WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 31, 2011

காலை மன்னா (வீழ்ந்துப்போன யூதாஸ்)

வீழ்ந்துப் போன யூதாஸ்.

தியான பகுதி மத்தேயு.26 :46 -50 

46. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

47. அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

48. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49. உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

50. இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள் 



சிலுவையின் நாயகனாகிய பாடுபடும் தாசன் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம். இயேசுவின் சிலுவைப் பாதையில், உதவியோரும் உண்டு, துரோகம் செய்தவர்களும் உண்டு.

இங்கு இயேசுவின் உடன் ஊழியனாகிய யூதாஸ், உடன் உண்டு, உறங்கி, ஒன்றாக வாழ்ந்து இறுதியில் காட்டிக் கொடுத்தான்.

*யூதாஸ் கரியோத்: கிரேக்க வார்த்தை

*யூதேயாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே அப்போஸ்தலன்.

*செலோத்தியன்: தீவிரவாதி .

நாடு சுதந்திரம் அடைய வேண்டும், என்ற ஒரு தாகம், அவனுக்கு இருந்தது.

# ரோம பேரரசை எதிர்த்தவன்:-

லூக்கா.22 :33 , யோவான்.14 :22  ஆகிய வசனங்கள் யூதாசை விமர்சிக்கிறது.

1 . பொய்யன்.

2 . வாள் வைத்திருப்பவன்.

யூதாஸ் இயேசுவால் நம்பி அழைக்கப் பட்டவர்:

சுவிசேஷ பனி செய்வதற்கு இயேசு யூதாசை கூப்பிட்டார். இயேசு ஆண்டவர், நம்மையும் உண்மையுள்ளவர்கள் என்று அழைத்துள்ளார். நாம் இன்று எப்படி நடந்துக்கொள்கிறோம்.

போலித்தனம் பொதிந்த யூதாஸ்:

கவரிங் நகை. தங்கத்தின் போலி. அதேபோல யூதாஸ் ஒரு போலி சீடன். நாமும் போலியாக உள்ளோமா? இரட்டை வாழ்வு வாஹ்கிரோமா?

யோவான்.௧௨:௬ ல் யூதாஸ் திருடன் என்று யோவான் தெளிவாக கூறுகிறார்.

ஆனால் காரினை வள்ளலாகிய இயேசு அவரை 'சிநேகிதனே"  என்று அழைக்கிறார்.
லூக்கா.6 :16  ல் துரோகி என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் இயேசுவோ அவனையும் நம்பித்தான் கூப்பிட்டார்.

இன்று பலர் உண்மையான முகத்தை மறைத்துக்கொண்டு, முகமூடியோடு வாழ்ந்து வருவதை காண முடியும். இதேபோல அன்றைய யூத சமூகத்தின் பெரும் புள்ளிகளும், மதத் தலைவர்களும் போலித்தனமான முக மூடிகளை அணிந்துக்கொண்டு, வாழ்ந்தனர். ஆனால் இயேசுவின் விஷயத்தில்  அவர்களின் சுய ரூபம் வெளிப்பட்டது. உண்மைக்கு சாட்சிக் கொடுத்த இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒத்தக் கருத்துடன் செயல் பட்டனர்.

பண ஆசைக்கொண்ட யூதாசை இதற்கு பயன் படுத்திக்கொண்டனர்.

 1தீமோத்தேயு.6;10 ௦  பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர்.
சிலர் அந்த ஆசையால் விசுவாசத்தை விட்டு மோசம் பொய் அனேக வேதனைகளால் உருவக் குத்திக்கொள்ளுகிறார்கள்.

முத்தத்தால் காட்டிக்கொடுத்தான்:

அன்பின் அடையாளம் முத்தம் அதைக்கொண்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இன்று நாமும் இயேசுவோடு கிறிஸ்தவர்களாக இருந்தும், அவரை காட்டிக் கொடுத்துக்கொண்டும், சிலுவையில் அறைந்துக்கொண்டும் இருக்கிறோம்.

வருந்தினான், மனந்திருந்தவில்லை:

வருத்தப்பட்டான், மனந்திருந்தவில்லை, இயேசுவிடம் வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றவில்லை. தண்டனையை தானே முடிவு செய்துக்கொண்டான், இயேசுவோ அவனையும் சிலுவையில் மன்னிக்கவே சித்தங்கொண்டார்.

சிலுவை பாதையில் நாம் யார்?



கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, March 30, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன், கடந்த மூன்று தினங்களாக   எனது இணையதள இணைப்பு செயல் படவில்லை, கர்த்தருடைய  கிருபையில் நேற்று முதல் சரியாக செயல் படுகிறது, எனவே இந்த காலை வேளையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன்.



இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட திரு வசனம். சங்கீதன்.10 :1

 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்


நம் வாழ்க்கை கேள்விகள் நிறைந்தது, என்? எப்படி? எது? யார்? இதுப்போன்ற   அனேக கேள்விகளை தினந்தோறும் கேட்கிறோம். கேள்விகள் இல்லாமல் தெளிவுகள் கிடைக்காது. எனவே கேள்விகள் என்பது ஒரு வகையில் நல்லதே. பள்ளிக் கூடத்தில் கேள்வி கேட்கிற மாணவர்களின் ஆர்வத்தை ஆசிரியர்கள் பாராட்டுவதற்கு காரணம் அதுதான்.

அதே நேரத்தில் கேள்வி கேட்பதற்கு வரம்புகள் இருக்கிறது, தேவையற்ற, அறிவீனமான் கேள்விகளை யாருமே விரும்ப மாட்டார்கள், இடம் பொருள் ஏவல் அறிந்து தான் கேள்விகளை கேட்க வேண்டும்,

நம்முடைய தியான பகுதிக் கூட ஒரு கேள்விதான்.சங்கீதத்தை எழுதிய ஆசிரியர் கடவுளை நோக்கி இரண்டு கேள்விகள் கேட்கிறார்.

1 . கர்த்தாவே என் தூரத்தில் நிற்கிறீர்?
2 . ஆபத்து நேரிடும் சமையங்களில் என் மறைந்திருக்கிறீர்?

இந்த இரண்டு கேள்விகளுமே, நம் வாழ்விலும் ஒரு முறையாவது கடவுளை நோக்கி கேட்டிருப்போம், அப்படியானால் கடவுள் தூரத்தில் நிற்பதும், ஆபத்து நேரத்தில் மறைந்துக் கொள்வதும் உண்மைதானா?

சகிக்க  முடியாத துன்பங்களும் தேவையற்ற பிரச்சனைகளும், அனாவசியமான எதிர்ப்புகளும் எதிரிகளின் சூழ்சிகளும் நம்மை சூழ்ந்துக் கொள்ளும்போதெல்லாம் இந்த கேள்வியை கடவுளிடம் கேட்கிறோம்.

ஏன் இயேசுகிறிஸ்துவே கூட சிலுவையின் மரணப் போராட்டத்தில் கடவுளை நோக்கி அபயமிட்டது இது தானே? என் கடவுளே என் கடவுளே என் என்னை  கை விட்டீர் என்று கதறினாரே. அப்படியானால் கடவுள் தன் சொந்த குமாரனையே கை விட்டவர் நம்மை கைவிடுவது அவருக்கு சாதாரணம் என்றெல்லாம் கூட நமக்கு தோன்றுகிறது.

நம் ஆண்டவருக்கே இந்த நிலை என்றால் நமக்கு?

ஒரே ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும் ஆண்டவர் இந்த உலகத்தில் கை விட்டது ஒரே ஒருவரை தான், அந்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டும் தான், அவரைக்கூட ஏன் கை விட்டார் என்றால், அவரை கை விட்டால் தான், அவர் மரித்தால் தான், அவரது ரத்தம் மண்ணில் சிந்தப்பட்டால் தான் நாம் காப்பாற்றபடுவோம் , நம் ஜீவன் காக்கப்படும்,



அப்படியானால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கை விட்டத்தின் நோக்கம் நம்மை காக்க, நம்மை அரவணைக்க, நம்மை இவ்வுலகில் எல்லா எதிர்ப்புகளிலிருந்தும் காப்பாற்ற, அப்படியானால் அவர் எப்படி தூர இருப்பார்? நமக்கு மறைந்துக் கொள்வார், தன சிநேகிதனுக்கு துன்பம் வந்தால் தூர ஓடுவதும் மறைந்துக்கொள்வதும் மனித சுபாவமே தவிர நம் இறைவனின் குணமல்ல.

இந்த கேள்விகள் எல்லாம் நம் துன்பத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் கதறுவதே தவிர சத்தியமல்ல. இதே சங்கீதத்தின் 17  வது வசனத்தில் சங்கீதக்காரன் தெளிவாக கூறுகிறார், வேண்டுதலை கேட்டிருக்கிறீர், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர் என்று.

அப்படியானால் அவர் தூர இருப்பவரல்ல நம் இருதயத்தின் பக்கத்திலிருந்து நம்மை பெலப்படுத்துபவர். நம்மை காக்க தன் சொந்தக்  குமாரனையே கை விட்டவர் நம்மோடிருக்கிறார்.

சமாதானமாய் இந்நாளை துவங்குவோம் அவர் நம் இதயத்தின் பக்கம் நிற்கிறார் நம்மை காக்க. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, March 26, 2011

அன்பான இறைவன் (மாதர் பகுதி)

இந்த புதிய நாளிலே, மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தோழி! அன்பான இறைவன் அழகான இந்த உலகத்தில் நாம் பார்த்து இரசிக்கும்படியாய், அறிய பலக்  காரியங்களை வைத்திருக்கின்றார்.

கவலை என்னும்  கண்ணாடியை அணிந்துக் கொண்டு பார்ப்பதினால், இந்த அழகெலாம் நம் பார்வைக்கும் மறைந்துவிடுகின்றன. பொழுது புலர்ந்து வரும் அழகான ஒளிக்கற்றை, துவங்கி அனைத்தையுமே அவர் அற்புதமாகவும், ஆச்சரியமாகவும் அமைத்துள்ளார்.



அவரது இந்த அழகிய உலகில் , அதாவது நமக்காக அவர் பார்த்துப்பார்த்து உருவாக்கின இந்த உலகில், நம்மையும் அழகான உயிர்த்துளியாய் உலாவும்படி செய்திருக்கிறார்.

அநேக வேளைகளிலே, அழகாக ஆசீர்வாதமாக படைக்கப்பட்டிருக்கின்ற நாம், அவரது படைப்பாகிய இந்த உலகை எவ்வளவு மாசுபடுத்தி வைத்திருக்கிறோமோ, அதைப்போல, கோபம், எரிச்சல், பயம், திகைப்பு, அவிசுவாசம் போன்ற பல காரியங்களால் நம்மை நாமே கெடுத்துக்   கொள்ளுகிறோம்.

தோழி சங்கீதக்காரன் தாவீது சங்கீதம் 8 :9 ல்  "எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியெங்கும்
 எவ்வளவு மேன்மையானது"- என்று வியந்துள்ளார். அநேக சங்கீதங்களில், சங்கீதம் முழுமையிலும், கர்த்தரின் செயல்களைக்குறித்து வியந்து போற்றுகின்றான்.

அன்புத்  தோழி ஆண்டவர் அனைத்தையும் அழகாகவே படைத்தார், அனைத்தையும் நமக்காகவே படைத்தார், அது நல்லதென்றும் கண்டார். ஆனால் நாம்தான் அநேக வேளைகளில்," நம்மை ஏன்தான் படைத்தாரோ, என்னால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை, என்ற  எதிர்மறையான   எண்ணத்தில், ஏமாற்றத்துடன் வாழ்கின்றோம்.

தோழி! ஆண்டவர் அனைத்தையும் நேர்த்தியாய் செய்கிறவர், நம்மையும் ஒரு நோக்கத்துடனே படைத்திருக்கின்றார், அவர் நம்மை உருவாக்கினத்தின் நோக்கங்கள், ஒவ்வொரு நாளும் அழகாய் நிறைவேறுவதை இரசனையுடன் கவனித்திருப்போம். இரக்கமுள்ள இறைவன், கிருபையாய் நமக்கு தந்திருக்கும் இந்த இகபர வாழ்க்கை மிகவும் அழகானதே, அற்புதமானதே.


வாழ்வு தந்த இறைவனை நோக்குவோம் தோழி! வாழ்க்கையை இரசிப்போம். இறைவன் நம்மை அழகானவர்களாய், அற்புதமானவர்களாய், ஆசீர்வாதமானவர்களாய், இறைமகன் இயேசுவின் அன்பை நம்மில் பிரதிபலிப்பவர்களாக வாழும்படியாய் அன்புடன் அழைக்கின்றார்.



ஒவ்வொரு நாளும் முடியும்போது இறைவனிடம் நாம் சேர ஒரு படிக்கட்டை ஏறி முடிக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தின் வழிப்பிரயானத்தில், காணும் அனைத்தையும் இரசனையுடன் நோக்குவோம். வாழ்வின் வழியில் இறைவன் நமக்கென வைத்திருக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும் மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்வோம். வாழ்க்கைப்பயணம் வலுமிக்கதாகும். வலுவிழந்த நேரங்களில் அவரை முழுமையாய் பற்றிக்கொள்வோம். நம்மையே அவரிடம் முழுமையாய் அர்ப்பணிப்போம், அவரே நம்மை ஆசீர்வாதமாய் நடத்தி செல்வார். மீண்டும் சந்திக்கிறேன் தோழி.

அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.

Wednesday, March 23, 2011

பழம்பெரும் பாறை

தியானப் பகுதி ஏசாயா.26 :4 

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள், கர்த்தராகிய யேகோவா நித்தியா கன்மலையாயிருக்கிறார்.


பாறைகள் அதிக காலங்கள் இருந்து வருகிறது, ஆனாலும் அறிவியல் வல்லுனர்கள் கூறும்போது, பூமியதிர்ச்சி, மழை போன்றவைகள் ஏற்பட்டால், பாறை உடைந்து, மணலாக மாறிவிடுகிறது என்கின்றனர்.

பொதுவாக பாறை ஒரு வலிமையின் சின்னமாக உலக வரலாற்றில் விளங்கி வருகிறது. வேதத்தில் மலை பாறைகள் தான் பாதுகாப்பின் சின்னமாக உள்ளது. (சங்கீதம்.125 )
இஸ்ரவேலர்கள், அசிரியர்களை  வெற்றிக்கொண்ட பொது, கர்த்தரை ஏசாயா புகழ்ந்து பாடுகிறார், கடவுள் தான் வெற்றிக்கு காரணம், அவர் நம்புகிறவர்களை காப்பாற்றுகிறவர், அவர் கன்மலை, நித்திய கண்மலையாய் இருக்கிறார்.

ஜப்பானை வாரி சுருட்டிய சுனாமி போல பெரும்  சுனாமி வந்தாலும், கடவுள் நம்மை, நித்திய கண்மலையாய் இருந்து காப்பார். கவலை வேண்டாம், கலக்கம் வேண்டாம், பதற்றம் வேண்டாம்.

சாத்தானின் சூழ்ச்சி, இயேசு என்ற பாறையை முறியடிக்க முடியவில்லை, நம்முடைய கடவுளே நமக்கு Life Insuranct, and Security. மிக விலையுயர்ந்த   மரத்தை விட நம் இறைவன் சக்தியுள்ளவர், அவர் நம்மை காப்பார்.

இந்த உலகில், எங்கு ஓடுவது நம் பாதுகாப்பிற்கு, யாரை நம்புவது, யாரிடத்தில் அடைக்கலம் புகுவது என்று கேள்விகள் நமக்கு உண்டு. ஆனால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புக்கான உத்தரவாதம் கடவுள் மட்டுமே. நமக்கும், நம் உயிருக்கும் அவர்தான் உத்தரவாதம்.

ஒரு சிறப்பு மிக்க பாடல், நான் நிற்கும் பாறை கிறிஸ்துவே, வேர் அஸ்திபாரம் மணலே, அதுபோல பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே, என்கிற வரிகள், நமக்கு நம்பிக்கையளிக்கிறது. மகிழ்ச்சியோடு இந்நாளை துவங்க நித்திய கன்மலையாகிய  கிறிஸ்து உனக்காய் துணை நிற்கிறார்.


கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, March 21, 2011

வேத வினா விடை போட்டி

வேத வினா  விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எனது சகோதரியும், பெதஸ்தா  மருத்துவமனை தாதியருமான திருமதி. ஜேனட் மேரி  எசேக்கியேல் அவர்கள். 

பதில்களை தள  மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது, தபால் மூலமாக எங்களது முகவரிக்கோ அனுப்புங்கள், உங்களுக்கு, ஆசீர்வாத கீதங்கள் ஆடியோ சிடி பரிசாக காத்திருக்கிறது.

தபால் மூலமாக அனுப்பவேண்டிய முகவரி.

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.   
ஆசீர்வாத இல்லம்
1/343 AB  நகர், செட்டியப்பனூர் போஸ்ட்
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம்.

இம்மாத வேத விடுகதைப்போட்டி யோசுவா புத்தத்திலிருந்து.

1. அவன் வாழ்நாள் முழுவதும் அவனை எதிர்த்து நிற்க முடியாது, அவர்
 இருப்பதால். அவன் யார்?

2 . நாங்கள் இருவர். உளவுத் துறையினர். நூனின் மைந்தர்  எங்களை 
அனுப்பினார். விலைமாது வீட்டில் தங்கினோம் அவள்தான் எங்களை தப்புவித்தாள் அவள் பேரென்னவோ? ஊர் என்னவோ?

3 . தேவனின் சேனாதிபதி ஒருவன் நீ நிற்பது தூய்மையான் இடம். அதை கழட்டு என்றான். உடனே கழட்டி எறிந்தான். அது என்ன?

4 . நான்தான் மோசேயின் அடுத்த வாரிசு. தேவாதி தேவனின் பணியாளன்.  சதத்துக்கு மேலே பத்து ரன் எடுத்து அவுட் ஆனேன் 
நான் யார்?  

5 . தமது மக்களுக்கு, தாமே நடுவில் நின்று, தாமே போர் புரிந்து
 அதிசயங்களை காணச் செய்வார். அவர் யார்?

6 . உடைகளை கிழித்துக் கொண்டனர் மாலை வேளை மட்டும் மண்டியிட்டனர். தரையில் புழுதியை போட்டுக் கொண்டு, அதன் முன் கிடந்தனர். அது எது?

7 . கர்த்தருக்கு எதிராய் பாவம்  செய்தேன். கல்லெறியப்பட்டேன் . கற்குவியலில் புதைந்தேன். கர்த்தரின் கோபம் தீர்ந்தது. நான் யார்?

8 . சுட்டு எரிக்கப்பட்ட நகரம் அது. இன்று மட்டும் மண்மேடாகி பாழ்பட்டு கிடக்கிறது. அது எது?

9 . ஒரு கை விரல்கள் நாங்கள். ஓடினோம். ஒரு கெபியில் ஒளிந்தோம். இஸ்ரவேல் புத்திரரிடம் அகப்பட்டோம். ஐந்து மரங்களில் தொங்கி மடிந்தோம் நாங்கள் யார்?

10௦. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து கொண்டு வந்த பொருள் அது. நூறு வெள்ளிப் பணத்தில் வாங்கிய மண்ணில் புதைக்கப்பட்டது. அது எது?


விடைகளை உடனே அனுப்புங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

தேவ வல்லமை (காலை மன்னா)

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாச சகோதர சகோதரிகளுக்கு, ஸ்தோத்திரங்கள். இந்த காலை வேளையில் தியானத்திற்க்கென்று எடுத்துக்கொண்ட தியானப்பகுதி, சங்கீதம்.56 :4 .

தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

நம்முடைய வாழ்வில் நாம் யாரை அதிகமாய் புகழுகிறோம் என்பது மிகவும்
சுவாரஸ்யமானது, எனவே ஒரு  கணம் நாம் நினைத்துப்பார்ப்போம்.  நம் வாழ்க்கைக்காக,  உயர்வுக்காக  யாரை அதிகமாக நம்பியிருக்கிறோமோ அவர்களைத்தான் அதிகமாக புகழுவோம். உதாரணமாக நம் பணியில் பதவி உயர்வு பெற, பதவி உயர்வு கொடுக்கக்கூடிய நிலையில், இருக்கிற உயரதிகாரியை நம்மையும் அறியாமல் புகழ்ந்துக்கொண்டிருப்போம்.

அதேப்போல் உண்மையாய் நமக்கு நன்மை செய்கிறவர்களை, செய்தவர்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து, புகழ்வோம். ஆனால் அதே நேரத்தில் நாம் துன்பத்திலிருக்கும்போது, யாரையும் புகழுகிற மனம் வராது, ஏற்கெனவே நாம் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில்  நம் துன்பமும் வேதனையும்தான், நம்மை சூழ்ந்துக்  கொண்டிருக்குமே  தவிர,  அந்த நேரத்தில் யாரையும் புகழக்கூடிய மன நிலை நமக்கு இருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் நம்முடைய தியானப் பகுதியில் தாவீது சொல்லுகிறார், நான் தேவனை முன்னிட்டு அவர் வார்த்தைகளை புகழுவேன் என்று தேவனையும், அவரது திரு வசனங்களையும் புகழுவேன் என்கிறார். காரணம் அவருடைய துன்ப நிலையில், நான் அவரை நம்பியிருக்கிறேன் என்கிறார். இந்த அசைக்க முடியாத விசுவாசம் அவருக்குள் இருப்பதால், எனக்கு பயமில்லை என்கிறார். கடைசியாக ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து அறிந்துக்கொள்ள வேண்டிய சத்தியத்தை போதிக்கிறார்,

மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான் என்கிறார்..

நாம் நம் வாழ்வில் பயப்படுவது நமக்கு தீங்கு செய்ய நினைக்கிற இன்னொரு மனிதனுக்காகத்தான், என்ன செய்வார்களோ, நம்மை விழுங்கப் பார்க்கிறார்களே, நம் வாழ்வை கெடுக்கப் பார்க்கிறார்களே, என்று பயந்து, அப்படிப்பட்டவர்கள் மீது மூர்க்கத்தோடிருப்போம், ஆனால் தாவீதோ பெலிஸ்தியரின் படை தன்னை சுற்றி வளைத்துவிட்ட பிறகும் மிகவும் ரம்மியமாக இருக்கிறார், காரணம் அவருக்கு தெரியும் நம் வாழ்க்கை மனிதக் கரங்களில் இல்லை.

எனவேதான் எனக்கு பயமில்லை என்கிறார். எவ்வளவு பெரிய சத்தியம், ஆனால் இது தெரியாமல் பலமுறை, பல பேருக்காக பயந்திருக்கிறோம் அல்லவா? இனி பயம் வேண்டாம், நம் மீது அதிகாரம் கொண்டவர் பரிசுத்த ஆவியாய் அசைவாடுகிற கடவுள்தானே  தவிர மாம்சமான மனிதனல்ல, எனவே தைரியமாய், நம் நாளை துவங்குவோம். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை வழிநடத்திக் காப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, March 20, 2011

நல்லவர், நன்மை செய்பவர்.

இந்த நாளுக்குரிய தியான பகுதிகள்,
(இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை - I.E.L.C)

ஆதியாகமம். 12 :1 -8
ரோமர்.4 :1 -5 , 13 -17
யோவான்.4 :5 -26

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த உடன் விசுவாசிகளே இந்த ஒய்வு நாளின் தியானத்திற்கு கடந்து செல்லும் முன் தயவுசெய்து ஒரு முறை திருவசன பகுதிகளை வாசித்துவிடுங்கள்.

கடவுளிடமிருந்தும், கிறிஸ்துவிடமிருந்தும் நம் அனைவருக்கும்  கிருபையும்,   சமாதானமும்  உண்டாவதாக.

சங்கீதம் 34 :8 , கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்தரியுங்கள் என்று கர்த்தர் நல்லவர் என்பதை மிக தெளிவாக கூறுகிறது.

1  தீமோத்தேயு.1 :17  அவர் படைத்ததெல்லாம் நல்லது என்று மிக தெளிவாக கூறுகிறது,

யாக்கோபு.1 :17  எந்த நன்மையையும் பிதாவிடமிருந்து வருகிறது என்று கூறுகிறது.

கர்த்தர் நல்லவர், நன்மையானவைகளை உண்டாக்குகிறவர், நன்மைகளை தருகிறவர் என்பதை இந்த மூன்று வசனங்களை உதாரணங்களாக கொண்டு நாம் மிக தெளிவாக உணர்ந்துக்கொள்ள முடியும். இன்னும் தெளிவாக உணர்ந்துக்கொள்ள இன்றைய தியானப்பகுதி நமக்கு உதவுகிறது.

ஆதியாகமம்.12  ம் அதிகாரத்தில் கடவுள் ஆபிரகாமை அழைக்கிறார், எதற்காக கடவுள் ஆபிரகாமை அழைக்கிறார் என்பதையும் கடவுளே 2  வது மற்றும் 3  வது வசனங்களில் வெளிப்படுத்திவிடுகிறார். நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை மேன்மை படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய், உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன், உன்னால் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும் என்கிறார், அதாவது கடவுள் எதற்க்காக அழைக்கிறார் என்றால் ஆபிரகாமிற்கும் அவன்  சந்ததிக்கும் நன்மை செய்வதற்காகவும்  அவன்  மூலம் சகல ஜனங்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் கடவுள் அழைக்கிறார்.

வேறெந்த காரணமும்  கடவுள் அவனிடம் சொல்லவில்லை, உடனே ஆபிரகாம் அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து எந்த பதிலும் சொல்லாமல் புறப்பட்டு, அவன் மனைவியையும், அவன் சகோதரன் மகனாகிய லோத்தையும் தன சொத்துக்களையும் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டு போகிறான்,

எவ்வளவு பெரிய ஆச்சரியம், உடனே கீழ்ப்படிந்தான் என்று சொல்லுவோம், ஆனால் அவன் கீழ்ப்படியாமல் இருந்தால் தான் ஆச்சரியம், காரணம், 11  வது அதிகாரம் 30  ௦ வது வசனம் தெளிவாய் சொல்லுகிறது சாராய் பிள்ளையில்லாத மலடியாய் இருந்தாள் என்று, அப்படியானால் உன்னை ஆசீர்வதிப்பேன், உன்னை பெருமைப்படுத்துவேன், என்றும், உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்றும் சொல்வது ஒரு தொலைகாட்சி விளம்பரத்தில் வருவது போல  கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்றும், கண்ணா 2  வது லட்டு தின்ன ஆசையா என்றும் வலிய வந்து கேட்பது போலல்லவா உள்ளது? அதனால் தான் ஆபிரகாம் உடனே மூட்டைமுடிச்சுகளை  கட்டிக்கொண்டு கடவுள் சொன்ன இடத்தை நோக்கி தன குடும்பத்தையே கூட்டிக்கொண்டு ஓடினான்.

வேறெதுவும் ஆண்டவர் ஆபிரகாமிடம் சொல்லவே இல்லை, கட்டளையோ, கட்டுப்பாடுகளையோ எதையும் ஆபிரகாமிடம் வலியுறுத்தவுமில்லை, அப்படியானால் கடவுள் எதற்காக அழைத்தார்? நன்மை செய்வதற்காக.

யோவான் சுவிசேஷத்தில், 4  ம் அதிகாரம், 5  முதல் 26  வசனங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணை சந்திக்கிறதை வாசிக்கிறோம், அந்த பகுதியில், சமாரிய பெண்ணை சந்திக்கும் முன் சீடர்கள் உணவு வாங்க போயிருந்தார்கள் என்று சொல்லுகிறார்.  இதில் வேடிக்கை என்னவென்றால், 13  பேருக்கு உணவு வாங்க 12  பேர் போயிருக்கிறார்கள்,  ஆண்டவர் அவர்களை அனுப்பி இருக்கிறார்,

அனுப்பிவிட்டு சமாரிய பெண்ணை சந்தித்து பேசி, அவள் வாழ்வின் நிலையை எடுத்துக்காட்டினதுமல்லாமல், அவள் உள்ளத்தில் இருந்த வேற்றுமையின் எண்ணத்தையும், தாழ்வு மனப்பான்மையையும்  களைகிறார்.  நாங்கள் இந்த மலையில் தொழுகிறோம், எங்கள் பிதாக்களும் இந்த மலையில்தான் தொழுதார்கள் ஆனால் யூதர்களாகிய நீங்களோ 
எருசலேமில் தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்று அவளது ஆத்மீக தாகத்தை வெளிப்படுத்துகிறாள், உடனே ஆண்டவர் சொன்னார், அம்மா ஆண்டவரை எங்கும் தொழுதுக்கொள்ளும்  காலம் வருகிறது என்று சொன்னார்,   

எதற்காக ஆண்டவர் ஒரு சமாரிய பெண்ணை சந்தித்து அவளோடு பேசி அவள் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்தார்? நன்மை செய்வதற்காக, நீ மனந்திரும்பு என்றோ, உன் வாழ்வு மாறவேண்டும்   என்றோ, அறிவுரையோ ஆலோசனையோ ஒன்றும் சொல்லவில்லை நான் மேசியா என்று ஊருக்குள் போய் சொல் என்றும் சொல்லவில்லை, எதற்காகத்தான் ஆண்டவர் அவளோடு பேசினார்? நன்மை செய்ய,  ஏன் நன்மை செய்ய வேண்டும்? அவர் நன்மை செய்ததற்கான காரணம் என்ன? ஒன்றும் இல்லை. அவர் நல்லவர் நன்மை செய்தார்.

நம்ப முடியுமா நம்மால்? முடியவே முடியாது காரணம் இந்த உலகில் எந்த மனிதனும் இப்படி எந்தக் காரணமும் இல்லாமல் நமக்கு நன்மை செய்ததே இல்லை, யாராவது நன்மை செய்தால் பயமாக இருக்கிறது, காரணம், எதோ ஒன்றை நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு மனிதன் நமக்கு 10௦ ருபாய் அதற்கு பத்துக்காரியங்களை நம்மிடம் எதிர் பார்க்கிறார்களே,

சமீப நாட்களாக வாகன சோதனை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது காரணமென்ன தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் லட்ச லட்சமாக கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள், எதற்காக தருகிறார்கள் காரணம் இருக்கிறது, நன்மை செய்யவா? சத்தியமாக இல்லை. ஒட்டு வாங்க அதனால் அவர்கள் என்ன செய்தாலும் நம்மால் கேள்விக்கேட்க முடிவதில்லை நாமே லஞ்சம் வாங்கித்தானே ஒட்டு போடுகிறோம், இதுதான் மனிதன் செய்கிற உதவி.

ஆனால் கடவுளோ நம்மை அழைத்திருப்பது நன்மை செய்ய, எதற்காக நன்மை செய்கிறார்? அவர் நல்லவர் நன்மை செய்கிறார், யாருக்கெல்லாம் அதைதான் பவுல் ரோமர் 4  ம் அதிகாரத்தில் சொல்லுகிறார் எல்லாருக்கும் வெறும் மாம்சத்தின்படி ஆபிரகாமின் சந்ததியாய்  இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. நம்மிடத்தில் ஒன்றையும் அவர் எதிர் பார்க்கவில்லை.

ஆனால் இதுவரை கடவுளுக்காக ஊழியம் செய்வது, காணிக்கை தருவது, சகோதரனை சிநேகிப்பது, உபவாசமிருப்பது, தர்மம் செய்வது இவை எதுவும் கடவுள் எதிர் நோக்கவில்லையா? இல்லை ஆனால் இதல்லாம் நம் நன்றியுணர்வின் வெளிப்பாடுகள்.

ஆதியாகமம்.12 :8  ல் ஆபிரகாம் கடவுளுக்கு ஒரு பலிப்பீடம் கட்டி கடவுளை வணங்கினான், அவர் சொல்லியா? இல்லை அவனுடைய நன்றியுணர்வு. லோத்து அவனை வஞ்சித்த பொது அமைதியாக விட்டுக்கொடுத்தானே அவர் சொல்லியா? இல்லை அவர் மீதுள்ள விசுவாசத்தால்.

யோவான் 4 ம் அதிகாரம், 28 மற்றும் 29 வது வசனங்களில் ஊருக்குள் போய் அவரை பற்றி எல்லாருக்கும் சொல்லி அவரிடத்தில் அழைத்து முதல் பெண் மிஷனரியானாளே  அவர் சொல்லியா?? அவளது நன்றியுணர்வு, அதை கடவுள் அனுமதிக்கிறார். அது நம் கடமை. எனவே இதை தெளிவாய் உணர்ந்துக்கொண்டு பிரதி பலனே பாராமல் நன்மை செய்கிற கடவுளை நாம் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வோடு, மகிழ்வோடு வாழ தூயாவியானவர் நம்மை வழி நடத்திக் காப்பாராக ஆமென்.





கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, March 19, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த உடன் விசுவாசிகளுக்கு எனது அன்பான ஸ்தோத்திரங்கள். இன்றைய நம்முடைய தியானப்பகுதி, 1கொரிந்தியர்.1 :18 

  

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
மனித வாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணத்தில், நாம் ஒவ்வொருவரும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேடி பயணித்துக்கொண்டிருக்கிறோம், நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் இருக்கிற அடிப்படைக் காரணமே சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான், ஆனால் பல நேரங்களில் நாம் சந்தோஷத்திற்காக செய்கிற எத்தனையோ காரியங்களே நமக்கு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிடுகிறது.

எனவேதான் நாம் துன்பங்களை சந்திக்கும்போது நம்மால் அவைகளை தாங்க முடிவதில்லை, நம் வேலையில், நம் குடும்பத்தில், நம் சரீரத்தில் ஒரு சிறிய பிரச்சனை வந்தாலும், மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறோம், காரணம், நாம் அவைகளை எதிர்பார்ப்பதில்லை, நாம் எதிர்பார்ப்பது சந்தோஷத்தையும் சமாதானத்தையும்.

சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேடிய இந்த வாழ்க்கையில், நம்மில் யாராவது ஒருவர் தெரிந்தே துன்பத்தை தேடி போவோமா? யாரும் போக மாட்டோம், ஆனால் இந்த உலக வாழ்வில் துன்பத்தை தேடி போனவர்களும் இருக்கிறார்கள், அவர்களை நாம் தியாகிகள் என்று நாம் சொல்லுவோம், இந்தியாவின் மகாத்மா காந்தியடிகள், அவரோடு இணைந்து   சுதந்திரத்திற்காக போராடின தலைவர்களெல்லாம் போராடினால் துன்பம் வரும் என்று தெரிந்தே தான் போராடினார்கள் துன்பத்தை அடைந்தார்கள் தங்கள் இன்னுயிரைக்கூட  இழந்தார்கள்.

காரணம் தன் தேசத்து மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக. ஆனால் உலக சரித்திரத்திலேயே தன்னுடைய எதிரிகள், துரோகிகளை காப்பற்றுவதற்காக துன்பத்தை தேடிப்போன ஒரு மனிதன் இருந்தார் என்று சொன்னால் அது நம்முடைய ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவை தவிர வேறு  ஒருவரும்  இல்லை.

எனவேதான் பவுல் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதியில் சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம் என்கிறார், காரணம் கொரிந்து திருச்சபையில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வந்தனர், ஒரு பிரிவினர், யூதர்கள் இன்னொரு பிரிவினர் கிரேக்கர்கள் இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் அவருடைய சிலுவை மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சிலுவை மரணம் என்பதே சாபத்தின் அடையாளம், கொடுமையான குற்றம் செய்தவர்களுக்கும்,
தேசத்துரோகிகளுக்கும் மட்டுமே சிலுவை மரணதண்டனை வழங்கப்பட்டது,  சிலுவை மரணத்தின்போது கடுமையாக, கொடூரமாக மனிதாபிமானமே    இல்லாமல் அவமானப்படுத்துவார்கள், அதற்கு ஒரு உதாரணம்  சிலுவை மரணத்தண்டனை பெற்றவரை ஆடைகளில்லாமல் தான் துன்புறுத்துவார்கள் அப்படியானால் எவ்வளவு சாபம் நிறைந்தது,  அந்த சாபத்தின் அடையாளமாகிய சிலுவையில், அதுவும் புறஜாதிகளின் கையால்  மரித்த ஒருவர் எப்படி நமக்கு மேசியாவாக இருக்க முடியும் என்று யூதர்கள் சிலுவையில் மரித்த ஒரே காரணத்திற்காக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிரேக்கர்களோ இதை முற்றிலுமாக பைத்தியக்காரத்தனம் என்றார்கள், சிலுவையில் மரித்தவர் என்றால் அவர் குற்றவாளி, குற்றவாளியை போய் வணங்குகிறீர்களே எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்றார்கள்,



அவர்களுக்கு பவுல் சொல்லுகிற பதில்தான் இந்த வசனம்,  கெட்டுப்போகிறவர்களுக்கு  இந்த உபதேசம் பைத்தியக்காரத்தனமாக தெரியும் என்று உறுதியாக கூறுகிறார், காரணம் ஒரு பாவமும் அறியாத நம் ஆண்டவர் நமக்காக சிலுவையின் மரணபரியந்தம் நம்மை தாழ்த்தினாரே, இந்த தவக்காலம் முழுதும், இந்த வல்லமையின் செய்தியை தான் நாம் உபவாசமிருந்து தியானிக்கிறோம்,

காரணம் அவரது ரத்தம் நம்மை சகல பாவங்களிலிருந்தும் விடுதலையாக்குகிறது. இந்த நிறைவோடு நம் நாளை கிறிஸ்துவின் பரிசுத்தத்தில் துவங்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, March 17, 2011

காலை மன்னா




அன்பான உடன் விசுவாசிகளே கடந்த பதினோராம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய பூகம்பம், ஜப்பானை மட்டுமல்ல உலகத்திற்கே எச்சரிக்கை தந்திருக்கிறது, மனிதனுடைய மனிதாபிமானத்திற்கு இந்த பேரழிவு மீண்டும் ஒரு தேர்வு வைத்துள்ளது, ஜப்பானில் பூகம்பம் என்பதும் சுனாமியும் கூட அடிக்கடி நிகழக்கூடியது தான் ஆனால்,  இவ்வளவு பெரிய பூகம்பம் ஜப்பானுக்கே இதுதான் முதல் முறை.
 
அனேக நேரங்களில் இது போன்ற ஆபத்துக்களை காணும்போதெல்லாம் எங்கோ யாருக்கோ ஏற்படக்கூடியது நமக்கு வராது என்ற எண்ணம் நமக்கு இயல்பாக ஏற்பட்டு நம்மை நாம் தேற்றிக்கொள்வோம், ஜப்பானிய மக்களும், 11  ம் தேதி காலை 11 :15  வரை அப்படிதானே வாழ்ந்திருப்பார்கள், ஆனால் இந்த இயற்கை அங்கே கோரதாண்டவம் நடத்திவிட்டதே,

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்திக்கொண்ட நாடு, இன்று நிலைக்குலைந்து போயிருக்கிறது, அணு உலைகளிலிருந்து கதிர்வீச்சு கசிந்து உலகத்தையே அச்சத்தில் மூழ்கடித்திருக்கிறது, இன்றைக்கு அனைத்து உலக நாடுகளும் இதைப்பற்றி மிகவும் வேகமாக யோசித்து முடிவெடுக்க  தொடங்கிவிட்டன. காரணம் அதன் வீரியம்  நான்கு தலை முறைகளை பாதிக்கும்.
 
முதலாவது நாம் செய்ய  வேண்டியது, வாழ்விழந்த மக்களின் வாழ்வுக்கு ஜெபத்தோடுக்கூடிய   நம்மால் இயன்ற உதவிகளை தொண்டு நிறுவனங்கள் வழியாகவோ, அரசாங்கம் வழியாகவோ அர்ப்பணிப்போடு ஏறெடுப்போம்.

இதெல்லாம் கேள்விப்படும்போது  ஒரே ஒரு வசனம் தான் என்னை அச்சுறுத்துகிறது, மதிகேடனே இன்றிரவு உன் ஜீவன் போனால் என்கிற வசனம் எவ்வளவு பெரிய சத்தியம், எனவே நம்மை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.  நம் வாழ்வு நிரந்தரமானதல்ல, நீடித்த நாட்கள் கொண்டதுமல்ல, ஏன் பகை? ஏன் மூர்க்கங்கள்?    ஏன் பழிவாங்கல்? என்ன சாதிக்கபோகிறோம் இதனால் ? அடுத்தவனை ஏமாற்றி என்ன வாழ்ந்துவிடப்போகிறோம்? ஒரு கிராமமே காணாமல் போயிருக்கிறது, ஒரு நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது, ஆயிரக்கணக்கான மக்களின் திட்டங்கள் கனவுகள் ஆசைகள் மண்ணாகிப் போயிருக்கிறது. நம்மில் இது மனிதாபிமான மாற்றத்தை தரவில்லை திணிக்கிறது, உணர்வோம் மனிதாபமுள்ள மனிதனாக மாற முடிவெடுப்போம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, March 16, 2011

சோதனையை சாதனையாய்

இன்றைய தியான வசனம். லூக்கா.4 :1 -13

1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,

2. நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.

4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:

6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.

7. நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.

8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.

10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,

11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

12. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று

பாடுகளின் தாசனாகிய இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம், இந்த ஒருசந்தி நாட்களில் நாம் அதிகமாக பக்தியை வெளிப்படுத்துகிறோம், ஆலயத்திற்கு அதிகமாக செல்வது, உபவாசமிருப்பது, போன்ற ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறோம், ஆனால் கிறிஸ்தவ வாழ்வில் அதிகமாக சோதனைகளை சந்தித்து, பல நேரங்களில் சோதனைகளில் தோல்வியடைகிறோம், காரணம் விசுவாச குறைவு.

சோதனை என்பது மனிதனை வீழ்த்தும் சாத்தானின் ஆயுதம், இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் அதை சாதனைகளாக மாற்றவேண்டும். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இச்சையை காண்பித்து கடவுளிடமிருந்து  மனு குலத்தை பிரித்துவிட்டான்.

இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவையும் பிசாசு சோதித்தான், ஆண்டவரோ அதை சாதனையாக மாற்றினார். சாத்தானை ஓடவிட்டார்.

முதல் சோதனை கல்லுகளை அப்பங்களாக்கி சாப்பிட சொன்னான் ஆண்டவரோ அதை செய்து தன்னை பெரிய கடவுள் என்று காட்டவில்லை, காரணம் அவர் அதை செய்தால் அவனுக்கு கீழ்படிவதாகிவிடுமே.

உபாகமம் 8 :3 ஐ அவனுக்கு பதிலாக தருகிறார், மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வார்த்தையினால் பிழைப்பான் என்றார்.

இரண்டாவது, உயரிய இடத்திற்கு கொண்டுசென்று, உலகின் சகல நகரங்களையும் காட்டி, நீ என்னை பணிந்துக்கொள் இதை உனக்கு தருகிறேன் என்றான்,

இயேசு அவன் வார்த்தைக்கு மயங்காமல், ஆசைப்படாமல், கடவுளை மட்டுமே பணிந்து அவருக்கு  மட்டுமே ஆராதனை செய் என்றார்.

ஆனால் நாமாக் irundhirundhaal என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், விசுவாச உறுதி வேண்டுமே தவிர உலக ஆசை அல்ல.

மூன்றாவது, எருசலேமின் ஆலய உச்சியில் நிற்க வைத்து நீர் தேவ குமாரனானால் கீழே குத்தியும், தேவதூதர்கள் உன்னை கைகளில்  ஏந்திக்கொள்வார்கள் என்றான்.

அதற்கும் இயேசு பணியாமல், உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதே என விரட்டினார்.

இயேசு ஆண்டவர் அதிகாரம் கையில் இருந்தும் அதை தவறாக பயன் படுத்தவில்லை, இதை செய்து தன்னை நான் கடவுள் என்று நிரூபிக்கவில்லை, மாறாக சிலுவையில் தன ஜீவனை தந்து, பாடுகளை ஏற்றுக்கொண்டு உலகின் மீட்பர் என்று நிரூபித்தார்,

பிரியமானவர்களே, சோதனைகளை நாமும் தைரியமாக எதிர்கொள்வோம், சாதனைகளாக மாற்றுவோம். வெற்றிபெறுவோம், சோதனைகளை சாதனைகளாக்குவோம்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, March 15, 2011

காலை மன்னா

எனதன்பான உடன் விசுவாசிகளே, இன்றைய தியான வசனம், சங்கீதம்.3 :8 


இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)



இரட்சிப்பு என்கிற வார்த்தையின் அர்த்தம் விடுதலை என்பதாகும், பல நேரங்களில் இரட்சிப்பு என்கிற வார்த்தையின் அர்த்தத்தை அநேகர் புரிந்துக் கொள்வதில்லை, யாரெல்லாம் இரட்சிப்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார்களோ அவர்கள் அத்துணை பேருக்கும் இறைவன் ரட்சிப்பை தருகிறார்,

இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தபோது, அந்த அடிமைத்தனத்திலிருந்து இரட்சிப்பு வேண்டும் என்று கடவுளை  நோக்கி கூக்குரலிட்டார்கள். இதன் பலன் கடவுள் அவர்கள் இடுகிற கூக்குரலைக்கேட்டு அவர்களுக்காக இறங்கி அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து இரட்சித்தார், இரட்சிப்பு என்றால் விடுதலை என்று அர்த்தம்.

நம்முடைய தியானப்பகுதியில், தாவீதுக்கு விரோதமாய் அநேகர் எழும்பியிருக்கிரத்தை தாவீது இறைவனிடம்  வெளிப்படுத்துகிறார், மேலும் இவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று மற்றவர்கள் கூறுவதையும் கடவுளிடம் முறையிடுகிறார், காரணம் இரட்சிப்பு என்கிற விடுதலையை தரக்கூடிய அதிகாரம் கொண்டவர்  தானே தவிர மனிதன் அல்ல.

பல நேரங்களில் நம்முடைய வாழ்வில் நாம் உபத்திரவங்களை சந்திக்கும் போது. நம் துன்பத்தை கண்டு இன்புறுவோரும் உள்ளனர், அவ்வளவுதான் இனி அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்றும், இனி அவர்கள் எழ முடியாது என்றும் கூட மற்றவர்கள் கூறலாம், ஆனால் இரட்சிப்பை தருபவர் கடவுளே தவிர மனிதனல்ல.

நம்மை இரட்சிக்க தன உயிரை கொடுத்தவரல்லவா? நம் ஆண்டவர், நம்மை இரட்சிக்காமல் இருப்பது எப்படி, எனவேதான் நம்முடைய தியானப்பகுதியில் தாவீது கூறுகிறார், இரட்சிப்பு கர்த்தருடையது, துன்பமோ, வியாதியோ, தீய பழக்கவழக்கங்களோ எதுவுமே நம்மை அடிமைப்படுத்த முடியாது, இரட்சிப்பை தருகிற கடவுளிடத்தில் போய்  ஆண்டவரே என்னை இரட்சியும் என்று அவர் பாதம் சென்றால், நம்மை இழிவாய் நினைத்தவர்கள் முன் தலை நிமிர செய்வார்.

அது மாத்திரமல்ல நம்மை ஆசீர்வதிப்பார். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் அவருடைய ஜனத்தின் மேலேயே இருக்கிறது என்று தாவீது கூறுகிறார். அப்படியானால் நாம் கடவுளின் ஆசீர்வாதத்தை சுமந்துக்   கொண்டிருப்பவர்கள்.

இரட்சிப்பும் ஆசீர்வாதமும் நம்மிடத்திலிருக்கிறது, காரணம் இரட்சிப்பையும் ஆசீர்வத்தைத்தையும் அருளுகிற கடவுளை நாம் சொந்தமாக பெற்றவர்களல்லவா?

தைரியமாய், சந்தோஷமாய் இந்நாளை துவங்குவோம், ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, March 14, 2011

காலை மன்னா

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு, இந்த அருமையான காலை வேளையில் ஸ்தோத்திரங்கள், இன்று நாம் தியானிக்க போகிற திரு வசனம், சங்கீதம்.9 :9 

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்

இந்திய சுவிசேஷ லுத்தரன்  திருச்சபையில் போதக பயிற்சி முடிக்க குறைந்த பட்சம் 6  வருடங்கள் ஆகிறது, நானும் பயிற்சியை முடிக்க 6  வருடங்கள் ஆனது, பயிற்சி முடித்தவுடன் போதகராகிவிட முடியாது, பயிற்சி முடித்த பிறகு ஒரு மூத்த போதகரிடம் 3  வருடங்கள் பயிற்சிப் பெற வேண்டும், அந்த பயிற்சிக்காலத்தில் 3200  ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுப்பார்கள், அந்த பயிற்சி முடிந்த பிறகு ஊக்கத்தொகை அனுப்புவதை நிறுத்திவிடுவார்கள், ஒரு திருச்சபை போதகராக அழைக்கும் காலம் வரையோ, நிர்வாகம் பணியமர்த்தும் வரையோ சம்பளம் இல்லாமல் காத்திருக்க வேண்டும், தற்போது நான் அந்த நிலையில் தான் இருக்கிறேன்,

தற்போது சரியாக என் பயிற்சிக்காலம் முடிந்து 11  மாதங்கள் ஆகிறது, எந்த சம்பளமும் இல்லாமல் திருச்சபைகள் கொடுக்கிற பயனப்படியில் ஊழியம் செய்து வருகிறேன், இது எனக்கு மட்டும் நேர்வதல்ல, என்னுடைய மூத்த குருமார்களும் இந்த காலத்தை அனுபவித்தவர்களே.


இந்த காலத்தை ஒரு நெருக்கடி காலமாகவே என்வாழ்வில் உணர்ந்தேன், என் வாழ்வு ஊழியத்தால் சிறுமைப்பட்டுவிட்டதோ என்கிற ஒரு உணர்வு கூட சில நேரங்களில் என் மனதில் எழுந்ததுண்டு, ஆனால் இன்றும் உற்சாகம் குறையாமல் பணியாற்றி வருகிறேன் ஒருநாள் இந்த நெருக்கடி நிலை மாறும் என்கிற விசுவாசத்தோடு.

அதற்கு  ஒரே காரணம் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, இந்த நிலையிலும்  அவர் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் இல்லாதிருந்தால் இவ்வளவு உற்சாகமாக இந்த ஊழியங்களை செய்ய  கூடிய பெலன் என்னிடத்தில் இல்லை.

திருச்சபை ஊழியத்தினை செய்துக்கொண்டே, சம்பளமே இல்லாத இந்தக்காலத்தில் Diploma in Clinical Pastoral Counselling ஒருவருட ஆலோசனை பயிற்சியை முடிக்கவும், இதோ இந்த இணைய தளத்தை  துவங்கி உங்களோடு இறை வார்த்தையை பகிர்ந்துக்கொள்ளவும் தேவன் எனக்கு மகத்தான கிருபை புரிந்தார், இந்த கடவுளின் அற்புத வழி நடத்துதல் அவருக்காக என்னை இன்னும் அதிகமாய் உழைக்க தூண்டுகிறது.


அதைதான் தாவீது இந்த திரு வசனங்களில்  சுட்டிக்காட்டுகிறார், சிறுமைப்பட்டவனுக்கு, அவர் அடைக்கலம். நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.

இது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதற்கு என் வாழ்வு இன்றும் சாட்சியாக இருக்கிறது காரணம் இன்னும் நான் நெருக்கடியில் சம்பளம் இல்லாமல் பயனப்படியில் தான் ஊழியம் செய்து வருகிறேன் ஆனால் இறைவன் ஜெயமாய் நடக்க வைக்கிறார்.

மனிதனின் பெலன் அல்ல  இறைவனின் பெலன் நம்மோடு இருக்கிறது, துணிவோடு அவரை நம்பி நம் பணிகளை தொடர்வோம், இக்கட்டு காலத்தில், சிறுமையான நிலை இருந்தால் வருத்தப்படாதீர்கள் மாறாக சந்தோஷ படுங்கள் இறைவனின் அடைகலத்தையும், அற்புதத்தையும் இந்தக் காலத்தில் தான் நாம் நேரடியாய் நாம் அனுபவிக்க முடியும்.

இந்த தாவீதின் நம்பிக்கையோடு இந்த நாளை துவங்கவோம், கடவுள் நம்மோடிருக்கிறார். ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, March 13, 2011

இயேசுவின் கிருபை

இன்றைய திரு வசனங்கள்:

ஆதியாகமம்.2 :7 -9 , 15 -17, 3 :1  -7
ரோமர்.5 :12 -19
மத்தேயு.1 -11 

கடவுளிடமிருந்தும் கிறிஸ்துவிடமிருந்தும் நம் அனைவருக்கும் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக ஆமென், கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, கடவுள் மனிதனை படைப்பதற்கு முன் மனிதனுக்கு தேவையான எல்லாவற்றையும் படைத்துவிட்டு, கடைசியாக மனிதனை படைத்தார், காரணம் மனிதன் இவ்வுலகில் இன்புற்று வாழ அவர் விரும்பினார்.

ஆதியாகமம், 2 :7 -9  வரையுள்ள வசனங்கள் எப்படி கடவுள் மனிதனை படைத்தார் என்பதை விளக்குகின்றன, எல்லாவற்றையும், எல்லா ஜீவராசிகளையும் தன வார்த்தைகளால் உண்டாக்கின கடவுள், மனிதனை மட்டும் மண்ணினாலே உருவாக்கி அவனுக்குள் தன் ஜீவ சுவாசத்தை ஊதி உண்டாக்கினார், இதன் மூலம்  மற்றெல்லா படைப்புகளிலிருந்தும் மனிதன் சிறப்பு வாய்ந்தவன்  என்பது விளங்குகிறது.

எனவே மனிதனுக்கு ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கி கொடுத்து அதில் வாழவைத்தார், அந்த தோட்டத்தில் எப்படியும் வாழ அனுமதித்த கடவுள் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் கொடுத்தார், நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும் புசிக்க வேண்டாம் என்றார். அதை சாப்பிட்டால் சாகவே சாவாய் என்றார்.

ஆனால் 3  ம் அதிகாரத்திலிருந்து மனிதனின் வாழ்வு தடம் மாற ஆரம்பிக்கிறது, சர்ப்பம் வந்து இதை சாப்பிட்டால் நீங்கள் தேவர்களைப்போல ஆவீர்கள் என்று அவர்களை தூண்டிவிடுகிறது, சாத்தானின் தூண்டுதலால் அவர்கள் புசித்து கடவுளுக்கு விரோதமாய் பாவம் செய்தனர், அங்கேதான் மனிதனின் முதல் பாவம் அவனுடைய சபலத்தால் உண்டாகிறது, இதன் விளைவு அவனுடைய தலை முறை  முழுதும் இறைவனின் கோபாக்கினைக்கு ஆளாகிறது, ஏதேனின் மகிழ்வில் இருந்தவன், பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த பாவ வாழ்வுக்குள் விழுந்து போனான், எல்லாவற்றுக்கும் மேலாக நித்திய ஜீவனை இழந்து போனான்.

நம்முடைய சுவிசேஷ பகுதியில் இயேசுவுக்கு நேர்ந்த சோதனையை பற்றி பார்க்கிறோம், அங்கே பிசாசானவன் ஆண்டவரை, பசியை பயன்படுத்தி  உணவினால்,  பூலோக சம்பத்துக்களினால், அதிகார துஷ்பிரயோகத்தால் அவரிடையே ஒரு சபலத்தை உண்டாக்க நினைக்கின்றான் ஆனால் ஆண்டவரோ எதற்கும் மயங்காதவராய் அவனை முற்றிலும் தள்ளிவிடுகிறார். நாம் கொஞ்சம் உற்று கவனித்தால் இந்த உலகம் முழுவதும் நடக்கிற அத்தனை தீமைகளுக்கும் இந்த மூன்றும் தான் காரணமாய் இருப்பதை நாம் காணமுடியும்.

ஆனால் ஆண்டவரோ உறுதியாய் அந்த மாய வலைக்குள் சிக்கி விடாமல் உறுதியான விசுவாசத்தில் தன்னை காத்துக்கொள்ளுகிறார், முழுவதுமாய் கடவுளுக்கு கீழ்படிகிறார், பிசாசானவன் அவரிடம் தோற்று ஓடிவிடுகிறான்,

இதை பவுலடிகளார் ரோமர்.5 :12 -19  வரையுள்ள வசனங்களில் மிக தெளிவாக விளக்குகிறார், ஒரே மனிதனை பாவம் எப்படி இந்த முழு உலகுக்கும் சாபத்தை கொண்டுவந்ததோ, அதேபோல ஒரே மனிதனின் கீழ்படிதல் இந்த முழு உலகிற்கும் மீட்பை கொண்டு வந்தது என்கிறார், காரணம் தகுதியில்லாத நமக்காக சிலுவையின் மரணபரியந்தம் இயேசுகிறிஸ்து தன்னை தாழ்த்தினார். அவருடைய கிருபையே இன்று நம்மை கடவுளுடைய பிள்ளைகளாய் நிலை நிறுத்தியிருக்கிறது.

இந்த கிருபையின் மேன்மையை உணர்ந்தவர்களாய், விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, கிறிஸ்துவில் ஜீவியம் செய்ய கடவுள் நம்மை வழிநடத்தி காப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, March 12, 2011

மகிழ்ந்திருப்போம் (மாதர் பகுதி)

அன்பான இணைய தள நண்பர்களே உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் இன்று இன்னொரு இனிமையான அறிமுகம், இன்றுமுதல்


மாதர் பகுதி துவங்குகிறது, இதை ஒரு மாதரே எழுதினால் தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதால், திருமதி உஷா ராஜ்குமார் அவர்களை தொடர்புக்கொண்டு கேட்டபோது அவர்கள் உற்சாகமாக ஒப்புக்கொண்டு இதை இன்று நமக்கு வழங்கி இருக்கிறார். தியானத்திற்கு போவதற்கு முன் அவரை பற்றி.

திருமதி உஷா ராஜ்குமார் அவர்கள், இறையியல் பட்டய பயிற்சி முடித்தவர், தற்போது ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவ மனையில் நோயாளிகளுக்கான மன நல ஆலோசகராகவும், ஆவிக்குரிய உதவியாளராகவும் பணியாற்றி  வருகிறார்கள், இவர் அருள்திரு ராஜ்குமார் ஆயர் அவர்களின் துணைவியார் ஆவார், இவர்களுக்கு ரேச்சல் உதய நிலா என்ற ஒரு மகள் இருக்கிறார், இவருடைய  எழுத்துக்கள் மிகவும் ஆவிக்குரிய பலன் தரக்கூடியவை. இனி அவரோடு...


 
இணைய தளத்தின்  வழியாய் என் இனிய தோழிகளுக்கு,  இந்த நாளை இறைவன் நமக்கு இனையில்லாததாய் தந்திருக்கிறார். புதியதாய் ஒரு சூரிய உதயத்தை கண்டு இன்புற்ற  நாம், இந்த நாளின் மகத்துவத்தினை பெரும்பாலும் எண்ணிப் பார்ப்பதில்லை.  

ஒவ்வொரு விடியலிலும்  நமக்கு புதிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு புதிய நாளும் நமக்காக பல்வேறு காரியங்களை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறது.

மனதிற்கினிய சம்பவங்கள் பல நடைப்பெறுகின்றன, மனக்கசப்பான காரியங்களும் நடைப்பெறுகின்றன, சுவாரஸ்யமான காரியங்கள் நடைபெறுகின்றன, சுகக்கேடான விஷயங்களும் நடைப்பெறுகின்றன.

பொழுது புலர்ந்து இரவு சாயும் போது யோசித்து பார்த்தால், மிகவும் சுவாரஸ்யமான கதையாக இந்த நாளைக் கடந்துக்கொண்டிருப்போம்.


தோழி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து " நாளைய தினத்திற்காக கவலைப்படாதேயுங்கள், நாளைய தினம் தனக்காக கவலைப்பட்டுக்கொள்ளும், அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்" (மத்.6 :34 ) என்று அழகாக கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த உண்மையை அனேக வேளைகளில் நாம் நினைக்க மறந்துவிடுகிறோம், ஒவ்வொன்றிற்காகவும், ஒவ்வொரு நொடியும் கவலைப்பட்டுக்கொண்டே காலத்தை கழிக்க முற்படுகிறோம். நாமும் கவலைப்பட்டு நம்மை சுற்றியுள்ளவர்களையும் கவலைப்பட வைக்கிறோம்.

அப்படியல்ல அன்புத் தோழி, கவலைப்படுவதற்காகவும், கண்ணீர் விடுவதற்காகவும் நாம் படைக்கப்படவில்லை, இறைவனின் இணையில்லா திட்டத்தின்படி, நாமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ளவர்களையும் கடவுளின் நாம மகிமைக்கென மகிழ்ச்சியாக வைத்திருக்கும்படியாகவுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நமக்கெனவே கடவுள் பார்த்து, பார்த்துப் படைத்த இந்த உலகில், பத்திரமாய் நாம் வாழும்படியாய், இம்மட்டும் நம்மை நடத்தி வந்த இறைவன், இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை நம்மை அற்புதமாய் நடத்திக்கொண்டிருக்கிறார்.


வலிகளையே  நினைத்துக்கொண்டிருப்பதைவிட வல்லமையுள்ள கடவுள் நம்மை வளமாய் நடத்த வல்லவர் என்பதை உணர்ந்து, நமது துக்கங்களையும், சந்தோஷங்களையும் அவரிடம் பகிர்ந்துவிட்டு, மகிழ்வோடு அவர் நமக்கு தந்த பணிகளை செய்திருப்போம், அவர் நாம மகிமைக்கென மகிழ்ச்சியோடு நம்மை அர்ப்பணிப்போம்.

நாளைய தினத்தை பற்றி நாம் கவலைப்படாமல், இன்றைய தினத்தின் இறை நடத்தலுக்காக இதயப்பூர்வமாய் அவருக்கு நன்றி செலுத்தி, அவரில் மகிழ்ந்திருப்போம்.

ஆண்டவர்தாமே நம்மை ஆசீர்வதித்து, தமது பரிசுத்த ஆவியினால் நம்மை பலப்படுத்தி, பிரகாசிக்க செய்திடுவாராக ஆமென்.

இறை பணியில்
உங்கள் இனிய தோழி

உஷா ராஜ்குமார். MA, BTh.
பெதஸ்தா மருத்துவமனை ஆம்பூர்.


தோழிகளே படித்துவிட்டு கருத்துரையிடாமல் போவது சரியோ? உங்கள் அனுபவங்களை பிறர் நன்மைக்காக பகிருங்கள்.

ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, March 11, 2011

உடனே ஜெபியுங்கள்

 
ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது.

சர்வதேச நேரப்படி இன்று காலை 05.46 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.16) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 400 கி.மீ. தூரத்தில், ஹான்சூவில் இருந்து 130 கி.மீ தூரத்தில் கடற்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் இது 8.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது. ஆனால், பூகம்ப அளவு 8.4 புள்ளிகள் என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது.

பூமத்திய ரேகையிலிருந்த 38.322 டிகிரி வடக்கும், அட்சரேகை 142.369 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது.

கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த பயங்கர பூகம்பத்தையடுத்து, ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கைக்கு இணங்க அடுத்த சில மணி நேரத்தில் ஆழிப்பேரலை ஜப்பானின் கிழக்குக் கரைகளை கடுமையாகத் தாக்கியது. ஆழிப்பேரலையின் உயரம் 10 முதல் 13 மீட்டர் உயரத்திற்கு எழுந்து தாக்கியதாக செய்திகள் கூறுகின்றன.

பூகம்பத்தால் ஜப்பானின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாயின. டோக்கியோ அருகிலுள்ள சீமா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிகிறது. பலமாடிக் கட்டடங்கள் பலவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளதெனவும், பல தொழிற்சாலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஆழிப்பேரலைத் தாக்கியுள்ளது. மியாகி மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கடலோர நகரமான செண்டாய் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதெனவும் கூறப்படுகிறது. ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதெனவும், பூகம்பத்தால் அணு மின் நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அணுக் கதிர் வீச்சி எதுவும் ஏற்படவில்லை என்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் நவோட்டா கேன் கூறியுள்ளார்.

பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலினாலும் உயரிழிந்தோர் எண்ணிக்கை பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் பேரலைத் தாக்குதலில் 10 பேர் காணவில்லை என்று மட்டும் முதல் தகவல் வந்துள்ளது.

ஆனால் ஆழிப்பேரலைத் தாக்குதல் காட்சிகளைப் பார்க்கும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. வீடுகளையும், படகுகளையும், சிறு கப்பல்களையும் ஆழிப்பேரலை அடித்துச் செல்லும் காட்சி அச்சமூட்டுவதாக உள்ளது.
 
நன்றி tamil,webduniya.com
 
 

தேவ வல்லமை

அன்புள்ள உடன் விசுவாசிகளே, தவறாமல் இந்த தளத்தை பார்வையிடும் ஒவ்வொருவருக்கும், என் மனமார்ந்த நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இது உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.

இன்றைய தியானப்பகுதி. 1 கொரிந்தியர்.1 :18 

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

நம்முடைய புதிய ஏற்பாடு புத்தகத்தின் முதல் நான்கு புத்தகங்களை நற்செய்தி நூல்கள் என்று சொல்லுவோம், காரணம் அவைகள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வுதான் இந்த உலகிற்கு நற்செய்தி என்பதால் இவை  நற்செய்தி நூல்கள் எனப்படுகின்றன.

ஆனால் இந்த நற்செய்தி நூல்களை வாசிக்கிற நாம் ஒரு விஷயத்தை கவனிக்க தவறியிருப்போம், அதாவது, இயேசுகிறிஸ்துவின் பிறப்பை எத்தனை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன என்பதை கவனித்திருக்கிறீர்களா? மத்தேயு லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே அவரது பிறப்பின் வரலாறை பற்றி கூறுகின்றனர். மாற்குவும் யோவானும் அதைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிக விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறோம், ஆனால் 2  நற்செய்திகளில் பிறப்பின் வரலாறே இல்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான், பிறப்பைவிட மிக முக்கியமான நிகழ்வுகளை அவர்கள் பேச விரும்புவதால் பிறப்பின் வரலாறை விட்டுவிட்டு நேராக விஷயத்திற்கு வருகின்றனர்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் நடந்த நிகழ்சிகளை ஒவ்வொரு நற்செய்தியாளரும் பதிவு செய்து வைத்திருப்பதில் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன, அதாவது மத்தேயுவில் உள்ள எத்தனையோ விஷயங்கள், மாற்குவில் இல்லை, மற்குவில் இருக்கிற சில சம்பவங்கள் லூக்காவில் இல்லை, லூக்காவில் இருக்கிற சில சம்பவங்கள் யோவானில் இல்லை,

ஆனால் எல்லா நற்செய்தி பகுதியிலும் வேறுபாடில்லாமல் விவரிக்கப்பட்டிருக்கிற நிகழ்வு எது தெரியுமா? இயேசு கிறிஸ்துவின் பாடும், மரணமும், உயிர்த்தெழுதலும். இயேசு ஆண்டவரின் பிறப்பைவிட, அவரது பாடுகள் மிக முக்கிய இடத்தை நற்செய்தி நூல்களில் கொண்டுள்ளது.

காரணம் கடவுள் இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினதின் நோக்கமே அதுதான்.

1  பேதுரு.1 :4 ல் இயேசுகிறிஸ்து  மரித்தோரிலிருந்து  எழுந்ததினாலே. அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய ஜீவன் நம்மிலே உண்டாக நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் என்கிறார்.

 இயேசுகிறிஸ்து பாடுபடாமலிருந்திருந்தால்
நமக்கு நித்திய ஜீவன் இல்லை,

என்றைக்கு ஆதாமும் ஏவாளும்
பாவம் செய்து தேவ மகிமையை
 இழந்துப்போனார்களோ, அன்றே
கடவுள் அந்த அழிவின் வாழ்விலிருந்து
நம்மை மீட்க விரும்பினார், எனவேதான் 
எல்லாரும் அழிவதை விட 
எல்லாருக்காகவும்  ஒருவர் மரிப்பது
என்ற தீர்மானத்தை எடுத்து தன்
சொந்த குமாரனை அனுப்பினார்.

எனவே நாம் பெற்றுக்கொண்ட இந்த மன்னிப்பின் வாழ்வு அவர் பாடுகளால் உண்டானது, எனவே அதை மறந்துபோகாமல், இந்த தவக்காலங்கள் அவர் பாடுகளை  நினைவுகூறுகிற காலமாதலால், பவுல் கொரிந்தியருக்கு எழுதியிருக்கிற இந்த வாசகத்தை மறந்து போகாமல் இரட்சிக்கப்படுகிற நமக்கு அது தேவ வல்லமை என்பதை உணர்ந்து விசுவாசத்தோடும் பாடுகளின் காலத்தை முழுதும் அவருக்காக பயன் படுத்திகிறவர்களாய் வாழ தூயாவியானவர் நமக்கு துணைபுரிவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews