WORD OF GOD

WORD OF GOD

Wednesday, June 29, 2011

பாதுகாக்கும் கேடகம்

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
உபாகமம்.33 :29

அன்பான உடன் விசுவாசிகளே, இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தை நோக்கி பயணித்துக்  கொண்டிருந்த காலத்தில், கானானுக்கு பொய் சேருவோமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்ததில்லை காரணம், வழி நடத்தி வருபவர் மோசே. எகிப்தில் இருந்து புறப்பட்டபோது எத்தனை தடைகள்? எவ்வளவு போராட்டங்கள்? எவ்வளவு வலிகள் வேதனைகள்? எல்லாவற்றின் மத்தியிலும், மோசேயின் வழி நடத்தலில் மிக எளிதாக கடந்து வந்தார்கள். ஆனால் மோசேவால்  கடைசி வரை வர முடியாதே.

ஆம் மோசேவுக்கு வயதாகிவிட்டது, தன் காலம் முடிய போகிறது என்பதை அவரே உணர ஆரம்பித்தார். இனி தொடர்ந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்த முடியாது என்பதை அறிந்துக் கொண்டார். எனவே கடைசியாக இஸ்ரவேல் மக்களை அழைத்து அவர்களுக்கு அறிவோரை வழங்குகிறார். அவர் கூறிய நீண்ட அறிவுரையின் கடைசி வார்த்தைகள் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

இங்கே அவர் சொல்லுவது இஸ்ரவேல் பாக்கியமுள்ள ஜனம், இரட்சிக்கப்பட்ட ஜனம், யாருக்கும் நிகரில்லா ஜனம். ஏன் என்றால், இஸ்ரவேலுக்கு உதவியாகவும், பாதுகாக்கும் கேடகமாகவும், வெற்றிதரும் மகிமையுள்ள பட்டையமாகவும் இருப்பவர் கடவுள் என்கிறார்.

சத்தியமான வார்த்தை, மோசே நினைத்திருந்தால், என் பலத்தால் இதை சாதித்தேன், இனி நீங்களும் என்னை போல் வாழுங்கள் என்று சொல்லி தன்னை மேன்மைபடுத்திக்கொண்டிருக்க முடியும். காரணம் இன்று அநேகர் கடவுள் கொடுத்த வரங்களினால் வல்லக்காரியங்கள் செய்து எதோ தானே செய்ததாக சுவரொட்டிகளில் தங்களை மேன்மைப்படுத்திக்  கொள்வதை போல் அவரும் செய்திருக்க முடியும் ஆனால் அதை செய்யவில்லை. காரணம். அது உண்மையல்ல. இவ்வளவு நாள் உங்களை நடத்தியது, உங்களை இரட்சித்தது, உங்களை தெரிந்துக் கொண்டது, உங்களுக்கு சகாயம் செய்தது, உங்களை பாதுகாக்கும் கேடயமாய் இருந்தது, உங்களுக்கு வெற்றிதரும் பட்டையமாய் செயல் பட்டது, நானல்ல அவரே என்று சரியான பாதையில், வெற்றிவரும் பாதையில் தன்னை தாழ்த்தி அவரை உயர்த்தி தன் கடைசி அறிவுரையை முடிக்கிறார்.

அன்பானவர்களே. இன்றைக்கு மோசே இத்திரு வசனங்கள்  வாயிலாக நமக்கு சரியான அறிவுரையை தருகிறார். எப்படி முன்னேறி செல்ல போகிறேன்? யார் எனக்கு துணை என்று அஞ்சுகிறீர்களா?


நமக்கு உதவி செய்பவராக, பாதுகாக்கும் கேடகமாக, நம் தீமைகளை அறுத்தெறியும் பட்டையமாக, நமக்கு துணையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். நம்மை காக்க சிலுவையில் ஜீவனையே கொடுத்தவர். இன்றும் நம்மை காக்க நம்மோடு நம் வாழ்வோடு பயணிக்கிறார். இந்த விசுவாசத்தோடு இந்நாளை துவங்குவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, June 28, 2011

வாழ்த்துக்கள்.


அன்பான உடன் விசுவாசிகளே, இன்று காலை எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. காரணம். JESUS  SAVES  MINISTRY  நண்பர்கள் ஒரு வலை பக்கத்தை ஆரம்பித்திருப்பதை இன்று காலைதான் அறிந்தேன். கர்த்தரின் நாமம் வலைத்தளம்  முழுவதும் நிரம்பி வழிய வேண்டும். இந்த இனிய முயற்சியை துவங்கியிருக்கும். விண்ணமங்கலம் திருச்சபை வாலிபர்களான,

சகோதரர்.செல்வின் ராஜ், 
சகோதரர். பாபு பிரபு தாஸ்,
சகோதரர்.பாரத் குமார்

ஆகியோரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வலையுலகிற்கு வரவேற்கிறேன். கர்த்தர் உங்கள் முயற்சியை மிகவும் பெருக செய்து ஆசீர்வதிப்பார். நான் உங்கள் தளத்தின்  வாசகனாக தொடர்ந்து வருவேன்.

அன்பான வாசகர்களே நமது சகோதரர்கள் ஆரம்பித்திருக்கும் தளத்தை இந்த லிங்கில் (தொடர்பில்)  காணவும்.






கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, June 27, 2011

இயேசு கிறிஸ்துவை அனுபவித்து பாருங்கள்

சங்கீதம்.28 :6 -7 

6. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.


7. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

சந்தோஷம் என்பது மனித வாழ்வின் அடிப்படை தேடல். அனால் எளிதில் சந்தோஷம் கிடைத்துவிடுவதில்லை. காரணம் துன்பமும் போராட்டமும் தான் இன்றைய வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. இந்த மாதம் புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. ஒவ்வொரு  பெற்றோரும் கண்ணீரோடு போராடி வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை கட்ட இரத்த வேர்வையோடு பணத்தை புரட்டி வருகின்றனர்.

கல்வி ஏழை பிள்ளைகளுக்கு எட்டா கனியாக என்றைக்கோ மாறி இன்று ஏழை பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது. பெற்றோரும் மாணவர்களும் எவ்வளவு போராடினாலும், இவர்கள் குரல் இன்னும் அரசாங்கத்தின்  வாசல்களை திறக்கவில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது நிரூபணமாகி வருகிறது. ஆனால் நம் குரலை, நம் விண்ணப்பத்தை, கேட்க ஆவலோடு ஒருவர் காத்திருக்கிறார்.

என் நாமத்தில் நீங்கள் எதை கேட்டாலும் பெறுவீர்கள் என்று உத்தரவாதமும் கொடுத்திருக்கிறார். அவர்தான் நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து. கேட்பாரா? கேட்டால் இந்த பொல்லாத உலகத்தில் அவரால் என்ன செய்ய முடியும்? நம் நிலை மாறிவிடுமா? இதென்ன மந்திரமா? என்ற கேள்விகள் உள்ளத்தில் எழுகிறதா? இது மந்திரமல்ல வாழ்க்கை அனுபவம்.

நம்முடைய தியானப் பகுதியில் ஒரு பக்திமான்  தன் அனுபவத்தை குறிப்பிடுகிறார். என்னை சுற்றி துன்மார்க்கரும் பொல்லாதவர்களும் இருக்கிறார்கள் நீர் என் ஜெபத்தை கேட்காவிட்டால் நான் குழியில் இறங்குவதற்கு சமமாவேன் என்கிறார். அதாவது பிணத்திற்கு சமமாவேன் என்கிறார். ஆனால் 6  வது வசனத்தில் கர்த்தர் என் விண்ணப்பத்தை கேட்டார் என்று வாக்குரைக்கிறார்.

அடுத்த வசனத்தில் கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். என்கிறார். எப்படி இந்த மாற்றம் வந்தது? இதை விவரிக்க முடியாது அனுபவித்து பார்த்தால் இந்த மேன்மை புரியும்.

அன்பானவர்களே, இக்கட்டில் ஆறுதலளிக்கும், துன்பத்தில் பலனளிக்கும் இயேசு கிறிஸ்துவை அனுபவித்து பாருங்கள். பெற்ற நன்மையை அனுபவத்தை சாட்சியாய் எனக்கு எழுதி அநேகருக்கு அறிவித்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, June 26, 2011

வாழ்வருளும் வார்த்தை ( ஞாயிறு செய்தி )


ஞாயிற்றுக் கிழமைக்கான திரு வசன வாக்கியங்கள்.

சங்கீதம்.31 :1 -15  
ரோமர்.3 :21 
மத்தேயு.7 :21 -29 

 பிரசங்க வாக்கியம் : உபாகமம்.11 :18 -21 , 26 -28  

நன்மை தீமை இந்த இரண்டும் மனித வாழ்வில் நம் கண்களுக்கு முன்பாக இருந்துக் கொண்டே இருக்கிறது. அதில் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்து நம் எதிர்க்கால வாழ்க்கை அமைகிறது. பிள்ளை பிறந்து 3  வயதை எட்டிய உடனே பிள்ளையின் அனுமதியின்றி கட்டாயமாக பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு வருகிறோம். பிள்ளை அழுதாலும், புரண்டாலும், நாம் விடுவதில்லை. காரணம் என்ன அது பிள்ளையின் எதிர் காலத்திற்கு நல்லது. எனவே மூர்க்கமாகவே பிள்ளையை பள்ளிக்கூடத்தில் திணித்துவிட்டு வருகிறோம். பிள்ளை அழுகிறதே என்று விட்டுவிட்டால் எதிர்க்காலத்தில் பிள்ளையே நம்மை கேட்கும் என்னை படிக்க வைக்காத நீங்களெல்லாம் ஒரு மனிதர்களா என்று. எனவே நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மையானவைகளை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.

நம்முடைய தியான பகுதியிலேயும் கடவுள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி கொண்டுவந்த இஸ்ரவேல் மக்களுடைய, எதிர்க்கால வாழ்வு நலமாக அமைய செய்ய வேண்டிய  காரியத்தை மோசேயின்  வழியாக அறிவுருத்திக்கொண்டிருக்கிறார்.

ஆசீர்வாதமான நீண்ட ஆயுளையும், வாழ்வையும் விரும்பாத மனிதனை இவ்வுலகில் நாம் காணவே முடியாது. ஆனால் அதை கண்டடைந்தவர்கள் வெகு சிலரே. அந்த வாழ்வை இஸ்ரவேல் மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள கடவுள் ஒரே ஒரு வழியைத்தான் கூறுகிறார். அந்த வழி கர்த்தரின் வார்த்தைகள். நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் அவர் வார்த்தைகளில் பயணிக்க வேண்டும் என்கிறார். எப்படி பயணிப்பது? அவரே கற்றுத் தருகிறார்... உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். கையில் அடையாளமாக கட்டிக்கொள்ள வேண்டும், கண்களுக்கு நடுவே ஞாபக குறியாக நினைவில் நிறுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும், குடும்பத்தோடு தியானிக்க வேண்டும், வீடு முழுதும் கர்த்தருடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டும்.

26  முதல் 28  வரையுள்ள வசனத்தில் இப்படி செய்தால் ஆசீர்வாதம் செய்யாவிட்டால் சாபம் என்கிறார்..

யோசித்து பார்ப்போம், நாம் கர்த்தருடைய வார்த்தையை இவ்வளவு அக்கறையோடு பின்பற்றிவருகிறோமா? ஒவ்வொன்றாய் பார்ப்போம். 

1 . உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். நமக்கு பிடித்த ஒரு திரைப்பட பாடலை முழிவதுமாக பாடுவோம். நமக்கு பிடித்த அரசியல் தலைவரின் வாழ்வை முழுவதுமாக மனதில் பதிய வைத்திருக்கிறோம். நமக்கு துரோகம் செய்தவர்களின் செயலை அப்படியே மனதில் பதிய வைத்து பழிவாங்க தகுந்த தருணம் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் வேதாகமத்திலிருந்து ஒரே ஒரு அதிகாரத்தை மனப்பாடமாக சரளமாக   சொல்ல முடியுமா நம்மால்? குறைந்த பட்சம் ஒரு வசனமாவது சரளமாக சொல்பவர்கள் எத்தனை பேர்?

2 . பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். பிள்ளை பிறந்த உடனே எந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்று யோசிக்கிறோம். எவ்வளவு செலவானாலும் கடன் வாங்கியோ தன் செல்வங்களை அடமானம் வைத்தோ படிக்க வைக்கிறோம். ஞாயிறு பள்ளிக்கும், திடப்படுத்தல் வகுப்புக்கும் அதே அக்கறையோடு அனுப்பி வைக்கிறோமா? என்றாவது திரு வசனத்தை கற்றுத்தர அக்கறை செலுத்தியிருக்கிறோமா?

3 . வீட்டில் குடும்பத்தோடு தியானிக்க வேண்டும். குடும்ப ஜெபமாவது உண்டா? ஆயிரம் வெட்டி கதைகளை பேசியும், தொலைகாட்சி சீரியல்களை காண்பதிலேயும் நம் குடும்ப வாழ்வை கரைத்து வருகிறோம்.

4 . வீடு முழுதும் கர்த்தருடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டும். இதை உற்சாகமாக செய்கிறோம், ஆனால் வெறும் அலங்காரத்திற்காக.

அன்பானவர்களே இதையெல்லாம் நாம் செய்யாமலே நம் தேவன் நம்மை காத்து வருகிறார். காரணம் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். ஆனால் நாம்?

நம் வாழ்வில் எப்போது  உண்மையான  மேன்மை வந்தது?  எப்போது  கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்வில்  வந்ததோ அன்றிலிருந்துதான்.
மேன்மை நம் வாழ்வில் வந்தது. கர்த்தருடைய  வார்த்தை தந்த  மேன்மையை  உறுதியாக பிடித்துக் கொள்ளுகிறோம்,   கர்த்தருடைய வார்த்தையை????????? யோசிப்போம் செயல்படுவோம்.

பரிசுத்தாவியானவர்தாமே இந்த சிந்தையில் நம்மை காப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, June 25, 2011

பனிவிழும் காலை


அன்பான உடன் விசுவாசிகளே நண்பர்களே ஆசீர்வாத கீதங்களின் இன்னொரு பாடலை பதிவேற்றியுள்ளேன், கேட்டு கண்டு ஆண்டவரை மகிமைபடுத்துங்கள். 

சமாதானத்தின் கடவுள். ( காலை மன்னா )

சங்கீதம்.147 :14 

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்

நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். ஜூன் மாதம் நம் அனைவருக்கும் பிஸி மாதம். கல்வியாண்டு துவங்குவதால் பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிற காலம்.

இந்த மாதத்தில் இயேசு ஆண்டவர் நமக்கு கூறுகிற வாக்குத்தத்தம், எதை குறித்தும் கவலைப்படாதே, உன் எல்லைகளில் கண்டிப்பாக சமாதானம் பெருகும், நீ சகலத்திலும் திருப்தியாவாய், பதட்டம், பயம், தேவைகள், குறித்து நீ எதற்கும் பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன், என்று ஆண்டவர் கூறுகிறார். நம்முடைய எல்லா தேவைகளும் கடவுளுக்கு முன்பாக கொண்டுவரவேண்டும். பிலி:4 :17 , சங்.23 :5  ஆகிய வசனங்களில், சமாதானத்தின் ஆசீர்வாதங்களை தருகிறார். மேலும் சில திரு வசனங்களை காண்போம்.

ஏசாயா.54 :10 
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

கொலோ.3 :15 
 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

ரோமர்.16 :20 
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

யாக்.5 :10 -11  11. இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் ருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
10. என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.


நம்முடைய தந்தையான  கடவுள் மனதுருக்கம் உடையவர். அவர் மிகுந்த பொறுமையுள்ளவர். எனவே நாமும், பாடுகள் துன்பங்கள் வரும்போது, பொறுமையோடு சகித்து, ஆண்டவர் தருகிற ஆசீர்வதங்களைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம்முடைய எல்லைகளை சமாதானத்திலும், தானியத்தாலும் நிறைத்து பாதுகாப்பார். ஆண்டவர் இந்த நாளை ஆசீர்வதித்து தருவாராக ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, June 20, 2011

விலையேறப்பெற்ற இயேசு நாமம்

அன்பான உடன் விசுவாசிகளே, இசைவழி நற்செய்தியாக ஆசீர்வாத கீதங்கள் என்ற ஒரு CD  ஐ வெளியிட்டிருக்கிறேன். இதிலிருந்து ஒரு பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன், கேட்டு, கண்டு ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.


Thursday, June 16, 2011

இயேசு கடவுளா?

அன்பான உடன் விசுவாசிகளே.. கடந்த திங்கட் கிழமை  ஒரு ஈமெயில் தகவல் வந்தது அதில் திரு R .பிரபு என்பவர் ஒரு நல்ல கேள்வியை கேட்டிருக்கிறார் அதற்கு தற்போது பதிலளிக்க விரும்புகிறேன், அவரது கேள்வியை இங்கே அப்படியே ஒட்டியுள்ளேன்.


Hi gilbert,

Praise the lord,
I have visited your web site tonight,
I read the article called Pentecostal day,
In that second paragraph, you asked the question called,

Whose lord Jesus Christ?

You explained not clear?  you used the word called kadavul
Can you give me the example where it’s written kadavul in bible?
Where is in the bible book?

Thanks & regards,
Prabu, R

அன்பு சகோதரர் பிரபு அவர்களே உங்கள் கேள்வி எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது, காரணம் இந்த தளம் மூலம் கடவுளின் நாமம் பரவுவதை கண்டு அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். தற்போது நேரடியாக உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன். நிச்சயமாக வேதாகமத்தில் இயேசு கடவுள் என்று நாம் எதிர்பார்க்கும் விதத்தில்  குறிப்பிடப்படவில்லை. ஆனால் கடவுள் யார் என்று குறிப்பிடுகிறது, அவரை பிதா என்று வேதாகமம் நமக்கு காண்பிக்கிறது. இயேசுவை மேசியா என்று தீர்க்கர்கள் அடையாளம் காட்டினர். இயேசுவோ தன்னை மனுஷ குமாரன் என்று அடையாள படுத்துகிறார். அதே நேரத்தில் சீடர்கள் அவரை தேவ குமாரன் என்றதை அப்படியே ஒப்புக் கொண்டார். மத்தேயு.16 :15 , 16 .  இப்போது அவரை பற்றி மூன்றுவிதமான தகவல் கிடைக்கிறது. 1 . மேசியா, 2 .மனுஷகுமாரன், 3 . தேவகுமாரன். இதில் எது சரி என்றால் இந்த மூன்றும் சரிதான், காரணம், முதலில் உள்ளது கடவுள் முன்னறிவித்தது, இரண்டாவது ஆண்டவரே சொன்னது, மூன்றாவது சீடர்கள் சொல்லி  இயேசுவால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த மூன்றும் உங்கள் கேள்வியை மேலும் உறுதிப்படுத்துகிறது, காரணம் இந்த மூன்றுமே கடவுளுக்கு இணையான வார்த்தைகள் அல்ல. கடவுளுக்கு அடுத்த நிலையில் தான் இயேசுவை காண்பிக்கிறது. ஆனால்.... யோவான்.10 :30  ல் இயேசு தன்னை பற்றி சொல்லுகிற விஷயம் யூதர்களை மூர்க்கமடைய  வைத்து அவரை கல்லெறியுமளவுக்கு கொண்டு போனது. அந்த விஷயம் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதே. இதன் அர்த்தம் என்ன நான் பிதாவுக்கு சமமானவன் என்று அவரே தன்னை வெளிப்படுத்துகிறார்.

இதையும் கடந்து ஆண்டவர் பிலிப்புவுக்கு சொன்ன பதிலில் அடங்கியுள்ளது. அதே யோவான் சுவிசேஷம் 14  ம் அதிகாரம் 8  ம் வசனத்தில் பிலிப்பு கேட்கிற கேள்வி ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றார், அதற்கு 9  ம் வசனத்தில் இயேசு கூறிய பதில் இவ்வளவு காலம் என்னோடிருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னை   கண்டவன் பிதாவை கண்டான்: அப்படியிருக்க பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய் என்று கேட்கிறாரே இதன் அர்த்தம் என்ன? நான்தான் பிதா இது கூடவா உன்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றுதானே கேட்கிறார்?

இதில் ஒரு குழப்பம் உண்டு  அப்போது கூட கடவுள் என்று சொல்லாமல் பிதா என்கிறாரே என்று கேட்கலாம், அன்பான சகோதரரே பிதா என்பது யூதர்கள் கடவுளை குறிக்க பயன்படுத்தும் பொதுவான வார்த்தை. காரணம் எபிரேய  மொழியில் கடவுளின் பெயர் யாவே என்பதாகும் அதை தங்கள் பாவமுள்ள நாவினால் உச்சரிக்க அவர்கள் அஞ்சியதால் கடவுளை ஆண்டவரென்றும் பிதா என்றும் அழைத்தனர்.

இயேசு கடவுள் இல்லை என்றால் அவரால் எப்படி நம்மை இரட்சிக்கவும், காக்கவும் முடியும்? உலகின் பெரும்பானமையான மக்கள் இந்த ரட்சிப்பைதானே இயேசுவில் அனுபவித்து வருகின்றனர்.  

உங்கள் அன்பார்ந்த கேள்விக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை தாருங்கள்.

நன்றியுடன்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

இயேசுவே நம் வீட்டின் தலைவர்

கிறிஸ்துவுக்குள் அன்பான எனதருமை விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட வசனம். மாற்கு.1 :31 

 அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

அன்பானவர்களே, நாம் நம்முடைய ஆண்டவரை ஆராதிக்கிற ஆலயம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம், நம்முடைய ஊரிலேயே உயரமான கோபுரம் கொண்டதாகவும், அழகானதாகவும் இருக்க ஆசைப்படுகிறோம், அதற்காக எவ்வளவு பாடுபட்டேனும் பணத்தை திரட்டி கட்டி முடிக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இப்படி உயரமான, அழகான கட்டிடங்களில் அவர் வாழவே இல்லை. ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு, நரிகளுக்கு குழிகளுண்டு, மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்று தன் நிலையை தானே தெளிவாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அவரை யார் வீட்டிற்கு வரும்படி அழைத்தாலும் உடனே அவர்கள் வீட்டிற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் போயிருக்கிறார். நம்முடைய தியான பகுதியிலும் ஆண்டவர் சீமோனுடைய வீட்டில் பிரவேசித்தார், அப்போது சீமோனின் மாமி சுகவீனமாய் இருந்த செய்தியை அறிகிறார். உடனே அவள் கையை பிடித்து அவளை தூக்கிவிட்டு, அவள் சுகவீனத்தை நீக்கினார். இதன் மூலம் ஒரு பேருண்மையை நாம் புரிந்துக் கொள்ளலாம், அவர் யார் வீட்டிற்கு போகிறாரோ, அந்த வீட்டில் இருக்கும் துன்பத்தை உடனே போக்கும் மனம் கொண்டவராக இருக்கிறார்.

அவர் காப்பர் நகூம் என்ற ஊருக்கு வந்தார், அவ்வூரில் இருந்த  செல்வந்தன் ஒருவனுடைய வீட்டு வேலைக்காரன் சுகவீனமாயிருந்தான். அவன் சிலரை ஆண்டவரிடம் அனுப்பி அவன் சுகமாக வேண்டிக் கொண்டான். ஆண்டவரோ அவன் வீட்டிற்கு போக ஆயத்தமானார், இதை அறிந்த அந்த செல்வந்தன்  தன் வேலைக்காரர்களை அனுப்பி ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு வர வேண்டாம் நீர் வர நான் தகுதியானவனல்ல, ஒரு வார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று வேண்டிக் கொண்டான். ஆண்டவர் அவன் விசுவாசத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, அவனை பாராட்டினார், அதே நேரத்தில் வீட்டிலிருந்த அவன் வேலைக்காரனை சுகமாக்கினார்.


அந்த ஆண்டவர் நம்மை பார்த்து சொல்லுகிற விஷயம் இதோ நான் உங்கள் வீட்டு வாசற்படியில் நிற்கிறேன் என்கிறார். அன்பானவர்களே நம் வீட்டில் அவர் பிரவேசித்தால் நம் அத்துணை பிரச்சினைகளும் நீங்கும், அவரை  வரவேற்போமா? ஆமென்.



கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, June 14, 2011

சந்தோஷம் பொங்குமே !!!!!!

அன்பானவர்களே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்றைய  தியான வசனம், அப்போஸ்தலர்.8 :8 

அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.


இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு ஏறி போன பிறகு, பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட அப்போஸ்தலர்கள் அற்புதமான ஊழியத்தை செய்து மக்கள் மத்தியில் கிறிஸ்துவை வல்லமையாய் அறிவித்தனர். இது யூதர்கள் மத்தியில் கடும் பொறாமையை ஏற்படுத்தியது. எனவே அப்போஸ்தலர்களையும், விசுவாசிகளையும் அச்சுறுத்தும் வண்ணம் சவுல் என்பவனை கொண்டு கடுமையான தண்டனைகளை    கிறிஸ்தவர்களுக்கு விசாரணையே இல்லாமல் அளித்தனர். இதனால் கிறிஸ்தவர்கள்  இந்த துன்பங்களிலிருந்து தப்பிக்க, எருசலேமை விட்டு பல இடங்களுக்கு சிதறிவிட்டனர்.

இப்படி சிதறி போனவர்களில் ஒருவர்தான் பிலிப்பு என்பவர். இவர் திருச்சபையின் மூப்பர்களில் ஒருவராக இருந்தவர். இவர் சமாரியாவில் ஒரு பட்டணத்தில் வந்து. அங்கேயும் கிறிஸ்துவை அறிவித்தார். ஏற்கெனவே அவர் பெயரை சொன்னதால் தான் எருசலேமிலிருந்து விரட்டப்பட்டு இங்கே வந்திருக்கிறார். ஆனாலும் அவரால் ஆண்டவரை அறிவிக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி அவர் அறிவித்ததால் என்ன நடந்தது என்பதைத்தான் இந்த தியான வசனத்தில் காண்கிறோம்.

அவர் அங்கே கிறிஸ்துவை அறிவித்தபோது, அசுத்த ஆவிகள் ஓடின, நோயாளிகள் குணமாக்கப்பட்டார்கள் (வசனம்.7 ).  அதைவிட மேலாக நடந்த மிக முக்கியமான விஷயம் 8  வது வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அது யாதெனில் அந்த பட்டணம் முழுதும் மிகுந்த சந்தோஷம் உண்டானது. அன்பானவர்களே, மெய்யான சந்தோஷம் எங்கே பொங்கி வழியும் தெரியுமா? அவர் வார்த்தைகள் அறிவிக்கப்படுகிற இடத்தில். நீங்கள் இந்த தளம் வழியாக கர்த்தருடைய வார்த்தையை பெற்றுக் கொள்ளுகிற நேரம், நீங்கள் ஆலயத்தில் பிரசங்கம் கேட்கிற நேரம், வீட்டில் ஆண்டவரின் வார்த்தையை வாசிக்கிற நேரம் சந்தோஷம் பொங்கி வழியும் நேரம், கர்த்தருடைய வார்த்தையே மிகுந்த சந்தோஷத்தை தரும்.


எனவே அவர் வார்த்தையை கேட்பதிலும், வாசிப்பதிலும், தியானிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களாய் மெய்யான மகிழ்ச்சியில் பொங்கி வழிந்து, வாழ பரிசுத்தாவியானவர் வழி நடத்தி காப்பாராக ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, June 13, 2011

பெந்தேகோஸ்தே திருநாள்

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள். நேற்று நமது திருச்சபை வரலாற்றில் மிக முக்கியமான நாள். பெந்தேகோஸ்தே திருநாள். இது யூதர்களின் நன்றி செலுத்தும் பண்டிகை, இந்த நாள் நமக்கு ஏன் முக்கியமான நாள் என்றால், இன்றுதான் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகில் அக்கினி மயமாய் இறங்கினார்.

பரிசுத்தாவியானவர் யார்?
நம்முடைய ஆண்டவர் கடைசியாக இவ்வுலகை விட்டு பரலோகத்திற்கு போகும் முன் கூறிய விஷயம், யுக முடிவுபரியந்தம், நான் உங்களோடு இருப்பேன் என்பதே, ஆனால் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார். காரணம் அவர் போனால் தான் பரிசுத்தாவியானவர் வருவார் என்று சொன்னார், அதன் படி அவர் பரத்துக்கு ஏறிய 10  வது நாள்  ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்டார்.  அதாவது அவர் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது ஆவியானவர் இருக்கிறார். அப்படியானால் அவர் யார்? கிறிஸ்து இருக்கும் இடத்தில் அவருக்கு இணையான அதிகாரத்தோடு இருப்பவர். கிறிஸ்து யாருக்கு இணையானவர் பிதாவுக்கு இணையானவர். அப்படியானால் ஆவியானவர் பிதாவுக்கு இணையானவர். குழம்பி விட்டீர்களா. பதில் மிகவும் சுலபம் அவர் கடவுள், இதை  புரிந்துக் கொள்ள இவ்வளவு சொல்ல வேண்டியுள்ளது.

யாருக்கெல்லாம் அவர் சொந்தமானவர்?
யோவேல்.2 :28 -29  ல் ஆவியானவர் யாருக்கெல்லாம் சொந்தமாக போகிறார் என்று குறிப்பிடுகிறார், மாம்சமான யாவர் மேலும்  ஊற்றப்படுவார். உங்கள் குமாரர், குமாரத்திகள், உங்கள் மூப்பர், உங்கள் வாலிபர் ஆவியின் வரங்களை பெறுவர் என்றும், உங்கள் ஊழியர், ஊழியக்காரிகளும் அந்த அனுபவம் பெறுவார்கள் என்று கூறுகிறார். அப்படியானால், அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கிற குழந்தைகள், வாலிபர், முதியோர் என எல்லாருக்கும் சொந்தமாக இருக்கிறார். (1கொரிந்தியர்.12:4 )

பரிசுத்தாவியானவரின் பணி என்ன?
அப்போஸ்தலர்.1 :8  ல் யேசுகிறிஸ்து கூருகிறார், பரிசுத்தாவியானவர் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேம், யூதேயா, சமாரியா, பூமியின் கடைசிபரியந்தம் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். அதன்படி. பரிசுத்தாவியானவரின் பணி என்ன? நம்மை பலப்படுத்தி, வரங்களால் நிறைத்து, அவருக்கு சாட்சிகளாய் வாழ வழிநடத்துவதே அவரது பணியாக இருக்கிறது.

அன்பானவர்களே நீங்கள் இயேசுவை ஆண்டவரென்று நம்புகிறீர்களா? மெய்யான கடவுள் என்று விசுவாசிக்கிறீர்களா? ஞானஸ்நானம் பெற்று ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்களா? நீங்கள் பெலனுள்ளவர்கள், வரங்களால் நிறைந்தவர்கள். வாழ்வின் அத்துணை பிரச்சினைகளையும் வென்று அவருக்கு சாட்சியாய் வாழும் வல்லமை ஆவியானவரால் உங்களுக்குள் இருக்கிறது. அதை உணர்ந்திருக்கிறீர்களா? பிரச்சினை வந்தால் ஐயோ அவ்வளவுதான் என்று மூலையில் முடங்கவேண்டியவர்கள் நாமல்ல.... நாம் பரிசுத்தாவியை பெற்றவர்கள். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, June 12, 2011

வேத வினா விடை.

அன்பானவர்களே வேதவினா  போட்டிக்கான பதில்களை அனுப்ப  வேண்டிய மின்னஞ்சல் முகவரி (ஈமெயில்) jesusblessings65@yahoo.in .

தபாலிலும் அனுப்பலாம். தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி.

Rev .Y . கில்பர்ட் ஆசீர்வாதம்.
1 /343  AB நகர்
செட்டியப்பனூர்  போஸ்ட்.
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்.

1 . கிறிஸ்துவினுடைய தாயாகிய மரியாள் யாருக்கு    நியமிக்கப்பட்டிருந்தாள்?


2 . இம்மானுவேல் என்பதின் அர்த்தம் என்ன?


3 . இயேசு எந்த  ஊரில் பிறந்தார்?


4 . சாத்தான் எத்தனை முறை இயேசுவை சோதித்தான்? 


 5 . கடல் மேல் நடந்த சீடன் யார்?

Friday, June 10, 2011

ராஜ சிங்கம் - ஏசாயா.31 :4


 

அன்பானவர்களே, நாம் ஆறறிவு கொண்ட மனிதர்கள், அனால் பல நேரங்களில், ஐந்தறிவு கொண்ட விலங்கினமான சிங்கத்தோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்வதை பெருமையாக நினைக்கிறோம். நான் சிங்கம் என்று சொல்லும்போது நம் உள்ளத்தில் எவ்வளவு பெருமையாக உணர்கிறோம், காரணம் சிங்கத்தின் தோற்றம், அதன் ஆற்றல், அதன் கம்பீரம், அதன் வீரம், வேட்டையாடும் திறன் அனைத்துமே நம்  உள்ளத்தை கவரக் கூடியவை.

நாம் மட்டுமல்ல கடவுள் கூட தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டு பேசுவதைத்தான் இன்றைக்குரிய தியானப்பகுதியில் நாம் காண்கிறோம். கடவுளை நம்பி விசுவாசத்தோடு வாழ்கிறவர்களை கடவுள் எப்படி பாதுகாப்பார் என்பதை சிங்கத்தை உதாரணமாக கொண்டு கடவுள் விளக்குகிறார். அதாவது அக்காலங்களில், மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளை காடுகளில் மேய்க்கும்போது, கொடிய விலங்குகள், எப்போது வேண்டுமானாலும் வந்து ஆடுகளில் ஒன்றை கவ்விக்கொண்டு ஓடிவிடும். சிங்கம் வந்து கவ்விக்கொண்டு ஓடினால் என்ன நடக்கும் என்பதைதான் இந்த வசனத்தில் கடவுள் விளக்குகிறார்.

சிங்கம் கவ்விக்கொண்டிருக்கும் போது உறுமி, கத்துகிற மேய்ப்பர்களின் இரைச்சலை கண்டு கலங்காமல், அவர்கள் ஆயுதங்களுக்கு பணியாமல் துணிச்சலாய் நிற்குமாம். அதைப்போல கர்த்தர் இஸ்ரவேலை காக்க இறங்குவார் என்று கடவுளே ஏசாயா தீர்க்கரின் வழியாக  கூறுகிறார்.

ஆம் பிரியமானவர்களே நம் கடவுள் நம்மை பாதுகாக்க நமக்காக இறங்குகிறவர். சிங்கத்தை போல இறங்குவார். நமக்கும், நம் பாதுகாப்புக்கும், நம் வாழ்வுக்கும் தடையாக இருக்கிற சக்திகள் எவ்வளவு கொடூரமாய் நம்மை எதிர்த்தாலும், அசராமல் நிற்கும் சிங்கத்தை போல நின்று நம்மை காத்திடுவார். அதனால் தானே நம் ஆண்டவரை நாம் யூத ராஜ சிங்கம் என்று அழைக்கிறோம்.

தைரியமாய், விசுவாசத்தோடு உலகில் வாழ்வோம், கர்த்தர் நம்மை காத்திடுவார். ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, June 9, 2011

சிறுவர் ஊழியத்தை தாங்குங்கள்.


அன்பான உடன் விசுவாசிகளே, நமது இணைய தளம் ஊழியங்கள் வாயிலாக சிறுவர் ஊழியத்தை துவங்கி வெகு சிறப்பாக நடத்தி வருகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் ஆவிக்குரிய சத்திய வார்த்தைகளை பிள்ளைகளுக்கு, கதைகள், பாடல்கள், நடனங்கள், சுவாரஸ்யமான  நாடகங்கள் வாயிலாக அறிவிக்கிறோம். அதே போல நிகழ்ச்சி முடிந்த பிறகு பிள்ளைகளை ஊக்கப்படுத்தவும், பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்திலும், ஒரு நீள நோட்டு, ஒரு பேனா, ஒரு பென்சில்,   போன்றவையும், நிகழ்சிகளின் இடையே பிள்ளைகள் சோர்வடையாமல் இருக்க பிஸ்கட் மற்றும் சாக்கலேட் போன்றவையும், அவர்கள் ஆரோக்கியத்தை  காக்க ஒரு மருந்தக பெட்டியும் வழங்கி வருகிறோம். இவைகள் எல்லாம் வழங்க ஒரு பிள்ளைக்கு சராசரியாக 50௦ ரூபாய் தேவைப்படுகிறது.


உதவ விருப்பமுள்ளவர்கள் உங்கள் பொருத்தனையின் அடிப்படையில்
எத்தனை பிள்ளைகளையும் தாங்கலாம். ஜெபத்தினாலும், காணிக்கைகளாலும் இந்த ஊழியத்தை தாங்குங்கள்.

Address.

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
1/343  ஆசீர்வாத இல்லம்     AB நகர்
செட்டியப்பநூர் வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்.
635751

Rev. Gilbert Asirvatham 
1/343 BLESSING HOUSE
AB Nagar  
Chettiyappanur.
Vaniyambaadi.
Vellore dt.
635751


email : jesusblessings65@yahoo.in
Mobile: 09894456269



Wednesday, June 8, 2011

மனக்கவலைக்கு மருந்து

 அன்பான எனதருமை இணையதள வாசகர்களே, நண்பர்களே, உங்களுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். இந்த காலை 42  ம் சங்கீதம்.5  வது வசனத்தை தியானிப்போம்.

என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கி காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்


சங்கீதகாரன் தனக்குள் இருக்கிற வேதனைகளை இறைவனிடம் கொட்டி தீர்க்கிற சங்கீதம்தான் 42  ம் சங்கீதம். அவர் இரண்டு பிரச்சினைகளை இறைவனிடம் முறையிடுகிறார். ஒன்று உன் கடவுள் எங்கே என்று மற்றவர்கள் அவரிடம் கேட்கிறார்கள் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு கண்ணீரே இரவும் பகலும் உணவாய் இருக்கிறது. ஆனால் அது அவருக்கு வேதனையாக தெரியவில்லை....
உன் இறைவன் எங்கே என்று அடுத்தவர்கள் சர்வவல்ல கடவுளை அவமான படுத்துவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன்னை நிந்திப்பதை கூட பொறுத்துக் கொள்ளுகிறார், தன் கடவுளை நிந்திப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாவது அவர் உள்ளத்திலிருக்கிற பெரிய வேதனை, 4  வது வசனத்தில் நான் தேவாலயத்திற்கு ஜனங்களோடு பொய் வருவேன், ஆனால் அது இப்போது முடியவில்லை என்று  வேதனையில் புலம்புகிறார். தேவாலயத்திற்கு போக முடியாதது அவருக்கு பெருத்த வேதனையை தருகிறது.


ஏன் அவரால் ஆலயத்திற்கு போக முடியாத நிலை ஏற்பட்டது என்ற தெளிவான காரணம்  தரப்படவில்லை.. வியாதியில்  இருந்திருக்கலாம்!.. உயிருக்கு பயந்து காடுகளிலும் வனாந்திரத்திலும் ஓடி ஒளிந்துக் கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம்!... ஆனால் என்ன உண்மையான காரணம் என்பதை சங்கீதக்காரன் இந்த சங்கீதத்தில் சொல்லவில்லை.. காரணம் அவருக்கு இருக்கிற சரீர வேதனைகளும், கவலைகளும்  அவருக்கு பெரிதாக தெரியவில்லை, மாறாக தன் கடவுளை அடுத்தவர்கள் நிந்திப்பதும், தன் கடவுளை தேவாலயத்தில் தரிசிக்க இயலாமல் இருப்பதும் அவருக்குள் பெரிய வேதனையை தருகிறது.

அதனால் அவர் உள்ளம் சோர்ந்துப் போகிறது.. உடல் சோர்வடைந்தால் கொஞ்சம் ஓய்வெடுத்தால் போதும்.. உள்ளம் சோர்ந்துவிட்டால்???.. மனக்கவலையை போக்கும் மருந்து இவ்வுலகில் இல்லையே.. எனவே இளைப்பாறுதல் தரும்  தேவனையே நோக்கி பார்க்க தன் உள்ளத்தை திருப்புகிறார். அவரயே நோக்கி காத்திரு என்று தன் உள்ளத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறார். இறுதியான வாசகத்தில் தன் விசுவாசத்தின் முழு பலத்தை நிரூபிக்கிறார்.


அவர் தரும்  இரட்சிப்பின் நிமித்தம் இன்னும் அவரை துதிப்பேன் என்று தைரியமாய் கூறுகிறார்.

அன்பானவர்களே உங்கள் ஆத்துமா சோர்ந்து போகிறதா? மனக்கவலை சூழ்ந்துள்ளதா? எப்படி நீங்கும் என்ற கவலை வாட்டி வதைக்கிறதா? வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்ன ஆண்டவரிடத்தில் சங்கீதக்காரனின் விசுவாசத்தோடு வாருங்கள், உங்கள் கவலையை  துதியாய் மாறிடுவார். ஆமென்...





கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, June 7, 2011

கண்டு மகிழுங்கள்

சிறுவர் நிகழ்ச்சி புகைப்பட தொகுப்பை வீடியோவில் கண்டு மகிழுங்கள்

Monday, June 6, 2011

சிறுவர் கொண்டாட்டம்

அன்பானவர்களே நாம் ஜெபித்தபடி கடவுள் நமது சிறுவர் ஊழியத்தை மிகவும், சிறப்பாய் ஆசீர்வதித்தார். வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் இனிமையாய் துவங்கியது. இந்திய சுவிசேஷ லுத்தரன்  சபையின் முன்னாள் பெருந்தலைவர்  அருள்திரு ராஜகம்பீரம் அவர்கள்  
ஜெபித்து ஆசீர்வதித்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதன் புகைப்பட தொகுப்பை கண்டு இறைவனை மகிமை படுத்துங்கள்.

முதல் நிகழ்ச்சி சிறப்பு பாடல் ஜான்சன் மற்றும் குழுவினர்

விடுதி பிள்ளைகள்

சிறப்பு விருந்தினர்கள்


சகோதரி ஜேனட் அவர்கள் கற்றுத்தரும் பாடல்

நிகழ்ச்சியை மெய் மறந்து ரசிக்கும் விருந்தினர்கள்

நாடகம் இயேசு வருகிறார் . ராஜன் மற்றும் குழுவினர்.

செல்வந்தனும் பிச்சைக்காரனும்

செல்வந்தனும் வேலைக்காரனும்

நடனப் பாடல் நானும் குழுவினரும்.


பிள்ளைகளின் உற்சாகம்


சிறுகதை செல்வர் திரு ஏசையன் வழங்கும் சிறுகதை


சாத்தானிடம் சிக்காதே நாடகம். சகோ.ரூபன் மற்றும் குழுவினர்.



நிகழ்ச்சியை குறித்து தைரியமாய் வாழ்த்தி கருத்து சொன்ன குழந்தை

முடிவு ஜெபம் ஆசீர்வாதம்

பரிசு வழங்கல்

தலைமை ஆசிரியர் சா.பிச்சை அவர்கள்

ஆசிரியர் கிருபானந்தராஜ் அவர்கள்


பிள்ளைகளுக்கு பரிமாறப்பட்ட உணவு


கிறிஸ்துவின்  தளபதிகள் (குழுவினர்)



இந்த நிகழ்ச்சி எனக்கு பெரிய மன நிறைவை கொடுத்தது. இது என்னால் மட்டும் சாத்தியமானதல்ல, அனேக உள்ளங்கள் இதற்கு உதவினார்கள். அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள், திரு.பாரத் அவர்கள், அருள்திரு.கிளாட்சன் அவர்கள், அருள்திரு.மில்டன் அவர்கள், திரு.சா.பிச்சை அவர்கள், சகோதரி.ஜேனட் அவர்கள், போன்றோர் பொருளாதார ரீதியாக முக மலர்ச்சியாய் உதவி செய்தார்கள். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நாளை காலை 10  மணியளவில் வாணியம்பாடியில் உள்ள CMS  விடுதியில் சிறுவர் கொண்டாட்டம் நடைபெறுகிறது. எனவே இதன் தேவைகள் சந்திக்கப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, June 5, 2011

பிரிவும் சுகமானதே....

அன்பான என் உள்ளம் நிறைந்த இந்த தளத்தின் வாசகர்களே. திருமணம் என்றாலே, நமது வீடுகளில் திருவிழாதான். ஒரு வீட்டில் திருமண பேச்சுகள் துவங்கியதும், வீடே கலகலப்பாகிவிடும், பெண்பார்ப்பது, வீடு பார்ப்பது, கை நனைப்பது, நிச்சயதார்த்தம் என  தினந்தோறும் ஒரு விழா நடக்கும், அதுவும் பெண் வீட்டில் இன்னும் சந்தோஷம் தாண்டவமாடும், எவ்வளவோ செலவுகள் பெண்ணின் தந்தையின் பணத்தை கரைத்துக் கொண்டிருக்கும், பத்திரிகை அடிப்பது, புடவை எடுப்பது, மண்டபம் பார்ப்பது, பத்திரிக்கைகளை கொடுப்பது என வேலைகள் தலைக்கு மேல் நின்று ஓய்வேடுக்கவிடாமல் துரத்தும்.

ஒருவழியாக திருமணம் முடிந்து பெண்ணை கணவனோடு அனுப்புகிற நேரத்தில் பெண் வீடே சோகமாகிவிடும், தாயின் கண்களும், மணமகளின் கண்களும், குளமாகிவிடும். தந்தை வருகிற கண்ணீரை மறைத்து அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார். ஏன் இந்த கண்ணீர் ஏன் இந்த சோகம் இதற்காகத்தானே இத்தனை நாள் உழைத்தார்கள், இந்த நாளை காணத்தானே அத்தனை பாரத்தையும் சுமந்தார்கள், உண்மைதான் ஆனால் இருபது வருடங்கள் வீட்டில் பிறந்து தவழ்ந்து வளர்ந்து, வாழ்ந்த இனிமையான  மகளை பிரிவது என்பது எவ்வளவு கொடுமை. திருமணமும் மகளுக்கு கிடைத்திருக்கிற வாழ்வும் சந்தோஷம் தான் ஆனால் இந்த பிரிவு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், இது சரி என்று புத்திக்கு எட்டினாலும், மனதுக்கு எட்டுவதில்லை காரணம் நேசிப்பவர்களை பிரிவதை போல ஒரு கொடுமை இந்த உலகத்தில் இல்லை.

இதே போன்றதொரு நெகிழ்ச்சியான அனுபவம்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை விட்டு பரலோகத்திற்கு போன சம்பவம். காரணம் இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த கால கட்டத்தில், சீடர்களோடும், தான் சந்தித்த மனிதர்களோடும், தாயின் அன்பை பொழிந்தவர். அவர்களின் அத்துணை தேவைகளையும் நிறைவேற்றி, எப்படி வாழ வேண்டும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தந்து ஒரு நல்ல தகப்பனாக வழி நடத்தினவர். உயிர்த்தெழுந்த பிறகு கூட அவர்களை கண்டு அவர்களுக்கு தைரியம் சொல்லி இந்த உலகில் மாற்றம் கொண்டுவர அவர்களை தயார் படுத்தினவர். ஆனால் என்ன செய்வது நாற்பது நாள் முடிந்துவிட்டது, போய்தான் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.


சீடர்களெல்லாம் ஏக்கத்தோடு வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவர் மேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பரலோகத்தை சேர்ந்தே விட்டார். ஏன் போக வேண்டும் ஆண்டவர்? இன்னும் இருந்து இந்த உலகில் மாற்றங்களை கொண்டுவரலாமே, தன்னை நம்பினவர்களை இப்படியா நிர்கதியாக விட்டுவிட்டு போவது? அனால் அவர் போனது கூட தன்னை நம்பியவர்களுக்காகத்தான்.

ஆம் அவர் பரலோகத்திருக்கு போனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்
இருக்கிறது. ஒன்று யோவான் சுவிசேஷம், 14  ம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களை வாசித்து பாருங்கள், அவர் போனது பரலோகத்தில் நமக்கென்று ஒரு இடத்தை ஆயத்தம் செய்ய. நாம் இந்த உலக வாழ்வை விட்டு அவர் ராஜ்ஜியத்தில் பங்கு பெற இடத்தை ஆயத்தம் செய்ய போயிருக்கிறார். இரண்டாவது முக்கியமான காரணம் அதே அதிகாரம் 16  வது வசனத்தில் உள்ளது, அவர் போனால் தான் பரிசுத்தாவியானவரை அனுப்புவார். அவர்தான் நம்மை பெலப்படுத்துகிறவர். இவ்வுலகின் அத்துணை தீமைகளிலும், துன்பங்களிலும், வாழ பலன் தருபவர்.

அதை தான் அப்போஸ்தல நடபடிகள், முதல் அதிகாரம் 8  வது வசனத்தில் ஆண்டவர் சொல்லுகிறார், பரிசுத்தாவியானவர் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள். அன்பானவர்களே அவர் வந்தது நமக்காக வாழ்ந்தது நமக்காக இப்போது அவர் போயிருப்பது நமக்காக. அவர் திரும்ப வரப்போகிறார் அதுவும் நமக்காக. இவ்வளவும்  இதற்கு மேலும் நாம் நினையாத வகையில் நமக்கு மேனமைகளையும் தந்து வருகிறார்.

அதே நேரத்தில் நம்மிடத்தில் அவர் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் உண்டு நாம் அவருக்கு சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்பதே. நம்முடைய வீட்டில், ஊரில், நாம் சந்திக்கும் மனிதர்களோடு அவரை சாட்சியிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர்தானே நல்லவர் அவரை மற்றவர்களுக்கு சொல்லலாமே, அவர்களும் இந்த மேன்மையை அனுபவிக்க உதவலாமே. தொடர்ந்து சாட்சியிட்டு அவரது மெய் சாட்சிகளாய் வாழ பரிசுத்தாவியானவர் நமக்கு பலன் தருவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, June 4, 2011

ஜெபத்தை கர்த்தர் கேட்டருளினார்



கிறிஸ்துவுக்குள் இனிமையாய் நேசிக்கப்பட்ட எனது அன்பிற்குரிய உடன் விசுவாசிகளே, என் நெஞ்சில் நிறைந்த என் வாசக நண்பர்களே. உங்களுக்கு இந்த காலை வேளையில் கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற  நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமது ஜெபத்தை கர்த்தர் கேட்டருளினார். இன்று நாம் எதிர்பார்த்தப்படி சிறுவர் ஊழியத்தை துவங்க  தேவன் எல்லா கதவுகளையும் விசாலமாய் திறந்துவிட்டார். இன்று காலை 10  மணிக்கு கருணை இல்லம் என்ற அநாதை மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் நமது முதல் சிறுவர் ஊழியத்தை துவங்கபோகிறோம்.


இந்த ஊழியம் சிறப்பாக நடக்கவும், தொடர்ந்து தடையின்றி இந்தியா முழுவதும் வளரவும். இதன் தேவைகள் சந்திக்கப்படவும், சிறுவர்கள் மத்தியில் இதன் மூலமாய் பெரிய எழுப்புதல் உண்டாகவும், தேவ பக்தியுள்ள தலைமுறை உருவாகி தேசத்தின் பிரச்சனைகள் தீரவும் தொடர்ந்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.





கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, June 2, 2011

நடத்திக் காட்டுவோம்.




அன்பான எனதருமை உடன் விசுவாசிகளே, கடந்த 30  ம் தேதி ஜெபியுங்கள் என்ற தலைப்பில், இந்த இணையதள ஊழியம் வாயிலாக, சிறுவர் ஊழியம் துவங்க இருப்பதாக தெரிவித்து உங்கள் ஜெபங்களையும் ஆலோசனைகளையும் கேட்டிருந்தேன். இந்த ஊழியத்தை துவங்க முடியுமா? இதை
தொடர்ந்து நடத்த வாய்ப்பு கிடைக்குமா? என்னால் இது சாத்தியம்தானா?  இவையெல்லாம்  எப்படி நடக்கும் என்று பல கேள்விகள் என்னுள் நேற்றுவரை இருந்தது. நேற்று நான் இந்த ஊழியத்தில் பயன்படுத்த போகிற சகோதரர்களை அழைத்து பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தேன் அப்போதுகூட மனதளவில் நான் பயந்துக் கொண்டுதானிருந்தேன்.

சகோதரர்கள் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வந்து ஒரு ஜெபக் கூட்டத்திற்கு ஆயத்தமானேன், அதற்காக பிரசங்கம் செய்ய திருவசனங்களை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது  லூக்கா1:37  ல் உள்ள வசனம் என் குழப்பத்திற்கு மிக தெளிவான பதிலை தந்தது. அந்த வசனம், கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதே. மரியாள், தான் கற்பவதியாகப் போகிற செய்தியை கேட்டு, இது எப்படியாகும் என்று கேட்டபோது தேவதூதன் சொன்ன பதில்தான் இது.


அன்பானவர்களே எவ்வளவு பெரிய உண்மை, நம்மால் உண்மையில் இந்த உலகில் ஒன்றையும் செய்ய முடியாது, ஆனால் நம்மைக் கொண்டு இவ்வுலகில் எல்லாவற்றையும் நடத்திக் காட்டுகிற கிறிஸ்து நம்மோடிருக்கிறார், அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். என் குழப்பம் தீர்ந்தது இதோ நான் ஆயத்தமாகிவிட்டேன். வரும் சனிக்கிழமை வாணியம்பாடியில் உள்ள கருணை இல்லத்தில் நமது  ஊழியத்தின் சார்பாக
சிறுவர் கொண்டாட்டம் என்ற சிறுவர்களுக்கான ஆவிக்குரிய
நிகழ்ச்சியை துவங்க
போகிறோம். உங்கள் வாழ்விலேயும் சந்தேகத்தோடு இருக்காதீர் காரணம் நம்மை நடத்துபவர் எல்லாவற்றையும் நம்மைக் கொண்டு  நடத்திக் காட்டுவார். தொடர்ந்து விசுவாச பயணத்தில் துணிவோடு நடப்போம். ஜெபித்து ஆலோசனைகளால் இந்த ஊழியத்தை தாங்குங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews