WORD OF GOD

WORD OF GOD

Tuesday, August 30, 2011

கடவுள் வாய்க்க செய்வார்

அன்புள்ள உடன் விசுவாசிகளே உங்கள் யாவர்க்கும் அன்பின் ஸ்தோத்திரங்கள்.இன்று நாம் தியானிக்கபோகிற வசனம்

ஏசாயா.54;17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.

1சாமுவேல் 17ஆம் அதிகார‌த்தில், தாவீது போர்க‌ளத்தில் இருக்கிற தன் ச‌கோதர‌ர்க‌ளுக்கு உணவு கொண்டு வ‌ருகிறான்,அங்கே அவ‌ன் காண்கிற காட்சி அவ‌னுக்குள் பெரிய‌ வேத‌னையை உன்டாக்குகிறது.

காரணம், போர்க்களத்தில், இஸ்ரவேல் படை வீரர்கள் நடுங்கிக் கொண்டிருக்க, பெலிஸ்தியர் படைத்தலைவன் கோலியாத், இஸ்ரவேலர்களையும், இஸ்ரவேலின் கடவுளாகிய சர்வ வல்லவரையும் மிக கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறான். வாலிபனான தாவீதால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே போர்க்களத்திலேயே வீரர்கள் மத்தியில், பெலிஸ்தியனை கொலை செய்வதை பற்றி ஆலோசிக்கிறான். அவன் சகோதரர்களோ, அவன் மீது கோபம் கொள்ளுகிறார்கள், ஆனால் தாவீதோ, அவர்களிடம் பேசாமல் மற்றவர்களிடம் பேசுகிறான்.

அவர்கள் அவனை அரசனாகிய சவுலிடம் அழைத்து போகிறார்கள். அங்கே அரசனுக்கு முன்பாக நான் பெலிஸ்தியனோடு யுத்தம் பண்ணுவேன் என்கிறான். சவுலோ உன்னால் முடியாது என்று சொன்ன பிறகும், தாவீது தன் முடிவில் உறுதியாக இருந்தான். உடனே, போர்க்கள ஆடைகளும், ஆயுதங்களும் அவனுக்கு கொடுக்கப்பட்டது, ஆனால் அவைகளை சுமக்கக் கூட அவனால் முடியவில்லை. எல்லாவற்றையும் களைந்துவிட்டு கற்களையும், ஆடுமேய்க்கும் போது பயன்படுத்தும் தடியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் தடியோடு வருகிறதை கண்ட கோலியாத், நான் என்ன நாயா? என்று அவனை பரிகசித்தான். அதற்கு தாவீது சொன்ன பதில்..

1சாமுவேல்.17:45. அதற்கு தாவீது பெலிஸ்தியனை நோக்கி; நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்றான்.

ஆம் பிரியமானவர்களே, பெலிஸ்தியன், யுத்த ஆயுதங்களோடு, புறப்பட்டு வந்தான், தாவீதோ வெறும் கற்களை ஆயுதங்களாக கொண்டு போனான். ஆனால் கோலியாத்தின் ஆயுதங்கள் வாய்க்காதே போனாது, அவன் தன் ஆயுதங்களை எடுக்கக் கூட நேரம் தராமல் அவனை வீழ்த்தினான் தாவீது. காரணம் கடவுள் அவனோடு இருந்தார்..... அதுமட்டுமல்ல....

இஸ்ரவேலர்கள் மோசேவின் தலைமையில், எகிப்திலிருந்து புறப்பட்டு மிக வேகமாக கானானை நோக்கி பயணித்தார்கள், ஆனால் அவர்கள் பயணத்தில் கொஞ்ச‌ தூரத்திலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தார்கள், செங்கடல் குறுக்கே வந்ததால் எப்படி போவதென தெரியாமல், உயிர் பயத்தில் செய்வதறியாமல், மோசேவை நோக்கி புலம்பினார்கள், இந்த செய்தி, எகிப்தின் அரசனுக்கு தெரிந்தது, அவன் உடனே என்ன செய்தான் தெரியுமா?

யாத்திராகமம்.14:6,7 அவன் (அரசன்) தன் ரதத்தை பூட்டி, தன் ஜனங்களை கூட்டிக்கொண்டு, பிரதானமான அறுனூறு ரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல ரதங்களையும், அவைகள் எல்லாவற்றின் அதிபதிகளான யுத்த வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.

ஆம் அன்பானவர்களே, யுத்த ரதம் என்பது அனைத்து யுத்த ஆயுதங்களோடு புறப்படும் வாகனம், இப்படி ஆயுதக் குவியலோடு,  இஸ்ரவேலர்களை செங்கடலின் கரையில்  பிடிக்க போனான்.. ஆனால் நடந்தது என்ன கடவுள் செங்கடலை இரண்டாக பிளக்க செய்து அதன் நடுவில் இஸ்ரவேலரை நடக்க வைத்தார். ஆனால் ஆயுதங்களோடு வந்த யுத்த வீரர்களும், இரதங்களோடே, கடலில் மூழ்கி அழிந்து போனார்கள். அவர்கள் ஆயுதம் வாய்க்காதே போனது காரணம், கடவுள் இஸ்ரவேலரோடே இருந்தார்.

அன்பானவர்களே இதே சேனையின் கடவுள் ஆண்டவராகிய இயேசுவாய் நம்மோடு வாழ்ந்தார், தூய ஆவியானவராய் நம்மோடிருக்கிறார். எனவே உங்கள் வாழ்வுக்கு எதிராக செயல்படுவோரும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமும் வாய்க்காதே போம். உங்களை அழிக்க நாவை ஆயுதாமாக பயன் படுத்துகிறார்களா? பணத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறார்களா? பதவியை ஆயுதமாய் பயன்படுத்துகிறார்களா? வேறே ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா? அச்சம் வேண்டாம் காரணம் நாம் கையிட்டு செய்கிற காரியத்தை கடவுள் வாய்க்க செய்வார்.

உங்களுக்கு எதிராக செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். ஆமேன்..


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, August 26, 2011

கிறிஸ்தவர்களே ஊழலுக்கெதிராய் அணி திரள்வோம்

அன்பான எனதருமை உடன் விசுவாச்சிகளுக்கு  என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று காலை நாம் தியானத்திற்கென்று நாம் எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை மத்தேயு.7 :21 -23  .

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை..

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

தற்போது நம் நாட்டில் ஒரு பெரிய புரட்சி நடந்து வருகிறது. திரு.அன்னா அசாரே அவர்கள் தலைமையில் நாடே ஊழலுக்கு எதிராக திரும்பி வருகிறது. அவர் முன் வைக்கும் சட்ட வரைவு நிறைவேறும் பட்சத்தில் நிச்சயம் ஊழலின் வீரியம் நம் நாட்டில் பெருமளவு குறைய வாய்ப்பிருக்கிறது.  ஆனால் அரசியல்வாதிகளின் மத்தியில் இந்த சட்ட முன் வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது.  வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும், மசோதாவை நிறைவேற்றாமல் இருக்க அவர்கள் கூறும் சப்பை காரணங்கள் மூலம் நாம் இதை அறிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக ஊழலில் ஊறிப்போனவர்கள் அதிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.  ஆனால் வேதாகமம்  இந்த முறைக் கேடான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கடுமையான எச்சரிப்பை தருகிறது. நாம் இன்று எடுத்துக் கொண்டிருக்கிற தியான வசனத்தில் ஆண்டவர் யார் பரலோக ராஜ்ஜியத்திற்கு போவார்கள் யார் போகமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் அத்தனை பேருடைய நோக்கமும் ஒன்றே ஒன்றுதான், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விடுத்து, அழிவில்லா வாழ்வை அருளும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டும் என்பதே. இந்த மேனமையான வாழ்வில் எல்லா கிறிஸ்தவர்களும் பங்கெடுக்க முடியாது, என்பதை தான் இன்றைய தியான வசனம் நமக்கு கூறுகிறது. அப்படியானால் யார் பிரவேசிக்க முடியும்?

பிதாவின் சித்தபடி செய்கிறவன் எவனோ அவனே பரலோக வாழ்வில் பிரவேசிப்பான் என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே.. என்று கூப்பிடுகிறவனையும், உமது நாமத்தில் பிசாசுகளை துரத்தினோம், தீர்க்கதரிசனம் உரைத்தோம், என்று சொல்லுகிறகிரவனையும்,  அக்கிரமக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று கூறுவேன் என்கிறார்.  ஆம் பிரியமானவர்களே, ஆலயத்திற்கு ஒழுங்காய் வந்து, அல்லேலுயா என்றும் ஸ்தோத்திரம் என்றும் நாள்தோறும் சொல்கிறவர்களும், பெரிய நீதிமான்களாக  தங்களை காட்டிக்கொண்டு, உத்தமமாய் பிரசங்கிக்கிற ஊழியர்களும், அற்புதங்களை செய்கிறோம், பிசாசுகளை விரட்டுகிறோம், தீர்க்கதரிசனம் உரைக்கிறோம், என்று சொல்லுகிற ஊழியர்களும், பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று தெளிவாக ஆண்டவர் கூறுகிறார். ஏன்?

பிதாவின் சித்தபடி செய்கிறவர்களாய் அவர்கள்  இருக்க வேண்டும்? இவையெல்லாம் பிதாவின் சித்தம் இல்லையா? ஆம் இவையெல்லாம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தின் அடையாளம் அவ்வளவே.. பிதா நம் மீது கொண்டிருக்கும் சித்தம் என்பது முற்றிலும் வேறாய் இருக்கிறது? எது பிதாவின் சித்தம்?  ஆண்டவர் தெளிவாக சொல்லுகிறார்.. உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், கடவுளிடத்தில் அன்பு கூற வேண்டும், அதே போல உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் சக மனிதனிடத்தில் (அயலானிடத்தில்) அன்பு கூற வேண்டும் என்கிறார். இதுதான் பிதாவின் சித்தம்.

1 கொரிந்தியர் ,13 ம் அதிகாரத்தில், ஆவியின் வரங்களை பற்றி பேசுகிற பவுல் அவையெல்லாம் ஒழிந்து போகும் என்கிறார், தீர்க்கதரிசனம் கூட ஒழிந்து போகும் என்கிறார், 13 ம் வசனத்தில் நிலையான மூன்றை கூறுகிறார், அவையாவன.. விசுவாசம், நன்னம்பிக்கை, அன்பு.. இதில் அன்பே பெரியது என்று கூறி கிறிஸ்தவர்கள் வரங்களை விட அன்பை நாட வேண்டும் என்று முடிக்கிறார்.

அன்பானவர்களே இந்த அன்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறதா? லஞ்சம் வாங்கும் கிறிஸ்தவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியுமா? தலை கீழாக நின்றாலும் வாய்ப்பில்லை. சக மனிதனுக்கு வாழ்வு கொடுக்காமல் அவன் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற யாரும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது.  ஒருவன் வாழ்வுக்கு காரணமாய் கிறிஸ்தவன் இருக்க வேண்டுமே தவிர, ஒருவன் வீழ்ச்சிக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

ஊழியம் செய்யலாம், வல்லமையாய் பிரசங்கிக்கலாம், உபாவசமிருந்து ஜெபிக்கலாம், ஊழியங்களுக்கு வாரி, வாரி கொடுக்கலாம். சக மனிதனின் மீது அன்பில்லாமல் பதவிக்கும்,  பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் கடவுளுடைய ராஜ்ஜியத்தின் வாசலை கூட எட்ட முடியாது.  இங்கே வேண்டுமானால் பதவியிலும் பணத்திலும் திழைக்கலாம்.. ஆனால் என்ன பிரயோஜனம் சத்தியமாய் இது நிரந்தரமல்ல.. 70  வருடம் பலத்தின் மிகுதியால் 80  வருடம் அவ்வளவுதான் எல்லாம் முடிந்து போகும்.

அன்பானவர்களே, நாமும் ஊழலிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும், ஊழலுக்கு எதிராக போராடவும் வேண்டும்.. அடுத்தவன் பணத்தை குறி வைக்கிற யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது.. அனுமதிப்போமானால் நம் கண்ணுக்கு தெரிந்து ஒரு ஆத்துமாவின் அழிவுக்கு நாம் காரணமாகிவிடுவோம்.. கிறிஸ்துவின் வழி நிற்போம்..  திருச்சபைகளில்  மண்டிக் கிடக்கிற ஊழலக்கு எதிராக அணிதிரள்வோம்... இந்த திருவசனங்கள் வாயிலாக பரிசுத்தாவியானவர் நம்மை காத்துக் கொள்வாராக  ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, August 25, 2011

பாவம் போக்கும் பரிகாரி.

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய  ஸ்தோத்திரங்கள். உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்றவை மிக பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. நடை, உடை, பாவனை, பேச்சு, போன்றவை நாகரீகம் என்ற பெயரில் முற்றிலும் மாறிவிட்டது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மனிதன் மாறிவிட்டான்.


மனிதனின் தோற்றம் மாறிவிட்டது, வாழ்க்கை மாறிவிட்டது. ஆனால் மனிதனின் சுபாவம் மட்டும் மாறவேயில்லை என்பதை இன்றும் நடந்துவருகிற நிகழ்வுகளை கண்டால் நமக்கு தெளிவாக தெரிந்துவிடும். ஆதி காலத்தில் கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தி உயிர்களை நாகரீகமே இல்லாமல் வேட்டையாடினவன், இன்று குண்டுகளை பொழிந்து மனிதாபிமானமே இல்லாமல் உயிர்களை குடித்து வருகிறான். இலங்கை போர், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடந்த யுத்தம், உலகெங்கும் வியாபித்திருக்கும் தீவிரவாதம் போன்றவை மிக மோசமான உதாரணங்கள். இன்னும் அனேக உதாரணங்கள் உண்டு அவைகளை நீங்களே அறிவீர்கள்.


ஏன் இந்த சுபாவம் மட்டும் மாறவேயில்லை? இதுதான் பாவத்தின் வல்லமை. மனிதன் முற்றிலும் மாறிவிட்டான் ஆனால் அவன் பாவ சுபாவம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஒத்துக் கொள்ளுகிறீர்களா? நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. அதை நமது மனசாட்சி அறியும். நாம் பாவத்தை செய்துவிட்டு, முகத்துக்கு பௌடர் பூசி அதை மறைக்க முயற்சிக்கிறோம். எங்கெங்கு காணினும் பாவம் புரையோடியிருக்கிறது. இன்று பாவம் இல்லாத ஒரு இடம் உண்டா? உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம், வேதனை என்ன்வென்றால் திருச்சபையை கூட சொல்ல முடியாது.


அப்படியானால் மனிதன் மாற வேண்டியது தோற்றத்திலோ, வாழ்க்கை முறையிலோ அல்ல, சுபாவத்தில் மாற வேண்டும், பாவ சுபாவம் மனிதனை விட்டு நீங்குமா? நீங்க வழி இருக்கிறதா? இது வரை செய்த பாவத்திற்கு மன்னிப்பு இருக்கிறதா? உண்டு என்பதை இங்கே உறுதியாக பதிவு செய்கிறேன், ஆம் வேதாகமத்தில் ரோமர்.8 ம் அதிகாரம் 33 ம் வசனத்தில் பவுல் கூறுகிறார், தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல்  குற்றம் சாட்டினவன் யார்? அவரே அவர்களை நீதிமான்க‌ளாக்கினார். ஆம் பிரியமானவர்களே, கடவுளே பாவிகளாகிய நம்மை நீதிமான்களாக்குகிறார்.

எப்படி இது சாத்தியம்? அதற்காகதான் கடவுள் இயேசுவாக இந்த உலகத்திற்கு வந்தார். ஒரு தவறு கூட செய்யாத அவரை கொடிய சிலுவையில் ஏற்றி கொலை செய்தார்கள், அதை அவர் பொறுமையாக ஏற்றுக் கொண்டார். ஒரே ஒரு காரணத்திற்காக அந்த காரணம் நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்பதே. ஆம் பிரியமானவர்களே, நம் எல்லருடைய பாவத்திற்கும் பரிகாரமாக நாம் பெற வேண்டிய கொடிய மரண தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் அவரை நம்புகிற யாவரையும் பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறார். நீங்கள் இதை நம்புகிறீர்களா? நம்பினால் அவர் உங்களை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம், உங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறார் என்று அர்த்தம்.

அதுமட்டுமல்ல, ரோமர்.8 ம் அதிகாரம், 30 ம் வசனத்தில் கடவுள் யாரை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்குகிறார் என்றும், யாரை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்றும் வாசிக்கிறோம்.

அன்பானவர்களே, நாம் அவரை நம்பினாலே, நம்மை தன் சொந்த பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுகிறார், நம் கொடிய பாவங்களை மன்னித்து நீதிமான்களாக்குகிறார், அது மட்டுமல்ல நம்மை மகிமைப்படுத்துகிறார். அதாவது நம் பாவ சுபாவத்தை மாற்றி நம்மை இவ்வுலகில் மகிமையானவர்களாக்குகிறார். இது நடக்குமா? நாமல்ல சொன்னவர் நடத்தி காட்டுவார். இயேசுவை நம்புவோம், மாற்றங்களை அனுபவிப்போம் ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews