WORD OF GOD

WORD OF GOD

Wednesday, November 28, 2012

சிறுவர் கொண்டாட்டம்

 

அன்பிற்கினிய உடன் விசுவாசிகளே, நமது சிறுவர் ஊழியத்தின் சார்பாக, வருகிற வெள்ளிக்கிழமை கிறிஸ்டோ கிரேஸ் துவக்கப்பள்ளியில் சிறுவர் கொண்டாட்டம் நடைபெற உள்ளது அதன் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

Monday, October 29, 2012

கிறிஸ்தவர்களே இது சரிதானா?

இயேசுவின் இனிய சகோதர சகோதரிகளே, சமீப காலமாக சில பிரசங்கியார்கள் செய்யும் பிரசங்கங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவைகள் கர்த்தருடைய வார்த்தையா? என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களாகிய நம்மை திசை திருப்பும் சதியாகவே அந்த பிரசங்கங்கள் எனக்கு தோன்றுகின்றது. நான் கேட்ட அந்த பிரசங்கங்களில் இரண்டு.
இடம்:சென்னை பிரசங்கியார்: தொலக்காட்சிகளில் வருகிறவர்.
பிரசங்கத்தின் சுருக்கம்;
கடவுள் ஏழையல்ல, அவர் பணக்காரர், பரலோகத்தில் பொன் வீதி போட்டு நம்மை தங்கத்தின் மீது நடக்க அழைக்கிறார். அவரிடத்தில் பொன்னை கேளுங்கள். அவர் ஆபிரகாமை சீமானாய் வாழவைத்தவர், உங்களையும் சீமானாக்குவார், இயேசு ஏழை அல்ல, அவர் அங்கி விசேஷமானது, ஏழை லாசரு கதையை வாசிக்காதீர்கள், அது வேதாகமத்தில் வீணானது.
இது சரியா?
கடவுள் ஏழை அல்ல சரிதான், அவர் பணக்காரர் சரிதான், பொன் வீதி பரலோகத்தில் உள்ளது சரிதான், அவரிடத்தில் பொன்னை கேளுங்கள் என்பது சரியா? இல்லை.. மாறாக பொன்னையும் வெள்ளியையும் அவர் படைக்கும்போதே நமக்கு கொடுத்துவிட்டாரே??????? கொஞ்சம் உழைத்தால் நாம் விரும்பும் தங்கத்தை நாம் வாங்கிவிடலாமே, நாம் தங்கத்துக்கு அலைய வேண்டுமா? சரி அடுத்தது, ஆபிரகாமை சீமானாய் வாழவைத்தார் சரிதான், ஆனால் ஆபிரகாம் என்றைக்காவது எனக்கு பொன்னும் பொருளும் கொடு என்று கடவுளிடத்தில் கேட்டானா? ஆதாரமிருந்தால் காட்டுங்கள். முதலாவது கடவுளுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்றுதானே கூறியிருக்கிறார் (மத்.6;33) அடுத்த வசனத்தில் நாளைய தினத்திற்காக கவலை படாதீர்கள், நாளைய தினம் தனக்காக கவலைப்படும் என்று கூறியிருக்கிறாரே, அப்படியானால் செல்வம் கடவுளை கேட்டு பெற வேண்டியதல்ல, தானாக நம்மை தேடி வரக்கூடியது, உண்மை உழைப்பு உயர்வு என்று சாதாரண மக்கள் சொல்லுகிறார்களே.. அப்படியிருக்க அதை கர்த்தரிடம் கேட்டு நம் நேரத்தை நாம் வீணடிக்கலாமா?????? அடுத்தது ஏழை லாசருவின் வரலாறு, இது தேவையா என்று கேட்டவுடனே நான் அந்த இடம் எனக்கு தேவையில்லை என்று கிளம்பிவிட்டேன். கர்த்தருடைய வார்த்தையை தேவையில்லை என்று சொல்லுகிற கயவர்கள் நமக்கு தேவையா? ஏழையாய் இருப்பது பாவம் என்று சொல்லுகிற வாதம் எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே அளவுக்கு முட்டாள்தனமானது கடவுளிடத்தில் பணத்தை கேட்பது. உழைப்பதற்கு நல்ல உடல், ஆரோக்கியம், சிந்திக்க தெளிவான நுண்ணறிவு, என நம்மை பிரமாதமாக படைத்திருக்கிறார் எனவே நாம் முயன்றால், நம் முயற்சியை அவர் ஆசீர்வதிப்பார்.
2. இடம்; ஆம்பூர், பிரசங்கியார்: வெளி நாட்டில் ஊழியம் செய்கிற இந்தியர்.
பிரசங்கம்:
உங்களில் எத்தனை பேர் 200 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறீர்கள், எனக்கு இருக்கிறது. கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார், நீங்களும் கேளுங்கள், அவர் தருவார். ஆம்பூரில் உங்களுக்கென சொந்தமாக கம்பெனிகளை கேளுங்கள் கடவுள் தருவார்,  நான் காரில் வந்திருக்கிறேன், நீங்கள் கார் வைத்திருக்கிறீர்களா ( இல்லை என்பதே அனேகர் பதில்) ஏன் நீங்கள் இன்னும் கேட்கவில்லை???? கேளுங்கள் அவர் தருவார். நான் ஜெபித்து அனேகர் எம்.பி ஆகியிருக்கிறார்கள், நீங்களும் அரசியலுக்கு வாருங்கள், உங்களையும் கடவுள் தலைவர்களாக்குவார்.
 நான் இந்த பிரசங்கத்தில் தெரிந்துக் கொண்டது அவருக்கு 200 ஏக்கர் நிலம் இருக்கிறது, அவருக்கு விலையுயர்ந்த கார் இருக்கிறது, அவருக்கு எம்.பி க்களை கூட தெரியும், இதெல்லாம் தவறா என நீங்கள் என்னை கேட்கலாம்.. கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும் (மத்.7:7) என்று ஆண்டவரே கூறியிருக்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் கேட்டால் தருவார், ஆனால், பரலோக ராஜ்ஜியம் இவைகளை காட்டிலும் மேலானதல்லவா? அதை ஏன் அவர்கள் போதிக்கவில்லை?????? இயேசு ஆண்டவர் தன்னைத்தானே வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானதின் நோக்கம் என்ன? நமக்காய் சிலுவை தூக்கி சுமந்த தியாகத்தின் நோக்கம் என்ன???? அற்ப பாவிகளாம் நமக்காக தன் ஜீவனை சிலுவையில் கொடுத்த கற்பனைக்கெட்டாத அந்த தெய்வீக கிருபைக்கான காரணமென்ன? நமக்கு பணத்தை கொடுக்கவா? பரலோகத்தை கொடுக்கவா? ஒருவரிலொருவர் அன்பாய் இருங்கள், உன்னிடத்தில் இரு அங்கி இருந்தால் அதை இல்லாத ஒருவனுக்கு கொடு, பரலோக ராஜ்ஜியம் விலையேரப்பெற்ற முத்துக்கு ஒப்பானது, எல்லாவற்றையும் விட்டேனும் அதை சொந்தமாக்கிகொள்ள வேண்டும் என்று ஆண்டவர் கூறினாரே அதன் பொருளென்ன? ஏன் அதை சொல்ல மறுக்கிறார்கள் என்பதே என் ஆதங்கம். நீங்களும் நானும் கேட்டா இந்த மண்ணில் பிறந்தோம்? கேட்டா இந்த ஜீவனை பெற்றோம்? அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார்களே, அவரிடம் கேட்டா மானுட பிறப்பெடுத்தோம்? விலங்குகளாய் பிறக்காமல் குறைவுகளின்றி பிறந்தோமே நாம் கேட்டா நடந்தது? அவர் நாம் கேட்டா இம்மண்ணில் நமக்கு தேவையான பொன் வெள்ளி, போன்ற விலையேரப்பெற்ற செல்வங்களையும், உயிர் வாழ ஆதாரமான இயற்கை, செடி கொடிகள், மழை, ஆறு ஏரி, காற்று போன்றவற்றை கொடுத்தார்? நாம் கேட்டால்தான் கொடுக்கிற கொடூர கடவுளல்ல அவர், எனவே உலகபொருள் இங்கேயே கிடைக்கிறது. அவைகளை நாடி வாழ கடவுள் நம்மை பிரித்தெடுக்கவில்லை, பரலோகத்தின் முன் மாதிரிகளாய் வாழ, மற்றவர்களுக்கு பாவ மண்ணிப்பை கூறி அறிவிக்க நம்மை அழைத்திருக்கிறார், எனவே பிசாசின் தந்திரத்தை புரிந்துணர்வோம், நம்மை காத்துக் கொள்வோம், பணம் கேட்காதீர்கள் என்று நான் கூறவில்லை, செல்வத்தை தேடாதீர்கள், என்று நான் கூறவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக பரலோக ராஜ்ஜியத்தை தேடுவதே உத்தமம் என்று கூறுகிறேன்.
இது போன்ற பிரசங்கங்கள் தொடருமானால், கிறிஸ்தவர்கள் பணத்தையும் பொருளையும் நாடுகிற சராசரி மனிதர்களாய் மாறிபோவோம், என்னிடத்தில் வெள்ளியுமில்லை, பொன்னுமில்லை, விலையேரப்பெற்ற இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று சொன்னானே பேதுரு, அது சாட்சியா? நான் செல்வந்தனாய் வாழ்வது சாட்சியா? நான் செல்வத்திற்கு எதிரானவனல்ல அது கடவுள் கொடுப்பதே, ஆனால் அதை காட்டிலும் பரலோகமே எனக்கு மேலானது, காரண்ம், ஆபிரகாம் கேட்டு செல்வத்தை பெறவில்லை, தாவீது கேட்டு அரசனாகவில்லை, எரேமியா ஏழையாகவே செத்தார், எனவே நான் கேட்காமலே அவர் தருவார், எரேமியாவுக்கு செய்ததை போல தராமலே விட்டாலும் பரவாயில்லை, நாம் அவருடைய ராஜ்ஜியத்திற்கு ஆயத்தமாவதும், அவருடைய ராஜ்ஜியத்தை அறிவிப்பதுமே நமக்கு மேலான பணி.. திருச்சபை கிறிஸ்துவின் ரத்தத்திலும், பரிசுத்தவாங்களின் ரத்தத்திலும், ஆதி திருச்சபை விசுவாசிகளின் ரத்தத்திலும் கட்டப்பட்டது, அவர்கள் செல்வத்திலல்ல,  நாம் செல்வத்துக்கு சாட்சிகளல்ல, இயேசு ஆண்டவரின் ரத்தத்துக்கு சாட்சிகள் ஆமென்.
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, October 27, 2012

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது

அன்பிற்கினிய உடன் விசுவாசிகளே, நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். கர்த்தர் நல்லவர், என்னை நன்மையாய் நடத்தி வருகிறார், பல சோதனைகள், பொருளாதார இழப்புகள் என அனைத்திலும் என்னை தயவாய் காத்து துணிவுடன் வாழ துணை நிற்கிறார். கர்த்தர் என் வெளிச்சம் என் ரட்சிப்பு யாருக்கு அஞ்சுவேன், கர்த்தர் என் ஜீவனுக்கு அரணானவர் யாருக்கு பயப்படுவேன் (சங்.27:1) என்ற தாவீதின் துணிவுள்ள இறை வார்த்தைகள் என்னை ஊழியத்தில் மெருகேற்றி வருகிறது.
நான் துன்பத்தை சந்திக்கும் வேளைகளில் எனக்குள் ஒரு கேள்வி எழுவதுண்டு அது யாதெனில், நான் ஊழியம் செய்கிறேன், முடிந்தவரை உண்மையாய் செய்கிறேன், ஆனால் என் வாழ்வில் சோதனைகளும் வேதனைகளும் வருகிறதே, அவைகள் என் ஊழியத்தை முடக்குகின்றனவே, கர்த்தர் ஏன் இதை அனுமதிக்கிறார்?? அதே நேரத்தில், ஊழியத்தை உதாசினப்படுத்துகிறவர்கள், சுய நல நோக்கோடு சபையை கெடுப்பவர்கள், துனிகரமாய் பாவம் செய்பவர்கள் வாழ்வில் தாங்கள் நினைத்ததை சுலபமாய் சாதித்துவிட்டு போகிறார்களே என்பதே...
 ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் சங்கீதம் 32 ம் அதிகாரத்தை வாசிக்கும்போது கர்த்தர் எனக்குள் இக்கேள்விக்கான பதிலை தெளிவாய் எடுத்துரைத்தார். சங்கீதம் 32:10 ம் வசனம் கூறுகிறது பொல்லாதவனுக்கு வரும் வேதனைகள் அனேகம், கர்த்தரிடத்தில் நம்பிக்கையாய் இருப்பவனையோ கிருபை சூழ்ந்துக் கொள்ளும். ஆம் பொல்லாதவர்களுக்கு அனேக வேதனைகள் வருகிறது அவர்கள் அங்கும் இங்கும் அங்கலாய்ப்பதை நான் கண்ணார காண்கிறேன், அதுவல்ல எனக்கு பிரச்சினை கர்த்தரை நம்புகிற எனக்கு ஏன் பிரச்சினை வருகிறது?? கர்த்தரை நம்புகிறவர்களை கிருபை சூழ்ந்துக் கொள்ள வேண்டுமே????? அன்பானவர்களே இதுதான் கர்த்தரை நம்புகிற பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டிய ரகசியம், கர்த்தரை நம்புகிறவர்களுக்கு துன்பங்களே வராது என்று தாவீது கூறவில்லை மாறாக துன்பத்தின் நடுவே கர்த்தரின் கிருபை நம்மை சூழ்ந்துக் கொள்ளும்.
தாவீது துன்பங்களையே சந்திக்காதவனா? இல்லை அனேக துன்பங்களை சந்தித்தவன், ஆனால் அந்த துன்பங்களின் நடுவே கர்த்தருடைய கிருபை அவனை சூழ்ந்துக் கொண்டது. அவனை ஒருவனும் தொட முடியவில்லை துன்பத்தின் நடுவே தலைவனாய் உயர்ந்தான். எப்படி???? கிருபை அவனை சூழ்ந்துக்கொண்டது. உங்களையும் என்னையும் கூட அவர் கிருபை சூழ்ந்துள்ளது. பொல்லாதவருக்கு வரும் வேதனைகளும் அனேகம், நமக்கு வரும் சோதனைகளும் அனேகம். ஆனால் அவர்களுக்கு கடவுளின் கிருபை இல்லை. நமக்கோ தேவ கிருபை துணை நிற்கிறது. எனவே நான் 100 முறை விழுந்தாலும் மீண்டு வருவேன் , பொல்லாதவரோ காற்று அடித்துக் கொண்டு போகும் பதரை போல் இருப்பார்கள் சங்.1:4.
எனவே பொல்லாதவரோடு என்னை நான் ஒப்பிட்டு பார்ப்பதை கடந்த வியாழக்கிழமை முதல் நிறுத்திவிட்டேன். காரணம் நாம் விசெஷித்தவர்கள். பணம், பதவி, அற்ப உலகப்பொருள், இச்சை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொல்லாதவர்களே, தைரியமாய் வாழும்போது, கர்த்தருடைய கிருபையின் உத்தரவாதம் கிடைத்த நாம் எப்படி வாழ வேண்டும்????
              உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
              உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது,... ஆமென்..
கிறிஸ்துவின் பணியில்
 
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, August 14, 2012

ஆவிக்குரிய வாலிபர் முகாம்


கிறிஸ்துவுக்குள் நேசிக்கப்பட்ட அன்பார்ந்த உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், வருகின்ற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வாணியம்பாடியில் உள்ள நல் மேய்ப்பர் லுத்தரன் திருச்சபையில் நமது ஊழியத்தின் சார்பாக ஆவிக்குரிய வாலிபர் முகாம் நடைபெற உள்ளது பங்கு பெற வாய்ப்புள்ளவர்கள் பங்கு பெற்று கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அடையும்படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன், நன்றி..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, July 1, 2012

Audio sermon

அன்பான எனதருமை சகோதர சகோதரிகளே, கடந்த 24.06.2012 அன்று நேத்தர் மெமோரியல் லுத்தரன் திருச்சபையிலே நான் பகிர்ந்துக் கொண்ட கர்த்தருடைய வார்த்தையின் ஒரு பகுதியை பதிவேற்றுகிறேன். கேட்டு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, June 21, 2012

Listen tamil audio sermon

அன்பான உடன் விசுவாசிகளே முதன்முறையாக ஆடியோ வடிவில் கர்த்தருடைய வார்த்தையை கேட்டு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.


கிறிஸ்துவின் பணியில்
 
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, June 20, 2012

VBS-2012

அன்பான இணையதள நண்பர்களே கடந்த மாதம் முழுதும் என்னால் பதிவிட இயலவில்லை. காரணம் நமது ஊழியம் பல்வேறு நிலையில் வளர துவங்கிவிட்டது, இயேசுவின் குரல் என்ற மாத பத்திரிக்கை தற்போது அனேக இல்லங்களில் கிறிஸ்துவை அறிவிக்கிறது.  நமது  இந்த பத்திரிக்கை ஊழியத்தின் சார்பாக, வாணியம்பாடியில், இளந்தோப்பு என்ற கிராமத்தில் விடுமுறை வேதாகம பள்ளி மேமாதம் நடத்தப்பட்டது, நாற்பது பிள்ளைகள் பங்கெடுத்து கிறிஸ்துவை அறிந்து மகிமைப்படுத்தினர் அதற்கான புகைப்பட தொகுப்பை காணுங்கள். தொடர்ந்து நமது ஊழியம் பல்வேறு நிலைகளில் பெருக உங்கள் ஜெபங்களால் உதவுங்கள்.

Children

Opening Prayer;Mrs.Inbamani



Children message:Rev.John Bernardshaw



Greetings:Mr.Dhevapriyam . Tressurer Zion Lutheran Church



Opening Dance


Special song


Dance


Skit


Closing Dance

Prize distribution: Rev.Gilbert


Feast

அற்புதமாய்  வழி  நடத்திய   கடவுளுக்கு என் ஆயிரம்  ஸ்தோத்திரங்கள் ...
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, June 6, 2012

Youth Retreat May 28th Krishnagiri

கடந்த 28 ம் தேதி கிருஷ்ணகிரியில், பெத்தேல் ஆசீர்வாத ஊழியங்கள் சார்பாக வாலிபர் முகாம் நடத்தப்பட்டது, கர்த்தருடைய வார்த்தையை வழங்க நமது ஊழியத்தை அழைத்தனர். அதன் புகைப்பட தொகுப்பு. இந்த ஊழியத்தை தாங்கின, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


Registration
Opening prayer: Mrs.Annal Rajan

Praise and worship: Rev.John Bernardshaw

Bible study: Mrs.Bindhu Gladson

 
Youth wings

youth wings

Afternoon Bible study: Rev.Gilbert

Group discussion

spiritual Games

prize distribution


Prize distribution

closing celebration
  அற்புதமாய்  வழி  நடத்திய   கடவுளுக்கு என் ஆயிரம்  ஸ்தோத்திரங்கள் ...

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, April 30, 2012

கர்த்தருக்குள் களிகூறுவோம்.!!!!!!

சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்த ஒருவர் மிகவும் சந்தோஷமாக எதையோ சாதித்த நிறைவோடு வந்துக் கொண்டிருந்தார், எதிரே வந்த அவரது நண்பர் அவரைக் கண்டு என்ன இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேட்டாராம், முதலாமவரோ நீங்களே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்றார், நீங்கள் எதிலோ வெற்றி பெற்றிருக்கிறீர்கள் அதனால்தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றாராம், அதற்கு அவர் நண்பர் சொன்னார் இல்லை நான் தோற்றுவிட்டேன் அதனால்தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார், தோற்றால் மகிழ்ச்சி வருமா? ஆச்சரியத்துடன் கேட்டார் இரண்டாமவர். உண்மைதான் நான் என் 5 வயது மகனிடம் தோற்றுவிட்டேன் அதனால்தான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என் சந்தோஷத்தை அடக்கமுடியவில்லை என்றார்.

அன்பானவர்களே மகிழ்ச்சி விசித்திரமானது, இப்போது அய் பி எல் கிரிக்கெட் தொடரை கண்டு வருகிறோம், தோணி மும்பைக்கு எதிரான போட்டியில் அவுட்டானால் மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர், ஆனால் அதே ரசிகர்கள் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் தோணி அவுட்டானால் ஆரவாரம் செய்வார்களா? மகிழ்ச்சி விசித்திரமானது.

வேதாகமத்திலே தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற அனேகரில் இருவரது சந்தோஷம் மிகவும் விசித்திரமானது. ஒருவர் ஆபகூக் தீர்க்கன், அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சை செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவ மரம் பலனற்று போனாலும், வயல்கள் தானியத்தை விளைவிக்காமற் போனாலும், மந்தையிலே ஆடுகளின்றி போனாலும், தொழுவத்திலே ஆடுகளின்றி போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கிறார். அதாவது சாப்பிட எதுவுமே இல்லாமல் போனாலும், பஞ்சம் ஏற்பட்டாலும், சொத்துக்களை (ஆடு மாடுகள்தான் அக்காலத்தில் சொத்துக்கள்) இழந்தாலும் சந்தோஷமாகவே இருப்பேன் என்கிறார்... இது சாத்தியமா? பசியோடும் பஞ்சத்தோடும் வாழ்வது சந்தோஷமானதா? அப்படி வாழ முடியுமா? இக்காலத்தில் வீட்டிலும் வெளியிலும் இருக்கிற எல்லா பிராச்சினைகளுக்கும் முக்கிய காரணமே இந்த மூன்றில் எதாவது குறைவதால் தானே. பசி நேரத்தில் வீட்டில் ஆகாரமில்லையென்றார் வீடே போர்க்களமாகிவிடுகிறதே?!!! பிறகு எப்படி ஆபகூக் இப்படி கூறுகிறார்????

இன்னொருவர் இன்னும் விசித்திரமானவர்.. நாம் எப்போது கடவுளுக்கு ஸ்தோத்திரம் சொல்லுவோம்? நன்மை கிடைக்கும்போது, ஆராதனை செய்யும்போது, அற்புதங்கல் நடக்கும்போதுதானே, யாராவது மரித்து போனால் ஸ்தோத்திரம் சொல்வோமா? அப்படி சொன்னால் நாம் நல்ல மனம் கொண்டவர்கள் தானா? ஆனால் யோபு சொல்லுகிறார்... தனது செல்வங்களையும், ஆசை பிள்ளைகளையும் இழந்த செய்தியை கேட்டு சொன்னதென்ன? கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் இவ்வளவு அலட்சியமாக நம் எதிரி மரித்தால் கூட நம்மால் சொல்லமுடியாதே யோபு சொல்லக் காரணமென்ன? செல்வத்தை இழந்ததும் பிள்ளைகளை இழந்ததும் அவனுக்கு சந்தோஷமாக நிச்சயமாக இல்லை.. பிறகு எப்படி யோபு இப்படி கூறுகிறார்?

இருவரும் சொல்லுகிற காரணம் கர்த்தர். கர்த்தர் இருந்தால் என்ன நடக்கும்?

ஏசாயா.54:17 உனக்கு எதிராக செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்.

ஏசாயா:43:2 நீர் நிலைகளை கடக்கும்போதும், ஆறுகளை கடக்கும்போதும், தீயில் நடந்தாலும் உன் மேல் பற்றாது.

சங்கீதம்.91:10 பொல்லாங்கு வாதை அணுகாது.

உபாக‌ம‌ம்.31:8 கைவிடுவ‌துமில்லை, வில‌குவ‌துமில்லை.

ஆதியாக‌ம‌ம்.12:2 பெரிய‌ ஜ‌ன‌மாவோம், பேரை மேன்மை ப‌டுத்துவார்.

ம‌த்தேயு.28;20 ச‌க‌ல‌ நாட்க‌ளிலும் கூட‌வே இருப்பார்.

அன்பானவர்களே இந்த புதிய மாதத்திலும் இயேசு கிறிஸ்து நம்மோடே இருக்கிறார் நம்மை அவர் கைவிடப்போவதில்லை, எனவே இந்த விடுமுறை மாதமாகிய மேமாதத்தை, நமது உழைப்பின் பலனை உணர செய்யும் மே மாதத்தை சந்தோஷமாய் துவங்குவோம். கர்த்தருக்குள் களிகூறுவோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, April 19, 2012

நமக்கென்ன குறை? Happy Easter

அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நமது தேசம் மிதமான கால நிலை நிலவுகிற தேசம். இங்கே கடுமையான வெயிலும் இல்லை, கடுமையான பணியும் இல்லை. எனவே நமது நிறமும் பனிப்பிரதேசங்களில் இருப்பவர்களை போல‌ அதீத வெள்ளையும் இல்லை, வெப்ப நாடுகளில் இருப்பவர்களை போன்ற கருமையும் இல்லை, நமது கால நிலை போலவே நாம் மாநிறம் கொண்டவர்கள். ஆனால் நாம் மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் எனவே வெள்ளை நிற தோற்றத்தையே அதிகம் விரும்புகிறோம். இதை அப்படியே சில நிறுவனங்கள் வியாபாரமாக மற்றுகின்றன.


அதாவது ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் ஒரு மாநிறம் கொண்ட பெண் வீதியிலே போகும்போது அடுத்தவர்கள் அவளது தோற்றத்தை கேலி செய்கின்றனர், உடனே இந்நிலை மாற ஒரு கிரீமை தடவ சொல்கிறார்கள். இன்னொரு விளம்பரத்தில், ஒரு மாநிறம் கொண்ட பெண் வேலைக்கு போகிறாள், ஆனால் அவள் தோற்றத்தை கண்டு அவளுக்கு வேலை மறுக்கப்படுகிறது, உடனே ஒரு கிரீமை தடவ சொல்லுகிறார்கள். இது உண்மையா? சாலையில் போகிறவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது யார் கருப்பாக போகிறார்கள்? யார் மாநிறமாக போகிறார்கள் என்று பார்த்து கொண்டிருப்பதா வேலை? அதே போல வேலை கிடைக்க கல்வி தான் முக்கியமே தவிற நிறம் அல்ல. அப்படியானால் ஆப்பிரிக்காவில் வாழும் நீக்ரோ இன சகோதர சகோதரிகளுக்கு வேலையே கிடைப்பதில்லையா? என்ன வேடிக்கை? அவர்கள் பொருளை விற்பதற்காக, கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்தால், வெளியே போகமுடியாது, வேலை கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்தி, நமது பயத்தை வியாபாரமாக்குகின்றனர்.


அதேபோல, ஒரு புதிய வீடு கட்டி குடியேறுவோம், அந்த வீட்டில் தொடர்ச்சியாக கணவன் மனைவிக்கிடையே, சண்டை வருமானால் ஒருவர் சொல்லுவார் நீங்கள் கிச்சனை (சமையலறை)  இந்த மூலையில் கட்டினால் பிரச்சினை வராது என்று.. சண்டைக்கு காரணம் நமது மன நிலை, சண்டைகள் தீர எளிய வழியை இயேசு கிறிஸ்து போதிக்கிறார்.. ஒருவரையொருவர் மன்னியுங்கள் என்று. ஆனால் அதை மறந்து பிரச்சினைக்கு காரணம் வீடு என்று நினைத்து அதை இடித்து கட்டி, இன்னொரு பிரச்சினையை தேவையில்லாமல் வளர்த்துக் கொள்ளுகிறோம். பிரச்சினையே இல்லாத ஒரு வீட்டை சொல்லுங்கள் பார்க்கலாம், எவ்வளவு முட்டாள்தனம். இங்கேயும் நமது பயம் ஒரு வியாபர மூலதனமாக சிலருக்கு பயன்படுகிறது .


நாம் எப்போதெல்லாம் பயப்படுகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம், பயம்தான் நம் முன்னேற்றத்தின் பெரிய எதிரி. நாம் பயந்தால் உண்மைகளை காண முடியாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த காலத்தில் மூன்று முறை சீடர்களுக்கு தன் பாடு மரணம் உயிர்த்தெழுதலை பற்றி முன்னறிவித்தார். (மார்கு.8:31, 9:31, 10:34) ஆனாலும் சீடர்கள் விசுவாசமில்லாமல் பூட்டிய வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். காரணம் என்ன? பயம். நாம் எப்போது பயப்படுகிறோமோ அப்போது உண்மையை மறந்துபோகிறோம், பயம் நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடுகிறது. அன்பானவர்களே, இன்று உங்களை எது அச்சுறுத்துகிறது? துன்பங்களா? வியாதிகளா? போரட்டங்களா? வேலையின்மையா? தோல்வியா? எது உங்களை அச்சுறுத்தினாலும் உங்கள் மனதிற்கு சொல்லுங்கள் இயேசு உயிரோடிருக்கிறார் ஏன் பயப்படுகிறாய் என்று. நம் மீட்பர் உயிரோடிருக்கையிலே நமக்கென்ன குறை? கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசிமட்டும் கை விடாதிருப்பார். அல்லேலூயா.. ஆமேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

அன்புடன்
ஆருள்திரு..கில்பர்ட் ஆசீர்வாதம்.

Wednesday, April 4, 2012

அன்பான 10 ம் வகுப்பு மாணவர்களே..

அன்பான 10 ம் வகுப்பு மாணவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் இன்று நீங்கள் முதல் முறையாக அரசு பொது தேர்வை சந்திக்க போகிறீர்கள். ஒருவித பதட்டம், ஒருவித பயம், ஒருவித சந்தோஷம் என‌ உங்கள் மனம் இப்போது புதுவிதமாய் இருக்கும். எதிர்பார்ப்புகள் உங்கள் கண்கள் நிறைந்திருக்கும். நான் இப்போது உங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல போவதில்லை. உங்களுக்காக ஒரு சிறிய ஜெபத்தை மட்டும் ஏறெடுக்க விரும்புகிறேன். நீங்களும் என்னோடு ஜெபியுங்களேன்...

அன்பு நிறைந்த எங்கள் நல்ல பிதாவே, அறிவின் ஊற்றாய் இருப்பவரே, பத்தாம் வகுப்பு தேர்வை சந்திக்கபோகிற என்னை (அருமையான சகோதர சகோதரிகளை) உமது கரத்தில் சமர்ப்பிக்கிறேன். என்னை (ஒவ்வொருவரையும்) உமது ஞானத்தால் நிரப்பும், நல்ல நியாபக சக்தியை தாரும், நல்ல ஆரோக்யத்தை தாரும், படிப்பதற்கு எந்தவித தடையும் ஏற்படாமல் காத்துக்கொள்ளும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்று, பெற்றோருக்கு பெருமை சேர்த்து நல்ல எதிர்காலத்தை உறுதி செய்துக்கொள்ள கிருபை தாரும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமேன்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்

Friday, March 30, 2012

விசுவாசத்தில் வளர்வோம்.

TEXT:  மாற்கு.10:34 - 45

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள்,  ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய குரு இருந்தாராம், அந்த குருவிடத்திலே, சீடராக சேர ஆசைப்பட்ட ஒருவன் அந்த குருவை சந்திக்க வந்தான், குருவிடம் போய் அய்யா நான் உங்களிடத்திலே சீடனாக சேர விரும்புகிறேன் தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றானாம். உடனே அந்த குரு, நீ எனக்கு சீடனாக வேண்டுமென்றால், நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன், அந்த மந்திரம் யாருக்கு கேட்கிறதோ அவர்கள் துன்பம் நீங்கிவிடும் ஆனால் அந்த மந்திரத்தை, நீ யாருக்கும் சொல்லக் கூடாது,  என்றாராம். சரி குருவே என்றானாம், உடனே குரு அவன் காதிலே அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாராம், உடனே அந்த மனிதன் ஓடிப்போய் ஒரு மரத்திலே ஏறி நின்றுக்கொண்டு, ஊருக்கே கேட்கும்படி சத்தமாக கூறினானாம், அதைக் கண்ட குருவின் சீடர்கள், குருவிடம் ஓடி வந்து குருவே, அவனை உடனே, துரத்தியடிங்கள், நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை ஊருக்கே கேட்கும்படி கூறிவிட்டான் என்றனர், அந்த குரு சொன்னாராம், போக வேண்டியது அவனல்ல, நான்தான், அவனுக்கு எனக்கே குருவாகிற தகுதி இருக்கிறது என்றாராம்.

உண்மைதான் யார் பிறர் நலம் பேணுகிறானோ அவனே தலைவனாகும் தகுதியுள்ளவன்.

நமதாண்டவர் தன் ஊழியத்தை துவங்கும் முன் தனக்கென சீடர்களை தெரிந்தெடுத்தார், அவர்களை எங்கே தெரிந்தெடுத்தார், எல்லா சுவிசேஷங்களும் கூறுகின்றன, கலிலேயாவில் தெரிந்தெடுத்தார் என்று. ஆம் அவரது சீடர்கள் அனைவருமே கலிலேயாவை சேர்ந்தவர்கள். கலிலேயர்கள் என்றாலே அக்கால மக்கள் ஒரு அடி தள்ளி நிற்பார்கள் காரணம் அவர்க சுபாவம் அப்படி. அவர்கள் சுபாவத்தை வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளனர். அதாவது கலிலேயர்கள் என்றாலே.

1. நல்ல பழக்க வழக்கம் இல்லாதவர்கள்.
2. பண்பாடில்லாதவர்கள்.
3. கல்வியறிவில்லாதவர்கள்.
4. முடர்கள்.
5. சண்டையிடும் சுபாவம் கொண்டவர்கள்.

இப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்களைதான் ஆண்டவர் தனக்கென சீடர்களாக தெரிந்துக் கொண்டார். இதனால் இந்த கலிலேயர்களின் வாழ்வே மாறத்துவங்கியது. மரியாதைக்குரியவர்களாய் சமூகத்தில் மாறினார்கள். ஆண்டவ்ருக்கு மிகப்பெரிய புகழும் செல்வாக்கும், மரியாதையும் மக்கள் மத்தியில் இருந்தது, இந்த புகழும் செல்வாக்கும் சீடர்களுக்கும் கிடைத்தது. எப்போதெல்லாம் மனிதனுக்கு புகழும் செல்வாக்கும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மனிதனின் மனநிலை பெரிதும் மாறிப்போகும். அதை தக்கவைத்துக்கொள்ளும் சுபாவம் பெருகும். இது இன்றைய அரசியல்வாதிகளிடத்தும் ஏன் திருச்சபை தலைவர்களிடத்திலேயும் இருப்பதை நாம் தெளிவாக் காண இயலும்.

சீடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை நமக்கு உணர்த்துகிற பகுதிதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதி. யோவானும் அவனது சகோதரன் யாக்கோபும் இயேசுவிடம் வந்து எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார உமது மகிமையில் இடம் தர வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது தங்களுக்கு பரலோகத்தில் உயர் பதவி தர வேண்டும் என்று கேட்கிறார்கள். இதுதான் மனிதனின் சுபாவம். ஆனால் ஆண்டவரோ அவர்களிடம் மிகவும் அன்பாக நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை, நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்னானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார்.. அதாவது அவர் பாத்திரம் என்ன? பாடுகள்.. அவர் பெற்ற ஸ்னானம் எதற்காக? மரிப்பதற்காக.. ஆனால் அதை என்னவென்று கூட அறியாமல், எங்களால் கூடும் என்கிறார்கள், காரணம் அவர்களுக்கு பதவி வேண்டும். இப்படி உணராமல் அவர்கள் பதில் சொன்னதால், அவர்களுக்கு தெளிவாக ஒரு விஷயத்தை கூறுகிறார். பதவி தருவது என் காரியமல்ல என்கிறார்(மாற்கு.10:40)

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற மற்ற சீடர்களுக்கு மிகவும் கோபம் உண்டானது, இந்த இருவர் மேலும் 10 பேருக்கும் எரிச்சல் உண்டானது(மாற்கு.10:41) அன்பானார்களே எப்போதெல்லாம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு பதவி மேல் பற்று வருகிறதோ அதை அடைய வேண்டும் என்று துடிக்க ஆரம்பிக்கிறோமோ.. அப்போதெல்லாம் நாம் கடவுளுக்கும் விரோதிகளாகிறோம், சக மனிதர்களுக்கும் விரோதிகளாகிறோம்.

இதை அறிந்துக் கொண்ட ஆண்டவர் அவர்களுக்கு தன்னை முன்மாதிரியாக வைக்கிறார். நான் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்ய வந்தேன், உங்களில் தலைவனாயிருக்க விரும்புகிறவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாய் இருக்கக்கடவன் என்கிறார்..

ஆண்ட‌வ‌ர் ப‌த‌வி ஆசை கூடாது என்று சொல்ல‌வில்லை, நீங்க‌ள் த‌லைவ‌ர்க‌ளாக‌ வேண்டாம் என்று சொல்ல‌வில்லை மாறாக த‌லைமைத்துவ‌ குண‌ம் இருக்கிற‌வன்தான் த‌லைவ‌ன் ஆக‌ முடியும் என்கிறார். அன்பான‌வ‌ர்க‌ளே... அடுத்த‌வ‌ருக்கு ப‌ணிவிடை செய்யும் ம‌ன‌ம்தான் த‌லைமைத்துவ‌ குணம்.. ஆண்டவர் அதைதான் செய்தார் கடவுள் அவரை முழங்கால்கள் யாவும் முடங்கும்படி உயர்த்தினார். எனவே நமக்குள்ளும் இக்குணம்தான் இருக்க வேண்டும். என்று ஆண்டவர் கூறுகிறார்.

ஆனால் இன்று இக்குணம் கொண்ட எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? அரசாங்கத்தை விடுங்கள் கிறிஸ்தவர்களாகிய நமது திருச்சபைகளில் எத்தனை பேர் பணிவிடை செய்யும் மனம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்? நமது தலைவர்களில் எத்தனை பேருக்கு பணிவிடை செய்யும் மனமில்லையோ அவர்கள் அத்தனை பேரும் விசுவாசிகள் அல்ல.. காரணம் அவர்கள் ஆண்டவர் சொன்ன தலைமைத்துவத்தை பின்பற்றாதவர்கள், அதை பின்பற்றினால் கடவுள் உயர்த்துவார் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள். உணர்வோம், விசுவாசத்தில் வளர்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, March 18, 2012

அன்பு எங்கே????

TEXT.JOHN.3:16


அன்பானவர்களே, மனிதர்களை  அவர்கள் தகுதியை வைத்து தரம் பிரிப்போம், சிலரை கெட்டவர்கள் என்போம், சிலரை நல்லவர்கள் என்போம்,  நல்லவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. நல்லவர்கள் ( நல்ல குணம் கொண்டவர்கள்)
2. மிகவும் நல்லவர்கள் ( நல்ல மனமும் செயலும் கொண்டவர்கள் )
3. வள்ளல்கள் ( தனக்குரியதை அடுத்தவர்களுக்கு கொடுப்போர் )
4. தியாகிகள். ( தன்னையே பிறருக்காய் கொடுப்போர் )

இதில் கடவுள் எவ்வகையை சார்ந்தவர்?

கர்த்தர் நல்லவர் (சங்கீதம் 34:8)
கர்த்தர் மிகவும் நல்லவர் காரணம் அவர் நன்மையை மட்டுமே செய்தவர்.
கர்த்தர் வள்ளல் தன்னுடைய முழு உலகையும் நமக்கே கொடுத்தவர்
கர்த்தர் தியாகியுமானவர் தன்னையே நமக்காய் சிலுவையில் கொடுத்தவர்.
இதையெல்லாம் கடந்து இன்னொரு மிக அற்புதமான குணாதிசயம்
கடவுளிடத்தில் இருக்கிறது அதை நமக்கு சொல்லுகிற பகுதிதான். யோவான்.3:16
அந்த அற்புதமான குணாதிசயம் என்ன தெரியுமா? அது நம் கற்பனைக்கெட்டாதது. பொதுவாக நம் அனைவருக்குமே எதிரிகள் இருக்கிறார்கள், எதிரிகளை நாம் எப்போதும் விரும்புவதில்லை, அவர்கள் பாவமும் வஞ்சகமும் செய்யும்போது நம்மால் அதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கான பலனை அவர்கள் அனுபவிக்க நேர்ந்தால் நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம், காரணம் அவர்கள் தாங்கள் செய்த பாவத்தின் பலனை அனுவபவிக்கிறார்கள். ஆனால் ஆண்டவரோ உங்கள் சத்துருவை நேசியுங்கள் என்கிறார், ஒரு வேளை நாம் நம் எதிரியை நேசிக்கலாம்.. ஆனால் அதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமே, நாம் நேசித்தும் அவர்கள் நம்மை பகைக்கவே செய்கிறார்களல்லவா? எனவேதான் அவர்கள் துன்புறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம், அடுத்தவர்களிடத்தில் கூறுகிறோம், அவன் செய்த பாவம் அவன் அனுபவிக்கிறான் என்று கூறுகிறோம்.

இங்கேதான் ஆண்டவர் வித்தியாசப்படுகிறார், மனிதன் நிறைவாய் வாழ கடவுள் ஏதேனை படைத்தார், படைக்கும்போதே அவர் கொடுத்த கட்டளை நடு மரத்தின் கனியை புசிக்காதீர்கள் புசித்தால் சாவீர்கள் என்பதே, ஆனால் அவர்களோ அவரது வார்த்தைக்கு செவி கொடுக்காமல் புசித்தனர், அதன் பலனான நித்திய மரணம் வந்து சேர்ந்தது, இது அவர்கள் செய்த பாவத்தின் பலன், கடவுளுக்கு கீழ்படியாமல் போன துரோகத்துக்கு கிடைத்த தண்டனை, நியாயமாக கடவுள் அவர்களை பார்த்து சிரித்திருக்க வேண்டும், என் வார்த்தையை கேட்காமல் போனீர்களே போய் சாவுங்கள் என்று விரட்டியடித்திருக்க வேண்டும், ஆனால் அவரோ வருத்தப்பட்டார், அதைவிட ஆச்சரியம் அவர்களை நித்திய மரணித்திலிருந்து காக்க நினைக்கிறார்.. ஏன் காக்க வேண்டிய அவசியம் என்ன கடவுளுக்கு?????? துரோகிகளை போய் காப்பாற்றலாமா?

காப்பாற்ற நினைக்கிறார், ஆனால் காப்பாற்ற வேண்டுமானால், குற்றமில்லாத ஒருவரின் ரத்தம் பலியாக சிந்தப்பட வேண்டும்.. குற்றமில்லாதவன் யார்? கடவுளை தவிர யாருமே இல்லையே அதற்கும் ஒரு முடிவெடிக்கிறார், ஆம் அவரே இவ்வுலகில் மனிதனாய் பிறக்கிறார், கடவுளின் குமாரன் என்ற அங்கீகாரத்தோடு இயேசு ஆண்டவராய் இவ்வுலகிற்குள் வருகிறார். தன்னையெ அர்ப்பணிக்கிறார் அவரை யார் நம்புகிறார்களோ அவர்கள் நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு மோட்ச வாழ்வை பெறுகிறார்கள். ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்? செய்ய வேண்டிய அவசியம் என்ன அவருக்கு? நம்மேல் இவ்வளவாய் அன்பு கூறுகிறார்... அவரது அன்பு நமக்காய் இவ்வளவு தூரம் அவரை கீழிறங்க வைத்தது.

ஆனால் இந்த அன்பை ருசித்த போதிக்கிற நம்மில் எத்தனை பேருக்கு உண்மையான அன்பிருக்கிறது? கடவுள் காட்டிய இவ்வளவு பெரிய அன்பை நாம் கடைபிடிப்பது சாத்தியமில்லைதான், ஆனால் குறைந்த பட்ச அன்பாவது இருக்கலாமே???? ஆனால் இங்கே அந்த அன்பை காணுவது பெரும் சிரமாய் இருக்கிறது, இந்த அன்பைதான் இன்ந்த தவக்காலத்தில் தியானிக்கிறோம், ஆனால் நம்மில் இந்த அன்பில்லை. காரணம் நாம் உண்மையாய் தியானிக்கவில்லை..

சில நாட்களுக்கு முன், நான் ஒரு போதகரோடு பேசிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு மூத்த போதகர் அவ்வழியே வந்தார் அவர் எங்களை நெருங்கியதும் அவரை பார்த்து இரு கரம் கூப்பி ஸ்தோத்திரம் அயிரே என்றேன், அவரோ முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.. எனக்கு அவனமாக தோன்றியது ஏன் இப்படி செய்தார் என்றால், நான் பேசிக்கொண்டிருந்த போதகர் திருச்சபை அரசியலில் அவருக்கு எதிரணியில் இருப்பவர். எனக்கு இன்னும் ஓட்டுரிமை இல்லை, இப்போதே இன்னிலை என்றால், ஒருவேளை ஓட்டுரிமை பெற்று ஒரு அணியில் நின்றால், எதிரணியினர் என்னை எப்படி பார்ப்பார்களோ? ஒருவேளை இப்படிப்பட்ட முன் மாதிரி அனுபவங்களால், நானும் இக்குணம் கொண்டவானாய் மாறுவேனோ? பயமாய் இருக்கிறது... நாமெல்லாம் சிலுவையின் அன்பை போதிக்கிறவர்களும் கேட்பவர்களும்தானா? இந்த முன் மாதிரிதான் ஆண்டவர் நம்மில் எதிர்பார்க்கிறாரா? இதற்காகத்தான் நீங்கள் உலகின் ஒளி என்றாரா? நாம் ஓளிக்கு சாட்சி கொடுக்கிறோமா இல்லை??????  இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் இதை எனக்கு எச்சரிக்கையாக எழுதிக் கொள்கிறேன்..  அவர் பார்வைக்கு மறைவானது ஒன்றும் இல்லை..


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, March 15, 2012

ஆவியின் வல்லமை!!!!!!!!!

TEXT. நியாயாதிபதிகள்.15:9-15

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், ஒவ்வொரு நாளும் நம்மை பாதுகாக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். சிம்சோன் வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் ஒருவர், காரணம் துன்பங்களை கண்டு அஞ்சாதவர், எதிர்ப்புகளை கடவுளின் நாமத்தால் ஓட ஓட விரட்டுகிறவர். தனக்கு வந்த ஒரு மாபெரும் துன்பத்தை அவர் ஓட ஓட விரட்டிய ஒரு சம்பவத்தை இன்று நாம் தியானிக்கப்போகிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தில் குடியேறிய பிறகு அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய சவால் காத்திருந்தது, அந்த சவால் பெலிஸ்தியர்கள், அவர்கள் மாபெரும் வீரர்கள், போர் செய்வதில் வல்லவர்கள், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரவேலுக்குள் நுழைந்து இவர்களது செல்வங்களை கொள்ளையிட்டு செல்வார்கள், அவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இஸ்ரவேலர்களில் ஒருவருக்கும் இருந்ததில்லை, ஒரேயொருவர்தான் அவர்களுக்கு முடிவு கட்டியவர் அவர் தாவீது, கோலியாத்தை கொன்று ஒட்டு மொத்தமாக பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்கியவர்.

தாவீதுக்கு முன்பு நூற்றாண்டுகளாக கானானில் வாழ்ந்த போது யாராவது பெலிஸ்தியர்களை எதிர்த்திருக்கிறார்களா என்றால், ஒருவர் இருக்கிறார் அவர்தான் சிம்சோன். சிம்சோன் பெலிஸ்தியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். எனவே சிம்சோனை ஒழிக்க பெலிஸ்தியர் யூதாவில் பாளையமிறங்கினர் (நியா.15:9). யூதா மக்கள் நடுங்கி ஏன் இங்கே பாளையமிறங்கினீர்கள் என்று கேட்க எங்களுக்கு சிம்சோன் வேண்டும் அவன் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவனுக்கு செய்ய வேண்டும் என்றனர்(நியா.15:10), அப்போது யூதாவின் மக்கள், அதாவது சிமோசினின் சொந்த ஜனமான இஸ்ரவேலர் 3000 (நியா.15:11) பேர் போய் சிம்சோனை தேடி கண்டு பிடித்தனர், சிம்சோன் அவர்களிடம் ஒரு உறுதிமொழி வாங்கிக் கொண்டார், அதாவது என்னை பெலிஸ்தியர்கள் கையில் ஒப்படைக்கும் வரை எனக்கு நீங்கள் எந்த தீங்கும் செய்யக் கூடாது என்றார் (நியா.15:12) காரணம் எதிரிகளை கூட நம்பலாம் நம்மோடு இருப்பவர்களில் அனேகரை நாம் நம்ப முடியாது, அவர்கள் உறுதியளித்ததும் தைரியமாய் அவர்களோடு வருகிறார்.

கயிறுகளால் அவரை கட்டி பெலிஸ்தியரிடம் கொண்டு வந்தனர். பெலிஸ்தியர்கள் சிம்சோனை கண்டதும் மிகப்பெரிய ஆரவாரம் செய்கின்றனர் காரணம் தாங்கள் தேடிய எதிரி கிடைத்துவிட்டான் என்று. அதே நேரத்தில் கர்த்தருடைய ஆவி சிம்சோனின் மீது இறங்கியது,(நியா.15:14) உடனே அவரை கட்டியிருந்த கட்டுகள் நெருப்பில் பட்டது போல் பொசுங்கிப் போயின. கழுதையின் பச்சை தாடை எலும்பு ஒன்றை கண்டு அதை எடுத்து ஆயிரம் பேரை கொன்றார்(நியா.15:15-16).

அன்பானவர்களே, சிம்சோனின் மீது இறங்கிய கர்த்தருடைய ஆவி நம்மீது இருக்கிறதே, அப்படியானால் நம்முடைய பலம் என்ன? நமக்கெதிராய் வருகிற எந்த கட்டையும் பொசுக்கிப் போடுகிற பலம், எதிர்ப்புகளையும், பிசாசின் தந்திரங்களையும்  சுட்டெரிக்கிற பலம் நமக்குள் இருக்கிறது, அங்கே வென்றது சிம்சோன் அல்ல கர்த்தருடைய ஆவி, ஆம் நாமும் நம் துன்பங்களை கண்டு, வியாதிகளை கண்டு, போராட்டங்களை கண்டு அஞ்ச வென்டியதில்லை, நாமல்ல நமக்குள் இருக்கிற கர்த்தருடைய ஆவியால் அவைகளை மேற்கொள்வோம். ஆமேன்....

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, March 13, 2012

காரியத்தை அவரே வாய்க்க செய்வார்

அன்பான வாசகர்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள், நமது சிறுவர் ஊழிய குழுவின் இன்னொரு ஊழிய தகவலோடு உங்களை சந்திக்கிறேன், நமது சிறுவர் ஊழிய குழு கிருஷ்ணகிரி போலியோ காப்பகத்தில் நடத்திய நிகழ்ச்சியை நீங்கள் அறிவீர்கள், அதை அறிந்த‌ இந்திய சுவிசேஷ ஊழிய மையம் அவர்களது விடுதியில் நிகழ்ச்சி நடத்த அழைத்திருந்தனர். இதற்கு கிருஷ்ணகிரியில் உள்ள எனது நண்பர் ஜோசாம் அவர்களின் தாயார் திருமதி.அன்னாள் அவர்கள் பெரிதும் உதவினார். பிள்ளைகளுக்கும் நமக்கும் அவர்களே மதிய உணவும் ஏற்பாடு செய்து நம்மை பெரிதும் உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அதற்கான புகைப்படங்களை காணுங்கள். இவ்வூழியம் பெருக ஜெபியுங்கள்.












ஊழியம் என்பது அனேக சிரமங்களை உள்ளடக்கியது என்பதை இந்த சில மாதங்களில் நான் அனுபவித்து வருகிறேன், திருச்சபை ஊழியம், புத்தக ஊழியம், சிறுவர் ஊழியம், இதற்கிடையே இந்த இணையதள ஊழியம் என எல்லவற்றிலும் என்னால் கவனம் தொடர்ச்சியாக பங்காற்ற முடியாமல் தினருகிறேன், ஆனால் கர்த்தர்தாமே, என்னை அற்புதமாய் சொர்வடையாமல் நடத்தி வருகிறார். யாரிடமும் காணிக்கை கேட்பதில்லை, மனித கரங்களை நம்புவதில்லை, ஊழியத்தை விளம்பரப்படுத்துவதும் இல்லை, பெரிய ஆதரவுகளும் இல்லை, ஆனால் அன்பானவர்களே என் ஆண்டவர் நல்லவர் என்பதை ஒவ்வொரு நாளும் ருசித்து வருகிறேன். கரம் பிடித்து நடத்துகிறார், நான் சோர்வடையும்போது தேற்றுகிறார், தேவை வரும்போது தமது தூதர்களை அனுப்புகிறார். ஊழியத்திற்கு பையையாவது, தடியையாவது எடுத்து செல்லாதீர் என்கிறாரே அது மிக சத்தியம், அவர் பார்த்துக் கொள்ளுகிறார். இப்போது ஊழியத்திற்கென எந்த பணமும் என்னிடத்தில் இல்லை ஆனால் இம்மாத மாத இதழ் நடத்த வேண்டும், ஆனால் அவர் நடத்தி காட்டுவார். அந்த சாட்சியும் இங்கே நான் பகிர்வேன் அன்பானவர்களே அவரை நம்புங்கள், காரியத்தை அவரே வாய்க்க செய்வார்.
கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

Thursday, March 8, 2012

ஆலயத்தை கட்டுவோம் வாருங்கள்

அன்பான உடன் விசுவாசிகளே, வேலூர் மாவட்டம் ஆம்பூரில், சான்றோர் குப்பம் என்ற கிராமத்தின் போதகரான அருள்திரு. ராஜகம்பீரம் (இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர்) அவர்களும் சபையாரும் இனைந்து ராஜகோபால் நகர் என்ற கிராமத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டி கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தனர். அந்த  ஆராதனையில் கலந்துக்கொள்ளும் உன்னத அனுபவம் எனக்கும் கிடைத்தது. அழகான ஓலை கூரை வேய்ந்த சிறிய ஆலயமாக தென்பட்டாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய தேவாலயமாக  உருவாவதற்கான அத்தனை அம்சங்களும் அங்கே தெரிந்தது. உள்ளேயும் வெளியேயும் உட்கார இடமில்லாத அளவுக்கு பெரும் திரளாக அனேக விசுவாசிகள் அன்று கூடி வந்தனர். பிரதிஷ்டைக்கு பிறகு கூட சில ஆராதனைகளை நடத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அப்போதும் அங்கே வந்த விசுவாசிகளை காணும்போது அது ஒரு பெரிய ஆலயமாய் உருவாகும் என்பதில் எனக்கு ஐயம் ஏற்படவில்லை இதோ அந்த ஆலயத்தின் மகிழ்ச்சியான துவக்கம். புகைப்படங்களாய்.

அருள்திரு. ராஜகம்பீரம் முன்னின்று பிரதிஷ்டை செய்கிறார்.
உள்ளே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்.
உள்ளே இடமின்றி வெளியே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்

 திருச்சபை பிரதிஷ்டைக்கு நன்றியாய் கிராம பிள்ளைகளின் உற்சாக நடனம்

ஆனால் அன்பானவர்களே இந்த சந்தோஷம் அங்கே நீடிக்கவில்லை எல்லாமே இப்போது தலைக் கீழ் ஆசை ஆசையாய் கட்டப்பட்ட தேவாலயம் இன்று இல்லை,  மின் கசிவோ? விஷமிகளின் சதியோ? தெரியவில்லை ஆனால் தேவாலயம் முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகிப்போனது இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் இன்னொரு அவயவம் இன்று எரிந்து புண்ணாகி கிடக்கிறது தேற்றுவாரில்லாமல்  . காண்போர் மனது வைத்தால், கடவுள் உங்கள் உள்ளத்தில் ஏவினால் அங்கே முன்பைவிட சிறப்பான ஆலயம் உருவாகும். சீர் குலைந்த சபையின் நிலையை காணுங்கள்.

முற்றும் எரிந்து குட்டிசுவராய் நிற்கும் தேவாலயம்.



தேவாலய கதவு பாய், புனித பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிப்போன காட்சி


ஆலயத்தில் ஒன்றும்  மிஞ்சவில்லை.

அன்பானவர்களே இந்நிலை மாற உங்கள் உதவி தேவை. ஆலயத்தை கட்டுகிறவர்களின் வாழ்வை கர்த்தர் கட்டுவார். இதை படிப்போர் உதவ விரும்பினால் நமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள, 9944555388,    9944116769 என்ற எண்களுக்கு நீங்கள் தொடர்புக் கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆலயம் உருவாக காரணமாய் அமையும். ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை திரும்ப பெறாமல் போகமாட்டீர்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

Wednesday, March 7, 2012

சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்



அன்பான மாணவ‌ செல்வங்களே, குறிப்பாக தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் 12  ம் வகுப்பு மாணவர்களே, இதோ உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தேர்வை சந்திக்கிறீர்கள், யாருடைய‌ கட்டாயத்திற்காகவும் இத்தேர்வை நீங்கள் சந்திக்கவில்லை, உங்கள் எதிர்காலத்துக்காய் சந்திக்கிறீர்கள் என்பதை உணர்ந்து தேர்வுக்கு ஆயத்தப்படுங்கள், கல்விதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக நம் நாட்டில் இப்போது உருவாகிவிட்டது எனவே கவனமாய் காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.

சுமையாக தேர்வை நினைக்காதீர், இதுதான் உங்கள் பள்ளிக்கூட வாழ்வில் உங்கள் சக நண்பர்களோடு சந்திக்கப்போகும் கடைசி தேர்வு என்ற சுகமான அனுபத்தோடு தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள். வெற்றி என்ற பட்டத்தை பெற தீவிரமாய் உழையுங்கள், வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதாக கிடைக்கவில்லை. எனவே கடுமையான உழைப்பு அவசியம், இந்த சில நாட்கள் நீங்கள் கஷ்ட்டப்பட்டுவிட்டால், வரப்போகிற எதிர்காலம் சுகமானதாக இருக்கப்போகிறது. இது  துன்பமல்ல உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் போடப்போகிற அஸ்திபாரம்.

மனதை ஒருமுகப்படுத்த காலையில் சில மணித்துளிகளை ஆண்டவரோடு செலவிடுங்கள், அவரோடு பேசுங்கள் வல்லமையை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள், அவரே நம் உழைப்பை ஆசீர்வதிக்கிறவர். நாம் உயர தன்னை மாய்த்துக் கொண்டவரல்லவா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவர் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார், தேர்வு பயமோ, பத‌ட்டமோ, இல்லாமல் உங்கள் உள்ளத்தை நிறைந்த சமாதானத்திற்கு நேராய் நடத்துவார், காரணம்

அவர்  உங்கள் முகத்தை பார்ப்பவரல்ல இருதயத்தை பார்ப்பவர் (1சாமுவேல். 16:7). . 

அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.  சங்கீதம் 34:5 

 இந்த வசனத்தை நினைவில் நிறுத்துங்கள், தினமும் அவரை நோக்கி பாருங்கள், சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்.


விசேஷமாய் ஜெபிக்க விரும்புவோர் உங்கள் பெயரை இமெயில் அனுப்புங்கள் உஙளுக்காக ஜெபிக்க காத்திருக்கிறேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews