WORD OF GOD

WORD OF GOD

Saturday, December 3, 2016

ஆரவாரமாய் கொண்டாடுவோம்

டிசமபர் 1ல் பாபனபல்லி போதகவட்டத்தில் பகிர்ந்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை:

திருவசனம் ; 2 கொரிந்தியர்.4:9

பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதிப்பதில்லை, ஆனால் இந்த ஆண்டு நடைப்பெற்ற, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் என்ற தமிழர் தங்கம் வென்று இந்தியாவையே பெருமையடைய வைத்தார். உடனே நமது முதல்வர் அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஒட்டு மொத்த ஊடகத்துறையும் அவர் வீட்டு வாசலில் நின்றது. மாரியப்பனின் தாயார் ஆனந்த கண்ணீரோடு கூறியது, “என் மகனுக்கு 5 வயதாய் இருக்கும்போது ஒரு விபத்தில் அவன் கால் பாதிக்கப்பட்டது, அவனுடைய அப்பாவும் ஒரு சில ஆண்டுகளில் எங்களை விட்டு போய்விட்டார், என்னால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டேன், எனவே மகனை அழைத்து இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றேன், அப்போது அவன் வேண்டாம்மா, சனி ஞாயிறுகளில் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன், என்று கூறி என்னை தேற்றினான், இன்று சாதித்து விட்டான்” என்றார்கள்.

எந்த ஒரு சாதனையாளரும், சங்கடங்களையும், துன்பங்களையும், பெரிய சோதனைகளையும் சந்திக்காமல் சாதனையாளர்களாய் உருவானதில்லை. வேதத்தில் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி,

மரணத்தை காணாமல் நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் இரண்டு பேர் ஒருவர் ஏனோக்கு, இன்னொருவர் எலியா தீர்க்கன், அக்கினி இரதம் வந்து அவரை அழைத்துக் கொண்டு போனது. அது மட்டுமா சிலுவை பாடுகளை அடையும் முன் இயேசு கிறிஸ்து மறுரூப மலையில் தன் தற்சொரூபத்தை வெளிப்படுத்தியபோது அவருக்கு அருகில் நின்ற இருவரில் ஒருவர் எலியா. எவ்வளவு சிறப்பான தீர்க்கன்,  புகழின் உச்சத்தில் நிற்கும் தீர்க்கன்,

1ராஜாக்கள்.19:4ல் “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும், தான் சாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்”
வாழ்வை வெறுத்து, தன் போராட்டங்களால் நலிவடைந்து, யாரும் தன்னோடு இணைந்து போராடாததையும், யாரும் தன்னை ஆதரிக்காததையும் எண்ணி, மன உளைச்சாலாலும், மன அழுத்தத்தாலும் இந்த வேண்டுதலை முன் வைக்கிறார். இதை 19ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.

ஆனால் கடவுளோ, ஒரு தேவ தூதனை அனுப்பி, அவரை எழுப்பி, அவனுக்கு உணவை கொடுத்து, மீண்டும் அவன் பயணத்தை துவக்கி வைத்தார், ஆம் நாம் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்பட்டு, துன்பப்பட்டு தனிமையில் நிற்கிறோமோ, அப்போதெல்லாம், சர்வ வல்லவர் நம் பக்கத்தில் நிற்கிறார், அதைதான் பவுல், 2கொரிந்தியர். 4ம் அதிகாரம் 9 ம் வசனத்தில் நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும், கை விடப்படுகிறதில்லை என்று கூறுகிறார், ஆம் யார் நம்மை கை விட்டாலும் நம்மை சேர்த்துக் கொள்ளும் சர்வவல்லவர் நம்மோடு இருக்கிறார். பவுல் இதை அறிவுரையாக கூறவில்லை, அது அவருடைய வாழ்வின் அனுபவம், பசியில், குளிரில், வெயிலில், நிர்வாணத்தில் பல முறை தாம் இருந்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் கை விடாத அன்பு நேசரின் பரம அன்பை ருசித்து அறிந்தவர் எனவேதான் உணர்ந்து கூறுகிறார் நாங்கள் துன்பப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. அதுமட்டுமா? நாங்கள்  கீழே தள்ளப்பட்டும் மடிந்துப் போகிறதில்லை என்கிறார், 

நாமாக விழுவதும் உண்டு சில நேரம் நம்மை சில துரோகிகள் தள்ளிவிடுவதும் உண்டு, ஆனால் அவர்கள் நினப்பது மட்டும் நடக்காது, நாம் முடிந்துவிட மாட்டோம், முடங்கிவிட மாட்டோம், வீறு கொண்டு எழுந்து நிற்போம், அதைதான் சங்கீதம் 20 கூறுகிறது அவர்கள் முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம் என்று. அற்ப பணத்தையும், அழிந்து போகிற இந்த உலகத்தின் வசதி வாய்ப்புகளையும், ஒன்றுக்கும் உதவாத இந்த உலகத்தின் அதிகாரங்களையும் நம்புகிறவர்களே தைரியமாய் நிற்கும்போது, நாமோ, நமக்காக உயிரை கொடுத்து மீட்டெடுத்த நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் நமக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்???

எனவே கலங்க வேண்டாம், கடந்த 11 மாதங்கள் நாம் சந்தித்த பெலவீனங்கள், தடைகள், துன்பங்கள் அனைத்தையும் உடைத்து, 12ம் மாதத்தில் நம்மை கம்பீரமாய் ஆலயத்தில் வந்து அமர்ந்து நன்றி சொல்ல வைத்தவர் 12ம் மாதத்திலும் நம்மோடே இருக்கிறார். இம்மாதம் கொஞ்சம் சிரமம்தான், புத்தாடை, அலங்காரம், தினந்தோறும் வரும் பஜனைக்கு காணிக்கை, பிரியானி எல்லாம் தேவை, அதுமட்டுமா பணம் இருந்தும் எடுக்க முடியாத பணத்தட்டுப்பாடு, என துன்பங்கள் வரிசை கட்டினாலும், நம்மை கைவிடாதாவர் நம்மோடு மட்டுமல்ல, திரு விருந்தின் வழியாக நமக்குள்ளேயே இருக்கிறார். தைரியமாய் கிறிஸ்துமஸ் மாதத்திற்குள் அடியெடுத்து வைப்போம், ஆரவாரமாய் கொண்டாடுவோம், அனைத்தையும் நம் சர்வ வல்லவர் பார்த்துக்கொள்வார். ஆமேன். 

Monday, October 31, 2016

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்


1500 ஆண்டுகளுக்கு முன்பு, போப்பும் அவர்தம் அதிகார  வர்க்கமும், செல்வத்திலும், அதிகாரத்திலும் நீடித்து தழைக்க, பெரும் பொருள் ஈட்ட மக்களை சுரண்டினர்.

ரோமை புனித நகரமாக்கியதே வியாபார தந்திரம் தான், அங்கிருக்கும் புனித பொருட்களை கண்டால் இரட்சிப்பு வரும் என புது கதை கட்டினர், மரியாளின் முடி, சிலுவையில் பயன்படுத்தப்பட்ட ஆணி, புனிதர்களின் உடைகள் போன்றவற்றை கண்டால் இரட்சிப்பு என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். அதுவும், அந்த பொருட்களெல்லாம் உண்மையானவை என்பதற்கு ஆதாரம் இல்லை,

பிலாத்துவின் படிக்கட்டுகள் என சொல்லப்பட்ட 18 படிகளில் ஏறினால் ஒரு படிக்கு 9 ஆண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் என்று அடுத்த கதை கட்டினர், இதையெல்லாம் நிறைவேற்ற மக்கள் புனித நகருக்கு படையெடுத்தார்கள் அவர்கள் பணத்தை புனித நகரம் பதம் பார்க்கும். ஆம் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கடவுள் பெயரில் அடுத்தவன் பணத்தை பறித்து சுக போக வாழ்வு வாழ்பவர்களின் சாபம் என்னவென்றால் அந்த பணம் அவர்களுக்கு நிறைவை தருவதில்லை, மேலும் மேலும் பறிக்க வேண்டும் என்கிற மோசமான பைத்தியங்களாக மாறிவிடுவர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, அப்படித்தான் சுகபோக போப்புவும், அவரது வழி வந்த ஆன்மீக திருடர்களும் மேலும் மக்கள் பணத்தை சுரண்ட ஒரு அருமையான திட்டத்தை தீட்டினர். அதுதான் ஒருவனை குற்ற உணர்வுக்கு தள்ளி அவன் பணத்தை பறிக்கும் பாவ மண்ணிப்பு சீட்டு வியாபாரம்.
சாமி வரம் தந்தாலும் பூசாரி கொடுப்பதில்லை என்ற தமிழ் பழ மொழியின் நிகரற்ற உதாரணம். அவர் தன் திரு இரத்தம் சிந்தி தன் உயிரை விலையாக கொடுத்து சம்பாதித்த மீட்பை விசுவாசிப்போருக்கு இலவசமாக கொடுக்க, இந்த பண பேய்கள் அதற்கு விலை நிர்ணயித்தார்கள். பாடுப்பட்டு உழைப்பவனின் பணத்தை பிடுங்கி பகட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். மனசாட்சியும் இல்லை, கடவுள் பயமும் இல்லை பிசாசு என்பதன் மொத்த வடிவமே இப்படிப்பட்டவர்கள்தான்.

மக்கள் முட்டாள்களல்ல, தன்னிகரற்ற ஆன்மீக தலைவர் போப்பையும், தாங்கள் பெரிதாய் மதிக்கும் தங்கள் ஆன்மீக வழி காட்டிகளான தங்கள் போதகர்கள் சொல்வதையும் அப்படியே திரு வசனமாக ஏற்றுக் கொண்டனர். காரணம் அவர்களிடம் திருமறை இல்லை, அக்காலத்தில் தான் ஒரு சாதாரண பெலவீனமான போதகர் மார்டீன் லுத்தர் திரு வசனத்தை கையில் வைத்துக் கொண்டு உரக்க கத்தினார், விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்று. காரணம் அவர் ஒரு விவாச சிங்கம். இந்த பெலவீனனை விசுவாச பெலவானாக மாற்றியதில் பிலிப் மெலாங்க்தன் எனும் பேராசிரியர் பெரும் பங்கு வகித்தார்.

மக்கள் திரு வசனத்தை படித்தனர் உண்மையை உணர்ந்தனர், ஆன்மீக திருப்பயணத்தை சரியாக அமைத்துக் கொண்டனர், மக்கள் பணத்தை பிடுங்கி பிழைக்கும் கூட்டத்திற்கு முடிவு கட்டினர்.

ஆனால் இன்று???? திரு வசனம் கையில் தான் இருக்கிறது, தாய் மொழியில் தான் இருக்கிறது.

ஆனாலும் கள்ள உபதேசங்கள் பெருகியிருக்கிறது, சில தனிப்பட்ட போதகர்கள் பிதாவின் ஏஜென்டுகளாகியிருக்கிறார்கள், தசம பாகம் கொடுக்காதவர்கள் தனி திருச்சபைகளில் பாவிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள், கன்வென்ஷனுக்கு இலட்சங்கள் கேட்கிறார்கள், மக்கள் பணத்தை வாங்கி அதில் கூட்டங்கள் நடத்தி மக்களையே பாவிகள் என்று மேலும் மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அன்னிய பாஷை பேசாதவன் பரலோகம் போகமாட்டான் என்று வேதத்தில் இல்லாததை சொல்லுகிறார்கள், பல ஊழியரகள் பணம் சம்பாதிக்கும் வழியாக ஊழியத்தை பயன்படுத்தி வருகிறார்கள், கார், கோட், மிகப்பெரிய அரங்குகளில் பிரசங்கம் செய்வதுதான் ஊழியனின் அடையாளமாக மாறிப் போயிருக்கிறது,

மெயின்லைன் சபைகளில், கடவுள் பெயரால் மக்கள் பணம் சூறையாடப்படுகிறது, அதிகார போதையில் தள்ளுதலும் விலக்குதலும் சுக போகமாய் நடக்கிறது, அநியாயங்கள் நியாயமாகிறது, சர்வாதிகாரம் தலை தூக்குகிறது, கிறிஸதவ ஒழுங்குகள் காற்றில் பறக்கிறது, எதிர்ப்பு குரல்கள் சதி திட்டங்களாலும், மிரட்டல்களாலும் ஆளுக்கு தகுந்தபடி முறியடிக்கப்படுகிறது, குரல் வளைகள் நெருக்கப்படுகிறது, பணம் - பதவி மட்டும்தான் கிறிஸ்தவத்தின் மையமாகியிருக்கிறது, திருச்சபைகள் இரண்டாகி நிற்கிறது, நிறுவனங்கள் பாழாய் கிடக்கிறது, கிறிஸதவ மன்னிப்பு விலை பேசப்படுகிறது, ஏன் யாரும் திரு வசனத்தின் பக்கம் துணிந்து நிற்கவில்லை?? பணம் வேண்டும் பதவி வேண்டும், வேலை வேண்டும், ப்ராஜெக்ட் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், என்னென்னவோ வேண்டும்???

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
“முட்டாள்களின் கூக்குரல்”


மன்னித்து விடுங்கள் இந்த முட்டாள், லுத்தரன் உபதேசம் தெரியாதவன் இப்படித்தான் உளரிக் கொண்டிருப்பேன், புத்திசாலிகள் பிழைத்துக் கொள்ளுங்கள். 

Wednesday, October 12, 2016

திருட்டு கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவம் என்பது என்ன? 

Tuesday, October 4, 2016

இறை வார்த்தையும் விமர்சனமும்.


நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு வெள்ளி கிழமையும், பிற்பகல் வேளையில் கிராம ஊழியத்திற்கு, குறிப்பாக சிறு பிள்ளைகள் மத்தியில் திருப்பணி ஆற்ற அனுப்பப்படுவோம், போவதற்கு முன்பு நற்செய்தி பணிக்குழு ஆலோசகர் தலைமையில் சிறப்பு ஆயத்த ஆராதனை நடத்தப்படும். ஒரு மாணவர் தேவ செய்தி கொடுக்க வேண்டும். ஒரு மாணவர் சிறுவர்களுக்கான ஒரு மாதிரி நற்செய்தி வகுப்பு நடத்த வேண்டும், அவர்கள் நடத்தி முடித்த பிறகு அதைக் குறித்த விமர்சன நேரம் இருக்கும். அந்நேரத்தில் நிறை  குறைகள் சுட்டி காட்டப்படும்.

நான் தேவ செய்தி கொடுக்கிற நாள் வந்தது. நானும் தேவ செய்தியை  ஜெபத்தோடும் பயத்தோடும் ஆயத்தம் செய்து பிரசங்கித்து முடித்தேன். நான் எடுத்துக் கொண்ட மையக்கரு ஊழியத்திற்காகதான் பணம், பணத்திற்காக ஊழியம் அல்ல என்பதுதான்.  நாங்கள் ஊழியத்திற்கு போக பயணப்படி கொடுப்பார்கள் அப்போது இது போதவில்லை என்ற குரல் அவ்வப்போது ஒலிக்கும். உண்மைதான் அது போதாதுதான். நான் எடுத்து கொண்ட கருப்பொருள் அதை சுட்டி காட்டுவதாக அமைந்துவிட்டது.

 விமர்சன நேரம் வந்தது. என் சக நண்பர்கள் என்னையும் என் அருளுரை கருப்பொருளையும்  சுட்டிக்காட்டி மிக கடுமையாக விமர்சித்தார்கள். கிட்டத்தட்ட என் சக மாணவர்கள் அனைவரும் என் கருப்பொருளை கடுமையாக விமர்சத்தார்கள் அருள்திரு அறிவர் மாணிக்கராஜ் (தற்போதைய முதலவர்) அவர்கள் தான் ஆலோசகராக இருந்தார். விமர்சனம் வந்தால் நான் அதற்கான விளக்கம்  கொடுக்கலாம், எனவே ஒருவர் விமர்சித்ததும் நான் விளக்கம் கொடுக்க எழுவேன், ஆனால் என்னை அனுமதிக்க மாட்டார். எனக்கு மிகுந்த ஏமாற்றம்,    ஒவ்வொரு முறையும் என்னை தடுத்தார். எனக்கு சற்று கோபம் கூட வந்தது என்னை பேச விடவில்லையே என்று.

எல்லாரும் தங்கள் கருத்துக்களை முடித்த பிறகு, அறிவர் மாணிக்கராஜ் அவர்கள் சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, அவர் சொன்னதை அப்படியே பதிவிடுகிறேன்,

" டேய் இந்த செய்தி உங்க எல்லார் உள்ளத்தையும் தொட்டிருக்கு" கில்பர்ட் இப்ப உன் கருத்த சொல்லு என்கிறார்.

நான் மிக அமைதியாகிவிட்டேன், நான் பார்த்து வியந்த பேராசிரியரின் அந்த பதில் நான் எதிர்பாராதது. மன அமைதியோடு

நான் சொன்ன கருத்து ஒன்றே ஒன்று தான் இந்த செய்தி எனக்கும் சேர்த்துதான். அது என்னையும் குத்தியது.

நான் இன்று வரை எனது பிரசங்கங்களை எனக்கும் சேர்த்துதான் ஆயத்தம் செயகிறேன். கடவுளின் வார்த்தை இரு புறம் கருக்குள்ள பட்டையம் அதை பிறரை வெட்ட பயன்படுத்தினால் நிச்சயம் அது என்னை குத்தி கிழிக்கும் ஏனென்றால் ஒருவரை வெட்ட அதை நான் அழுத்தி பிடித்தால் நிச்சயம் அது என்னை வெட்டும். கர்த்தர் பட்ச பாதம் உள்ளவரல்ல.... போதகர் என்பதால் நான் வானத்திலிருந்து குதிக்கவில்லை.

இனி தயவு கூர்ந்து நான் இறை செய்தி பதிவிட்டால் என்னை புகழாதீர்கள்  இறைவார்த்தைக்கு இறைவன் தான் புகழப்பட்ட வேண்டியவர். நான் எவ்விதத்திலும் தகுதியானவன் அல்ல. அவரை துதியுங்கள். என்னை இகழ்கிறவர்கள் தாராளமாக இகழலாம். என்னை திருத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். 

Sunday, September 25, 2016

ஞாயிறு செய்தி.. 25.09.2016


லூக்கா.16:19-31

மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், தற்போது BD இறுதியாண்டு படித்து வருகிறேன், எனவே அவ்வப்போது வகுப்புகளுக்காகவும், தேர்வுக்காகவும், மதுரைக்கு பயணிக்க வேண்டியுள்ளது. அப்படி பயணிக்க, பல்வேறு வழிகள் உள்ளன.

 பேருந்து பயணம்

பேருந்து பயணத்தில் மூன்று  வகை.

1. ஆம்பூரில் இருந்து திருப்பத்தூர் - திருப்பத்தூரில் இருந்து சேலம் -சேலத்திரிலிருந்து மதுரை 250 ரூபாய் சராசரி கட்டணத்தில் போய்விடலாம்.

2. ஆம்பூரில் இருந்து ரேணுகாம்பாள் பேருந்தில் 450 ரூபாய்க்கு முன்பதிவு செய்து விட்டால் பாதி படுக்கை அமைப்பு கொண்ட இருக்கையில் சொகுசாக அமர்ந்துக் கொண்டு எவ்வித அலைச்சலும் இல்லாமல்  மதுரை அரசரடியில் உள்ள கல்லூரி வாசலில் போய் இறங்கி விடலாம்.

3. ஆம்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு போய் அங்கே 900ம் ரூபாய்க்கு முன்பதிவு செய்தால், முழு படுக்கை வசதியோடு A /C பேருந்தில் மிக சிறந்த சொகுசாக தூங்கி கொண்டே போய் கல்லூரி வாசலில் இறங்கி விடலாம்.

இரயில் பயணம் இதிலும் மூன்று வகை.

முன் பதிவில்லா  பயணம், 150 ரூபாயில் பயணித்துவிடலாம். ஆனால் உட்காருவதே ஆக சிறந்த பாக்கியம்.

ஒரு மாதத்திற்கு முன்னால் , 300 ரூபாய்க்கு முன் பதிவு செய்தால் படுத்து கொண்டே சொகுசாக பயணிக்கலாம்.

A /C ல் முன்பதிவு செய்தால் எவ்வித தொந்தரவும் இல்லாமல் அற்புதமான பயணத்தை அனுபவிக்கலாம். (இன்னும் முன்பதிவு செய்யாததால் கட்டணம் தெரியவில்லை)


பணம் கூட கூட வசதி கூடுகிறது. இங்கே பணம் இருந்தால் இராஜாவாக வாழலாம். அம்பானியின் விலையுயர்ந்த கார் என்று கூகிளில் தேடினால் மிக அற்புதமான தரை விமானம் போன்ற ஒரு காரை பார்க்க முடிகிறது!!!



கோட் போட்டு காரில் வந்து  மினரல் வாட்டர் குடித்துக் கொண்டே இறங்குபவருக்கு இருக்கும் மரியாதை பிறருக்கு இல்லை. எனவே தான் பணம் பணம் பணம் என்று இக்கால மனிதர்களாகிய நாம் ஓடுகிறோம்!!!

அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகு  இல்லை என்று வள்ளுவரே கூறியுள்ளது எவ்வளவு உண்மை?? நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல காற்று , நல்ல உடை  போன்ற அடிப்படை தேவைகள் கூட பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படியிருக்க அந்த செல்வத்தை தேடி செல்வந்தனாக வாழ்வதில் என்ன தவறு உள்ளது? இயேசு கிறிஸ்துவின் இன்றைய  உவமை செல்வந்தர்களுக்கு எதிராய் நிற்கிறதே??? பொருளாதார செழிப்பை கர்த்தர் விரும்பவில்லையா?  ஒருவன் செல்வந்தனாக இருப்பதையே இயேசு கிறிஸ்து விரும்பவில்லையா???

 ஐசுவரியாவான் அவன் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஏழை இலாசரு. அவரவர் வசதிக்கு ஏற்ப நடை உடை உணவு முறை உள்ளது. அதாவது விலையுயர்ந்த உடை, சொகுசான வாழ்க்கை செல்வந்தனின் அடையாளம்,
புண்கள்,வீதியில் வீசப்படும் உணவு, தெரு நாய்கள் தோழமை, இது ஏழையின் அடையாளம். இருவரும் மரித்தார்கள் ஏழை பரலோகம் போகிறான், செல்வந்தன் நரகம் போகிறான்!! ஏன் ? என்ன காரணம் அவன் செல்வந்தனாய் பிறந்தது அவன் செய்த பாவமா?

அதே போல் ஆமோஸ் 6 ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் வாழ்க்கை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. தந்த கட்டில்களில் இளைப்பாறி, ஆட்டு குட்டியும், கன்று குட்டியும் சாப்பிட்டு, பெரிய கோப்பைகளில் மது அருந்தி சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதில் என்ன தவறு?  காசு இருக்கிறது அனுபவிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை கொடுத்ததே கடவுள் தானே, எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்டு, பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தை கொண்டு வந்து கொடுத்தது யார்? அவர் கொடுத்தார் அனுபவிக்கிறார்கள் என்ன தவறு? 7 ம்  வசனத்தில் சிறையிருப்புக்கு அவர்கள் தான் முன்னால் போவார்கள் என்று அவர்களை கலாய்க்கிறாரே ஏன்? செல்வந்தனாய் வாழ்வது பாவமா? இல்லை..

செல்வத்தை  கொடுப்பவரே கடவுள் தான், ஆனால் அதை இல்லாதவரோடு பகிர்ந்துக்க கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.. கானானுக்கு நுழைவதற்கு முன்னமே கடவுள் இஸ்ரவேலர்களுக்கு  இதை தெளிவாக கட்டளையிட்டிருந்தார். அனுக்கிரக வருஷத்தை பிரசித்தப்படுத்தி ஏழைகள் வாழ வகை செய்ய வேண்டும். ஆனால் இஸ்ரவேலரோ அந்த கட்டளையை முற்றிலும் மறந்துவிட்டு தான் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல நோக்கோடு இருந்துவிட்டனர். உபாகமம் 15:1-10 வரை வாசித்தால் இதை தெளிவாக விளங்கி கொள்ளலாம்.

இங்கே ஐசுவரியவானும் தன் வீட்டு வாசலில் உள்ள ஒரு தரித்திரனை காணாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். இதுதான் பாவம். பரலோக வாழ்வுக்கு ஒருவன் போவதற்கான தகுதியே பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுப்பதும், தாகமாய் இருப்பவனுக்கு தண்ணீர் கொடுப்பதும் உடை இல்லாதவனுக்கு உடை கொடுப்பதும் தானே... மத்.25:35-36.

எங்கிருந்தோ வந்த LCMS திருப்பணியாளர்கள் இங்கே வந்து பால் பௌடரும், கோதுமையும், இலவசமாக கொடுத்து, இலவச கல்வி கொடுத்து, வேலை வாய்ப்பை உண்டாக்கி கொடுத்து, சமூகத்தில் நம்மை நிலை நிறுத்தியது அதனால் தானே.

அவர்களை அனுப்பிய நம் இரட்சகரும், அவர்களும் தாராளமாய் இருக்க, நாமோ வன்கண்ணர்களாய் இருப்பது ஏனோ??  இங்கே வளர்ந்த சபைகள் தங்கள் பேங்க் பேலன்சை சொல்லி பெருமை பாடுவதில் எந்த பயனும் இல்லை.. ஏழை சபைகள் கட்டிடம் கட்ட முடியாமல், ஏழை சபைகள் தன்னிறைவு அடையாமல், போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலட்சங்களில் விழா எடுக்கும் பெரிய சபைகள் இந்த சமூகத்திற்கு ஆற்றிய பணி என்ன? நமது LCMS மிஷினெரிகள் காலத்திற்கு பிறகு நாம் துவங்கிய சுதேச சமூக சேவைகள் என்ன? 42 கோடிக்கும் அதிகமானோர் அடுத்த வேளை  உணவில்லாமல் தவிக்கிற நாடு நம் நாடு இதை மாற்ற நம் பங்கு என்ன?

இன்றும் கிறிஸ்தவம் வீழ்ந்து விடாமல், தங்கள் கொடுக்கும் குணத்தால் தாங்கி பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இறை செய்தியை அர்ப்பணிக்கிறேன்...







Friday, September 2, 2016


இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஒரு சாதாரண அங்கத்தினனாக பல கேள்விகள் என்னுள் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. 

1. நான் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் ஒரு போதகர்      எனக்கு கொடுத்த அறிவுரை நீ ஐ.இ.எல்.சி யில் பிழைக்க  வேண்டுமானால் யாராவது ஒரு தலைவரை பிடித்துக் கொள்ள  வேண்டும் என்பது!!!! 

விசுவாசத்தால் தானே நீதிமான் பிழைப்பான்? ஒரு மனிதன் எப்படி என்னை பிழைக்க வைக்க முடியும்? இயேசுவை விசுவாசியுங்கள் என்று பிரசங்கிக்கும் அதே நாவுகள் எப்படி மனிதனை சார்ந்திருக்க அறிவுறுத்துகிறது? 


2. நான் அருட் பொழிவு பெற்று நேத்தார் நினைவு லுத்தரன் திருச்சபையில் போதகராக பணியாற்றிய காலத்தில் ஐ.இ.எல்.சி. யில் இருந்து கிறிஸ்துமஸ் பரிசு 1000ம் ரூபாய் கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும்.. ஆனால் எனக்கு 2013 ஆம் ஆண்டு கொடுக்கப்படவில்லை. 1000ம் ரூபாய் விஷயமல்ல. எனக்கு மறுக்கப்பட்டது 1000 ரூபாய் அல்ல என் உரிமை. அது எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை. எனக்கு மட்டுமல்ல என்னை போல் பலருக்கு. அப்போதைய சபை சங்க தலைவர் எடுத்துக் கொண்டார் என்கிறார்கள் எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. 

ஏன் இப்படி தலைவர்கள் நடந்துக் கொள்ளுகிறார்கள்? அடுத்தவர் உடைமைகளையோ உரிமைகளையோ பறிப்பது தரங்கெட்ட செயல் என்பது தெரியாதா? பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர் என்பது இவர்களுக்கு தெரியாதா?

3. இதுவரை போதகர்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி யாருக்கும் கொடுக்கப்பட வில்லை..!!!! ஏன்? அந்த இலட்சக் கணக்கான (ஒரு வேளை கோடிக்கணக்கான)  
பணமெல்லாம் எங்கே போனது? இது வரை பொது பொருளாளர்களாக இருந்த,  பெருந்தலைவர்களாய் இருந்த அனைவரும் இதற்கு பொறுப்பு தானே? இது வரை ஒரு நிர்வாகம் கூட இதை கண்டுக் கொள்ளவில்லையே எப்படி? 

எந்த பார்ட்டியும் இதை பற்றி பேசாதது ஏன்? இதற்காக வழக்குகள் தொடராதது ஏன்? நான் கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் பெறுகிறேன், என் பி. எப் கணக்கு எண் தெரியாது? யாரை கேட்பது? சரியான பதில் இல்லை என்றால் என்ன விதமான நடவடிக்கை எடுப்பது? இதை பற்றி எந்த போதகர் சங்கமும் கவலைப்படாதது ஏன்?

4.  LCMS க்கு உட்பட்டு நடக்கிற நிர்வாகத்தில் தான் நான் ஆரம்பம் முதல்  இருக்கிறேன், காரணம் திணிக்கப்பட்ட புதிய அமைப்பு சட்டம் தவறானது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த நிர்வாகத்தில் தான் நான் பாப்பனப்பள்ளி போதக வட்டத்தில் குரு நியமனம் பெற்றேன். தவறாமல் மாதம் தோறும்  எங்கள் சபைகள் பங்கு தொகை செலுத்தி வருகிறது. சிறிய சபைகள், மிக குறைந்த குடும்பங்கள் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சபைகள் என்பதை நிர்வாகம் நன்றாக அறியும் அப்படியிருக்க எங்கள் சபை கட்டுமான பணிகளுக்கு எந்த உதவியும் வரவில்லை. நான் முறைப்படி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 எதனடிப்படையில் சபைகளுக்கான உதவி பணம் வருகிறது? எங்கள் சபைகள் நிராகரிக்கப்பட்டிருக்குமானால் காரணம் என்ன? பங்கு தொகை செலுத்தாத சபைகளிடம் நீங்கள் பங்கு தொகை செலுத்தினால் கட்டிட நிதி வரும் என்று கூறுகிறீர்களே!! ஏன் எங்கள் சபைகள் புறக்கணிக்கப்படுகின்றன? 

5. LWF கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் எங்கள் சபைகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஏன் ? நான் கேள்விகள் கேட்பதாலா ? அல்லது IRLL உடன் தொடர்புள்ளவன்  என்பதாலா? இதை தனிப்பட்ட முறையில் தேடி போய் சிலருக்கு கொடுக்கிறீர்கள்!! எங்கள் சபைகள் என்ன பாவம் செய்தது? எப்போது கொடுத்தீர்கள்? எப்படி கொடுத்தீர்கள் எந்த தகவலும் எனக்கும் எங்கள் சபைகளுக்கும்  தரவில்லையே ஏன் ? பங்கு தொகை தவறாமல் செலுத்தும் சபைகளுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? இது எங்கள் சபைகளின் உரிமை இதை பறிக்க நீங்கள் யார்? கடவுள் பயம் உண்டா உங்களுக்கு? நானும் சபையாரும்  தனிப்பட்ட முறையில் உங்களை தேடி வந்து உங்கள் காலில் விழ வேண்டுமா? எங்களுக்கு சேவை செய்ய தான் நிர்வாகம் எங்களை மிரட்டவும் அடிமைப்படுத்தவும் அல்ல.. 

6. LCMS  நமது தாய் சபை அதை நேசிக்கிறேன். LCMS ன் அரும் பெரும் முயற்சி இல்லாமல் இன்று ஐ.இ.எல்.சி. இல்லை, ஆனால் அதற்காக LCMS கை  காட்டும் நிர்வாகத்தில் தவறு நடந்தால் தட்டி கேட்கக் கூடாதா? கேட்டால் ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்கி விடுவீர்களா? அல்லது நான் LCMS க்கு விரோதியாகிவிடுவேனா? என்ன மூடத்தனம்? LCMS  வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி பணத்தை சுருட்டுகிறவர்கள் தான் LCMS ன் விரோதிகள். 

இந்த கேள்விகள் போதகர் சங்கத்தில் எதிரொலிக்கும் (நடந்தால்) ஏற்கெனவே ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்க போவதாக மிரட்டியாகிவிட்டது. வேறு என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு நொடியும்  இந்த சம்பவம் என் நினைவில் நிற்கிறது. கேள்வி கேட்டால் நீக்குவேன் என்பது சர்வாதிகாரத்தின் உச்சம்.

Sunday, August 28, 2016

SUNDAY SERMON


(எச்சரிக்கை 

இந்த சர்ச் ல நான்தான் பெரிய ஆளு. என்ன விட எவனும் இங்க பெரிய ஆளு கிடையாது அப்டினு நினைக்கிறவங்க தயவு செய்து இன்று சர்ச்க்கு போங்க  ஆனா, பிரசங்கம் கேட்டுட்டு ஐயர் என்ன குத்துற மாறி பிரசங்கம் பன்னார்னு புலம்ப வேண்டி இருக்கும்.)

 நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொது ஒரு திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு பயந்திட்டு சந்தோஷமா கல்யாணத்திற்கு நானும் சில நண்பர்களும் போனோம், திருமண ஆராதனை முடிந்து  மிக ஆவலோடு சாப்பாடு பரிமாறும் அறைக்கு வந்தோம் ஆனால் அங்கே கதவு பூட்டப்பட்டிருந்தது வெளியே எல்லாரும் நின்று கொண்டிருந்தனர், இன்னும் உணவு தயாராகவில்லை என்று நினைத்து நாங்களும் ஓரமாக நின்றுக் கொண்டோம், திடீரென கதவு திறக்கப்பட்ட்து, வெளியே நின்ற அத்தனை பெரும் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தார்கள், கதவை திறந்த பணியாளர்கள் உள்ளே நுழைகிறவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திக்கி திணறி உள்ளே இடம் நிறைந்தவுடன் அனைவரையும் தள்ளி கதவை மீண்டும் மூடினர். 

அப்போதுதான் புரிந்தது பந்தி ஏற்கெனவே நடக்கிறது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதவை மூடிவிட்டு பந்தி பரிமாறப்படுகிறது என்று. ஆம்பூரில் பயிற்சி போதகராய் இருந்தால் கூட தனியே டேபிள் போட்டு இல்லை நிறைய சாப்பாடு போட்டு திணற திணற சாப்பிட வச்சி சபையார் பழக்கிட்டதால,  கூட்டத்தின் நடுவே புகுந்து இடம் பிடிக்க தயங்கி கொண்டு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டோம். ஆனால் சில நிமிடங்கள் கழித்து எங்களை அழைத்தவர் வந்து தனியாக கிச்சன் வழியாக அழைத்து சென்று தனி இடம் கொடுத்து திருப்தியாக சாப்பிட்டு போகும் வரை அன்போடு கவனித்துக் கொண்டார். 

இயேசுவும் இந்த தியான பகுதியில் பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். விருந்துக்கு போன ஆண்டவர் விருந்தில் முதன்மையான இடத்தை தேடுவோரை கவனித்துக் கொண்டிருந்தார். உடனே அவர்களை அறிவுறுத்தும் வண்ணம் ஒருவர் விருந்துக்கு அழைத்தால் முதன்மையான இடத்தை தேடாதீர்கள், ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரியவர் வந்தால் உங்களை எழுப்பி அவருக்கு இடம் கொடுக்க  வேண்டிய நிலை வரும் என்று அறிவுறுத்துகிறார். எனவே போய் கடைசியில் உட்காருங்கள். அழைத்தவர் உங்களை முக்கியமாக நினைத்தால் நிச்சயம் உங்களை முதன்மையான இடத்திற்கு அழைத்து போவார் என்கிறார். 

இது எவ்வளவு பெரிய உண்மை. எத்தனையோ விருந்தில் இன்று வரை இப்படி நடப்பதை நாம் காணமுடிகிறது. இந்த தாழ்மையை தரித்துக் கொண்டால் நிச்சயம் மேன்மைதான் என்பதை 11ம் வசனத்தில் தெளிவுபட கூறுகிறார். 

தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

மேலும் விருந்துக்கு அழைக்கும் போதும் திருப்பி கொடுக்க முடியா ஏழைகளை அழையுங்கள் என்கிறார். கௌரவம் கௌரவம் என்று நம்ம ஸ்டேட்டஸ்ல இருக்கிறவங்கள தான் கூப்பிடுவேன்னு கூப்பிட்டா என்ன பிரயோஜனம்? உப்பு சரியில்ல காரம் சரியில்ல, பந்தில என்ன கண்டுக்கல, என்னத்த பெரிய விருந்து கொடுத்துட்டான்னு வாங்கி கட்டிக்க வேண்டி வரும் !!!! ஆனால் ஒரு ஏழையை கூப்பிட்டு விருந்து கொடுத்தால் வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்துவான். இன்று பலர் ஏழை பிள்ளைகளிடத்தில் தங்கள் விசேஷங்களை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. 

இந்த தாழ்மையும் அன்பும் நம்மிடத்தில் உண்டா? 
பணம், பதவி , அதிகார தேடல் இன்று திருச்சபைகள் முழுக்க விரவி கிடக்கிறது.  ஏனென்றால் அப்போதுதான் முதன்மையானவர்களாக இருக்க முடியும். ஏழைகளை பற்றிய அக்கறையை  சொல்லவே வேண்டாம்.. மூடப்பட்ட விடுதிகள் அதற்கு உதாரணம்... 

இயேசு ஆண்டவர் பிதாவோடு ஏக வஸ்துவானவர், கடவுளுக்கு சமமாய் இருப்பதை  கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் அடிமையின் ரூபமெடுத்து மானுஷ சாயலானார் என்று வேதம் சொல்லுகிறது. யாருக்காக பாவ கேட்டில் சிக்கி கிடந்த நம்மை மீட்டெடுக்க. 

இந்த தாழ்மையும் அன்பும்  படிப்பதற்கும் கேட்பதற்கும் மட்டுமல்ல வாழ்வில் கடைப்பிடிப்பதற்கும் தான். 

Sunday, August 7, 2016

ஞாயிறு செய்தி 7.08.2016


 நேற்றைய தி இந்து தமிழ் நாளிதழில் ஒரு சுவாரஸ்ய செய்தி, 2014 ம் ஆண்டு காணாமல் போன எம்.370 விமானம் காணாமல் போன போது உலகமே பதறியது, அவர்கள் அனைவரும் மரித்ததாக மலேசிய அரசு ஏற்கெனவே அறிவித்தும் விட்டது, கடலெல்லாம் தேடியும் ஒரு துரும்பும் கிடைக்கவில்லை. தேடுதல் பணி தீவிரமாக நடைப்பெற்ற காலத்தில் தேடுதல் குழு தலைவர் கூறிய வார்த்தை நாங்கள் வைக்கோல் போரில் குண்டூசியை தேடவில்லை வைக்கோல்போரை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார், மனிதனின் அறிவு ஆற்றல் எல்லாம் இயற்கைக்கு முன்னல் முடங்கி தலை குனிந்து நின்றது. இப்போது இந்த நிகழ்வு விமானியின் சதியால் நிகழ்ந்துள்ளது என்று மலேசிய அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது. விமானியின் வீட்டில் நடைப்பெற்ற சோதனையில் புதிய வழிதடங்களுக்கான ரகசிய வரைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இது விமானியின் சதி என்று மலேசிய அரசு உறுதி செய்துள்ளது. ஆனாலும் மனிதனின் அறிவியல் பேராற்றலால் இதற்கு மேல் கண்டறிய முடியவில்லை.

அதே போல பெர்முடா முக்கோனம் என்ற கடல் பகுதி உலகையே குழப்பி வருகிறது, இப்பகுதியில் பல கப்பல்கள், விமானங்கள் திடீரென காணாமல் போயுள்ளன, இதனால் இப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும், இப்பகுதியில் வேறு உலகிற்கு போகிற பாதை இருப்பதாகவும் கூறுகின்றனர். அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கூட இப்பகுதியில் மர்மமான வெளிச்சங்களை தான் கண்டதாக தன் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். ஆனால் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இதில் இல்லை, எனவே அறிவியல் அறிஞர்கள் இது ஒருவேளை அப்பகுதியில் ஏற்படுகிற அதிகப்படியான ஈர்ப்புவிசையின் விளைவாக இருக்கும் என்று கூறுகிறார்கள், ஆனாலும் பெர்முடா முக்கோணம் இன்றளவும் மர்மமே, இங்கேயும் மனிதனின் ஆற்றல், ஆறிவு, திறமை, அறிவியல் எதுவும் மனிதனுக்கு உதவ முடியாமல் தவிக்கிறது.

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கே மனித ஆற்றலை மண்டியிட வைத்துவிட்டதே. 

எனவேதான் சங்கீதக்காரன், சங்கீதம்.33:16,17ல் எந்த இரஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான், எந்த வீரனும் தன் மிகுந்த பலத்தினால் தப்புவிக்கப்படான், இரட்சிக்கிறதற்கு குதிரை விருதா, அது தன் மிகுந்த வீரியத்தினால் தப்புவியாது என்று நறுக்கென்று கூறுகிறார்.
மேலும் 18,19,20ம் வசனங்களில் மரணத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும் அவரே இரட்சிக்க வல்லவர் என்றும், அவரே நமக்கு துணை அவரே நமக்கு கேடகம் என்கிறார்.

நம்ப முடியாத ஒரு செய்தியை நோவா தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பிரசங்கித்தார். அதுதான் மழை வரும் இவ்வுலகை அழிக்கும் என்ற செய்தி. ஏனென்றால் நோவா காலம் வரை ஊற்றுகளும் ஆறுகளும்தான் இருந்ததே தவிர மழை பெய்ததில்லை. எனவே மக்கள் அவனுக்கு செவி கொடுக்கவில்லை. ஆனால் நோவாவோ கடவுளின் வார்த்தையை முழுமையாய் விசுவாசித்து நம்புவதற்கரிய செய்திக்காக தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்தான் விளைவு அந்த விசுவாசம் அவனையும் அவன் வீட்டாரையும் இரட்சித்தது.

அதே போல் ஆபிரகாம் தனக்கென ஒரு வாழ்வை தேடாமல், தனக்கென ஒரு இடத்தை தெரிந்துக் கொள்ளாமல் கடவுள் காண்பிக்கும் இடத்திற்கெல்லாம் பயணப்பட்டான். பிள்ளை பெறும் வயதை கடந்தும் ஆதியாகமம்.15:1-6 ல் நம்புவதற்கரிய கடவுளுடைய வார்த்தையை விசுவாசித்தான், அதன் பலன் அவன் சந்ததியை இந்த பூமியில் பெருகப்பண்ணினார், அதுமட்டுமா? இறை வார்த்தைக்காக தன் மகனையும் பலியிட துணிந்தான். அவன் விசுவாசம் அவன் சந்ததிக்கு இறை மக்கள் என்ற உரிமை பேரை பெற்று தந்தது.

அவர் வார்த்தையில் வைக்கிற விசுவாசமே நம் வாழ்வை இரட்சிக்கும். இதோ அதே சர்வ வல்லவர் கிறிஸ்துவின் வழியாய் இன்றைய தியானப்பகுதியில் நமக்கு ஒரு செய்தி கூறுகிறார், அந்த செய்தி மனுஷ குமாரன் வரப்போகிறார், ஒரு புதிய அரசை நமக்கு தரப்போகிறார், அதற்கு நாம் ஆயத்தப்பட வேண்டும் என்ற செய்தி. நம்மில் எத்தனைப்பேர் ஆயத்தமாய் இருக்கிறோம்?

ஆம் நான் ஆயத்தமாய் இருக்கிறேன், தினசரி ஜெபிக்கிறேன், தவறாமல் ஆலயத்துக்கு போகிறேன், காணிக்கை போடுகிறேன், உபவாசம் இருக்கிறேன், எல்லா கிறிஸ்தவ தொலைக்காட்சியையும் பார்க்கிறேன், எல்லா தொலைக்காட்சிக்கும் ஆயிரக்கணக்கில் பணம் அனுப்புகிறேன், எல்லா கன்வென்ஷனுக்கும் போகிறேன், நானே கான்வென்ஷன் நடத்துகிறேன், நான் போதகர், நான் ஊழியர், நான் பிரசங்கிக்கிறேன், பெரிய கன்வென்ஷன் மீட்டிங்கில் பேசுகிறேன் மிராக்கிள்ஸ் (அற்புதங்கள்) பயங்கரமாய் நடக்கிறது, பேய் ஓடுகிறது நோய் தீருகிறது நான் இறையரசை வரவேற்க தயார் என்று உற்சாக குரால் எழுகிறதா? மன்னிக்கவும் இதில் எதையும் இயேசு இறை அரசை வரவேற்பதற்கான ஆயத்தமாக கூறவில்லை.

லூக்கா.12:33ல் தெளிவாக கூறுகிறார் உங்கள் சொத்துக்களை விற்று தர்மங்கொடுங்கள் என்று. இங்கே நம்மை ஏழைகளாக மாற கூறவில்லை சமத்துவ உலகை உண்டாக்க கூறுகிறார். பொருளாதார ஏற்றதாழ்வற்ற சமூகத்தை உண்டாக்க சொல்லுகிறார். அதற்காகத்தானே திருச்சபை, .
அப்படி கொடுக்கிற உள்ளம் தானே கிறிஸ்தவ உள்ளம், அதை தானே இந்தியா வந்த திருப்பணியாளர்கள் செய்தார்கள். ஆனால் இன்று நற்செய்தி கூட்டங்களின் ஆடம்பரத்துக்கும், ஆலயங்களின் பகட்டை காட்டுவதற்கும் இலட்ச இலட்சமாய் வாரி இறைக்கிறோம், எதற்கு நம்முடைய தற்பெருமைக்கு. இதனால் நாம் இறையரசின் வாயிலை கூட எட்ட முடியாது. கண் முன்னால் உள்ள ஏழைகளை மறந்துவிட்டு, என்ன ஊழியம் செய்தாலும் அது இறையரசிற்கான முழுமையான ஆயத்தம் இல்லை. இன்று கிறிஸ்தவத்தில் சாதி வேறு? பரலோகத்தில் கூட சாதி உண்டா????? இனியும் நாம் மாறாவிட்டால், இறையரசை குறித்து பேசவே நாம் தகுதியற்றவர்களாகிடுவோம். இன்றே மாறுவோம் புது சமூகமாய்… இறையரசின் மாதிரியாய் எழுச்சி பெறுவோம்…. இறைவன் பரிசுத்த ஆவியினால் ஒத்தாசை செய்வாராக ஆமென். 

Friday, July 22, 2016

விருந்தோம்பல் என்பது தமிழர்களின்  மிக சிறந்த 

Tuesday, June 28, 2016

இயேசுவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?



ஒரு நற்செய்தி கூட்டம் நடத்த வேண்டுமானால் 6 மாதம் முன்பு ஒரு பெரிய ஊழியரிடம் அனுமதி வாங்க வேண்டும், 3 மாதம் முன்பு விளம்பரம் துவங்க வேண்டும், குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் செலவாகும். இவ்வளவும் நடந்த பின் கூட்டத்திற்கு ஒரு 500 பேர் வருவார்கள் அல்லது பெரிய கூட்டம் என்றால் 1000 ம் பேர் வருவார்கள்.

ஆனால் இயேசு ஆண்டவர் எந்த விளம்பரமும் இன்றி யாருக்கும் தெரியாமல் வனாந்திரமான இடத்திற்கு போனார் அங்கே பெண்கள் குழந்தைகள் தவிர்த்து, ஆண்கள்மட்டுமே 5000 பேர் வந்தனர் (மத்தேயு.14:21), எவ்வளவு பெரிய அற்புதம்? இன்று சபைகளில் ஆண்களை பார்ப்பதே அபூர்வம்..  இவ்வளவு பெரிய கூட்டத்தை சத்தமின்றி கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்ற கிறிஸ்து, அதை அப்படியே பயன்படுத்தி ஒரு சில கோடிகளில் ஆலயத்தை கட்டி சில ஆயிரம் கோடிகளில் சொத்துக்களை சேர்த்து ஒரு மாபெரும் மகானாக, உலகையே வலம் வரும் கார்ப்பரேட் பிரசங்கியாராக பரிணமித்திருக்கலாம். அல்லது..

அடசியிலும், பதவியிலும் அங்கம் வகித்து மக்களை ஏமாற்றி  சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சதுசேயர், வேதபாரகர், பரிசேயரோடு கொஞ்சம் ஒத்துழைத்து ஒரு பதவியை வாங்கி பக்காவாக செட்டில் ஆகியிருக்கலாம். செய்தாரா?

இல்லை மாறாக அதிகாரத்தில் இருந்துக் கொண்டு மக்களை கொள்ளை அடிக்கும் சதுசேயர், பரிசேயர், வேதபாரகர் போன்றோரை கூட்டம் போட்டு மிக கடுமையாக கண்டித்தார்...

(வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு.23:2-3)

(குருடரான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். மத்தேயு.23:24-27)

இது இவருக்கு தேவையா? எவன் எக்கேடு கேட்டால் இவருக்கு என்ன? வந்தமா  பிரசங்கம் பண்ணமா போனோமான்னு இருக்கணும்.. அல்லது வந்தமா பிரசங்கம் கேட்டமா போனோமான்னு இருக்கணும். இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? அதான் அவர் குணாதிசயத்தையே கொலை செஞ்சான் - மதுபான பிரியன், போஜன பிரியன் (லூக்கா.7:34), “மதிமயங்கிய பைத்தியக்காரன்” (மாற்கு .3:21), பிசாசு பிடித்தவன்(யோவான்.8:48) பிசாசுகளின் தலைவன் (மத்.12:24) கள்ள உபதேசகன்(யோவான்.9:21) அப்பிடி இப்டினு அடிச்சு விட்டான், அது மட்டுமா???????? திட்டமிட்டு தூக்கினான் பாருங்க சிலுவை மரத்துல தேவையா இதெல்லாம்? 

அதுசரி எனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை??? நானும் என் வேலையை பாக்குறேன். அய்யய்யோ உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை நீங்களும் போய் உங்க வேலையை பாருங்க.. 

இயேசுவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?



ஒரு நற்செய்தி கூட்டம் நடத்த வேண்டுமானால் 6 மாதம் முன்பு ஒரு பெரிய ஊழியரிடம் அனுமதி வாங்க வேண்டும், 3 மாதம் முன்பு விளம்பரம் துவங்க வேண்டும், குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் செலவாகும். இவ்வளவும் நடந்த பின் கூட்டத்திற்கு ஒரு 500 பேர் வருவார்கள் அல்லது பெரிய கூட்டம் என்றால் 1000 ம் பேர் வருவார்கள்.

ஆனால் இயேசு ஆண்டவர் எந்த விளம்பரமும் இன்றி யாருக்கும் தெரியாமல் வனாந்திரமான இடத்திற்கு போனார் அங்கே பெண்கள் குழந்தைகள் தவிர்த்து, ஆண்கள்மட்டுமே 5000 பேர் வந்தனர் (மத்தேயு.14:21), எவ்வளவு பெரிய அற்புதம்? இன்று சபைகளில் ஆண்களை பார்ப்பதே அபூர்வம்..  இவ்வளவு பெரிய கூட்டத்தை சத்தமின்றி கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்ற கிறிஸ்து, அதை அப்படியே பயன்படுத்தி ஒரு சில கோடிகளில் ஆலயத்தை கட்டி சில ஆயிரம் கோடிகளில் சொத்துக்களை சேர்த்து ஒரு மாபெரும் மகானாக, உலகையே வலம் வரும் கார்ப்பரேட் பிரசங்கியாராக பரிணமித்திருக்கலாம். அல்லது..

அடசியிலும், பதவியிலும் அங்கம் வகித்து மக்களை ஏமாற்றி  சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சதுசேயர், வேதபாரகர், பரிசேயரோடு கொஞ்சம் ஒத்துழைத்து ஒரு பதவியை வாங்கி பக்காவாக செட்டில் ஆகியிருக்கலாம். செய்தாரா?

இல்லை மாறாக அதிகாரத்தில் இருந்துக் கொண்டு மக்களை கொள்ளை அடிக்கும் சதுசேயர், பரிசேயர், வேதபாரகர் போன்றோரை கூட்டம் போட்டு மிக கடுமையாக கண்டித்தார்...

(வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு.23:2-3)

(குருடரான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். மத்தேயு.23:24-27)

இது இவருக்கு தேவையா? எவன் எக்கேடு கேட்டால் இவருக்கு என்ன? வந்தமா  பிரசங்கம் பண்ணமா போனோமான்னு இருக்கணும்.. அல்லது வந்தமா பிரசங்கம் கேட்டமா போனோமான்னு இருக்கணும். இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? அதான் அவர் குணாதிசயத்தையே கொலை செஞ்சான் - மதுபான பிரியன், போஜன பிரியன் (லூக்கா.7:34), “மதிமயங்கிய பைத்தியக்காரன்” (மாற்கு .3:21), பிசாசு பிடித்தவன்(யோவான்.8:48) பிசாசுகளின் தலைவன் (மத்.12:24) கள்ள உபதேசகன்(யோவான்.9:21) அப்பிடி இப்டினு அடிச்சு விட்டான், அது மட்டுமா???????? திட்டமிட்டு தூக்கினான் பாருங்க சிலுவை மரத்துல தேவையா இதெல்லாம்? 

அதுசரி எனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை??? நானும் என் வேலையை பாக்குறேன். அய்யய்யோ உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை நீங்களும் போய் உங்க வேலையை பாருங்க.. 

Friday, February 19, 2016

ஊழியத்தை தடுப்பவன் யார்?



உண்மையான ஊழியத்தில் இரண்டு சவால்கள் உள்ளன.


ஒன்று வாழ்வாதாரம்:

ஊழியம் என்பதே.. பிறருக்கு செய்வது தனக்கு செய்வதல்ல. இயேசு தான் ஊழியம் செய்த காலத்தில் அனேக அற்புதங்களை செய்திருக்கிறார். யோவான்.20:30 ல் இப்புத்தகத்தில் எழுதியிராத அனேக அற்புதங்களை செய்திருக்கிறார் என்று யோவான் சாட்சியிடுகிறார். ஆம் அவர் செய்த அற்புதங்கள் உலகம் கொள்ளாதவை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரே ஒரு அற்புதத்தை கூட அவர் தனக்காக செய்ததில்லை. ஐயாயிரம் பேருக்கு அதிகமானோரின் பசியாற்ற 5 அப்பம் 2 மீனை பெருக்கி 12 கூடை மீதியாகும் அளவுக்கு கொடுத்தவர். தான் பசியாய் இருந்த போது ஒரு கல்லை கூட அப்பமாக மற்றிக் கொள்ளவில்லை. ஏனென்றால் தனக்கானதை நாடுவதில்லை ஊழியம். அப்படியானால் பசியிலும் வறுமையிலும் வாட வேண்டுமா? என்றால் இல்லை அன்றன்று வேண்டிய ஆகாரத்தை ஆண்டவர் தருவார். இந்த விசுவாசம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழிவிலகி பணத்தை நாடி சென்றுவிடுவர். இன்று பல ஊழியர்கள் அப்படி சென்று விட்டதை நம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். அவர்களை தான் பவுல் பிலி.3:19 ல் .. அழிவே அவர்கள் முடிவு..
வயிறே அவர்கள் தெய்வம்..
மானக்கேடே அவர்கள் பெருமை...
அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகை சார்ந்தவையே.. என்கிறார். ஆம் அது உண்மைதான் எனவேதான் ஆண்டவர் தனக்கானவைகளை நாடியதில்லை. அவருக்கானதை பரம பிதா கொடுக்க தவறியதில்லை. எனவே உணவுக்கோ, உடமைக்கோ பொருளுக்கோ ஒரு ஊழியக்காரன் கவலை கொள்வானானால் அவனை போல் ஓர்  அவிசுவாசி இவ்வுலகில் இல்லை. ஆனால் இதை வைத்துதான் பிசாசும் இவ்வுலகமும் ஒரு நல்ல ஊழியனை வஞ்சிக்க பார்க்கும். எதிர்த்து நின்றால் ஜெயமே முடிவு. உலக பொருளல்ல உலக பொருளை கொடுப்பவரே பெரியவர்.

இரண்டு அச்சுறுத்தல்.

மக்களின் அறியாமையை மூலதனமாகி பல்வேறு கடைபிடிக்க முடியாத ஒழுங்குகளை உண்டாக்கி தங்களை நீதிமான்களாக காட்டிக் கொண்டு மக்களின் காணிக்கை பணத்தில் உல்லாச வாழ்வு வாழ்ந்த சமய தலைவர்களை இயேசு பகிரங்கமாக கண்டித்தார். இதன் விளைவு அவரை எப்படியாவது அடக்க துடித்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் தான் மிரட்டல் லூக்கா.13:31 ல் சில பரிசேயர் அவரிடம் வந்து இங்கிருந்து போய்விடும் ஏனெனில் ஏரோது உம்மை  கொல்ல பார்க்கிறான் என்றனர். மிரட்டல்களுக்கு அஞ்சுபவரா ஆண்டவர்? உயிருக்கே அஞ்சாதவர் இது போன்ற சலசலப்புகள் அவரை என்ன செய்யும்? இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இருப்பேன் போய் சொல்லுங்கள் என்றார்.

உதவி செய்ய வேண்டிய யூதாஸ் காட்டி கொடுத்தபோது..
இவன் யார் என்று தெரியாது என்று பேதுரு மறுதலித்தபோது..
எல்லா சீடர்களும் விட்டுவிட்டு ஓடிப்போனபோது..
விடுவிக்க வேண்டிய பிலாத்து  சிலுவைக்கு வஞ்சகமாய் ஒப்புக் கொடுத்த போது...
நியாயமாய் ஒரு பயம் வர வேண்டும் ஆனால் இயேசுவுக்கு வராது ஏனென்றால் அவர் உணமையான ஊழியத்தை செய்தவர்.. பிதாவின் சித்தமின்றி தன்னை ஒருவனும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தவர்.

உலக பொருள் நம்மை தேடி வரும்.. முதலாவது கடவுளுடைய இராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடினால் போதும் . நம்மை தொட்டால் அவர்  கண்மணியை தொடுவதற்கு சமம்.
இந்த விசுவாசமே இன்றைய ஊழியத்தின் அடிப்படை தேவை.. ஏனென்றால் உண்மையான ஊழியத்தை எதிர்ப்பவர்கள் கடவுளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள் .

Tuesday, February 2, 2016

ஆராதனை ஆசீர்வாதம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.



கிறிஸ்தவர்களாகிய நாம் அனேக ஆராதனைகளை கடைபிடிக்கிறோம். மாதத்தின் முதல் நாள் ஆராதனை, ஞாயிறு ஆராதனை, சில திருச்சபைகளில் புதன் ஆராதனை, சில திருச்சபைகளில் வெள்ளி ஆராதனை, விடுமுறைகளில் கூட ஏதாவது ஒரு ஆராதனை  உபவாச ஆராதனை அல்லது முழு இரவு ஆராதனை போன்றவைகளை கடை பிடிக்கிறோம், இது போதாதென்று வீடுகள் தோறும் குடும்ப ஜெபக்கூட்டங்கள் என்று குடும்ப ஆராதனைகளை  நடத்துகின்றோம். எவ்வளவோ சிரமங்கள் எத்தனையோ பணிகள் நடுவே இவைகளை நடத்துகின்றோம்.

என் இப்படி ஆராதனைகளை நடத்த வேண்டும்? நடத்துவதால் என்ன பலன்?

சங்கீதம்.27:4 ல் தாவீது,  கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். என்று கூறுகிறார், 

 ஒன்றே ஒன்றுதான் அது நான் உம்மை ஆராதிக்க வேண்டும் என்கிறார். ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டும் என்கிறார். 

2.சாமுவேல்.6:15-16 ல் தாவீது கர்த்தருடைய பெட்டகத்திற்கு முன்னால் ஆடி பாடி நடனமாடி  இறைவனை  ஆராதிக்கின்றார். எவ்வளவு பெரிய காரியம்.. சவுலின் மகள் இதை கண்டு அவமதித்த போதும் அதை பொருட்படுத்தாமல் இறைவனை ஆராதிக்கின்றார்.  நாமோ சில நேரங்களில் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு ஆராதனைக்கு வருவதற்கு கூட வெட்கப்படுகிறோம். 

மீண்டும் அதே கேள்வி அப்படியென்ன ஆராதனை அவசியமாகிறது?

யாத்திராகமம.23:25 ல் கடவுள் மூலமாக கானானுக்கு போகிற தம் மக்களுக்கு கூறுகிற செய்தி என்னவென்றால். 

"உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்". 

இந்த வசனத்தில் தான் ஆராதனையின் மகத்துவம் வெளிப்படுகிறது. நாம் அவரை ஆராதித்தால் நம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை கடவுள் வெளிப்படுத்துகின்றார். 

நாம் அவரை ஆராதிக்கும் போது நம் வீட்டு உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கின்றார். இன்று உணவு கிடைக்கிறது ஆனால் நாம்  தான் நமக்கு  மாறுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதே போலதான் தண்ணீர். இன்று சுத்தமான தண்ணீரின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒரு டி கடையில் தண்ணீர் கேட்டால் ஒரு பெரிய பாத்திரத்தில் அள்ளி கொடுப்பார் இன்று 20 ரூபாய் கொடுத்தால் தான் ஒரு லிட்டர் தண்ணீர் கொடுக்கிறார். சுத்தமான தண்ணீர் கிடைப்பது அவ்வளவு போராட்டமாக உள்ளது. ஆனால் அவரை ஆராதிப்பவர்களுக்கு உணவையும் தண்ணீரையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார். அதுமட்டுமல்ல நம் பலவீனங்களை நம்மை விட்டு விலக்குகின்றார். உண்மை தானே நாம் ஒரு ஜெபத்திலோ, அல்லது ஆலய ஆராதனையிலோ, அல்லது ஒரு நற்செய்தி கூட்டத்திலோ தானே அற்புதங்கள் நடக்கிறது .


எனவே தான் அராதனைகள் நம் வாழ்வில் நம்மை விட்டு பிரிக்க முடியாத அங்கமாக மாறுகிறது. எனவே எக்காரியத்திலும் அவரை ஆராதிப்பது நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் மிகப்பெரிய ஆசீர்வாதம். எனவே தான் ஒரு மாதத்தை, ஒரு வாரத்தை, ஒரு வருடத்தை, ஆராதனையோடு துவக்குகிறோம். 

இன்று அவரை ஆராதித்து துவங்கினால் அவர் நம்மோடிருந்து நம்மை ஆசீர்வதித்து நம் பலவீனங்களை நம்மை விட்டு விளக்குகிறார். 

ஆராதிப்போம் நம் ஆண்டவரை ஆசீர்வாதமான வாழ்வை பெற்று மகிழ்வோம். 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews