞ்சம் யோசித்தால் அதற்கு விடை கிடைக்கும். ஆண்டவர் எப்போதுமே கொடுக்கிறவர், முழு உலகையும் படைத்த பின்னர், மனிதனுக்கு தேவையான அனைத்தையும் படைத்த பின்னர்தான் மனிதனை படைத்தார், நமக்கு கொடுப்பது அவருக்கு அற்ப காரியம், அவர் இருப்பதே நமக்கு கொடுக்கதான், ஆனால்

நாமோ, அவர் கொடுத்ததை பிடித்துக் கொள்கிறோம், அதிலே களி கூறுகிறோம், அதை பெருமை பாராட்டுகிறோமே தவிர, கொடுத்தவரை மறந்து போகிறோம். ஆனால் சீடர்களோ, கடவுள் கொடுத்த திரளான மீன்களை விட்டு விட்டு, கொடுத்தவரை பிடித்துக் கொண்டார்கள். இதை வலியுறுத்தவே மாற்கு அவர் கொடுத்ததை விட்டுவிட்டு, கொடுத்தவரை பின்பற்றியதை எழுதுகிறார். எல்லாவற்றையும் விட்டு அவருக்கு பின் சென்றார்கள், ஆனால் ஒரு மனிதன் நாடி தேடுகிற அனைத்தும் அவர்களுக்கு கிடைத்தது.

அன்பானவர்களே நாம் இப்போது எதை பெருமையாக நினைக்கிறோம், எதை பெருமையாக பேசி வருகிறோம், கடவுள் கொடுத்ததையா? அல்லது கொடுத்த கடவுளையா? கொடுக்கிறவரை பின்பற்றினால், நாம் தேடுகிறவை நம்மை தேடி வரும். அவரே நமக்கு முக்கியம். அவரில் நிலைக்க பிழைக்க, அவரோடு வாழ கடவுள் நமக்கு பெலன் தருவாராக. ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, January 6, 2012

(2012) புத்தாண்டு எப்படியிருக்கும்??



அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், புத்தாண்டு துவங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிய போகிறது. நமக்கு எப்போதும்  புதியவைகளின் மீது ஈர்ப்பு அதிகம், குழந்தைகளுக்கு ஒரு புதிய பொம்மையோ சாக்கலேட்டோ  வாங்கி கொடுத்தால், அவர்கள் ஆனந்தத்தில் துள்ளுவதை காணமுடியும். அதே போல பெரியவர்களாகிய நமக்கும் கூட  புதியவைகளின் மீது அதீத ஈர்ப்பு உண்டு.  ஒரு புதிய வாகனம் வாங்கினால், புதிய ஆடை வாங்கினால், புதிய வீடு கட்டினால், நம் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளும். அதே போலதான் இந்த புதிய வருஷத்தில் அடியெடுத்து வைக்கும்போதும் இயல்பாகவே நம் உள்ளம் துள்ளுகிறது.

நான் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைக்காக திருப்பத்தூருக்கு போக வேண்டியிருந்தது, நான் போகிற வழியிலே புத்தாண்டு பிறந்தது, அப்போது சாலையோரங்களில் கூடியிருந்த வாலிபர்கள் சாலையில் சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, பயணிகளோடு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டார்கள், அநேகர் இனிப்புகளை கொடுத்தார்கள், பயணம் எனக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. அதே நேரத்தில் ஒவ்வொருவரது ஆனந்தத்திற்கு பின்னால் ஒரு எதிர்பார்ப்பு  இருந்ததை என்னால் உணர முடிந்தது, ஏன் எனக்குள்ளும்
 புத்தாண்டை குறித்து அனேக  எதிரபார்ப்புகள் இருக்கிறது, நான் எதிர்பார்க்கிற நன்மைகள், நான் ஊழியத்திற்காகவும், குடும்பத்திற்காகவும்
 திட்டமிட்டிருக்கிற காரியங்கள் இந்த புத்தாண்டிலாவது நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பும், இந்த புதிய வருஷத்தில் வாழ்க்கை எப்படியிருக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இது நம் ஒவ்வொருவருக்குமே இயல்பான ஒன்றுதான் எனவேதான் அநேகர் புத்தாண்டு பிறக்கும் முன்னரே தங்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்பதை அறிய ஜோசியங்கள் கேட்பது  மக்கள் மத்தியில் இயல்பாக  இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

ஆனால் இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதை என்னால் நிச்சயம் முன் கூட்டியே சொல்ல முடியும். அதற்கு முன் நாம் கடந்து வந்த 2011ம்  ஆண்டு எப்படியிருந்தது என்பதை ஒரு முறை பார்ப்போம், ஜப்பானிலும் உலகெங்கிலும் பூகம்பங்கள், பொருளாதாரத்தில் வல்லரசான அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி, உலகெங்கும் ஏற்பட்ட அனேக புரட்சிகள், இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தம். . லஞ்சம், ஊழல், பெருகிப்போயிருந்தது, மக்கள் நலம் காணும் தலைவர்களே இல்லை என்கிற அளவுக்கு நல்ல தலைவர்கள் இல்லாமல் போய்விட்டது. தானே புயலின் கோரத்தாண்டவம், பெட்ரோல் விலை ஏற்றம், பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு. இப்படி அனேக இக்கட்டுகளை சந்தித்தோம்.  நாம் பெற்ற சில  நன்மைகள் இந்த செய்திகளுக்குள் மறைந்தே  போனது.

ஏன் இப்படியெல்லாம் நடந்தது? அன்பானவர்களே ஆண்டவர் நமக்கு தெளிவாய் கூறியிருக்கிறார் இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு (யோ.16:33) என்று. ஆம் நாம் நன்மைகளின் மத்தியில் மட்டும் அல்ல தீமைகளின் மத்தியிலும் வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் தீமைகளினால் நிறைந்தது. டிவி, இன்டர்நெட், சினிமா, அரசியல், இவைதான் உலகின் மிகப்பெரிய சக்திகளாக உருவெடுத்துள்ளன இதில் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? என்றால் உங்கள் பதில் என்ன? இதுதான் நாம் வாழும் உலகம். எனவே இந்த ஆண்டும் இந்த உபத்திரவங்கள் ஒன்றும் அப்படியே மாயமாய் நம்மைவிட்டு ஓடிவிடாது. உபத்திரவங்களின் மத்தியில்தான் இந்த புதிய வருடமும் இருக்கும். ஆனால் நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்று ஏசாயா.41:10௦ ல் கூறியுள்ள கடவுள் நம்மை ஜெயமாய் நடத்துவார்.

கடந்த ஆண்டெல்லாம், நாம் சந்தித்த அத்தனை உபத்திரவங்களிலும் வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற (சங்கீதம்.65:11) இந்த சர்வ வல்லவர் நம்மொடிருந்ததால் ஜெயமாய் முடித்துவிட்டோம், ஜீவனோடும், ஆரோக்யத்தொடும், அற்புதமாய் முடித்துவிட்டோம். இந்த புதிய ஆண்டிலும் வாக்குமாறா  நம் உண்மை நாதர் நம்மோடிருக்கப்போகிறார், இந்த வருஷத்தையும் உபத்திரவங்களின் நடுவே நன்மையால் நமக்கு முடிசூட்டப்போகிறார். அவரை  மட்டும் நம்பி இந்த புதிய ஆண்டை துவங்குவோம், நம்மை அல்ல நம்மை சுற்றியுள்ளோரையும்  அல்ல உலகையும் அல்ல அதின் வாழ்வையும் அல்ல, வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறவரை மட்டும் நம்பி இவ்வாண்டை துவங்குவோம். இவ்வாண்டையும்  உபத்திரவங்களின் மத்தியில் ஜெயமாய் முடிப்போம். ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews