WORD OF GOD

WORD OF GOD

Tuesday, August 30, 2011

கடவுள் வாய்க்க செய்வார்

அன்புள்ள உடன் விசுவாசிகளே உங்கள் யாவர்க்கும் அன்பின் ஸ்தோத்திரங்கள்.இன்று நாம் தியானிக்கபோகிற வசனம்

ஏசாயா.54;17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.

1சாமுவேல் 17ஆம் அதிகார‌த்தில், தாவீது போர்க‌ளத்தில் இருக்கிற தன் ச‌கோதர‌ர்க‌ளுக்கு உணவு கொண்டு வ‌ருகிறான்,அங்கே அவ‌ன் காண்கிற காட்சி அவ‌னுக்குள் பெரிய‌ வேத‌னையை உன்டாக்குகிறது.

காரணம், போர்க்களத்தில், இஸ்ரவேல் படை வீரர்கள் நடுங்கிக் கொண்டிருக்க, பெலிஸ்தியர் படைத்தலைவன் கோலியாத், இஸ்ரவேலர்களையும், இஸ்ரவேலின் கடவுளாகிய சர்வ வல்லவரையும் மிக கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறான். வாலிபனான தாவீதால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே போர்க்களத்திலேயே வீரர்கள் மத்தியில், பெலிஸ்தியனை கொலை செய்வதை பற்றி ஆலோசிக்கிறான். அவன் சகோதரர்களோ, அவன் மீது கோபம் கொள்ளுகிறார்கள், ஆனால் தாவீதோ, அவர்களிடம் பேசாமல் மற்றவர்களிடம் பேசுகிறான்.

அவர்கள் அவனை அரசனாகிய சவுலிடம் அழைத்து போகிறார்கள். அங்கே அரசனுக்கு முன்பாக நான் பெலிஸ்தியனோடு யுத்தம் பண்ணுவேன் என்கிறான். சவுலோ உன்னால் முடியாது என்று சொன்ன பிறகும், தாவீது தன் முடிவில் உறுதியாக இருந்தான். உடனே, போர்க்கள ஆடைகளும், ஆயுதங்களும் அவனுக்கு கொடுக்கப்பட்டது, ஆனால் அவைகளை சுமக்கக் கூட அவனால் முடியவில்லை. எல்லாவற்றையும் களைந்துவிட்டு கற்களையும், ஆடுமேய்க்கும் போது பயன்படுத்தும் தடியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் தடியோடு வருகிறதை கண்ட கோலியாத், நான் என்ன நாயா? என்று அவனை பரிகசித்தான். அதற்கு தாவீது சொன்ன பதில்..

1சாமுவேல்.17:45. அதற்கு தாவீது பெலிஸ்தியனை நோக்கி; நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்றான்.

ஆம் பிரியமானவர்களே, பெலிஸ்தியன், யுத்த ஆயுதங்களோடு, புறப்பட்டு வந்தான், தாவீதோ வெறும் கற்களை ஆயுதங்களாக கொண்டு போனான். ஆனால் கோலியாத்தின் ஆயுதங்கள் வாய்க்காதே போனாது, அவன் தன் ஆயுதங்களை எடுக்கக் கூட நேரம் தராமல் அவனை வீழ்த்தினான் தாவீது. காரணம் கடவுள் அவனோடு இருந்தார்..... அதுமட்டுமல்ல....

இஸ்ரவேலர்கள் மோசேவின் தலைமையில், எகிப்திலிருந்து புறப்பட்டு மிக வேகமாக கானானை நோக்கி பயணித்தார்கள், ஆனால் அவர்கள் பயணத்தில் கொஞ்ச‌ தூரத்திலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தார்கள், செங்கடல் குறுக்கே வந்ததால் எப்படி போவதென தெரியாமல், உயிர் பயத்தில் செய்வதறியாமல், மோசேவை நோக்கி புலம்பினார்கள், இந்த செய்தி, எகிப்தின் அரசனுக்கு தெரிந்தது, அவன் உடனே என்ன செய்தான் தெரியுமா?

யாத்திராகமம்.14:6,7 அவன் (அரசன்) தன் ரதத்தை பூட்டி, தன் ஜனங்களை கூட்டிக்கொண்டு, பிரதானமான அறுனூறு ரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல ரதங்களையும், அவைகள் எல்லாவற்றின் அதிபதிகளான யுத்த வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.

ஆம் அன்பானவர்களே, யுத்த ரதம் என்பது அனைத்து யுத்த ஆயுதங்களோடு புறப்படும் வாகனம், இப்படி ஆயுதக் குவியலோடு,  இஸ்ரவேலர்களை செங்கடலின் கரையில்  பிடிக்க போனான்.. ஆனால் நடந்தது என்ன கடவுள் செங்கடலை இரண்டாக பிளக்க செய்து அதன் நடுவில் இஸ்ரவேலரை நடக்க வைத்தார். ஆனால் ஆயுதங்களோடு வந்த யுத்த வீரர்களும், இரதங்களோடே, கடலில் மூழ்கி அழிந்து போனார்கள். அவர்கள் ஆயுதம் வாய்க்காதே போனது காரணம், கடவுள் இஸ்ரவேலரோடே இருந்தார்.

அன்பானவர்களே இதே சேனையின் கடவுள் ஆண்டவராகிய இயேசுவாய் நம்மோடு வாழ்ந்தார், தூய ஆவியானவராய் நம்மோடிருக்கிறார். எனவே உங்கள் வாழ்வுக்கு எதிராக செயல்படுவோரும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமும் வாய்க்காதே போம். உங்களை அழிக்க நாவை ஆயுதாமாக பயன் படுத்துகிறார்களா? பணத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறார்களா? பதவியை ஆயுதமாய் பயன்படுத்துகிறார்களா? வேறே ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா? அச்சம் வேண்டாம் காரணம் நாம் கையிட்டு செய்கிற காரியத்தை கடவுள் வாய்க்க செய்வார்.

உங்களுக்கு எதிராக செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். ஆமேன்..


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, August 26, 2011

கிறிஸ்தவர்களே ஊழலுக்கெதிராய் அணி திரள்வோம்

அன்பான எனதருமை உடன் விசுவாச்சிகளுக்கு  என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று காலை நாம் தியானத்திற்கென்று நாம் எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை மத்தேயு.7 :21 -23  .

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை..

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

தற்போது நம் நாட்டில் ஒரு பெரிய புரட்சி நடந்து வருகிறது. திரு.அன்னா அசாரே அவர்கள் தலைமையில் நாடே ஊழலுக்கு எதிராக திரும்பி வருகிறது. அவர் முன் வைக்கும் சட்ட வரைவு நிறைவேறும் பட்சத்தில் நிச்சயம் ஊழலின் வீரியம் நம் நாட்டில் பெருமளவு குறைய வாய்ப்பிருக்கிறது.  ஆனால் அரசியல்வாதிகளின் மத்தியில் இந்த சட்ட முன் வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது.  வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும், மசோதாவை நிறைவேற்றாமல் இருக்க அவர்கள் கூறும் சப்பை காரணங்கள் மூலம் நாம் இதை அறிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக ஊழலில் ஊறிப்போனவர்கள் அதிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.  ஆனால் வேதாகமம்  இந்த முறைக் கேடான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கடுமையான எச்சரிப்பை தருகிறது. நாம் இன்று எடுத்துக் கொண்டிருக்கிற தியான வசனத்தில் ஆண்டவர் யார் பரலோக ராஜ்ஜியத்திற்கு போவார்கள் யார் போகமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் அத்தனை பேருடைய நோக்கமும் ஒன்றே ஒன்றுதான், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விடுத்து, அழிவில்லா வாழ்வை அருளும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டும் என்பதே. இந்த மேனமையான வாழ்வில் எல்லா கிறிஸ்தவர்களும் பங்கெடுக்க முடியாது, என்பதை தான் இன்றைய தியான வசனம் நமக்கு கூறுகிறது. அப்படியானால் யார் பிரவேசிக்க முடியும்?

பிதாவின் சித்தபடி செய்கிறவன் எவனோ அவனே பரலோக வாழ்வில் பிரவேசிப்பான் என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே.. என்று கூப்பிடுகிறவனையும், உமது நாமத்தில் பிசாசுகளை துரத்தினோம், தீர்க்கதரிசனம் உரைத்தோம், என்று சொல்லுகிறகிரவனையும்,  அக்கிரமக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று கூறுவேன் என்கிறார்.  ஆம் பிரியமானவர்களே, ஆலயத்திற்கு ஒழுங்காய் வந்து, அல்லேலுயா என்றும் ஸ்தோத்திரம் என்றும் நாள்தோறும் சொல்கிறவர்களும், பெரிய நீதிமான்களாக  தங்களை காட்டிக்கொண்டு, உத்தமமாய் பிரசங்கிக்கிற ஊழியர்களும், அற்புதங்களை செய்கிறோம், பிசாசுகளை விரட்டுகிறோம், தீர்க்கதரிசனம் உரைக்கிறோம், என்று சொல்லுகிற ஊழியர்களும், பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று தெளிவாக ஆண்டவர் கூறுகிறார். ஏன்?

பிதாவின் சித்தபடி செய்கிறவர்களாய் அவர்கள்  இருக்க வேண்டும்? இவையெல்லாம் பிதாவின் சித்தம் இல்லையா? ஆம் இவையெல்லாம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தின் அடையாளம் அவ்வளவே.. பிதா நம் மீது கொண்டிருக்கும் சித்தம் என்பது முற்றிலும் வேறாய் இருக்கிறது? எது பிதாவின் சித்தம்?  ஆண்டவர் தெளிவாக சொல்லுகிறார்.. உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், கடவுளிடத்தில் அன்பு கூற வேண்டும், அதே போல உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் சக மனிதனிடத்தில் (அயலானிடத்தில்) அன்பு கூற வேண்டும் என்கிறார். இதுதான் பிதாவின் சித்தம்.

1 கொரிந்தியர் ,13 ம் அதிகாரத்தில், ஆவியின் வரங்களை பற்றி பேசுகிற பவுல் அவையெல்லாம் ஒழிந்து போகும் என்கிறார், தீர்க்கதரிசனம் கூட ஒழிந்து போகும் என்கிறார், 13 ம் வசனத்தில் நிலையான மூன்றை கூறுகிறார், அவையாவன.. விசுவாசம், நன்னம்பிக்கை, அன்பு.. இதில் அன்பே பெரியது என்று கூறி கிறிஸ்தவர்கள் வரங்களை விட அன்பை நாட வேண்டும் என்று முடிக்கிறார்.

அன்பானவர்களே இந்த அன்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறதா? லஞ்சம் வாங்கும் கிறிஸ்தவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியுமா? தலை கீழாக நின்றாலும் வாய்ப்பில்லை. சக மனிதனுக்கு வாழ்வு கொடுக்காமல் அவன் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற யாரும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது.  ஒருவன் வாழ்வுக்கு காரணமாய் கிறிஸ்தவன் இருக்க வேண்டுமே தவிர, ஒருவன் வீழ்ச்சிக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

ஊழியம் செய்யலாம், வல்லமையாய் பிரசங்கிக்கலாம், உபாவசமிருந்து ஜெபிக்கலாம், ஊழியங்களுக்கு வாரி, வாரி கொடுக்கலாம். சக மனிதனின் மீது அன்பில்லாமல் பதவிக்கும்,  பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் கடவுளுடைய ராஜ்ஜியத்தின் வாசலை கூட எட்ட முடியாது.  இங்கே வேண்டுமானால் பதவியிலும் பணத்திலும் திழைக்கலாம்.. ஆனால் என்ன பிரயோஜனம் சத்தியமாய் இது நிரந்தரமல்ல.. 70  வருடம் பலத்தின் மிகுதியால் 80  வருடம் அவ்வளவுதான் எல்லாம் முடிந்து போகும்.

அன்பானவர்களே, நாமும் ஊழலிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும், ஊழலுக்கு எதிராக போராடவும் வேண்டும்.. அடுத்தவன் பணத்தை குறி வைக்கிற யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது.. அனுமதிப்போமானால் நம் கண்ணுக்கு தெரிந்து ஒரு ஆத்துமாவின் அழிவுக்கு நாம் காரணமாகிவிடுவோம்.. கிறிஸ்துவின் வழி நிற்போம்..  திருச்சபைகளில்  மண்டிக் கிடக்கிற ஊழலக்கு எதிராக அணிதிரள்வோம்... இந்த திருவசனங்கள் வாயிலாக பரிசுத்தாவியானவர் நம்மை காத்துக் கொள்வாராக  ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, August 25, 2011

பாவம் போக்கும் பரிகாரி.

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய  ஸ்தோத்திரங்கள். உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்றவை மிக பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. நடை, உடை, பாவனை, பேச்சு, போன்றவை நாகரீகம் என்ற பெயரில் முற்றிலும் மாறிவிட்டது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மனிதன் மாறிவிட்டான்.


மனிதனின் தோற்றம் மாறிவிட்டது, வாழ்க்கை மாறிவிட்டது. ஆனால் மனிதனின் சுபாவம் மட்டும் மாறவேயில்லை என்பதை இன்றும் நடந்துவருகிற நிகழ்வுகளை கண்டால் நமக்கு தெளிவாக தெரிந்துவிடும். ஆதி காலத்தில் கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தி உயிர்களை நாகரீகமே இல்லாமல் வேட்டையாடினவன், இன்று குண்டுகளை பொழிந்து மனிதாபிமானமே இல்லாமல் உயிர்களை குடித்து வருகிறான். இலங்கை போர், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடந்த யுத்தம், உலகெங்கும் வியாபித்திருக்கும் தீவிரவாதம் போன்றவை மிக மோசமான உதாரணங்கள். இன்னும் அனேக உதாரணங்கள் உண்டு அவைகளை நீங்களே அறிவீர்கள்.


ஏன் இந்த சுபாவம் மட்டும் மாறவேயில்லை? இதுதான் பாவத்தின் வல்லமை. மனிதன் முற்றிலும் மாறிவிட்டான் ஆனால் அவன் பாவ சுபாவம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஒத்துக் கொள்ளுகிறீர்களா? நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. அதை நமது மனசாட்சி அறியும். நாம் பாவத்தை செய்துவிட்டு, முகத்துக்கு பௌடர் பூசி அதை மறைக்க முயற்சிக்கிறோம். எங்கெங்கு காணினும் பாவம் புரையோடியிருக்கிறது. இன்று பாவம் இல்லாத ஒரு இடம் உண்டா? உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம், வேதனை என்ன்வென்றால் திருச்சபையை கூட சொல்ல முடியாது.


அப்படியானால் மனிதன் மாற வேண்டியது தோற்றத்திலோ, வாழ்க்கை முறையிலோ அல்ல, சுபாவத்தில் மாற வேண்டும், பாவ சுபாவம் மனிதனை விட்டு நீங்குமா? நீங்க வழி இருக்கிறதா? இது வரை செய்த பாவத்திற்கு மன்னிப்பு இருக்கிறதா? உண்டு என்பதை இங்கே உறுதியாக பதிவு செய்கிறேன், ஆம் வேதாகமத்தில் ரோமர்.8 ம் அதிகாரம் 33 ம் வசனத்தில் பவுல் கூறுகிறார், தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல்  குற்றம் சாட்டினவன் யார்? அவரே அவர்களை நீதிமான்க‌ளாக்கினார். ஆம் பிரியமானவர்களே, கடவுளே பாவிகளாகிய நம்மை நீதிமான்களாக்குகிறார்.

எப்படி இது சாத்தியம்? அதற்காகதான் கடவுள் இயேசுவாக இந்த உலகத்திற்கு வந்தார். ஒரு தவறு கூட செய்யாத அவரை கொடிய சிலுவையில் ஏற்றி கொலை செய்தார்கள், அதை அவர் பொறுமையாக ஏற்றுக் கொண்டார். ஒரே ஒரு காரணத்திற்காக அந்த காரணம் நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்பதே. ஆம் பிரியமானவர்களே, நம் எல்லருடைய பாவத்திற்கும் பரிகாரமாக நாம் பெற வேண்டிய கொடிய மரண தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் அவரை நம்புகிற யாவரையும் பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறார். நீங்கள் இதை நம்புகிறீர்களா? நம்பினால் அவர் உங்களை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம், உங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறார் என்று அர்த்தம்.

அதுமட்டுமல்ல, ரோமர்.8 ம் அதிகாரம், 30 ம் வசனத்தில் கடவுள் யாரை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்குகிறார் என்றும், யாரை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்றும் வாசிக்கிறோம்.

அன்பானவர்களே, நாம் அவரை நம்பினாலே, நம்மை தன் சொந்த பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுகிறார், நம் கொடிய பாவங்களை மன்னித்து நீதிமான்களாக்குகிறார், அது மட்டுமல்ல நம்மை மகிமைப்படுத்துகிறார். அதாவது நம் பாவ சுபாவத்தை மாற்றி நம்மை இவ்வுலகில் மகிமையானவர்களாக்குகிறார். இது நடக்குமா? நாமல்ல சொன்னவர் நடத்தி காட்டுவார். இயேசுவை நம்புவோம், மாற்றங்களை அனுபவிப்போம் ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, August 24, 2011

நற்செய்தி

அன்பான உடன் விசுவாசிகளுக்கு, நமது தளத்தின் இன்னொரு இனிய செய்தியை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன், நானும் http://jesussavesministry.wordpress.com/ என்ற இணையதள ஊழியத்தை நடத்தி வரும் சகோதரரும், எனது நண்பருமான திரு.பாரத் அவர்களும் இணைந்து பத்திரிகை ஊழியத்தை துவங்க தீர்மானித்திருக்கிறோம். அதற்காக தற்போது ஜெபித்து வருகிறோம். நீங்களும் அதற்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். மிக விரைவில் அதற்கான பணிகளை துவங்க தீர்மானித்திருக்கிறோம். இந்த இணைய தள ஊழியத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இந்த ஊழியங்களுக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்த மாத பத்திரிக்கை பெற விரும்புவோர் உங்கள் பெயர் மற்றும்  முகவரியை எனது  ஈமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். அல்லது சகோதரர் பாரத் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் செய்யலாம். அவரது  மின்னஞ்சல் முகவரி மேற் சொன்ன அவரது தளத்தில் சென்று நீங்கள் அறியலாம்.

தபால் முகவரி.

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்
ஆசீர்வாத இல்லம்.
1/343 AB நகர் செட்டியப்பநூர் போஸ்ட்
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்.


அல்லது

திரு. பாரத்.
295  விண்ணமங்கலம் போஸ்ட்
ஆம்பூர் தாலுக்கா
வேலூர் மாவட்டம்.
635807.

Tuesday, August 23, 2011

நாம் ஆற்றல் மிக்கவர்கள் (காலை மன்னா)

அன்பான உடன் விசுவாசிகளுக்கு எனது இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை. சங்கீதம்.91 :13 

சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

" வாழ்க்கை சவாலானது.... வெற்றி அரிதானது.... அவ்வளவு எளிதில் யாரும் வாழ்வில் உயர்ந்துவிட முடியாது... வெற்றி பெற்றவர்கள் எல்லாரும், பல தடைகளையும், போராட்டங்களையும் தாண்டி, பல தியாகங்கள் செய்த பின்னர்தான் வெற்றி பெற்றுள்ளனர் "... இதுதான் வாழ்வில் உயர நினைப்போருக்கு கிடைக்கிற பதில்.. அது உண்மையும் கூட..


காரணம் இன்று முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்தால் நூறு தடைகள் மலையாக நின்று நம்மை அச்சுருத்துகிறதல்லவா? ஐயோ எவ்வளவுதான் போராடுவது என்று சலிப்பு ஏற்படுகிறதா? இந்த தடைகள் நீங்கவே நீங்காதா? என்று நொந்துக் கொள்ளுகிறீர்களா? மாற்றங்கள் வராதா புது வாழ்வு மலராதா என்று கலங்குகிறீர்களா? கடவுள் வந்து இந்த நிலையை மாற்ற மாட்டாரா என்று கடவுள் மீது கோபப்படுகிறீர்களா?

ஒரே ஒரு முறை மீண்டும் நமது தியான வசனத்தை வாசியுங்கள்.. சிங்கம் பாம்பு இரண்டும் நம்மை அச்சுறுத்துகிற விலங்குகள். நான் ஒருமுறை இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துக் கொண்டிருந்த பொது ஒரு ஆளுயர பாம்பு என் வாகனத்தின் குறுக்கே மின்னல் வேகத்தில் கடந்தது.. ஒரு நிமிடம் என் இதயமே நின்று விடுவதை போன்ற ஒரு பயம் என்னை ஆட்கொண்டதை இப்போதும் என்னால் மறக்க முடியாது..

காரணம் இந்த இரண்டு விலங்குகளுமே நம் உயிரை எளிதில் வாங்கும் வல்லமை கொண்டவை. ஆனால் இவை இரண்டின் மேலும் நீ நடப்பாய். இவை இரண்டையும் நீ மிதித்து போடுவாய் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. நம்புகிறீர்களா? நடக்க வாய்ப்பில்லாத எதையும் வேதாகமம் பேசுவதில்லை. அப்படியானால்  ஏன் இன்னும் தடைகளை கண்டு அச்சம்? இடையூறுகளை கண்டு கலக்கம்?


நீங்கள் இயேசுவை நம்புகிறவர்களா? அப்படியானால் நீங்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறீர்கள்.. அவர் பாதுகாப்பில் இருக்கிற அனைவருக்கும் அவர் உத்தரவாதம் தருகிறார், நீங்கள் என்னிலும் வல்ல காரியங்களை செய்வீர்கள் என்பதே அந்த உத்தரவாதம். ஆம் பிரியமானவர்களே. தடைகளையும், இடையூறுகளையும் தகர்த்தெறிகிற ஆற்றல் நம்மிடத்திலே இருக்கிறது. விசுவாசத்தோடே துணிந்து நில்லுங்கள், வெற்றி மாலை தானாய் வரும்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

Saturday, August 20, 2011

மனம் அமைதி பெற‌ - 2


அன்பான உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள்.. மனம் அமைதி பெற என்ற பதிவில் மன வலிமையின் அவசியத்தை பற்றி கூறினேன். இந்த வாரம் மனம் அமைதி பெற‌ ஒப்புக் கொள்ளல் எவ்வளவு அவசியம் என்பதை காணப்போகிறோம். இரண்டு வேத பகுதிகளை படித்து வைத்துக் கொள்ள சொன்னேன். நியாபகம் இருக்கிறதா? 1சாமுவேல்.17:11 முதல் 50 வரையும், ரோமர்.7:15 முதல் 25 வரையும் படித்து விட்டீர்களா ?   படிக்கவில்லையென்றால் ஒருமுறை படித்துவிடுங்கள்.

(அதற்கு முன் ஒரு சின்ன சாட்சியை சொல்லி விடுகிறேன், நான் சிறுவயது முதலே தமிழ் வழி கல்வியில் தான் படித்தேன், நகராட்சி பள்ளியிலும், அரசு பள்ளியிலும், என் பள்ளி வாழ்வு முடிந்தது, இறையியல் கல்வி கூட தமிழ் மொழியில்தான் கற்றேன். நான் முதன் முறையாக ஆங்கில வழியில் கற்றது நான் சமீபத்தில் பயின்ற போதக ஆலோசனை கல்விதான். என்னால் ஆங்கிலத்தில் கற்று தேர முடியுமா? என்ற அச்சம் இருந்தது. ஆனால் கல்வியும் முடித்தேன், தற்போது 60% மதிப்பெண்களோடு தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். முழுக்க கர்த்தருடைய கிருபை)

வேத பகுதிகளை படித்துவிட்டீர்களா? இந்த இரண்டு பகுதிகளில் முதலில் 1சாமுவேல்.17:11 முதல் 50..  இதில் தாவீது பெலிஸ்திய படைத்தலைவனான கோலியாத்தை கொன்ற சம்பவத்தை காண்கிறோம், இது மிக சாதாரணமாக நடந்த சம்பவம் அல்ல அரசன் முதல் அனைத்து வீரர்களும் அவனை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாவீதோ துணிச்சலோடு நான் அவனோடு போரிடுகிறேன் என்கிறான் அரசனும் அவன் சகோதரர்களும் அஞ்சுகிறார்கள். இங்கேதான் ஒப்புக் கொள்ளலின் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஆம் தாவீது தனக்கிருக்கிற பலத்தை அறிந்திருந்தான்.

தாவீது ஏதோ உணர்ச்சி வேகத்தில் இதை சொல்லவில்லை, பொதுவாக இளங்கன்று பயமறியாது என்போமே அப்படி ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் இதை சொல்லவில்லை. தாவீது தன் பலத்தை முழுதுமாக அறிந்திருந்தான். சவுல் கூப்பிட்டு (17:33) உன்னால் முடியாது வேண்டாம் என்று அறிவுரை சொன்ன போது, மிக தெளிவாக தாவீது அவனுக்கு பதில் தருகிறார். நான் ஆடு மேய்க்கும் போது ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும் கொன்றேன் என்று தன் பலத்தை மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.
ஆம் பிரியமானவர்களே நமக்குள் இருக்கிற பலத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்துவிட்டால், இதுதான் என் பலம் என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். யாராவது உன்னால் இது முடியாது என்றால் முடியும் என்று நேரடியாக சொல்ல வேண்டும். தாவீது அதைதான் செய்தார். சிங்கத்தை கொல்வது சாதாரணமான பலமா? எனவே தாவீது தன் பலத்தை தெளிவாக உணர்ந்து ஒப்புக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் வெறுமனே தன் பலத்தை மட்டுமே நம்பியிராமல் வெற்றியறுளும் கடவுளின் மீது அசைக்க முடியா விசுவாசம் கொண்டிருந்தார். தன் பலத்தால் கோலியாத்தை வெல்லும் வாய்ப்பை கடவுள் தருவார் என்ற அவனது விசுவாசம் மிகப்பெரிய வெற்றியை அவனுக்கு தேடி தந்தது.

எனவே பிரியமானவர்களே, நம் பலம் என்ன? என்பதை தெளிவாக அறுதியிட்டு உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதை முதலில் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுதான் மனம் அமைதி பெற முதல் படி. இப்படி நம் பலத்தை நாம் கண்டறிவதின் மிக முக்கிய பலன் என்னவென்றால் நம்மை யாராவது உன்னால் இதை செய்ய முடியாது என்று சொன்னால் நமக்கு கோபம் வராது. நமக்குதான் நம் பலம் தெரியமே. அதே போல வாய்ப்பு கிடைக்கும் போது அனைவரும் அதிரும் வண்ணம் அதை வெளிப்படுத்துவோம்.

நம் பலத்தை நாம் கண்டறிவது எவ்வளவு முக்கியமோ நம் பலவீனத்தை ஒப்புக் கொள்வதும் மிக முக்கியம் அதைதான் ரோமர்.7:15 முதல் காண்கிறோம். பவுல் எவ்வளவு பெரிய ஊழியர், மரித்தவனை கூட உயிரோடு எழுப்பிய வல்லமையுள்ள ஊழியர். ஆனால் அவர் சொல்லுகிறார்.. நான் நன்மை செய்ய விரும்பினாலும் நான் விரும்பாத தீமையை செய்கிறேன் என்று தன் பலவீனத்தை மிக வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் நாமோ நம் பலவீனத்தை ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. என்னால் முடியாது என்று சொல்ல வெட்கப்படுகிறோம். ஆனால் பவுலோ தன் பலவீனத்தை சொல்ல கொஞ்ச‌ம் கூட வெட்கப்படவில்லை. எனவே நம்மால் முடியாத கரியங்களை முடியாது என்று நேரடியாக சொல்ல வேண்டும். எப்படி நம் பலத்தை மிக தெளிவாக அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டுமோ அதே போல் நம் பலவீனத்தை கண்டறிந்து அதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் பலவீனத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும், அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க முடியும்.

நம் பலத்தையும் பலவீனத்தையும் நாம் அறிந்துக் கொண்டால் நம் மனம் மிகப்பெரிய பலமுள்ளதாகிவிடும். நம் பலவீனத்தை நாம் அறிந்துக் கொண்ட பிறகு யாராவது நமக்கு அதை குத்திக்காட்டினால் நமக்கு ஆத்திரம் வராது. நமக்குதான் நம் பலவீனம் தெரியுமே. அதே போல நம் பலமும் நமக்கு இறுமாப்பை தராது. காரணம் நமக்குதான் நம் பலவீனமும் தெரியுமே...

அதே நேர‌த்தில் ந‌ம் ப‌ல‌வீன‌த்தை அறிந்த‌ பிற‌கு அத‌ற்காக‌ சோர்ந்து போக‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. கார‌ண‌ம் ப‌லவீன‌ம் இய‌ற்கையான‌தே. அதும‌ட்டும‌ல்ல‌ ந‌ம் ப‌ல‌வீன‌த்தில் தாங்குகிற‌ இயேசு ந‌ம்மோடு இருக்கிறாரே. என‌வே தான் ப‌வுல் த‌ன் ப‌ல‌வீன‌த்தை சொல்லிக் கொண்டே வ‌ந்து க‌டைசியாக‌ இயேசுவுக்கு ஸ்தோத்திர‌ம் என்று முடிப்பார். அவ‌ர் ந‌ம்மை ந‌ம் ப‌ல‌வீன‌த்தில் துணை நின்று ந‌ட‌த்துவார்.

அன்பான‌வ‌ர்க‌ளே.. ந‌ம் ப‌ல‌த்தையும், ந‌ம் ப‌ல‌வீன‌த்தையும் ஒப்புக் கொள்வ‌து எவ்வ‌ள‌வு முக்கிய‌ம் என்ப‌தை உணர்ந்துக் கொண்டீர்களா? நம் பலத்திலும் பலவீனத்திலும் கடவுள் நம்மை எப்படி நடத்துகிறார் என்றும் அறிந்துக் கொண்டீர்களா? நம் மனம் வலிமை பெற துவங்கி விட்டது... ஆமேன்.

ஒப்புக் கொள்ளல் இதோடு முடியவில்லை...தொடரும்........

(உங்கள் பிரச்சிணைகளுக்கு வேத வசன ஆலோசனை தேவையா எனது இமெயிலுக்கு எழுதுங்கள்).

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, August 19, 2011

நாம் உயர்வோம் (காலை மன்னா)



அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் காலை ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை,

சங்கீதம்.18:33. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

அன்பானவர்களே, தாவீது இந்த வசனத்தில் சொல்லுகிற ஒரு பேருண்மை, கடவுள் அவருடைய கால்களை மான் கால்களை போல மாற்றினாராம். கடவுள் ஏன் ஒரு மனிதனின் கால்களை மான் கால்களாக மாற்ற வேண்டும்? தாவீது தன் வாழ்வில் அனேக போராட்டங்களை சந்தித்தவர். ஏன் அவர் வாழ்வே போராட்டமாக இருந்தது.. தன் சொந்த அரசனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, தன்னை காத்துக் கொள்ள காடுகளிலும் மலைகளிலும், குகைகளிலும் ஒளிந்து தன் உயிரை காத்துக் கொண்டார். பின்னர் ஒரு பெரும் படை திரட்டி எதிரிகளை வீழ்த்தினார். ஆனால் ஒரு முறை கூட தாவீது தன் எதிரிகளின் கையில் அகப்பட்டதில்லை.

எப்படி தாவீதுக்கு இது சாத்தியமானது? ஒரு சாதாரண குடிமகன் ஒரு சாம்ராஜ்ஜியத்துக்கே சிக்காமல் தன்னை எப்படி காத்துக் கொள்ள முடிந்தது? அதற்கான பதிலைதான் தாவீது கூறுகிறார். கடவுள் அவர் கால்களை மான் கால்களாக மாற்றிவிட்டாராம்.
 
மான் கால்களுக்கு அப்படியென்ன சிறப்பு இருக்கிறது? மான் ஒரு சாதுவான விலங்கு, அழகானதும் கூட. ஆனால் அதற்கு ஆபத்துகள் அதிகம். தன்னை கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள‌ வேண்டிய கடமை அதற்கு உண்டு. ஆனால் எதிர்த்து நின்று போராடி ஜெயிக்கும் திறன் பெற்றவையல்ல மான்கள். எனவே அது தன்னை தற்காத்துக் கொள்ள தப்பித்து ஓடுவதே வழி. அதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது அதன் கால்கள். வேகமாகவும், எப்படிப்பட்ட வழி தடத்திலும் ஓடக்கூடிய திறன் பெற்றவை மான் கால்கள். அதே போலதான் தாவீதும், தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள எங்கெங்கோ ஓடினார், அதற்கு அவரது கால்கள் ஒத்துழைத்தது. கடைசிவரை அவர் வேகத்திற்கு அவரது எதிரிகளால் ஈடுக்கொடுக்க முடியவேயில்லை. அவரே வென்றார்.

அன்பானவர்களே, நம் அனைவரது கால்களையும் மான் கால்களாக்கும் திறன் கொண்டவர் நம் கடவுள். எனவே நம் வாழ்வுக்கு தடையாக நிற்கிற காரியங்களை பற்றி நினைத்து நினைத்து சோர்வடைவதை விடுத்து, அதிலிருந்து தப்பிக்கும் திறனையும், வெற்றி பெறும் சாத்தியத்தையும் உண்டாக்கிக் கொடுக்கிற கடவுளை விசுவாசத்தோடு நோக்குவோம். நம்மை வலையில் வீழ்த்த எத்தனை சக்திகள் சூழ்ந்தாலும் சிக்காமல் நழுவி போகும் கால்களை பெறுவோம்.. முடிவில் நாமே வெல்வோம்... ஆமேன்.
 

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

Thursday, August 18, 2011

அற்புதர் இயேசுவே துணை.



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய அன்பான ஸ்தோத்திரங்கள். ஆண்டவர் மிகவும் அற்புதமாய் வழி நடத்துபவர். என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறேன். இது இயேசுவை நம்புவோர் ஒவ்வொருவரும் அனுபவிப்பதே. நமது தளம் சார்பாக நாம் துவங்கிய சிறுவர் ஊழியம் நான் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. பொன்னேரி என்ற கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சகோ.இம்மானுவேல் என்பவர் ஏழை பிள்ளைகளுக்கான ஒரு விடுதி நடத்தி வருகிறார், அதில் நம் சிறுவர் நிகழ்ச்சி நடத்த தானே முன் வந்து கேட்டுக் கொண்டார்.

அவரது அழைப்பை ஏற்றேன், ஆனால் என்னிடத்தில் உடனடியாக அதற்கான பணம் இல்லை, காரணம் நான் இதை வசன மற்றும் கலை ஊழியமாக மட்டுமல்ல ஏழை பிள்ளைகளின் தேவையில் பங்கெடுக்கும் ஊழியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே பணம் இல்லாமல் அதை நடத்த முடியாது. அந்த இடத்தை அடைவதற்கு வாகன வசதியும் குறைவு. ஆனால் நான் முழு விசுவாசத்தோடே இருந்தேன், அப்போதுதான் சகோ.பாரத் அவராகவே என்னை அழைத்து என்ன‌ங்க பாஸ்டர், எதாவது வேணும்னா எங்கிட்ட கேளுங்க என்றார், உண்மையில் நான் ஆச்சரியமானேன், இந்த ஊழியத்தின் தேவை, அவருக்கு எப்படி தெரியும்? அவரை என்னிடம் கேட்க சொல்லி அவரை உள்ளத்தில் தூண்டியது யார்? ஆனாலும் நான் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவரே 1000 ம் ரூபாய் கொடுத்தார், அதுதான் முதல் பணம் இன்னும் குறைந்தது எனக்கு 6000ம் ரூபாய் தேவை ஆனால் அதற்கு பின் கர்த்தர் என்னை அற்புதமாய் நடத்தினார்,

நான் தற்போது ஆம்பூரில் நேத்தர் மெமோரியல் லுத்தரன் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறேன், அங்கே எனது முதல் சம்பளத்தை வாங்கினேன், எவ்வளவு தெரியுமா? என் தேவையான 6000ம் ரூபாய். உடனே விரைவாக பணிகளை துவங்கினேன். ஊழியம் தடையின்றி வெகு சிறப்பாக முடிந்தது. ஒவ்வொரு பிள்ளைக்கும், ஒரு நோட்டு, ஒரு பேனா, ஒரு பென்சில், ஒரு சோப்பு, ஒரு டெய்ரி மில்க் சாக்லெட் போன்றவை தாராளமாக கொடுக்க முடிந்தது. அது மட்டுமா? வாகன வசதி இல்லா அந்த இடத்திற்கு எப்படி போவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் என் குழுவோடு ஒரு ஆமினி வேனில் போய் இறங்கினோம், ஆம் என் மாமா ஒருவர் தன் வாகனத்தை அவரே ஓட்டிக் கொண்டுவந்து எங்களை சேர்த்து பின் அழைத்துக் கொண்டு வந்தார்.

இதோடு இந்த அற்புதம் முடியவில்லை, நிகழ்ச்சி நடக்கும்போதே, என் தந்தை என் மாமனார்,மாமியார், என் சகோதரி ஆகியோர் இந்த ஊழியத்திற்காக தங்களால் இயன்றதை கொடுத்தனர். நிகழ்ச்சி முடிந்து செலவு கணக்கு பார்க்கும் போது அதிர்ந்தே போனேன், காரணம் என்ன தெரியுமா? என் கையில் மீதி பணம் 5000 ரூபாய் இருந்தது. எவ்வள‌வு ஆச்சரியம்?

இப்போது அடுத்த‌ நிக‌ழ்ச்சிக்கு ஆய‌த்தமாகிவிட்டேன், அதை இன்னும் சிற‌ப்பாக‌ ந‌ட‌த்த‌ திட்ட‌மிடுகிறேன், என்னை ந‌ம்பிய‌ல்ல‌ ஆண்ட‌வ‌ரை ந‌ம்பி. இன்னொரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம், இந்த‌ நிக‌ழ்ச்சிக்கான‌ புகைப்ப‌ட‌ங்களை நாச்சார்குப்பம் கிறிஸ்து ராஜா லுத்த‌ர‌ன் ச‌பையின் செய‌ல‌ர் திரு செல்வ‌ம் அவ‌ர்க‌ள் எடுக்கிறார், அவ‌ர் ஒரு புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ர். இந்த‌ ஊழிய‌த்திற்காக‌ த‌ன் தொழிலை கூட‌ விட்டுவிட்டு ஓடி வ‌ருகிறார். இதுவ‌ரை ஒரு ரூபாய் கூட‌ அத‌ற்காக‌ வாங்க‌வில்லை, நானும் இந்த‌ ஊழிய‌த்தில் ஒரு அங்கம் என்கிறார். எவ்வளவு பெருந்தன்மை.

பிரியமானவர்களே இது என் அனுபவம், ஆண்டவர் நடத்துகிறார், இதை விசுவாசித்தால் போதும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். உங்கள் தேவைளையும் விசுவாசத்தோடு கேளுங்கள்.. பெற்றுக் கொள்ளுவீர்கள். தொடர்ந்து ஊழியத்திற்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, August 17, 2011

சிறுவர் கொண்டாட்டம் பொன்னேரி ( 4 )

அன்பானவர்களே, வெற்றிகரமாக நான்காவது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி, 30 .07 .2011  அன்று பொன்னேரி என்ற கிராமத்தில் உள்ள விடுதியில் நடத்தப்பட்டது.  அங்கு மொத்தம்௦௦௦ 60 பிள்ளைகள் இருந்தனர். பிள்ளைகள் மிகவும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை ஒரு குழந்தை தானாக முன் வந்து வெகுவாக பாராட்டியது எங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கான புகைப்பட தொகுப்பை காணுங்கள். தொடர்ந்து இந்த ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள்.


Friday, August 12, 2011

வெறுப்போரும், அழிக்க நினைப்போரும், ஆயிரம் பேர் இருக்கலாம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு இனிய ஸ்தோத்திரங்கள். பொதுவாக நம் குடும்பங்களில் கடைசியாக பிறக்கிற குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு பாசம் அதிகம். அந்த குழந்தையை கடைக்குட்டி என்று செல்லமாக அழைப்பார்கள் அக்குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான ஒரு விஷயம்.

வேதாகமத்தில், யாக்கோபுக்கு அவன் பிள்ளைகளில் யோசேப்பின் மீது அதிக பாசம் அத்ற்கான காரணம் ஆதியாகமம் 37ம் அதிகாரம் 3 வது வசனம் கூறுகிறது. யோசேப்பு யாக்கோபின் முதிர் வயதிலே பிறந்தவன். எனவே யாக்கோபு யோசேப்பின் மீது அதிக பாசம் கொண்டிருந்தான். அது அவனுடைய‌ மூத்த சகோதரர்களுக்கு பெரிய எரிச்சலை உண்டாக்கியது.

அதுமட்டுமல்லாமல் யோசேப்பை, அவனுடைய சகோதரரெல்லாம் பணிவதாக கனவு கண்டு, அதை தன் சகோதரர்களிடத்திலேயே கூறினான். இது அவர்களை மூர்க்கமடைய வைத்த‌து. அவனை கொலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு மூர்க்கமானார்கள். சின்ன பையன் தங்களை விட உயர்வான் என்று சொன்னால் யாரால்தான் ஏற்றுக் கொள்ளமுடிகிறது?

காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிற தன் சகோதரர்களை காண தந்தையின் கட்டளைப்படி புறப்பட்டு போனான் யோசேப்பு ஆனால் அவன் சகோதரர்களோ, அவனை அடித்து உதைத்து பாழுங்கிணற்றில் தள்ளி, கடைசியில் அரேபிய வியாபாரிகளுக்கு விற்றார்கள், அவர்களோ அவனை எகிப்தில் உள்ள அரண்மனை ஊழியனான போத்திபாரின் வீட்டில் விற்றனர்.

ஆனால் அங்கே தான் அவன் வாழ்வில் அனேக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தது. அவன் எஜமான், வேலைக்காரனாகவும், வீட்டு விசாரிப்புக்காரனாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக தன் சொத்துக்கள் அனைத்தையும் பராமரிக்கும் தகுதியையும் அவனுக்கு கொடுத்தான்,

அவன் சொந்த சகோதரர்கள் இவனை அழிக்க பார்த்தார்கள், ஆனால் யாரோ ஒருவன் அவனை தன் வீட்டின் அதிபதியாக வைக்கிறான். எப்படி இந்த மாற்றம். வேதாகமம் சொல்லுகிற காரணம், அவனோடு கர்த்தர் இருந்தார். ஆதியாகமம்.39:3.

அன்பானவர்களே, நம்மை வெறுப்போரும், அழிக்க நினைப்போரும், ஆயிரம் பேர் இருக்கலாம்,ஒரே ஒருவர் நம்மோடிருக்கிறார். அவர்தான் வெற்றியருளும் ராஜா.  யூத ராஜசிங்கம், நாம் வாழ தன்னுயிரை கொடுத்தவர். ஆண்டவராகிய கிறிஸ்து. ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

 

Monday, August 8, 2011

தோற்றுவிட வாய்ப்பே இல்லை

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், இயேசுவை நம்புவோர் யாரும் வாழ்வில் தோற்றுவிட வாய்ப்பே இல்லை. காரணம் அவர் நம்மோடு எப்போதும் இருக்கிறார். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதுமில்லை என்று சொல்லி நம் பக்கத்திலேயே இருக்கிறார். அவர் எப்படி நம் பக்கத்தில் இருக்கிறார்? யாராக நம் பக்கத்தில் இருக்கிறார்? அதற்கான பதில்களை சில வசனங்களில் உங்களுக்கு விளக்குகிறேன்.

ஏசாயா.66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.


அன்பானவர்களே இந்த வசனத்தின் மூலம் கடவுள் நமக்கு தாயாக இருக்கிறார் என்பதை உணருகிறோம், பொதுவாக தாயை பிரிந்து தூர இடத்தில் படிக்கிறவர்கள், வேலை செய்கிறவர்கள், தாய் பக்கத்தில் இல்லாததால் மிகவும் சோர்ந்து போவார்கள். என் தாய் என் பக்கத்தில் இருந்தால் எனக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும் என்று வருந்துவார்கள். தாயை இழந்தவர்கள் நிலை இதனினும் கொடியது. ஆனால் அன்பானவர்களே. இயேசு ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் தாயாக இருக்கிறார்.

மத்தேயு.6:32  இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

ஆம் பிரியமானவர்களே தந்தை அருகில் இல்லையே, என் தேவைகளை உடனே யார் நிறைவேற்றுவார் என்று வருத்தத்தோடு இருப்பவர்களா நீங்கள். இந்த வசனத்தில் ஆண்டவர் கடவுளை தந்தை என்று குறிப்பிடுகிறார், எப்படிப்பட்ட தந்தை நம் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகிற தகப்பன். ஆம் அன்பானவர்களே நம் பரம தந்தை நம்மோடே இருக்கிறார். நம் தேவைகளை நிறைவேற்றுகிறார்.

மத்தேயு.12:50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

அன்பானவர்களே எவ்வளவு அருமையான வார்த்தைகளை ஆண்டவர் கூறுகிறார். யார் கடவுளின் சித்தபடி செய்கிறார்களோ அவர்கள் என் சகோதரன், சகோதரி, தாய் என்று கூறுகிறார். அப்படியானால் சகோதர ஆதரவு இல்லையே என்று நாம் வருந்த தேவையில்லை. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்போம், அப்படியானால் ஆண்டவரே நம் சகோதரனாக இருக்கிறாரே, அது மட்டுமா? பிள்ளைகளை பணியின் நிமித்தமாக, கல்வியின் நிமித்தமாக, வேறு காரணங்களால் பிரிந்து வாடுகிற வயதான பெற்றோருக்கு நானே பிள்ளை என்கிறாரே. ஆம் அவர் சித்தபடி செய்யும் பெரியோர் அவருக்கு தாயாகவும் தந்தையாகவும் உள்ளனர். அவரே பிள்ளையாய் முன்னின்று அவர்கள் தேவையை நிறைவேற்றுவார்.

யோவான்.15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இந்த வசன‌த்தில் ஆண்டவர் இன்னும் ஒருபடி மேலே போய் நம்மை சினேகிதர் என்கிறார். ஆம் நம்மை அவருடைய நண்பர்கள் என்கிறார். இனி நமக்கும் ஆண்டவ்ருக்குமிடையே அந்த பாகுபாடும் இல்லை. உடுக்கை இழந்தவன் கை போலாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவரின் வாக்கு படி நல்ல நண்பனாக நம் துன்பங்களை நீக்கி நம்மை காத்தருள்வார். அவர் தோளில் சாய்ந்து நம் தேவைகளை உரிமையோடு சொல்லலாம்.

அன்பானவர்களே, நாம் எப்போதுமே தனியாக இல்லை, காரணம், அவர் தாயாக, தகப்பனாக, சகோதரனாக, சகோதரியாக, ஏன் பிள்ளையாக, நண்பனாக நம்மோடே இருக்கிறார். அப்படியானால் இயேசு நம் குடும்பத்தில் ஒருவரல்ல, அவர் குடும்பத்தில் நாம் ஒரு அங்கத்தினராக இருக்கிறோம். சந்தோஷமாக இருப்போம். கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால் நம்மை எதிர்த்து நிற்கக் கூடியவன் யார்?

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, August 4, 2011

ஓடுவோம்.


எபிரேயர்.12:1

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமான இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.

திரியேக கடவுளின் நாமத்தில் வாழ்த்துக்கள், கிறிஸ்தவ வாழ்வு ஓர் ஓட்டம். இருப்பதல்ல, நிற்பதல்ல, நடப்பதல்ல. நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பவுல் ஒட்டத்தை முடித்தேன் என்றும், திமோத்தேயுவை பார்த்து, நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு என்றும் கூறுகிறார்.

இயேசு ஆண்டவரும் நமக்கு முன்னோடினவர் என்று இந்த நிரூபத்தில் வாசிக்கிறோம். அதுபோல் நாமும், இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து ஓடவேண்டும். பொறுமையுடன் ஓடவேண்டும்.

ஓட்டம் என‌பது, வாழ்வு. கிறிஸ்துவை போல் வாழ‌ வேண்டும். கிறிஸ்துவை பின்ப‌ற்ற‌ வேண்டும். இயேசு ஆண்ட‌வ‌ர், ந‌ம‌க்கு முன் மாதிரியாவ‌ர். அவ‌ர் விசுவாச‌த்தை ந‌ம்மை போல் வெறும‌னே அறிக்கை செய்த‌வ‌ர‌ல்ல‌ செய‌ல்ப‌டுத்திய‌வ‌ர். அவ‌ர் பிதாவினிட‌த்தில் அன்பாயிருந்தார். ம‌னித‌ர்க‌ளிட‌த்திலும் அன்பாயிருந்தார். க‌ட‌வுளின் திருவுள‌ சித்த‌த்தை நிறைவேற்றினார்.

ச‌மூக‌த்தில் வாழ்விழ‌ந்த‌ அனைவ‌ரையும் ச‌ந்தித்தார், வாழ்வ‌ளித்தார். நீங்க‌ளும் நானும் எப்ப‌டி இருக்கிறோம்? ம‌னிதனாய் ஆல‌ய‌த்திற்குள் போய் புனித‌னாய் வ‌ர‌ வேண்டும். இயேசுவை போல் ந‌ம‌க்கு முன் வைத்திருக்கிற‌ ச‌ந்தோஷ‌த்தின் பொருட்டு, துன்ப‌த்தை ஏற்றுக் கொண்டார். ஓடுவோம் ஓடுவோம்.. இயேசுவை போல் ஓடுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு, G .மில்டன் அருண்ராஜ்
revmilton1982@gmail.கம

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
 

Tuesday, August 2, 2011

மனம் அமைதி பெற‌

அன்பான உடன் விசுவாசிகளே, இன்று முதல் இந்த தளத்தில், கர்த்தருடைய பெரிதான கிருபையால், ஆலோசனை பக்கத்தை துவக்குகிறேன். இதன் நோக்கம் நம் மன வளம் பெருக வேண்டும் என்பதே.


இன்று மனிதர்கள் செல்வத்திலும், வளத்திலும் குறைவில்லாமல் பெருகி வருகிறார்கள், ஆனால் மனோ திடம் என்பது மிகவும் குறைந்து வருகிறது. தற்கொலைகள், கொலைகள், வன்புணர்வுகள், வன் முறைகள், தீவிரவாதங்கள், மிகவும் வேகமாய் அதிகரித்து வருகிறது. இவைகளெல்லாம் மனிதனின் மனம் வலிமையில்லாமல் இருக்கிறது என்பதையும், மன வலிமை பெறுவதற்கான சரியான வழிக் காட்டுதல் இல்லை என்பதையும் காண்பிக்கிறது.

நான் ஆலோசனை வழங்கும் பயிற்சி பெற்றவன் என்பதால், மன வலிமை பெற வேதாகமத்தின் அடிப்படையிலும், மனோதத்துவ அடிப்படையிலும், சில யுக்திகளை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய மனம் என்பது இறைவன் நமக்கு அருளியிருக்கிற அற்புதமான கொடை. இந்த மனம் வலிமையோடு இருந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்துவிடலாம். அதாவது உடல் வலிமை ஒரு மனிதனின் அரோக்கியமான வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மன வலிமை முக்கியம்.


உதாரணமாக 1990 களில் இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த வீரராக சச்சின் டெண்டுகல்கர் ஜொலித்தார். அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியை ஒன் மேன் ஆர்மி என்று விமர்சகர்கள் வருணித்தார்கள், காரணம் சச்சின் ஆட்டமிழ்ந்துவிட்டால் மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிடுவர். காரணம் சச்சினே ஆட்டமிழந்துவிட்டார் நாம் அவ்வளவுதான் என்ற மன் பயம் தான் காரணம்.
ஆனால் இப்போதைய இந்திய அணியில் அப்படி ஒரு பயம் இல்லை. காரணம் இதற்காகவே ஒரு மனோதத்துவ நிபுணரை அணிக்கு நியமித்துள்ளனர். அவருடைய உற்சாகத்தினால், அனைவரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர். இதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற மன வலிமை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடிகிறது.

அப்படியானால் மனம் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்? முதல் வழி "ஒப்புக்கொள்ளல்"(ACCEPTANCE). இதை பற்றி விரிவாக அடுத்த வாரம் காண்போம். அதுவரை 1சாமுவேல்.17:11 முதல் 50 வரையும், ரோமர்.7:15 முதல் 25 வரையும் வாசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

(உங்கள் பிரச்சிணைகளுக்கு வேத வசன ஆலோசனை தேவையா எனது இமெயிலுக்கு எழுதுங்கள்).

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews