WORD OF GOD

WORD OF GOD

Monday, February 28, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே நேற்றைய தினம் என்னால் பதிவிட முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், எனவே இன்றைய காலை மன்னாவில் நேற்றைய அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கத்தை பதிவிடுகிறேன்.

ஏசாயா.49:13-18
கொரிந்தியர்.4:1-5
மத்தேயு.6:24-34

பிரசங்க வாக்கியம் ஏசாயா.49:13-௧௮

13. வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

14. சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

15. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

16. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

17. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.

18. உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்

இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது  கடவுளை நோக்கி கூக்குரலிட்டார்கள் தங்கள் துன்பத்திலிருந்து விடுதலையாவதற்காக, கடவுள் அவர்கள் இடுகிற கூக்குரலை கேட்டு, அவர்களை விடுதலையாக்க மோசேவை தெரிந்தெடுத்து அனுப்பி, பெரிய அடையாளங்களை செய்து இஸ்ரவேலரை தன் புய பலத்தினால் மீட்டார்.

அவர்களை விடுதலையாக்கி பாலும் தேனும் வழிந்தோடுகிற கானானில் குடியமர்த்தினார். கானானில் குடியேறிய இஸ்ரவேலர் செல்வ செழிப்போடு வாழ ஆரம்பித்தனர், அதுவரை அடிமைகளாகவும் பின்னர் வனாந்திரத்தில் நாடோடிகளாகவும் இருந்தவர்கள், பூரண வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தனர், சந்தோஷத்தையும் செல்வத்தையும் அனுபவித்தனர், இதனால் கடவுளின் வார்த்தைகளை மறக்க ஆரம்பித்தனர்.

ஏசாயா  1 :4   ன் படி கடவுளை விட்டுவிட்டனர் அவரை அசட்டை செய்து அவருக்கு கோபம் உண்டாக்கினர்.

இதனால் பாபிலோனியர்களால் சிறை பிடிக்கப்பட்டு 70  ஆண்டு அடிமைத்தன வாழ்வை அனுபவித்தனர்.

தங்களுக்கு துன்பம் வந்த பிறகு, கடவுள் எங்களை கைவிட்டுவிட்டார் கடவுள் எங்களை மறந்து விட்டார் என்று கடவுளை குற்றம்சாட்டினர், அதை கடவுள் அறிந்து ஏசாயா.49 :14  வது வசனத்தில் வெளிப்படுத்துகிறார், மாத்திரமல்ல நான் உங்களை மறப்பேனா ஒரு தாய் கூட தன பிள்ளையை மறந்துவிடலாம் ஆனால் நான் உன்னை மறப்பதில்லை என்கிறார்.

தான் தவறு செய்துவிட்டு கடவுளை குற்றம் சாட்டும் மக்களுக்கு நான் உங்களை மறப்பதில்லை என்று கடவுள் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார், கடவுள் இப்படி யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் தான் அழைத்த ஜனத்தின் மீதுக்கொண்ட அன்பினால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

16  வது வசனத்தில் நான் உன்னை என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் என்றும் உன் மதில்கள் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது என்கிறார்.

அதாவது தான் மிகவும் நேசிக்கிறவர்களின் பெயர்களை உடலில் பச்சைக்குத்திக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் இருந்துவருகிற ஒரு பழக்கம் அதைப்போல உங்களை என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் என்று தன் அன்பை வெளிப்படுத்துகிறார்.

மதில்கள் என்றால்  நம் வீட்டின் அல்லது நகரத்தின் சுற்று சுவரை குறிக்கும் அவைகளில் எப்போதும் காவல்காரன் தான் நின்று காவல் காப்பான் கடவுள் உன் மதில்கள் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது என்பதன் மூலம் நானே உங்களை பாதுகாக்கிறேன் என்கிறார்.

மேலும் உன்னை பாழாக்கினவர்கள் உன்னை விட்டு ஓடிப்போவார்கள் என்று விடுதலையின் செய்தியை கொடுக்கிறார். அதுமட்டுமல்ல அவர்கள் திரும்பி வந்து உனக்கு அலங்காரமாய்  இருப்பார்கள் என்கிறார்.

மத்தேயு.6 :24 -34  வரையுள்ள வசனங்களில் இயேசு கிறிஸ்து முதலாவது கடவுளுடைய  ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் இவைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என்று உலக பொருளுக்கான உத்தரவாதத்தை தருகிறார்.

1கொரிந்தியர் 4 :5  ல் பவுல் அவருடைய பிள்ளைகளாய் விசுவாசத்தில் நிலை நின்றால், அவனவனுக்கு உரிய புகழை கடவுள் தருவார் என்று, புகழுக்கான உத்தரவாதத்தை தருகிறார்.

இதன் மூலம் கடவுள் நம் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது விளங்குகிறது. எனவே கடவுள் நம்மை துன்புறுத்தி பார்க்கிரவறல்ல தீமைகளால் சோதிப்பவருமல்ல, மாறாக நம்மை நேசிப்பவர், நம்மை காப்பவர், நமக்கு தேவையான அத்தனை நன்மைகளையும் தருபவர்.

இந்த விசுவாசத்தோடு இந்நாளின் பணிகளை துவங்குவோம், பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணையிருப்பார். ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, February 26, 2011

காலை மன்னா

அன்பான என் சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும்   ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம். 1சாமுவேல்.1:1-2

1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சேரப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.

2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை

திருமணமான பிறகு, எல்லாரும் விரும்பி எதிர்பார்ப்பது ஒரு குழந்தையை, காரணம் குழந்தை என்பது பெற்றோர் என்ற சமூக உயர்வை தருகிறது, அதுமட்டுமல்ல, மணவாழ்வை அர்த்தமுள்ள வாழ்க்கையாக்குகிறது, எனவேதான் பிள்ளை செல்வம் என்று சொல்லுகிறோம், பிள்ளைகள்தான்  பெற்றோர்களின் முதல் செல்வமாக இருக்கிறார்கள்.

நமுடைய தியான பகுதியில் எல்க்கானா  என்கிற ஒரு மனிதன் இருக்கிறான் அவனுக்கு இத்ரண்டு மனைவிகள் இருக்கிறார்கள், ஒருவள் பெயர் அன்னாள், இன்னொருவள் பெயர் பெனின்னால், அன்னாளுக்கோ குழந்தை இல்லை, ஒவ்வொரு வருடமும் இவர்கள் சீலோவிலே கர்த்தருக்கு பலியிட வருவார்கள், அப்படி வரும்போதெல்லாம், எல்க்கானா  பெனின்னாளுக்கும் அவள்  பிள்ளைகளுக்கும் ஒரு பங்கும், அன்னாளுக்கு இரண்டு பங்கும் கொடுப்பார், இது பெனின்னாளுக்கு பொறாமை உண்டாக்கினது எனவே, அன்னாளின் பிள்ளை இல்லாத குறையை சுட்டிக்காட்டி கேவலமாக பேசினாள்.

இது அந்நாளுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. காரணம், பிள்ளைகள் என்பது கர்த்தரால் வரும் சுதந்திரம், அதாவது கடவுள் கொடுக்கிற ஆசீர்வாதம், பிள்ளைகளை கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்வதால்   தான் நாம் பெற்றோர்களாகிறோம்  .

எனவே கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கமும் ஆதங்கமும் அன்னாளிடம் மிக அதிகமாக இருந்தது. அதன் விளைவு தேவாலயம் போய் கதறி அழுது ஜெபித்தாள்.

நம்முடைய வாழ்விலும் கூட பல நேரங்களில் இறைவனின் முழுமையான
ஆசீர்வாதத்தை அனுபவிக்கமுடியாமல் இருக்கலாம் அதற்காக நாம் வருந்தலாம், ஆனால் விசுவாசத்தை மட்டும் விட்டுவிடாமல்
தொடர்ந்து  அதற்காக விசுவாசத்தோடு  ஜெபித்து  கொண்டிருந்தால்  போதும்  ஏற்றவேளையில் கர்த்தர் வாய்க்க செய்வார். அன்னாளுக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்த கடவுள் நம்மையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, February 25, 2011

காலை மன்னா 25.02.2011

கிறிஸ்துவுக்குள் எனதன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் இந்த காலைவேளையில் எனது அன்பான ஸ்தோத்திரங்கள், இன்று நாம் தியானிப்பதற்காக எடுத்துக்கொண்ட தியான வசனம். மத்தேயு.6 :31  - 32 

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

 

அன்பான  உடன் விசுவாசிகளே எப்போதும்  கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறவர்களை பார்த்திருக்கிறீர்களா? கைஸ் ராயேஸ் என்பவர் தன் அனுபவத்தை பற்றி சொல்லுகிற் ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது,

அவருக்கும் அவர் மனைவிக்கும் முதல் குழந்தை பிறந்த பிறகு அவர்கள் வாழ்க்கை தலை கீழாக மாறிப்போனதாம். இரவில் குழந்தையை பார்த்துக்கொள்வது மிகவும் சிரமம், அதுவல்லாமல் அவர்கள் குழந்தை தினமும் இரவில் அழுதுக்கொண்டே இருக்குமாம், அழுகுரல் கேட்ட உடனே அவர் மனைவி, என்னங்க என்னங்க, குழந்தை அழுது என்னவென்று பாருங்க என்று  எழுப்பிவிடுவாராம், இவர் எழுந்துப்போய் குழந்தையை தூங்கவைக்க  படாத பாடுப்பட்டு, தூங்க வைப்பாராம்.

இது ஒரு நாள் இரண்டு நாளல்ல தினமும் நடந்துக்கொண்டிருந்ததாம், இதனால் அவருக்கு சரியான தூக்கம் இல்லாமல், தினந்தோறும் அலுவலகத்தில், சரியாக பணிபுரியாமல் அவஸ்தைப்பட்டாராம். இவர் மீது அன்புக்கொண்ட இவரது அலுவலக நண்பர்கள் இதை பற்றி விசாரித்தபோது தன் பிரச்சனையை சொல்லியுள்ளார், உடனே அவரது நண்பர்கள் இன்பான்ட் மெசேஜஸ் என்ற புத்தகத்தை வாங்கி படிக்க சொல்லியுள்ளனர்,

அவர் வாங்கி குழந்தையை  துங்கவைக்க என்னசெய்ய வேண்டும் என்பதை படித்தார், அதில் குழந்தையின் முதுகு, தோள்கள், தலை, கால்கள் ஆகியவற்றை மிகவும் லாவகமாக மசாஜ் செய்ய வேண்டும் என்றிருந்தது, உடனே அன்றிரவே அதன்படி செய்தார், அன்றிரவு பிள்ளை அமைதியாக தூங்கிகொண்டிருன்தது..

ஆனால் திடீரென அவர் மனைவி என்னங்க என்னங்க என்று மிகவும் பதட்டமாக, அவரை எழுப்பினாராம்,  அவர் பதறிப்போய் எழுந்து  ஏன் என்ன ஆச்சு என்று கேட்டால், அவர் மனைவி சொன்னாராம், என்னங்க குழந்தை அழவே இல்ல கொஞ்சம் எழுந்து என்னனு பாருங்க  என்றாராம்..

இப்படிப்பட்ட மனிதர்களை கேள்விபட்டதுண்டா? தேவை இல்லாமல்  பயப்பட்டு அனேக காரியங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், காரியங்கள் நல்லபடியாக நடந்துக்கொண்டிருந்தாலும்   கவலைப்படுபவர்கள்.

அவர்களுக்குதான் ஆண்டவர் இங்கே மிக ஆசீர்வாதமான செய்தியை கூறுகிறார். எதை உண்போம், எதை குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலை படாதீர்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு தேவை என்பது 
கடவுளுக்கு தெரியும் என்கிறார், காரணம் நம் தேவைகள் தெரியாதவரா நம் கடவுள், நம்மை முழுவதுமாய் அறிந்த தேவனுக்கு நம் கவலைகள் தெரியாதா? 


எனவே முதலாவது அவரையும், அவரது வாழ்வையும் பின்பற்றுவதில்   உற்சாகமாய் தரித்திருந்தால் போதும். நம் தேவைகளை நம் தேவன் பார்த்துக்கொள்வார், நமக்காக ஜீவனை  கொடுத்தவர் நம் தேவைகளை தரமாட்டாரா?  

இந்தக் காலையில் இந்த சந்தோஷத்தின் செய்தியோடு நம் பணிகளை தொடருவோம்.. பரிசுத்தாவியானவர் நம்மை காத்துக்கொள்வார் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.



மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, February 24, 2011

அருளுரைக்கிறார் ஆயர்



விசுவாசிகள் இப்போது
அவிசுவாசம் என்னும்
சிறையில் இருக்கிறார்கள்
வேத வனத்தில் அல்ல
போக வனத்தில்

வேதம்  இன்று
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய்  இல்லாமல்  
பையில் சுமக்கும்
மூட்டையாய் மாறிவிட்டது

 கொடுமை  என்னவெனில்
சபையார் எல்லாம்
சண்டை பிரியராய்
உருமாறி வருகின்றனர்...
அமைதி இங்கே
ஆழக் குழிவெட்டி
அதில் போய்
படுத்துக்கொண்டது
அன்பு இங்கே
துன்பப்பட்டு துக்கப்பட்டு
மூச்சடங்கி
நொடிந்து மடிந்து
முடங்கிப் போனது,....

நீயா நானா?
வாய்யா பார்க்கலாம்
என்று எக்காளம்
ஊதுகிறது சுயநலம்.

இயேசு தன்னை
இலட்சியம் செய்யாததால்
இங்கே சர்வசிருஷ்டிகர்......
சங்கடப்படுகிறார்..

இறைமைந்தர் இயேசுவை 
புறமதத்தவர் மத்தியில்..
ஏலம் போடுகிறார்கள்
இங்கே சுயநலவாதிகள்......

பிதாவின் கையில் 
பிரம்பு இருந்தது....
அஞ்சி அடங்கினர் 
அக்கால மக்கள்.......

மைந்தரின்  கையில்
மன்னிப்பு தவழ்கிறது
பிள்ளைகள் இன்று....
பதவி பித்தாய்
அலைகிறார்கள்.......

சன்னலை திறந்தேன்
சூரிய ஒளியால்
அறைக்கு இன்று
விடுதலை கிடைத்தது......


விவிலியத்தை திறந்திடு
இவைகளுக்கெல்லாம்
விடுதலை எளிதாய்
கிடைத்துவிடும்......

இனிவரும் காலம்
இனிதாய் தொடங்கும்
இன்பமாய் தொடரும்
இறை ஆசியால்
இறுதிப் பெறும்.........

தந்தை மைந்தர் தூயரின்
அருட்பெயரால் ஆமென்.....

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்



மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, February 23, 2011

காலை மன்னா

நம்மை விசாரிக்கிறவர்.

1  பேதுரு.5 :7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்

என் அருமை சகோதர சகோதரிகளே. இறைமகன்  இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள்.

நான் ஒருமுறை, ஆம்பூர் (வேலூர் மாவட்டம்) பகுதியில் உள்ள பெதஸ்தா லுத்தரன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  போயிருந்தேன், எப்படி உள்ளே போகவேண்டும் என்றும் யாரை விசாரிப்பதென்றும் தெரியவில்லை. மனதிலே குழப்பத்தோடு, சங்கடத்தோடு நின்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென்று ஒரு குரல் என்னை சார், என்ன தேடுறீங்க, நான் உங்களுக்கு உதவலாமா? என்று கேட்டது.

அந்த குரலுக்கு சொந்தமானவர் அந்த  மருத்துவமனையில் பணியாற்றும் விசாரணையாளர். அவர் எனக்கு எல்லாவற்றையும் தெளிவாய் சொன்னார், எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், ஒரு தெரிந்தவர் இருக்கிறார் என்ற எண்ணமும் தோன்றியது.

நம்முடைய தியான பகுதியில் கூட இயேசு ஆண்டவர் நம்மை விசாரிக்கிறவர் என்று பேதுரு கூறுகிறார், (one  who  cares  for  you ) ஆம் நம்மை கரிசனையோடு பார்த்துக்கொள்பவர். நம்முடைய வாழ்வில் நம்மை யார் விசாரிப்பார்கள்? நம்முடைய பெற்றோர்கள், மற்றும் உடன்பிறந்தவர்கள்தனே, சில நேரங்களில் அவர்களும் நம்முடைய  தேவைகளை விசாரிப்பதில்லை.

நமக்கு தேர்வில் தோல்வி ஏற்படும்போது, விபத்து  ஏற்படும்போது, நமக்கு நெருங்கியவர்கள் மரணமடைகிறபோது அநேகர்  விசாரிப்பதில்லை. ஆனால் இயேசு ஆண்டவர் நம்மை அன்போடு, கரிசனையோடு, விசாரிக்கிறார்.

நம்மீது அவருக்கு அளவற்ற அன்பு. குழந்தை தரையில் விழுந்தால், தாயின் உள்ளம் தாங்காது, குழந்தையைவிட தாய்க்குதான் அதிகமான வலி அதேபோல் இயேசு ஆண்டவர் நம்மை கரிசனையோடு கவனிப்பதில், அதிக அக்கறையுள்ளவர்.

இன்று இயேசு ஆண்டவர் நான் உன்னை "விசாரிக்கிறேன்" கவனிக்கிறேன் என்று கூறுகிறார்.

உபாகமம்.11 :12  நீ வாழ்கிற தேசம் உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும், என்று வாக்கு கொடுக்கிறார்.

யார் நம்மை விசாரியாமல் போனாலும், கவனியாமல் போனாலும், சர்வ வல்லமையுள்ள கடவுள் நம்மை விசாரிக்கிறார், நம்மை கவனிக்கும்படியாக அவருடைய கண்கள் நம்மீது நோக்கமாயிருக்கிறது.

கவலை வேண்டாம், கண்ணீர் வேண்டாம் என்னை விசாரிக்கிறவர் இயேசு என்று தைரியமாய் இந்த நாளை நம்பிக்கையோடு துவங்குவோம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, February 22, 2011

சிறுகதை

திருவிருந்து

மாலை நான்கு மணியிலிருந்தே அந்த வீடு அமர்க்களப்பட்டது. டிசம்பர் 31  அல்லவா சர்ச்சுக்கு போகணும் ஆண்டு முழுதும் கண்ணின் மணியை போல பாதுகாத்து வழி நடத்திய தேவனுக்கு நன்றி பாராட்டனும் - வாழ்வளிக்கும் வசனங்கள் கேட்கணும், பரமனை பாடனும், அதனால் தான் அந்த வீட்டில் இப்படி பரபரப்பு காணப்பட்டது.

அப்பா அருள்நாதன் ஒய்வு பெற்ற பட்டாளத்துக்காரர். இப்போது நைட் வாட்ச்மேன். இரவெல்லாம் கண்விழிக்க வேண்டும் அதற்கு துணையாக தினமும் ஒரு நெப்போலியனோ, ஒல்டுமங்கோ வேணும், வாங்கும் சம்பளத்தில் 75  விழுக்காட்டை அது குடித்துக்கொண்டிருந்தது, மீதியோ பட்டாளத்தில் பற்றிக்கொண்ட புகை பழக்கத்தால் கரைந்தது.

அம்மா பாக்கியவதி புடவை மோகம் தலைக்கேரியவள் நாளுக்கொரு புடவை வேண்டும். தலையில் பூவும்தான். பூவுக்கு நூற்றைம்பது ரூபாவும், புடவைக்கு ஐநூறு ரூபாவும் மாதம் ஒன்றுக்கு தவறாமல் பட்ஜெட்டில் இடம் பிடித்தது. பட்டாளத்தார் பென்ஷன் அதற்கு துணை புரிந்தது. மூத்த மகள் தேவநகை பெயருக்கேற்ற குணவதி. நகைப்பைத்தியம் தலையிலிருந்து, கால்வரை தங்கம் வெள்ளி தாராளமாய் வேண்டும். பட்டாளத்தார் பணியிலிருந்த நாளில் வாங்கி வைத்த 5  ஏக்கர் நிலமும், இரண்டு மூன்று வீட்டு மனையும் அதற்காகவே வேறொருவர் கை மாறியது. ஒரு பெட்டி நிறைய நெற்றிச்சுட்டி, கம்மல், மூக்குத்தி, வளையல் என உருமாரி  அவள் பீரோவில் தஞ்சம் புகுந்தது.

இளையவன் அபிஷேக். பன்னிரண்டாம் வகுப்பு பையன். படிப்பில் படுசுட்டி. பயன் என்ன? யாரோ சூப்பர் ஸ்டாராம்  அவருக்கு இவன் பரம ரசிகனாம். அவர் நடித்த படங்களில் ஒன்றை சொன்னால் போதும் ஏழு முறை என்று பட்டென்று பதில் சொல்வான். வேறொரு படம் சொன்னால் பத்து முறை என்று தம்பட்டம் அடிப்பான், அவன் எத்தனை முறை அந்த படம் பார்த்தான் என்பதன் கணக்குதான் அது.

மணி நான்கிலிருந்து ஏழுக்கு தாவி இருந்தது, நால்வரும் வெளியே வந்தனர் வீடு பூட்டப்பட்டது, வழிபாடு துவங்கியிருக்குமோ?, ஆலயத்தை அடைந்தனர். தொழுகை பக்தி மனத்துடன் தொடங்கி தொடர்ந்தது, முதல் பாட்டு "வேறு ஜென்மம் வேணும் மனம் மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்" பிசிறில்லாமல் பாடல் குழு பாட சபை மக்களும் உடன் பாடினர். தொடர்ந்து இரண்டாவது பாடல் ஞான பாடல் "நான் பாவி தான் ஆனாலு நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர், வாவென்று என்னை அழைத்தீர்  என் மீட்பரே வந்தேன்... வந்தேன்....." அடுத்து வந்தது காணிக்கை பாடல் " எத்தனை திரள் என் பாவம் என் தேவனே எளியன் மேல் இரங்கையனே " அருள் நாதனின் குடும்பம் சுருதி பிசகாமல் பாடுகிறது. உதட்டிலிருந்தா? உள்ளத்திலிருந்தா?
ஆனால் கண்கள் எட்டும் கண்ணீர் சிந்தின.

பாவ அறிக்கை வேண்டுதல் "இரக்கமுள்ள கடவுளே ஏழை பாவியாகிய நான் மனதினாலும் வாக்கினாலும்  நடக்கையினாலும் வெகுவிதமான பாவ குற்றங்களை பண்ணினேனென்று  மனஸ்தாபப்பட்டு அறிக்கையிடுகிறேன்....

நான் திரும்ப பாவம் செய்ய சோதிக்கப்படும்போது அதற்கு சம்மதியாமல் அதை அருவருக்கவும் உமக்கு பிரியமான பிள்ளையாக நடக்கவும் பரிசுத்த ஆவியை கொண்டு புத்தியையும் பலத்தையும் தாரும்... என்னை ஆயத்தம் பண்ணியருளும் சாமி ஆமென்."

இப்போது அந்தக் கலங்கிய கண்களில் கண்ணீர் வரத்து துவங்கினது. திருவிருந்து துவங்கியது அந்த எட்டு கால்கள் முழங்காலில் முடங்கியது. இதை வாங்கிப் புசி இது என்னுடைய சரீரம் .... இதிலே பானம் பண்ணு, இது என்னுடைய திரு இரத்தம் இப்போது அந்த எட்டு கண்களும் அருவியாகி கன்னத்தை வருடி, தரையில் சங்கமித்தது.

வழிபாடு முடிந்தது. சபையார் இல்லம் நோக்கி விரைந்தனர். ஆயர் அருள்திரு. ஆர்த்தர் குளிரை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆசி வழங்குவதில் முனைப்புக்காட்டினார். அருள்நாதன் வீடு வந்தது உள்ளே நுழைந்தார்.

ஐயரே பூவுக்கும் புடவைக்கும்  ஆசைப்பட்டு பேயாய் அலைந்து, தேவனை மறந்தேன் இனி அந்த ஆசையை அடியோடு மறப்பேன். புத்தாண்டு முதல் புது மனுஷியாய் வாழ்வேன். - பாக்கியவதி.

ஐயரே நாளை புத்தாண்டு முதல் குடியை கெடுக்கும், குடியையும், என் உடலுக்கு பகையாய் இருக்கும் புகையையும் விட்டுவிடுகிறேன் - அருள்நாதன்.

பாஸ்டர் நகை நகை என்று நாயாய் அலைந்தேன். அதனால் எங்கள் சொத்தை எல்லாம் இழந்தோம். நாளை முதல் வேதமே எனக்கு நகை, ஜெபமே ஆபரணம், இயேசுவே எனக்கு அணிகலன் - வேதநகை.

எங்க அனைவரையும் திருவிருந்து வழியாய் திருத்திட்டீங்க பாஸ்டர். இனி நான் இயேசுகிறிஸ்துவின் பிள்ளை . உள்ளத்தை பாழ்படுத்தும் திரைப்படங்களை பார்க்கமாட்டேன். நாளை முதல் இயேசுவை அறியாத மக்கள் அறியவும். தெரியாத மக்கள் தெரியவும் நான் உழைக்கப்போகிறேன் - அபிஷேக்.

ஒரு இறை குடும்பத்தை அழிவிலிருந்து காத்து புத்தாண்டை புதிய மனிதர்களாய் வரவேற்க காத்திருக்கும் படி செய்த திருவிருந்தின் வல்லமையை எண்ணி தேவனுக்கு நன்றி படைத்த நான்கு உயிர்களுடன், அருள்திரு. ஆர்த்தரும் ஐந்தாவதாக இணைந்துக் கொண்டார்.

                                                             முற்றும்

சிறுகதை செல்வர்.
திரு. ஆ. ஏசையன்

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

Monday, February 21, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளுக்கு காலை ஸ்தோத்திரங்கள்

இன்றைய  தியான வசனம். 1  யோவான்.5 :4 -5 .

4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?


கடந்த சனிக்கிழமை (19 .02 .2011  ) முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கி நடந்து வருகிறது, முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பங்களாதேஷ் அணியை வென்றது, தொடர்ந்து இதே போன்ற வெற்றிகளை இந்திய அணி குவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

பொதுவாக வெற்றி என்பது எல்லா மனிதனும் விரும்புகிற வார்த்தை, தோல்வியை யாருமே விரும்புவதில்லை. விளையாட்டு போட்டிகளில் மட்டுமல்ல, கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வற்றிக்கு கிடைக்கிற மரியாதையே தனி, எனவே எல்லா மனிதருக்கும் வெற்றியின் மீது ஒரு மயக்கமே ஏற்படுகிறது.

நம்முடைய தியானப்பகுதி சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றி யாருக்கு சொந்தமாகும் என்பதை விளக்குகிறது. இயேசுவானவர்  கடவுளின் குமாரன் என்று விசுவாசிக்கிறவனேயன்றி  உலகத்தை ஜெயிக்கிறவன் யார் என்று யோவான் கேள்வி எழுப்புகிறார்.

அப்படியானால் வெற்றி யாருக்கு சொந்தம் என்பதை இந்த திரு வசனங்கள் மூலம் நமக்கு தெளிவாக புரிகிறதல்லவா?

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில், அவர் எல்லா அக்கிரமங்களையும், அநியாயங்களையும் எதிர்த்து நின்றார், அதன் பலன் அநியாயம் செய்பவர்களெல்லாம் ஒன்றிணைந்து, அவரை சிலுவையில் அறைந்தனர், மேலும் அவ்வளவுதான் இயேசு தோற்றுப்போனார், இனி நாம் நம் தவறுகளை தைரியமாய் செய்யலாம் என நினைத்தனர், ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து வந்து, இந்த உலகத்தையும் மரணத்தையும் ஜெயித்து, உண்மையான் வெற்றி வீரராக அநியாயம் செய்தோரை அதிரச்  செய்தார்.

அது மாத்திரமல்ல அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் இந்த வெற்றியின் உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார். அதாவது தன்னை பின்பற்றுகிறவர்களை பார்த்து நீங்கள் என்னிலும் வல்ல காரியங்களை செய்வீர்கள் என்று வாக்களித்திருக்கிறார்.

எனவே வெற்றி என்பது யாருக்கோ சொந்தமானதல்ல  கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவர்க்கும் சொந்தமானது என்ற விசுவாசத்தோடு இந்த நாளை  துவங்கி ஜெயமாய் வாழ பரிசுத்தாவியானவர் நமக்கு துணை செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

Sunday, February 20, 2011

தீமையை வெல்வோம்

அன்பான உடன் விசுவாசிகளே இந்த பரிசுத்த ஒய்வு நாளின் காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய நாளுக்குரிய நமது வேத பகுதிகள்.

சங்கீதம் 103 :1 -3 
உபாகமம்.19 :15 -21 
1  கொரிந்தியர்.3 :10 -11 ,16 -23 
மத்தேயு.5 :38 -48      

பிரசங்க வாக்கியம் உபாகமம்.19 :15 -21 

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த உடன் விசுவாசிகளே பிள்ளைகள் முதன் முதலாக பள்ளிக்கூடத்திற்கு போகும்போது வீட்டிற்குள் ஒரு பெரிய போராட்டமே வெடிக்கும், காரணம் அதுவரை பெற்றோரை விட்டு அதிக நேரம் பிரிந்திராத பிள்ளை திடீரென பெற்றோரை பிரிந்திருப்பதையும், புதிய இடத்தையும் சூழ்நிலையையும் விரும்பாததாலும் பள்ளிக்கு போக பிள்ளைகள் விரும்புவதில்லை.

அந்த நேரத்தில் பெற்றோர்கள் வேறு வழியின்றி பிள்ளைகளை தண்டிக்க வேண்டியுள்ளது, அதாவது பள்ளிக்கூடத்திற்கு இப்ப போலனா உன்ன அடிப்பேன் என்று கையில் குச்சியை வைத்து மிரட்டுவோம், அதற்கும் பயப்படவில்லை என்றால்  இரண்டு அடி வலிக்கும்படி அடிப்போம்,

அடிப்பதன் நோக்கம் என்ன அவனுக்கு வலிக்க வேண்டும் என்பதா? இல்லை, பயப்படவேண்டும் என்பதா? இல்லை, அவன் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்பதற்காக, பள்ளிக்கூடம் போனால் யாருக்கு நன்மை பெற்றோருக்கா? இல்லை பிள்ளை நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எத்தனை பிள்ளைகள் படித்துவிட்டு பெற்றோரை பாதுகாக்கிறார்கள் ? ஆனால் அவர்களை படிக்க வைத்தது  பெற்றோர்கள்.  

பிள்ளையை அடிக்கும்போது பிள்ளைக்கு வலிக்கிறதோ இல்லையோ எந்த பெற்றோரும் பிள்ளையை அடித்துவிட்டு அது  அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து நிம்மதியாக இருப்பதில்லை, பிள்ளையின் வலியை விட அடித்த பெற்றோரின் உள்ளத்தில் ஏற்படுகிற வலி அதிகம்.

இன்றைய நம்முடைய தியான பகுதியும் தண்டனைகளை பற்றி பேசுகிறது, கடவுளுடைய ஜனத்தின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை மோசேயின் வழியாக கடவுள் வெளிப்படுத்துகிறார், அதில் குற்றங்கள் நடந்தால் நியாயமாக விசாரணைகள் நடைபெற வேண்டும் என்றும், இரண்டு மூன்று சாட்சிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார், மேலும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இவ்வளவு கடுமையான தண்டனையை கடவுளே தன ஜனத்தின் மத்தியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார், அதற்கு கடவுள் சொல்லுகிற காரணம் உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்ற இதை செய்யுங்கள் என்று கூறுகிறார்.

தீமை செய்தால் கடவுளுக்கு என்ன கஷ்டம் உண்மைதான் கடவுளுக்கு எந்த கஷ்டமும் இல்லை, தீமை செய்தால் தீமை செய்தவனுக்குதான் கஷ்டம், அவன் நிம்மதியாய் இருக்க முடியுமா? தீமையினால் ஒருவன் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? குற்றவாளி என்கிற அவப்பெயருடன் வாழவேண்டி வருமே? உறவுகளும், ஊரும் கேவலமாக பேசாதா? அப்படியானால் தீமை செய்வதினால் தீமை செய்தவருக்கு எந்த நன்மையையும் இல்லாத போது கடவுள் எப்படி அதை அனுமதிப்பார், அதுமாத்திரமல்ல தீமையினால் அடுத்தவருக்கும் தீமைதானே விளைகிறது? மனு குலத்தை காக்கும் கடவுள் தீமைகளை எப்படி அனுமதிப்பார்?  

மத்தேயு சுவிசேஷம் 5 :38 -48  வரை உள்ள வசனங்களில் இயேசு கிறிஸ்து தண்டனைகளை பற்றி மிக தெளிவான விளக்கம் தருகிறார், அது யாதெனில்? ஒருவன் தீமை செய்தால் அவனை தண்டிக்காதீர் என்று ஒரு தகப்பனின் உள்ளத்தோடு கூறுகிறார்.  மாறாக அவனுக்கு நன்மை செய்யுங்கள்  என்கிறார், காரணம் தீமைக்கு தீமை என்றுகூட தீமை வளர்ந்துவிடக்கூடாது என்று ஆண்டவர் கூறுகிறார் காரணம் தீமையினால் நன்மை இல்லை மாறாக நன்மை செய்தால், அந்த இடம், அந்த வாழ்க்கை இனிமையாகிவிடுகிறது . அதுதானே நிறைவான வாழ்க்கை என்கிறார்.

பவுல், 1  கொரிந்தியர் 3 : 16  முதல் உள்ள வசனங்களில் நாம் கடவுளின் ஆலயம் என்றும் நமக்கு நாமே தீமை செய்ய உரிமை இல்லை என்கிறார், காரணம் ஒன்றுதான், நாம் நன்றாக இருக்கவும் இறைவனின் நாமம் மகிமைப்படவுமே.

கடவுள் தீமையை வெறுக்க காரணம் நாம் நன்றாக இருக்க வேண்டும்  என்பதே, அதை நிரூபிக்கவே தீமை செய்த நம்மை காக்க தன் ஜீவனை கொடுத்தார்.

எனவே நமக்கு பிரயோஜனம் இல்லாத தீமையை வெல்வோம். நன்மையினால் வாழ்வைக்கட்டி எழுப்புவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு,. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Saturday, February 19, 2011

அறிவோம் ஆரோக்கியம்

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள் பல வகைப்படும் அதில் non steroidal anti inflammatory drugs என்பது ஒரு வகை, இதில் முதன்மையானதும பலரும் பயன்படுத்துவதுமான டைக்ளோபினக் பற்றி பார்ப்போம்.

மருந்தின் பெயர் :

டைக்லோபினக் சோடியம் / பொட்டாஷியம்

diclofenac sodium or pttasium

குறிப்புகள்:

டைக்ளோபினக் வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைப்பதற்கும், உடலில் உள்ள பிற எரிச்சல்கள், மிதமான வலிகள் குறைப்பதற்கு பயன்படுகிறது.

இவை சோடியம், பொட்டஷியம் உப்புகளாக கிடைக்கிறது. பொட்டாஷியம் உப்புகள் எளிதில் கரைந்து, வேகமாக செயல்படுகிறது.

இந்த மாத்திரைகள் நீண்ட நேரம் பயனளிக்கவும், முழுவதுமாக பயன்படவும் அதற்கேற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றன. இது enteric coated முறையில் தயாரிக்கப்படுகின்றன

பயன்கள்:

எரிச்சல், வலி, மூட்டுவலி, கழுத்துவலி, சிறிய அறுவை சிகிச்சைகளினால், உண்டாகும் வலி, பல் வலி, சதைப்பிடிப்பு மற்றும் தசை வலிகள், அடிமுதுகு வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறைய பயன்படுத்தப்படுகிறது.

அளவு:

பெரியவர்கள்: 50  mg  2 வேளை . வலியின்  வீரியம்  பொறுத்து 3  வேளை  உட்கொள்ளலாம்.

குழந்தைகள்:

1  வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்காமலிருப்பது நல்லது.
1  வயதுக்கு மேல் ஒரு கிலோ உள்ள குழந்தைக்கு , 1  முதல் 3  mg ஒரு நாளுக்கு.

மாதவிடாய் வலி: 50௦ mg  முதல்  200௦ mg  வரை ஒரு நாளில் தேவையை பொறுத்து உபயோகிக்கலாம்.

ஊசி மூலமும் செலுத்தப்படுகிறது.

பெரியவர்கள் மற்றும் மாதவிடாய் கால பெண்களுக்கு 75  mg 1  முதல் 2  முறை இடுப்பில் மட்டுமே போடவேண்டும் .

குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஊசி மூலம் செலுத்தக்கூடாது.

பக்க விளைவுகள்:

அஜீரணம் தலைவலி, வாயுக் கோளாறு (gastristic ) தலை சுற்றல், அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்புண், மற்றும் வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்படலாம். கல்லீரல், சிறு நீரகம் பாதிக்கப்படலாம். வயிற்றுப்புண் (ulcer ) உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது, தவிர்க்க முடியாத பட்சத்தில் இதனுடன் ராண்டக் (rantac  150 ) 150  mg  மாத்திரை சேர்த்து உட்கொள்வது நல்லது.

கடைகளில் கிடைக்கும் பெயர்கள்:

டைக்லோனேக் (diclonac )
டைக்லோபினக் (diclofenac )
டைக்லோரான் (dicloran)
ஜோனாக் (jonac)
ஓவிரான் (voveran)

எச்சரிக்கை:

அடிக்கடி சாப்பிடக் கூடாது

வயிற்றுப்புண் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது.

வலி வந்தாலே உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் அதற்கு அடிமையாகிவிடக் கூடும்.

ஒவ்வாமை ஏற்படலாம்.

இதயக்கோளாறு, உயர் இரத்த அழுத்தம், சிறு நீராக கோளாறு, கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடனும், முன்னேச்சரிக்கயுடனும் செயல்படுவது நல்லது.

வரும் வாரங்களில் அசெக்லோபினக் (ACECLOFENAC ) பற்றி காண்போம்.

அதுவரை உங்கள்  அன்பு சகோதரன்
சாந்தகுமார் (pharmacist)

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக் இருந்ததா கருத்துரை இடுங்கள்.

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் என் அன்பான காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம் யோவான்.10 :20 -21 .

20. அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.

21. வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்

ஆதரவு, எதிர்ப்பு இவை இரண்டுமே ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிற அனுபவங்கள். பொதுவாக நம்முடைய பணியில், குடும்ப வாழ்வில் , சமூக வாழ்வில், நம்மை எல்லா நேரங்களிலும், ஆதரிக்கிறவர்களையும் நாம் காண முடியும், அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிரவர்களையும் காண முடியும்.

நாம் ஆதரவாக பேசுகிறவர்களை மிகவும் நேசிப்போம், அவர்களோடு அன்பு பாராட்டுவோம், அவர்கள் கொடுக்கிற ஆதரவு நமக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கும்.

அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிறவர்களை கண்டால் நமக்கு கடுமையான எரிச்சல் வரும், அவர்களோடு பேசவோ, உறவாடவோ விரும்பமாட்டோம், அவர்களுடைய எதிர்ப்பு பேச்சுக்கள் நம்மை செயல்படவிடாதபடி நம் மனதை காயப்படுத்தும்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தில் இந்த இரண்டையும் மிக அதிகமாகவே சந்தித்திருக்கிறார். அதற்கு மிக சரியான உதாரணம் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

யோவான் 9 ம் அதிகாரத்தில் ஒரு பிறவி குருடனை குணமாக்கின பின்பு, 10 ம் அதிகாரத்தில் நல்ல மேய்ப்பனை பற்றி பிரசங்கிக்கிறார். இவருடைய வார்த்தைகளை கேட்ட ஜனங்கள் இரண்டு விதமாக பேசினார்கள், சிலர் இவன் பிசாசு பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள், சிலர் பிசாசு பிடித்தவனின் வார்த்தைகள் பார்க்க முடியாதவனின் கண்களை திறக்ககூடுமா, அவர் பிசாசு  பிடித்தவரல்ல என்று கூறினர்.

இயேசு கிறிஸ்து தன் ஊழிய வாழ்வில் இப்படி அனேக ஆதரவையும் சந்தித்திருக்கிறார், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார், இதைவிட மோசமான எதிர்ப்பையும், இதைவிட மிகப்பெரிய ஆதரவையும் அவர் சந்தித்திருக்கிறார்.

யோவான் 6 :15  ல் அவரை ராஜாவாக்க மக்கள் முடிவு செய்தார்கள்.
யோவான் 11:48-50 ல் அவரை கொலைசெய்ய  திட்டம் தீட்டுகிறார்கள்.

இப்படி அவர் தன் ஊழிய வாழ்வில் பெரிய ஆதரவுகளையும், பெரிய எதிர்ப்புகளையும் சந்தித்தவர். ஆனால் இவை இரண்டையுமே அவர் தலையில் ஏற்றிக்கொண்டதில்லை, அதாவது இந்த இரண்டில் எதுவும்   அவர் மனதை பாதிக்கவில்லை . இப்படி பட்ட விமர்சனங்களை சந்திக்கும்போதெல்லாம் அந்த இடத்தை விட்டு அவர் கடந்து பொய் தன் வேலையை அமைதியாக செய்துக் கொண்டிருந்தார்.

நம்முடைய வாழ்விலும் ஆண்டவரின் இந்த வாழ்க்கை முறையை பின் பற்றினால் கர்வமோ, கவலையோ இல்லாமல்  நாமும் கடுமையாக உழைக்க முடியுமே, எனவே இந்த காலை வேளையில் ஆண்டவரின் இந்த ரகசியத்தை அறிந்துக்கொண்டு நம் வாழ்விலும் இதை பின்பற்றி வாழ்வோம்.

விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் கிறிஸ்துவை நம்பி உழைப்போம், வெல்வோம் அவரே நமக்கு நித்திய துணையாளர் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு

Friday, February 18, 2011

காலை மன்னா

இன்றைய தியானத்தை நமக்கு வழங்குபவர் எனது அன்பிற்குரிய அண்ணனும் போதகருமான அருள்திரு. பால் தியோடர் அவர்கள். இவர் நாகர்கோவிலில் போதகராக பணியாற்றி வருகிறார்.

இன்றைய தியான வசனம், யாக்கோபு.3 :13 -18 

13. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

14. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.

15. இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

16. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

17. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

18. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது



இன்று உலகில் அறிஞர்கள், பேரறிஞர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள், ஆனால் ஞானிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது

பல்வேறு வழிகளிலும், விஞ்ஞான ரீதியாகவும் அறிவை வளர்த்துக்கொள்ள மனிதன் விரும்புகிறானே தவிர ஞானத்தை பெற்றுகொள்ள விரும்புகிறதில்லை.

வேதாகமத்தில் ஞானத்துக்கு புகழ் பெற்றவனாக சாலமன் ராஜா சொல்லப்படுகிறார், தான் கடவுளிடம் ஞானம் வேண்டு என்று கேட்டதோடு, அனைத்து மக்களையும், ஞானத்தை பெற்றுக்கொள்ள புத்தி கூறுகிறார்.

அவர் எழுதிய நீதிமொழிகள் புத்தகம் ஞான இலக்கியங்களில் ஒன்றாக விளங்குகிறது. 

புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலனாகிய பவுலும், யாக்கோபும், தேவ ஞானத்தை குறித்து, தங்கள் நிரூபங்களில் எழுதி உள்ளதை பார்க்கிறோம்.

நம்முடைய தியானப் பகுதியில், இன்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு, பரத்தில்  இருந்து வருகிற தேவ ஞானத்தை ஞானத்தை குறித்து எழுதுகிறார்.

ஞானம் என்பது இன்றைய விஞ்ஞானத்தை குறித்த அறிவையோ, திறமையையோ குறிப்பிடுவது அல்ல, அது கடவுளிடம் இருந்து ஒரு நல்ல வாழ்வை, நல்ல நடக்கையை அறிந்துக் கொள்வதை குறிக்கும்.

தியானப்பகுதியில் இவ்வுலக ஞானத்தையும், பரத்திலிருந்து வருகிற ஞானத்தையும், யாக்கோபு எடுத்துரைக்கிறார். இவ்வுலக ஞானம் என்பது இந்த பூமிக்கு உரியதாகவும், ஆன்மீக தன்மை அற்றதாகவும், பொய் நிறைந்ததாகவும், காணப்படுகிறது.

பரத்தில் இருந்து வருகிற ஞானமோ, நீதியுள்ளதாகவும், மற்றவர்களை புரிந்து கொள்கிறவர்களாகவும், சமாதானத்தின் நிமித்தம் தன்னை அர்ப்பணிக்கும் தன்மை உடையதாகவும், இரக்கம் நிறைந்ததாகவும், இருக்கிறது.

இந்த ஞானத்தை தான் சாலமன் ஞானி பெற்றுக் கொண்டார்.

உலக ஞானம் நாம் வாழும் சமுதாயத்தில் கலகத்தையும், பொறாமையையும் பகையையும் வைத்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால் பரத்தில் இருந்து வருகிற தேவ ஞானம் சமாதானத்தையும், நல் நடக்கை அடங்கிய ஒரு நல் வாழ்வையும் கொண்டு வருகிறது.

இந்த ஞானமாக இயேசு கிறிஸ்து திகழ்கிறார்.

1கொரிந்தியர்.1:22 ல், யூதர்கள் அடையாளங்களை தேடுகிறார்கள் கிரேக்கர்கள் ஞானத்தை தேடுகிறார்கள், ஆகிலும் அவர் தேவ வல்லமையும் தேவ ஞானமும் உடைய கிறிஸ்துவாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஆகவே கிறிஸ்து நம்மோடு இருக்கும் வாழ்வே ஞானமுள்ள வாழ்வாகும்.

1  கொரிந்தியர். 1 : 31  ல் அவர் கடவுளால் நமக்கு ஞானமானார் என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவாகிய ஞானத்தை பெற்றுக்கொண்டு வாழ்வதே நன்னடக்கையும், நற்குணங்களும் அமைந்த நல்வாழ்வு  ஆகும்.

இந்த ஞானத்தை பெற கடவுளுக்கு பயப்படுதல் தேவை என்பதை நீதிமொழிகள் புத்தகத்தில் அதிகமாய் வாசிக்கிறோம்.

இன்று நம் வாழ்வில் பரத்தில் இருந்து வருகிற ஞானம் பெற்றவர்கள் மிக குறைவாக இருக்கிறார்கள். படித்தவர்களால் சபைகளில் பிரச்சனைகள் தலைதூக்குவதை காண்கிறோம்.

யாக்கோபு 2:3 ல் வஸ்திரம் தரித்தவனை பார்த்து  நீர் வசதியாய் உட்காருமென்று சொல்லி, தரித்திரனிடமோ நீ அங்கே நில் என்கிறார்கள்,

படித்தவர்கள் தேவ ஞானத்தை பெற்று வாழ்தல் ஒரு முன் மாதிரியை ஏற்படுத்துமல்லவா?

திருச்சபையின் தலைவராம்   இயேசு கிறிஸ்து தேவ ஞானமாக இருந்து நம்மை வழி நடத்தி வருகிறார்.

எனவே அவருடைய பிள்ளைகளாகிய நாம்  தேவ ஞானமாகிய கிறிஸ்துவில் இந்த நாளை ஞானமாக துவங்க தூயாவியானவர் நம்மை வழி நடத்துவாராக ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. பால் தியோடர்

Thursday, February 17, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் காலை நேர ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட வசனம், மத்தேயு .10:29 -31 

29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்



அன்பானவர்களே, நம்முடைய வாழ்வில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நாம் அதிகமாய் நேசிக்கிறவர்களெல்லாம்  நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம், அவர்களுக்கு துன்பங்கள் நேருமாயின் அதை நாம் சகித்திக்கொள்ள முடியாது, நமக்கு நேர்ந்த துன்பத்தை போல நாம் பதறுவோம் காரணம் அவர்கள் நமக்கு விசேஷமானவர்கள். உதாரணமாக தாய்க்கோ, தந்தைக்கோ, பிள்ளைகளுக்கோ,  நம்முடைய நமக்கு மிகவும் அருமையான நண்பர்களுக்கோ, நம்முடைய பாசத்திற்குரிய உறவுகளுக்கோ துன்பம் நேருமாயின் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

நம்முடைய தியான பகுதியில், நம்முடைய ஆண்டவருக்கு விசேஷமானவர்களை பற்றி நாம் பார்க்கிறோம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடவுளுக்கு விசேஷமானவர்கள் யார் என்பதை பற்றி பேசுகிறார், அடைக்கலான் குருவிகளோடு ஒப்பிட்டு இதை விளக்குகிறார்.

அந்தக் கால கட்டத்தில் தேவாலயத்தில் பலியிடுகிற பழக்கம் இருந்தது, பலி செலுத்துவதற்கு ஆடு, மாடுகளையோ, புறாக்களையோ பயன் படுத்துவார்கள் ஆனால் ஏழைகளால் அதை வாங்க முடியாது, எனவே ஏழைகள் பலியிடுவதற்காக வாங்குகிற ஒரே ஒரு உயிர், அடைக்கலான் குருவி மட்டுமே காரணம் அது மட்டுமே மிகவும் விலை குறைவாக கிடைக்க கூடியது, ஒரு காசுக்கு, நம்முடைய பணத்தில் ஒரு ரூபாய்க்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை வாங்கிவிடலாம்,

அவ்வளவு விலை மலிவான, குருவிகளில் ஒன்றும்  பிதாவின் சித்தம் இல்லாமல் தரையில் விழாது என்று ஆண்டவர் கூறுகிறார், அதாவது அந்த சாதாரண குருவிகளை கூட மிகவும் கண்ணும் கருத்துமாக கடவுள் பார்த்துக்கொள்ளுகிறார், என்பதை விளக்குகிறார்.

அதுமட்டுமல்ல, நம்முடைய தலை முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்றும், பயப்படாதீர்கள், அடைக்கலான் குருவிகளை பார்க்கிலும் நீங்கள் விசெஷித்தவர்களல்லவா என்கிறார். அதாவது அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவருக்கு எவ்வளவு விசேஷமானவர்கள் என்பதை இதன் மூலம் நிரூபிக்கிறார். ஒவ்வொரு அடைக்கலான் குருவியையும் பாதுகாக்கிறவர், நம்மை முழுவதுமாக பாதுகாக்கிறார், என்பதை விளக்குகிறார்.

நம் தலை முடிகளெல்லாம் எண்ணி வைத்திருக்கிறார் என்றால் , அவர் அனுமதியின்றி அவைகளில் ஒன்றும் விழாது, எனவே நம்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம்மை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார், காரணம் நாம் அவருக்கு விசேஷமானவர்கள்,

எனவே நாம் கடவுளுக்கு விசேஷமானவர்கள் என்கிற தைரியத்தோடு வாழ்ந்து அவர் நாமத்தை மிகிமைப்படுத்துவோம், அவர் நம் வழிகளிலெல்லாம், நம்மை  பாதுகாத்து வழி நடத்துவார். இந்த காலை இந்த தைரியத்தோடு துவங்கி வாழ பரிசுத்தாவியானவர் தாமே நம்மை வழிநடத்தி பாதுகாப்பாராக, ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு

Wednesday, February 16, 2011

காலை மன்னா

ஜெயம் கொடுக்கும் இறைவன்

1 கொரிந்தியர் .15 :57

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்



நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்துவினால், நேசிக்கப்படுகிற அன்பான ஆண்டவருடைய  பிள்ளைகளே, நம் வாழ்வில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டு, ஆனால், அனைவரும், அனைத்திலும் வெற்றிப் பெறுவதில்லை  , ஆனால் வெற்றிப்பெற அனைவரும் தகுதியானவர்கள் தான்.

மனித முயற்சிகள் வெற்றி தருவது போல தோன்றும் ஆனால், வெற்றி பெற முடிவதில்லை, இயேசுவின் அருளும் ஆற்றலுமே நம்மை வெற்றிப்பெற செய்கிறது.

இங்கு தியான பகுதியில், பவுல் நம்முடைய  ஆண்டவராகிய இயேசுவின் மூலம் நமக்கு ஜெயம் கொடுக்கிற கடவுளுக்கு ஸ்தோத்திரம் என்று கூறுகிறார்,

இந்த வருடம் தேர்வு எழுதப்போகிற மாணவர்களுக்கு, தொழில் செய்வோருக்கு, வாழ்வில் இன்னும் அனைத்திலும் வெற்றி தருகிறார் ஆண்டவர். குறிப்பாக சோதனைகள் வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் எல்லாவற்றிலுமிருந்தும்  நம்மை இரட்சித்து வெற்றி அருளுகிறார்.

தாவீது அரசன் வாழ்வில், அவர் சிறுவனாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தபோது, பெலிஸ்திய படை வீரனான, கோலியாத்தை, முறியடித்தார். கோலியாத் பெரிய பலசாலி அதிக வலிமையுடையவன், ஆனால் தாவீது பொடியன். இஸ்ரவேல் இராணுவமே அவனிடம் சண்டையிட பயந்துப்போய் இருக்கிற நேரத்தில், தாவீது நான் போகிறேன் என்று வருகிறான்.

கோலியாத் தன் சுய பலத்தை நம்பி, பட்டயத்தை நம்பி இருக்கிறான், தாவீது சொல்லுகிறான், நான் என் சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய நாமத்தில் வருகிறேன் என்று சற்றும் பயப்படாமல் வந்து தோற்கடித்தான். கடவுளின் வல்லமையை நம்மால் அறிய முடியாது. அவருடைய சத்தம், பெரிய நீர்வீழ்ச்சியின் இரைச்சலை போல் உள்ளது, இடி மின்னல் போல் உள்ளது.

சங்கீதம் . 44 :6 , சங்கீதக்காரன் கூறுகிறான் , நான், என் வில்லை நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. ஆண்டவருடைய பிள்ளைகளே, ஆண்டவரே  நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றியைத் தருகிறார், ஏன் என்றால் நமது ஆண்டவர் இயேசு ஜெய வீரர், ஜெயகிறிஸ்து, யாரும் வெல்லமுடியாத மரணம், சாபம், பாவம், சாத்தானை சிலுவையில் வென்றவர் அவர்.

இன்று நம்மை பார்த்து சொல்லுகிறார் கவலைப்படாதிருங்கள், நான் உங்களுக்கு எல்லா நிலைகளிலும் வெற்றியை தருவேன், இனி தோல்வியே கிடையாது அனைத்திலும் வெற்றிதான்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவார் ஆண்டவர். சமாதானமாய் இந்த நாளை ஆரம்பியுங்கள், ஜெய வீரர் இயேசு உங்களுக்கு வெற்றி அருளுவாராக.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு

Tuesday, February 15, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே காலை நேர ஸ்தோத்திரங்கள். இன்றைய தியானப்பகுதி அப்போஸ்தலர்.9 :5

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம்முடைய ஆண்டவர் நம் மீது அளவற்ற அன்புக் கொண்டவர், நம்மை பாதுகாப்பதில் பரிபூரண ஈடுபாடு கொண்டவர், அதற்கு சரியான உதாரணம் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

சவுல் என்பவன் கிறிஸ்தவர்களை கொல்லும் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு,  தமஸ்குவை நோக்கி கொலை வெறியோடு புறப்படுகிறான், போகிற வழியில், திடீரென அவனை சுற்றி ஒரு ஒளி பிரகாசிக்கிறது, அவன் தரையில் விழுகிறான், அப்பொழுது சவுலே சவுலே என்று கூப்பிடுகிற ஒரு சப்தத்தை அவன் கேட்கிறான், அதற்கு அவன், நீர் யார் என்று கேட்கிறான்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம் என்கிற பதில் கிடைக்கிறது.

அன்று முதல் அவன் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, கிறிஸ்தவர்களை  கொல்ல புறப்பட்டவன், கிறிஸ்துவுக்காய் ஜீவனை கொடுக்க ஆயத்தமானான்.

எப்படி நடந்தது இந்த மாற்றம், நம் ஆண்டவர் இயேசுவினால் நிகழ்ந்தது, நமக்கு எதிராக எழும்புகிற ஆயுதம் வைக்காதே போகும் என்ற ஆண்டவரின் வார்த்தையை நிரூபித்துக்காட்டினார் , மாத்திரமல்ல நம்மை துன்பப்படுத்தினால், அது முள்ளை உதைக்கிரதற்கு  சமம் என்கிறார்,

இதன் மூலம் அவர் நம்மை பார்த்துக்கொள்வதில் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பது மிகத்தெளிவாக விளங்குகிறதல்லவா?

இந்த நாளிலேயும், தைரியமாய், மனமகிழ்ச்சியாய்  நம் பணிகளை துவங்குவோம், நமக்கு எதிரான வலைகளை நம் ஆண்டவர் அருத்தெரிவார்.  ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட்  ஆசீர்வாதம்

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு

Monday, February 14, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளுக்கு அதிகாலை ஸ்தோத்திரங்கள்,
இன்றைய தியான வசனம். அப்போஸ்தலர்.3 :5 -8

5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.

6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.
8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.


இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் அருட் பொழிவை பெற்ற பிறகு வல்லமையாய் ஊழியம் செய்ய துவங்கினர், அவர்கள் செய்த வல்லமையான ஊழியத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இன்றைக்குறிய நம்முடைய தியானப்பகுதி.

பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்கு போனார்கள், அந்த நேரத்தில் தேவாலயத்தின் அலங்கார வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒரு மனிதனை சுமந்து தேவாலயத்திற்கு, கொண்டுவந்தனர், அவனை பற்றி வேதாகமம் சொல்லுகிற குறிப்பு என்னவென்றால், அவன் பிறப்பால் சப்பாணியாய் பிறந்த மனிதன், அதாவது பிறக்கும்போதே நடக்க சாத்தியகூறு இல்லாதவனாக பிறந்தவன்.

அவன் தேவாலயத்திற்கு வருகிற பேதுருவையும் யோவானையும் நோக்கி பிச்சைக் கேட்டு,  ஏதாவது பிச்சை போடுவார்கள் என்று பார்த்துகொண்டிருக்கிறான். ஆனால், பேதுருவோ என்னிடத்தில் வெள்ளியும் பொன்னும் இல்லை; என்னிடத்தில் உள்ளதை உனக்கு தருகிறேன் என்று, நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று என்று சொல்லி, தன் வலது கையினால் அவனை பிடித்து தூக்கி விட்டான், அவன் குதித்து எழுந்தான், குதித்து குதித்து ஆண்டவரை மகிமைப்படுத்தினான்.

ஒருவேளை பிரச்சனை தீர பேதுருவையும் யோவானையும் பார்த்துக்கொண்டிருந்தான், அவர்களோ இயேசுவின் நாமத்தை அவனுக்கு கொடுத்ததினால் அவன் வாழ்நாள் பிரச்சனை தீர்ந்தது. ஆண்டவரின் விசுவாசியாகவும், அவரது மெய்யான வாழும் சாட்சியாகவும் அந்தக்காலத்தில் அவன் மாறிப்போனான்.

பல நேரங்களில் நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை நான் வெறுமையாக இருக்கிறேன் என்று நாம் பதறுவதுண்டு. பணம் இல்லை, பதவி இல்லை, நல்ல உறவுகள் இல்லை, தேவையான வசதி இல்லை, உதவி செய்ய நல்ல மனிதர்கள் இல்லை, என்று புலம்புகிற தருணங்கள் கூட நாம் வாழ்வில் ஏற்படுவதுண்டு, ஆனால் நமக்குள் இவை எல்லாவற்றையும் விட, இவை எல்லாவற்றையும் அருளக்கூடிய, மேலான நாமம், இயேசுவின் நாமம் இருக்கிறது என்பதை நாம் மறந்து போகிறோம்,

அவர் நமக்குள் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு விசுவாசத்தோடு வாழ்ந்தாலே போதும், நம் வாழ்வு மேன்மை அடைந்து விடும், அதுமட்டுமல்ல நமக்குள் இருக்கிற இந்த மேலான நாமத்தை. துன்பத்தில் இருக்கிற இன்னொரு மனிதனுக்கு அறிவிக்கிற போது அது அவனுக்கு, நன்மைகளை கொடுத்து, மேலான வாழ்வுக்கு வழி நடத்துகிறது.

 எனவே நமக்குள் இருக்கிறவர் பெரியவர், சர்வ வல்லவர், நமக்கும்  நம்மைக்கொண்டும் வல்லமையானவைகளை செய்கிறவர், அவருடைய மேலான நாமத்தில் இந்த நாளை துவங்குவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, February 13, 2011

நேர்க்கொண்ட பார்வை

தியானப் பகுதி உபாகமம். 30 :15 -20 ௦


அன்பான உடன் விசுவாசிகளே, புதியதாக ஒரு பொருள் வாங்கினால் அந்தப்பொருள், நமக்குள் பல மாற்றங்களை கொண்டுவரும், உதாரணமாக, ஆண்கள் புதிதாக ஒரு இரு சக்கர வாகனம் வாங்கினால் அதை எடுத்து ஓட்டுவதற்கு முன்னால், நன்றாக தன்னை அலங்கரித்துக்கொண்டு, அதிலே பயணிக்க ஒரு புதிய கண்ணாடி வாங்கி,  பல முறை வீதிகளில் வலம் வருவோம் நண்பர்களுக்கு, காண்பித்து ஒரு இனம்புரியாத  மகிழ்ச்சியோடு நம்மையறியாமல் சிரித்துக்கொண்டே ஒட்டிக்கொண்டிருப்போம்.

பெண்கள் ஒரு புதிய விலையுயர்ந்த புடவை வாங்கினால், முகமெல்லாம் மலர்ந்து, அதற்கு மேட்சாக, வளையல், கம்மல், கிளிப், காலனி, என உச்சந்த்தலை முதல் உள்ளங்கால் வரை அந்த புடவையை அழகாக காட்ட அனேக மாற்றங்களை செய்கிறோம். ஒரு புதிய பொருள் வாங்கினாலே நமக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழும் என்றால், ஒரு புதிய விலையேற பெற்ற, மகத்துவமுள்ள வாழ்க்கை கிடைத்தால் அது நமக்குள் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

நம்முடைய தியான பகுதி இஸ்ரவேல் மக்களுக்கு கிடைக்கப்போகிற புதிய மிகப்பெரிய மகிமையின் வாழ்வை பற்றியும் அந்த வாழ்வு எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதை  பற்றியும்  பேசுகிறது.

29 ம் அதிகாரத்திலிருந்து இஸ்ரவேல் மக்களுக்கு அனேக அறிவுரைகளை உபதேசித்து 30 ம் அதிகாரம் 15 முதல் 20 வரை உள்ள வசனங்களில்  ஒரு முடிவுரையை தருகிறார், இது ஒட்டு மொத்த உபாகமம் புத்தகத்தின் முடிவுரை என்றும் கூறலாம், இதில் மோசே கூறுகிற செய்தி என்னவென்றால் எகிப்தில், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி கானானுக்கு போகிற இஸ்ரவேலர்களுக்கு கடவுள் பூரண சுதந்திரம் கொடுக்கிறார் .

அதாவது கானானுக்கு போகிற மக்களுக்கு, நன்மையையும்,  தீமையையும்  முன்வைக்கிறேன் என்கிறார் இதில் எதை தீர்மானிக்கவும், அதாவது எதை பின்பற்றவும் உரிமை தருகிறார், நன்மை  என்பது அவருடைய வார்த்தையின் படி வாழ்வது, தீமை  என்பது அதற்கு அப்படியே எதிர்மறையானது, அதாவது, அவருடைய வார்த்தையின் படி வாழாமல் சுய இச்சைகளின் படி, வாழ்வது.

நன்மையை  பின்பற்றினால் ஜீவனும், தீமையை  பின்பற்றினால், சாவும் நிச்சயம் என்கிறார்.எனவே புதிய தேசத்தில் சுதந்திரமாக வாழப்போகிற ஜனத்திற்கு எப்படியும் வாழ கடவுள் முழு சுதந்திரம் தருகிறார், அதே நேரத்தில் கடவுளுடைய பிள்ளைகள் என்கிற தகுதி வேண்டுமானால், வாழ்வு தரும் அவருடைய வார்த்தைகளை  பின்பற்ற வேண்டியது  அவசியம் என்பதை மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அவருடைய வார்த்தைகளை எப்படி பின்பற்றுவது, வேதாகமம் முழுதும்  உள்ள அத்தனை வார்த்தைகளும் இறைவனுடைய வார்த்தைகள் தான் இதில் எதை பின்பற்றுவது?

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, மிக எளிமையாக, மிக தெளிவாக கடவுளுடைய வார்த்தை படி வாழ்வது எப்படி என்று கூறுகிறார், மத்தேயு.5 :37  ல் ஆம் என்பதை ஆம் என்றும் இல்லை என்பதை இல்லை எனவும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சின எல்லாமே தீமை என்கிறார் இதை விட தெளிவாக  யாருமே சொல்லமுடியாது.

அப்படியானால் கடவுளுடைய வார்த்தைகளின் படி வாழ்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் வாழ்வில் மாய்மாலம் இருக்காது, மனதில் பட்டதை, நியாயமாய்   தோன்றுவதை தைரியமாய் சொல்லுவார்கள். அப்படி சொல்லுகிறவர்களே வாழ்வின் பாதையாகிய நன்மையின் பாதையில் நடப்பவர்கள்.

ஆனால் பல நேரங்களில் நாம் மனதில் பட்டதை கண்களுக்கு முன்பாக நடக்கிற தவறுகளை தவறு என்று தெரிந்தாலும், சொல்ல தயங்குகிறோம், நன்மை செய்வோரை பாராட்டவும் நீங்கள் செய்தது சரி என்று சொல்லவும் தயங்குகிறோம். ஆனால் இயேசுகிறிஸ்துவை நம்புகிற நாம் அதற்கு ஆயத்தப்படவேண்டியது அவசியம்.

எதையும் இயேசுவை போல நேர்க்கொண்ட பார்வையோடு காணுதலே நன்மையின் பாதையில் நடப்பது. எனவே நாமும் அவரைப்போல யாருக்கும் பயப்படாமல் ஆம் என்பதை ஆம் என்றும் இல்லை என்பதை இல்லை என்றும் கூறி அவர் நாம மகிமைக்காய் வாழ்வோம் அதுவே கிறிஸ்துவில் புது ஜீவனை பெற்றுக்கொண்ட நமது அடையாளம்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, February 12, 2011

வேத வினா போட்டி

அன்பானவர்களே வேதவினா  போட்டிக்கான பதில்களை மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரமே அனுப்புங்கள், தயவுசெய்து கருத்துரையில் பதிலளிக்காதீர். நீங்கள் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி (ஈமெயில்) jesusblessings65@yahoo.in .
இந்த மாதத்திற்குரிய வேத வினா போட்டிக்கான வினாக்களை தயாரித்து கொடுத்தவர் அருள்திரு.மில்டன் அருண்ராஜ்.

ஆதியாகமம்

1 .ஆதிமுதல் சர்வவல்ல இறைவனின் வாயின் சத்தத்தில் பூமியில் பிறந்தவை இரண்டு, அவை யாவை?

2 . ஏதேனில் புறப்பட்ட ஒரு நதியினின்று பிரிந்து சென்ற நான்கு நதிகளின் பெயர்கள்      என்ன?

3 .கடவுள் மனிதனை எப்படி படைத்தார்?

4 .ஆதாமின் வம்சத்தில் அதிக நாள் உயிரோடு இருந்தவன் யார்?

5 .மகா சரீரிகள் அல்லது பேர் பெற்ற பலவான்கள் யார் யாருக்கு பிறந்தவர்கள்?

6 ."இந்த சந்ததியாரில் உன்னை நீதிமன் என்று கண்டேன்" என்று கடவுள் யாரைப்பார்த்து சொன்னார்?

7 .ஆபிரகாமின் அப்பா பெயர் என்ன?

8 ."பார்க்கிற கடவுள்" என்று கடவுளுக்கு பேரிட்டது யார்?

9 ." யெகோவாயீரே " இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? யார் சொன்னது? யாருக்கு     சொன்னது?

10 .நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? இக் கேள்வியை யார் யாரிடம்? எந்த இடத்தில் கேட்டார்?

பதில்களை  அனுப்பவேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 25 .
விடைகளை வசனத்தோடு குறிப்பிடவேண்டும்.
உங்கள் முழு விலாசத்தையும் குறிப்பிட வேண்டும்,
புகைப்படம் அனுப்பினால் வெற்றிபெற்றவர்கள் புகைப்படம் பிரசுரிக்கப்படும்.
பரிசு பெற்றவர்கள் விவரம் மார்ச் முதல் தேதி அறிவிக்கப்படும்.

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் எனது காலை ஸ்தோத்திரங்கள்.
இன்றைய தியான வசனம், 2 தெசலோனிக்கேயர் .1 : 6

உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே

வாழ்க்கை என்பது சந்தோஷமும் துன்பமும் கலந்தது, இவை இரண்டுமே மாறி மாறி வரக்கூடியவை, ஆனால் சந்தோஷம் வரும்போது மனோ பலம் கொண்டவர்களாய் இருக்கிறோம் துன்பம் வந்தால் சோர்ந்துப் போகிறோம், அதிலும் துன்பத்திற்கு நாம் காரணமாய் இருந்தால் பரவாயில்லை, அடுத்தவர்கள் காரணமாய் இருந்தால் அதை நாம் தாங்கிக்கொள்ளவே முடியாது.

சிலர் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுப்பதையே தங்கள் வேலையாக கொண்டிருப்பார், அப்படி பட்டவர்கள் மீது நமக்கு ஆத்திரமும், கோபமும், எரிச்சலும் அதிகமாக இருக்கும். நம்மை வேண்டுமென்றே துன்புறுத்தி இன்பம்  காணும் சிலரை நினைத்தால் நமக்கு அவர்களை பழி தீர்க்க வேண்டும் என்ற ஆத்திரம் மிக அதிகமாகும்.

நமக்கே இவ்வளவு எரிச்சல் துன்புறுத்துகிறவர்கள் மீது உண்டாகும் என்றால், ஆதி திருச்சபை கிறிஸ்தவர்கள் சந்தித்த துன்பங்கள்  கொஞ்ச நஞ்சம் அல்ல, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால், தங்கள் சொந்த ஜனங்களால், தங்கள் உறவுகளால் எதிரிகளாக பார்க்கப்பட்டனர், ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளாய் மாறினார், யூதர்களின் எதிரிகளாய் மாறினர், காரணமே இல்லாமல் இவர்களால் கடுமையாக துன்புறுத்தப்பட்டனர்.

இவர்களுடைய துன்புறுத்தலால் அனேக கிறிஸ்தவர்கள் மிகவும் சோர்ந்துபோனார்கள், தெசலோனிக்கேய சபையாரும் இதே போன்ற கடுமையான துன்பங்களுக்கு ஆளானவர்களே, ஆனால் தங்கள் உபத்திரவங்களில் பொறுமையை காத்துக்கொண்டார்கள். இதை அறிந்த பவுல் உபத்திரவங்களின் மத்தியில் அவர்களுடைய பொறுமையை பாராட்டியும், பொறுமையில் அவர்களை உற்சாகப்படுத்தும் படியாகவும், எழுதியுள்ள வார்த்தைகளே இன்றைக்குறிய நம்முடைய தியானப்பகுதி.

உபத்திரவ படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவத்தை அனுபவித்தவர்களுக்கு இளைப்பாறுதலையும் கடவுள் தருவது நிச்சயம் என்கிறார், காரணம் அவரவர் செய்கைக்கு தக்க பலனை கொடுப்பது இறைவனின் மேலான பொறுப்பு.

பல நேரங்களில் நாம் இந்த சத்தியத்தை மறந்து, நம்மை துன்பப்படுத்தினவர்கள் நன்றாகத்தானே  இருக்கிறார்கள் என்று புலம்புகிறோம், என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நம் இயலாமையை குறித்து மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால் அவரவர் பலனை கடவுள் நிச்சயமாக அருளுகிறவர்.

இது உண்மைதானா? என்ற கேள்விக்கான பதில் ஆதி திருச்சபை மக்களே தான், காரணம் அவர்களை  துன்புறுத்தினவர்கள், வாழ்ந்த தடம் கூட தெரியவில்லை ஆனால் துன்பத்தை அனுபவித்த கிறிஸ்தவர்களின் சந்ததியாகிய நாம் இன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கிறோம்.

கிறிஸ்தவர்களை துன்புறுத்திய பவுலிடம் ஆண்டவர் தெளிவாக சொன்னாரே, நீ அவர்களை துன்புறுத்தவில்லை, என்னை துன்புறுத்துகிறாய் என்றும் அவர்களை துன்புறுத்துவது முள்ளை உதைக்கிரதற்கு சமம் என்றும் கூறினாரே.

எனவே நம்முடைய துன்பங்களை வேடிக்கை பார்க்கிற கடவுள் அல்ல நம்முடைய கடவுள், அதற்கான பலனை தருகிறவர் எனவே விசுவாசத்தோடு அவரண்டை சேர்வோம். அவர் நாம மகிமைக்காய் ஜீவிப்போம், பரிசுத்த ஆவியானவர் அதற்கு உதவி செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews