WORD OF GOD

WORD OF GOD

Monday, October 31, 2016

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்


1500 ஆண்டுகளுக்கு முன்பு, போப்பும் அவர்தம் அதிகார  வர்க்கமும், செல்வத்திலும், அதிகாரத்திலும் நீடித்து தழைக்க, பெரும் பொருள் ஈட்ட மக்களை சுரண்டினர்.

ரோமை புனித நகரமாக்கியதே வியாபார தந்திரம் தான், அங்கிருக்கும் புனித பொருட்களை கண்டால் இரட்சிப்பு வரும் என புது கதை கட்டினர், மரியாளின் முடி, சிலுவையில் பயன்படுத்தப்பட்ட ஆணி, புனிதர்களின் உடைகள் போன்றவற்றை கண்டால் இரட்சிப்பு என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். அதுவும், அந்த பொருட்களெல்லாம் உண்மையானவை என்பதற்கு ஆதாரம் இல்லை,

பிலாத்துவின் படிக்கட்டுகள் என சொல்லப்பட்ட 18 படிகளில் ஏறினால் ஒரு படிக்கு 9 ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று அடுத்த கதை கட்டினர், இதையெல்லாம் நிறைவேற்ற மக்கள் புனித நகருக்கு படையெடுத்தார்கள் அவர்கள் பணத்தை புனித நகரம் பதம் பார்க்கும். ஆம் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கடவுள் பெயரில் அடுத்தவன் பணத்தை பறித்து சுக போக வாழ்வு வாழ்பவர்களின் சாபம் என்னவென்றால் அந்த பணம் அவர்களுக்கு நிறைவை தருவதில்லை, மேலும் மேலும் பறிக்க வேண்டும் என்கிற மோசமான பைத்தியங்களாக மாறிவிடுவர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, அப்படித்தான் சுகபோக போப்புவும், அவரது வழி வந்த ஆன்மீக திருடர்களும் மேலும் மக்கள் பணத்தை சுரண்ட ஒரு அருமையான திட்டத்தை தீட்டினர். அதுதான் ஒருவனை குற்ற உணர்வுக்கு தள்ளி அவன் பணத்தை பறிக்கும் பாவ மண்ணிப்பு சீட்டு வியாபாரம்.
சாமி வரம் தந்தாலும் பூசாரி கொடுப்பதில்லை என்ற தமிழ் பழ மொழியின் நிகரற்ற உதாரணம். அவர் தன் திரு இரத்தம் சிந்தி தன் உயிரை விலையாக கொடுத்து சம்பாதித்த மீட்பை விசுவாசிப்போருக்கு இலவசமாக கொடுக்க, இந்த பண பேய்கள் அதற்கு விலை நிர்ணயித்தார்கள். பாடுப்பட்டு உழைப்பவனின் பணத்தை பிடுங்கி பகட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். மனசாட்சியும் இல்லை, கடவுள் பயமும் இல்லை பிசாசு என்பதன் மொத்த வடிவமே இப்படிப்பட்டவர்கள்தான்.

மக்கள் முட்டாள்களல்ல, தன்னிகரற்ற ஆன்மீக தலைவர் போப்பையும், தாங்கள் பெரிதாய் மதிக்கும் தங்கள் ஆன்மீக வழி காட்டிகளான தங்கள் போதகர்கள் சொல்வதையும் அப்படியே திரு வசனமாக ஏற்றுக் கொண்டனர். காரணம் அவர்களிடம் திருமறை இல்லை, அக்காலத்தில் தான் ஒரு சாதாரண பெலவீனமான போதகர் மார்டீன் லுத்தர் திரு வசனத்தை கையில் வைத்துக் கொண்டு உரக்க கத்தினார், விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்று. காரணம் அவர் ஒரு விவாச சிங்கம். இந்த பெலவீனனை விசுவாச பெலவானாக மாற்றியதில் பிலிப் மெலாங்க்தன் எனும் பேராசிரியர் பெரும் பங்கு வகித்தார்.

மக்கள் திரு வசனத்தை படித்தனர் உண்மையை உணர்ந்தனர், ஆன்மீக திருப்பயணத்தை சரியாக அமைத்துக் கொண்டனர், மக்கள் பணத்தை பிடுங்கி பிழைக்கும் கூட்டத்திற்கு முடிவு கட்டினர்.

ஆனால் இன்று???? திரு வசனம் கையில் தான் இருக்கிறது, தாய் மொழியில் தான் இருக்கிறது.

ஆனாலும் கள்ள உபதேசங்கள் பெருகியிருக்கிறது, சில தனிப்பட்ட போதகர்கள் பிதாவின் ஏஜென்டுகளாகியிருக்கிறார்கள், தசம பாகம் கொடுக்காதவர்கள் தனி திருச்சபைகளில் பாவிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள், கன்வென்ஷனுக்கு இலட்சங்கள் கேட்கிறார்கள், மக்கள் பணத்தை வாங்கி அதில் கூட்டங்கள் நடத்தி மக்களையே பாவிகள் என்று மேலும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அன்னிய பாஷை பேசாதவன் பரலோகம் போகமாட்டான் என்று வேதத்தில் இல்லாததை சொல்லுகிறார்கள், பல ஊழியரகள் பணம் சம்பாதிக்கும் வழியாக ஊழியத்தை பயன்படுத்தி வருகிறார்கள், கார், கோட், மிகப்பெரிய அரங்குகளில் பிரசங்கம் செய்வதுதான் ஊழியனின் அடையாளமாக மாறிப் போயிருக்கிறது,

மெயின்லைன் சபைகளில், கடவுள் பெயரால் மக்கள் பணம் சூறையாடப்படுகிறது, அதிகார போதையில் தள்ளுதலும் விலக்குதலும் சுக போகமாய் நடக்கிறது, அநியாயங்கள் நியாயமாகிறது, சர்வாதிகாரம் தலை தூக்குகிறது, கிறிஸதவ ஒழுங்குகள் காற்றில் பறக்கிறது, எதிர்ப்பு குரல்கள் சதி திட்டங்களாலும், மிரட்டல்களாலும் ஆளுக்கு தகுந்தபடி முறியடிக்கப்படுகிறது, குரல் வளைகள் நெருக்கப்படுகிறது, பணம் - பதவி மட்டும்தான் கிறிஸ்தவத்தின் மையமாகியிருக்கிறது, திருச்சபைகள் இரண்டாகி நிற்கிறது, நிறுவனங்கள் பாழாய் கிடக்கிறது, கிறிஸதவ மன்னிப்பு விலை பேசப்படுகிறது, ஏன் யாரும் திரு வசனத்தின் பக்கம் துணிந்து நிற்கவில்லை?? பணம் வேண்டும் பதவி வேண்டும், வேலை வேண்டும், ப்ராஜெக்ட் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், என்னென்னவோ வேண்டும்???

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
“முட்டாள்களின் கூக்குரல்”


மன்னித்து விடுங்கள் இந்த முட்டாள், லுத்தரன் உபதேசம் தெரியாதவன் இப்படித்தான் உளரிக் கொண்டிருப்பேன், புத்திசாலிகள் பிழைத்துக் கொள்ளுங்கள். 

Wednesday, October 12, 2016

திருட்டு கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவம் என்பது என்ன? 

Tuesday, October 4, 2016

இறை வார்த்தையும் விமர்சனமும்.


நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு வெள்ளி கிழமையும், பிற்பகல் வேளையில் கிராம ஊழியத்திற்கு, குறிப்பாக சிறு பிள்ளைகள் மத்தியில் திருப்பணி ஆற்ற அனுப்பப்படுவோம், போவதற்கு முன்பு நற்செய்தி பணிக்குழு ஆலோசகர் தலைமையில் சிறப்பு ஆயத்த ஆராதனை நடத்தப்படும். ஒரு மாணவர் தேவ செய்தி கொடுக்க வேண்டும். ஒரு மாணவர் சிறுவர்களுக்கான ஒரு மாதிரி நற்செய்தி வகுப்பு நடத்த வேண்டும், அவர்கள் நடத்தி முடித்த பிறகு அதைக் குறித்த விமர்சன நேரம் இருக்கும். அந்நேரத்தில் நிறை  குறைகள் சுட்டி காட்டப்படும்.

நான் தேவ செய்தி கொடுக்கிற நாள் வந்தது. நானும் தேவ செய்தியை  ஜெபத்தோடும் பயத்தோடும் ஆயத்தம் செய்து பிரசங்கித்து முடித்தேன். நான் எடுத்துக் கொண்ட மையக்கரு ஊழியத்திற்காகதான் பணம், பணத்திற்காக ஊழியம் அல்ல என்பதுதான்.  நாங்கள் ஊழியத்திற்கு போக பயணப்படி கொடுப்பார்கள் அப்போது இது போதவில்லை என்ற குரல் அவ்வப்போது ஒலிக்கும். உண்மைதான் அது போதாதுதான். நான் எடுத்து கொண்ட கருப்பொருள் அதை சுட்டி காட்டுவதாக அமைந்துவிட்டது.

 விமர்சன நேரம் வந்தது. என் சக நண்பர்கள் என்னையும் என் அருளுரை கருப்பொருளையும்  சுட்டிக்காட்டி மிக கடுமையாக விமர்சித்தார்கள். கிட்டத்தட்ட என் சக மாணவர்கள் அனைவரும் என் கருப்பொருளை கடுமையாக விமர்சத்தார்கள் அருள்திரு அறிவர் மாணிக்கராஜ் (தற்போதைய முதலவர்) அவர்கள் தான் ஆலோசகராக இருந்தார். விமர்சனம் வந்தால் நான் அதற்கான விளக்கம்  கொடுக்கலாம், எனவே ஒருவர் விமர்சித்ததும் நான் விளக்கம் கொடுக்க எழுவேன், ஆனால் என்னை அனுமதிக்க மாட்டார். எனக்கு மிகுந்த ஏமாற்றம்,    ஒவ்வொரு முறையும் என்னை தடுத்தார். எனக்கு சற்று கோபம் கூட வந்தது என்னை பேச விடவில்லையே என்று.

எல்லாரும் தங்கள் கருத்துக்களை முடித்த பிறகு, அறிவர் மாணிக்கராஜ் அவர்கள் சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, அவர் சொன்னதை அப்படியே பதிவிடுகிறேன்,

" டேய் இந்த செய்தி உங்க எல்லார் உள்ளத்தையும் தொட்டிருக்கு" கில்பர்ட் இப்ப உன் கருத்த சொல்லு என்கிறார்.

நான் மிக அமைதியாகிவிட்டேன், நான் பார்த்து வியந்த பேராசிரியரின் அந்த பதில் நான் எதிர்பாராதது. மன அமைதியோடு

நான் சொன்ன கருத்து ஒன்றே ஒன்று தான் இந்த செய்தி எனக்கும் சேர்த்துதான். அது என்னையும் குத்தியது.

நான் இன்று வரை எனது பிரசங்கங்களை எனக்கும் சேர்த்துதான் ஆயத்தம் செயகிறேன். கடவுளின் வார்த்தை இரு புறம் கருக்குள்ள பட்டையம் அதை பிறரை வெட்ட பயன்படுத்தினால் நிச்சயம் அது என்னை குத்தி கிழிக்கும் ஏனென்றால் ஒருவரை வெட்ட அதை நான் அழுத்தி பிடித்தால் நிச்சயம் அது என்னை வெட்டும். கர்த்தர் பட்ச பாதம் உள்ளவரல்ல.... போதகர் என்பதால் நான் வானத்திலிருந்து குதிக்கவில்லை.

இனி தயவு கூர்ந்து நான் இறை செய்தி பதிவிட்டால் என்னை புகழாதீர்கள்  இறைவார்த்தைக்கு இறைவன் தான் புகழப்பட்ட வேண்டியவர். நான் எவ்விதத்திலும் தகுதியானவன் அல்ல. அவரை துதியுங்கள். என்னை இகழ்கிறவர்கள் தாராளமாக இகழலாம். என்னை திருத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews