WORD OF GOD

WORD OF GOD

Sunday, September 25, 2016

ஞாயிறு செய்தி.. 25.09.2016


லூக்கா.16:19-31

மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், தற்போது BD இறுதியாண்டு படித்து வருகிறேன், எனவே அவ்வப்போது வகுப்புகளுக்காகவும், தேர்வுக்காகவும், மதுரைக்கு பயணிக்க வேண்டியுள்ளது. அப்படி பயணிக்க, பல்வேறு வழிகள் உள்ளன.

 பேருந்து பயணம்

பேருந்து பயணத்தில் மூன்று  வகை.

1. ஆம்பூரில் இருந்து திருப்பத்தூர் - திருப்பத்தூரில் இருந்து சேலம் -சேலத்திரிலிருந்து மதுரை 250 ரூபாய் சராசரி கட்டணத்தில் போய்விடலாம்.

2. ஆம்பூரில் இருந்து ரேணுகாம்பாள் பேருந்தில் 450 ரூபாய்க்கு முன்பதிவு செய்து விட்டால் பாதி படுக்கை அமைப்பு கொண்ட இருக்கையில் சொகுசாக அமர்ந்துக் கொண்டு எவ்வித அலைச்சலும் இல்லாமல்  மதுரை அரசரடியில் உள்ள கல்லூரி வாசலில் போய் இறங்கி விடலாம்.

3. ஆம்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு போய் அங்கே 900ம் ரூபாய்க்கு முன்பதிவு செய்தால், முழு படுக்கை வசதியோடு A /C பேருந்தில் மிக சிறந்த சொகுசாக தூங்கி கொண்டே போய் கல்லூரி வாசலில் இறங்கி விடலாம்.

இரயில் பயணம் இதிலும் மூன்று வகை.

முன் பதிவில்லா  பயணம், 150 ரூபாயில் பயணித்துவிடலாம். ஆனால் உட்காருவதே ஆக சிறந்த பாக்கியம்.

ஒரு மாதத்திற்கு முன்னால் , 300 ரூபாய்க்கு முன் பதிவு செய்தால் படுத்து கொண்டே சொகுசாக பயணிக்கலாம்.

A /C ல் முன்பதிவு செய்தால் எவ்வித தொந்தரவும் இல்லாமல் அற்புதமான பயணத்தை அனுபவிக்கலாம். (இன்னும் முன்பதிவு செய்யாததால் கட்டணம் தெரியவில்லை)


பணம் கூட கூட வசதி கூடுகிறது. இங்கே பணம் இருந்தால் இராஜாவாக வாழலாம். அம்பானியின் விலையுயர்ந்த கார் என்று கூகிளில் தேடினால் மிக அற்புதமான தரை விமானம் போன்ற ஒரு காரை பார்க்க முடிகிறது!!!



கோட் போட்டு காரில் வந்து  மினரல் வாட்டர் குடித்துக் கொண்டே இறங்குபவருக்கு இருக்கும் மரியாதை பிறருக்கு இல்லை. எனவே தான் பணம் பணம் பணம் என்று இக்கால மனிதர்களாகிய நாம் ஓடுகிறோம்!!!

அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகு  இல்லை என்று வள்ளுவரே கூறியுள்ளது எவ்வளவு உண்மை?? நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல காற்று , நல்ல உடை  போன்ற அடிப்படை தேவைகள் கூட பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படியிருக்க அந்த செல்வத்தை தேடி செல்வந்தனாக வாழ்வதில் என்ன தவறு உள்ளது? இயேசு கிறிஸ்துவின் இன்றைய  உவமை செல்வந்தர்களுக்கு எதிராய் நிற்கிறதே??? பொருளாதார செழிப்பை கர்த்தர் விரும்பவில்லையா?  ஒருவன் செல்வந்தனாக இருப்பதையே இயேசு கிறிஸ்து விரும்பவில்லையா???

 ஐசுவரியாவான் அவன் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஏழை இலாசரு. அவரவர் வசதிக்கு ஏற்ப நடை உடை உணவு முறை உள்ளது. அதாவது விலையுயர்ந்த உடை, சொகுசான வாழ்க்கை செல்வந்தனின் அடையாளம்,
புண்கள்,வீதியில் வீசப்படும் உணவு, தெரு நாய்கள் தோழமை, இது ஏழையின் அடையாளம். இருவரும் மரித்தார்கள் ஏழை பரலோகம் போகிறான், செல்வந்தன் நரகம் போகிறான்!! ஏன் ? என்ன காரணம் அவன் செல்வந்தனாய் பிறந்தது அவன் செய்த பாவமா?

அதே போல் ஆமோஸ் 6 ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் வாழ்க்கை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. தந்த கட்டில்களில் இளைப்பாறி, ஆட்டு குட்டியும், கன்று குட்டியும் சாப்பிட்டு, பெரிய கோப்பைகளில் மது அருந்தி சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதில் என்ன தவறு?  காசு இருக்கிறது அனுபவிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை கொடுத்ததே கடவுள் தானே, எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்டு, பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தை கொண்டு வந்து கொடுத்தது யார்? அவர் கொடுத்தார் அனுபவிக்கிறார்கள் என்ன தவறு? 7 ம்  வசனத்தில் சிறையிருப்புக்கு அவர்கள் தான் முன்னால் போவார்கள் என்று அவர்களை கலாய்க்கிறாரே ஏன்? செல்வந்தனாய் வாழ்வது பாவமா? இல்லை..

செல்வத்தை  கொடுப்பவரே கடவுள் தான், ஆனால் அதை இல்லாதவரோடு பகிர்ந்துக்க கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.. கானானுக்கு நுழைவதற்கு முன்னமே கடவுள் இஸ்ரவேலர்களுக்கு  இதை தெளிவாக கட்டளையிட்டிருந்தார். அனுக்கிரக வருஷத்தை பிரசித்தப்படுத்தி ஏழைகள் வாழ வகை செய்ய வேண்டும். ஆனால் இஸ்ரவேலரோ அந்த கட்டளையை முற்றிலும் மறந்துவிட்டு தான் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல நோக்கோடு இருந்துவிட்டனர். உபாகமம் 15:1-10 வரை வாசித்தால் இதை தெளிவாக விளங்கி கொள்ளலாம்.

இங்கே ஐசுவரியவானும் தன் வீட்டு வாசலில் உள்ள ஒரு தரித்திரனை காணாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். இதுதான் பாவம். பரலோக வாழ்வுக்கு ஒருவன் போவதற்கான தகுதியே பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுப்பதும், தாகமாய் இருப்பவனுக்கு தண்ணீர் கொடுப்பதும் உடை இல்லாதவனுக்கு உடை கொடுப்பதும் தானே... மத்.25:35-36.

எங்கிருந்தோ வந்த LCMS திருப்பணியாளர்கள் இங்கே வந்து பால் பௌடரும், கோதுமையும், இலவசமாக கொடுத்து, இலவச கல்வி கொடுத்து, வேலை வாய்ப்பை உண்டாக்கி கொடுத்து, சமூகத்தில் நம்மை நிலை நிறுத்தியது அதனால் தானே.

அவர்களை அனுப்பிய நம் இரட்சகரும், அவர்களும் தாராளமாய் இருக்க, நாமோ வன்கண்ணர்களாய் இருப்பது ஏனோ??  இங்கே வளர்ந்த சபைகள் தங்கள் பேங்க் பேலன்சை சொல்லி பெருமை பாடுவதில் எந்த பயனும் இல்லை.. ஏழை சபைகள் கட்டிடம் கட்ட முடியாமல், ஏழை சபைகள் தன்னிறைவு அடையாமல், போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலட்சங்களில் விழா எடுக்கும் பெரிய சபைகள் இந்த சமூகத்திற்கு ஆற்றிய பணி என்ன? நமது LCMS மிஷினெரிகள் காலத்திற்கு பிறகு நாம் துவங்கிய சுதேச சமூக சேவைகள் என்ன? 42 கோடிக்கும் அதிகமானோர் அடுத்த வேளை  உணவில்லாமல் தவிக்கிற நாடு நம் நாடு இதை மாற்ற நம் பங்கு என்ன?

இன்றும் கிறிஸ்தவம் வீழ்ந்து விடாமல், தங்கள் கொடுக்கும் குணத்தால் தாங்கி பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இறை செய்தியை அர்ப்பணிக்கிறேன்...







No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews