WORD OF GOD

WORD OF GOD

Monday, January 31, 2011

காலை மன்னா 30.01.2011

அன்புள்ளவர்களே காலை ஸ்தோத்திரங்கள், இன்றைய தியான வசனம். சங்கீதம்.136 :1

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது

நம்  வாழ்வுக்கு நன்மை செய்கிற கடவுளுக்கு நன்றி செலுத்துவது நம்முடைய வாழ்வில் நாம் பெற்றுக்கொள்கிற  பாக்கியமான நேரம். நாம் நம்முடைய கடவுளுக்கு நன்றி செலுத்த அனேக காரணங்கள் இருக்கிறது, அதிலே மிக முக்கியமான ஒரு காரணம், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய காலையை ஜீவனோடு காண்கிற பாக்கியத்தை நமக்கு தருகிறாரே அதற்காக ஒவ்வொரு காலையும் நான் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இங்கே சங்கீதகாரர் கர்த்தருக்கு  நன்றி செலுத்த இரண்டு காரணங்களை சொல்லுகிறார் ஒன்று அவர் நல்லவர்  என்பதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்கிறார், அவர் நல்லவரால் இருப்பதால் தானே ஒவ்வொரு நாளும் நன்மைக்கு நேராக நம்மை வழி நடத்துகிறார் ,  நம் ஜீவனுக்கும் சரீரத்திற்கும் தேவையானவைகளை, குறைவில்லாமல் கொடுத்து வருகிறார், எனவே நல்லவராக இருந்து இந்த காலையையும் நம்மை ஜீவனோடும் சரீர ஆரோக்யத்தொடும், காண செய்த கடவுளுக்கு நம் உதடுகளின் கனியாகிய நன்றியை ஏறெடுப்போம்.

இரண்டாவது காரணம் அவர் கிருபை என்றுமுள்ளதால் நன்றி செலுத்த கூறுகிறார். கடவுளுடைய கிருபை உள்ளவரை இருப்பதால் மாத்திரமே அவர் நமக்கு நன்மை செய்கிறார், காரணம் நம்மை மண் என்று அறிந்திருக்கிறார், அவரிடத்தில் இருந்து கேட்டு பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவர்களல்ல நாம், பாவத்தினாலும் பாவ சுபாவத்தினாலும், அவரை விட்டு நாம் வெகு தூஎரம் பிருந்து வந்துவிட்டவர்கள் நாம், ஆனாலும் தன் சொந்த குமாரனான  இயேசு கிறிஸ்துவை அனுப்பி நம்மை அவருடைய சொந்த் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு, அவருடைய சுத்த கிருபையால் ஜீவனோடும்  ஆரோக்யத்தொடும் நம்மை காத்து வருகிறார்.

எனவே இந்த காலையை நாம் கண்டதற்கு காரணம் கடவுள் நல்லவராகவும் கிருபையுள்ளவராகவும் இருப்பதால் மட்டுமே, எனவே ஒரு கணம் நின்று உள்ளத்தின் ஆழத்தில்  இருந்து நன்றி சொல்லி இந்த நாளை துவங்குவோம் அதுவே நம் வாழ்வை காக்கும், ஆமென் .

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

Saturday, January 29, 2011

என் இதயத்திலிருந்து



அன்பானவர்களே கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் ....

 இந்த தளத்தை நான் உருவாக்க காரணம் இறைவனின் நாமம் மகிமையடைய வேண்டும் என்பதே, ஆனாலும் இந்த தளம் அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே இந்த நோக்கம் நிறைவேறும். எனவே இதை எப்படி அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது என்று நான் யோசித்த வேளையில் என் உற்ற  நண்பரும், என் சகோதரருமான அண்ணன் அருள்திரு கிளாட்சன் அவர்கள் இதை அனைவருக்கும்  அறிமுகப்படுத்தும் வகையில் தன் சொந்த செலவில் 1000  கை பிரதிகளை அச்சிட்டு கொடுத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் இதயத்திலிருந்து நன்றிகள். இதை பதிவிட வேண்டாம் என்று அவர்  கேட்டுக் கொண்டாலும் அன்பின் நிமித்தம் இதை நான் பதிவிட வேண்டியுள்ளது.

அருள்திரு S . ராஜகம்பீரம் முன்னாள் பெருந்தலைவர் I .E .L .C   அவர்கள் கடந்த  26 ம் தேதி நடந்த வாலிபர்  எழுச்சி விழாவில் இந்த என்னுடைய முயற்ச்சியை ஜெபித்து ஆசீர்வதித்தார் அவருக்கு என் மனமார்ந்த  நன்றிகளை என் இதயத்திலிருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரி மேரி கேதலின் அவர்களே உங்கள் கருத்துரை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது உங்களை இந்த தளத்தில் மனமார வரவேற்கிறேன், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். உங்கள் பாராட்டுகளுக்கு இதயத்திலிருந்து நன்றிகள்.

பெயர் போடாமல் கருத்துரையிட்டிருக்கிரவருக்கு  என் நன்றிகள். தயவு செய்து உங்கள் பெயரை பதிவிட்டால் அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாகும்.

தளத்தை பார்வையிடும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அதுதான் எனக்குள்  ஆண்டவருக்காய் உழைக்கும் ஆர்வத்தை அதிகமாக்கும், உங்கள் ஆதரவின்றி இதை என்னால் தொடர முடியாது.

எந்த வியாபார நோக்கமும் இல்லாத இறைப்பணி ஊழியமாக இது இருக்கும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இதய பூர்வ நன்றிகளுடன்

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

காலை மன்னா 29.01.2011



அன்பான உடன் விசுவாசிகளே காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய தியானம் மீகா.7 :15

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

மீகா தீர்க்கர் இஸ்ரவேல் மக்களின்  பாவங்களை கடுமையாக விமர்சித்தவர், கொடிய தண்டனை வரும் என்று எச்சரித்தவர்.  அதே நேரத்தில் அவர்களுக்கு வரப்போகிற மீட்பையும் முன்னறிவித்தார்,

இந்த வசனம் இஸ்ரவேலர்களுக்கு வரப்போகிற மீட்பை முன்னறிவிக்கிற வசனம். அதாவது பாவம் செய்த இஸ்ரவேலர் மனந்திரும்பும்போது கடவுள் அவர்களை எப்படி நடத்துவார் என்பதை குறிப்பிடுகிறார்.

எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளிலே நடந்தது போலவே உன்னை அதிசயங்களை காணப்பன்னுவேன் என்கிறார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து எப்படி  அதிசயமாய்   புறப்பட பண்ணினார்?  அடிமைத்தன நுகம் தாங்க முடியாமல் தினந்தோறும்  கண்ணீரோடும் கவலையோடும் என்ன செய்வது? எப்படி தப்பிப்பது? என்று தெரியாமல் பயந்து பயந்து வாழ்ந்து வந்த காலம் அது,  மோசே போய் அவர்களுக்கு உதவி செய்ய எகிப்தியனை கொன்ற பிறகும் கூட அவனை நம்ப முடியாமல் அவனை ஏற்றுக்கொள்ளாமல் அவனையே அரசனிடம் சிக்க வைத்தனர், காரணம் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற தெளிவான முடிவெடுக்கக்கூட முடியாத கனத்த இதயத்தோடு வாழ்ந்த  காலம் அது.

அடிமைகளாகவே வாழ்ந்து வாழ்ந்து போர் செய்யவோ எதிர்த்து நிற்கவோ தெரியாமல், அவ்வளவுதான் கதி என்று ஆண்குழ்ந்தைகளை எல்லாம் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக நின்ற காலம் அது. கடவுளை கூப்பிடுவதை தவிர வேறு எந்த யுக்தியும் தெரியாத ஜனமாய் அவரை கத்தி, கத்தி கூப்பிட்டு கொண்டிருந்த காலம் அது.

இந்த நிலையில் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார் கடவுள், எகிப்து என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எதிர்க்க இந்த சின்ன கூட்டத்தை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேவைக் கொண்டு வழி நடத்த ஆரம்பித்தார், இவர்களை அனுப்பினால் தான் தேசம் பிழைக்கும் என்று எகிப்திய அரசன் வேறு வழியே இல்லாமல் அவனே அனுப்புகிற நிலையை கடவுள் உண்டாக்கினார்.

அது மட்டுமா? வழியில் சந்தித்த அத்தனை போரிலும் போர் பயிற்சி என்றால் என்னேவேன்றுக் கூட தெரியாத இந்த ஜனத்தை, உன் பாளையத்தின் நடுவில் நான் இருக்கிறேன் என்று துணிவு சொல்லி அவர்களுக்காக இவர் யுத்தம் பண்ணி ஜெயிக்க வைத்தார்.

உன்னை அதே அதிசயங்களை காண செய்வேன் என்று கடவுள் மீகா தீர்க்கரின் வழியாக நமக்கு தைரியம் ஊட்டுகிறார், நம்மிடத்தில் என்ன இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுவதை விட, இஸ்ரவேலை அதிசயமாய் நடக்க பண்ணின இறைவனின் துணை எனக்கு இருக்கிறது, இனி எல்லாம் ஜெயமே  என்ற மேலான நம்பிக்கையில் இந்த நாளை நாம் துவங்க இறைவன் அருள் புரிவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு .கில்பர்ட் ஆசீர்வாதம்

Friday, January 28, 2011

காலை மன்னா 28.01.2011




உடன் விசுவாசிகளுக்கு காலை நேர வாழ்த்துக்கள். இன்றைய தியான வசனம் பிலிப்பியர் .4 :4

 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

பவுல் பிலிப்பு திருச்சபைக்கு எழுதிய இந்த நிருபத்தில் அவர் வலியுறுத்துகிற பிரதான உபதேசம், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்பதே, எனவே இந்த நிரூபத்திற்கு சந்தோஷ நிரூபம் என்ற பெயரும் உண்டு.

எப்பொழுதும் சந்தோஷமாய்  இருக்க வேண்டும் என்று கூறுகிறார், உண்மையில் ஒரு மனிதனால் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க முடியுமா?  அழ ஒரு காலம் சிரிக்க ஒரு காலம் உண்டு என்று பிரசங்கி கூறுகிறாரே அப்படி இருக்கும்போது எப்போதுமே சிரித்து மகிழ்கிற வாழ்க்கை சாத்தியமாகுமா?

துன்பங்களும் துயரங்களும், போராட்டங்களும் நிறைந்த இந்த வாழ்வில், தினந்தோறும் எதிர்ப்புகளின் மத்தியில் நன்மைகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிற வாழ்வில் எப்படி நம்மால் சந்தோஷமாய் இருக்க முடியுமா? ஆனால் பவுல் சந்தோஷமாய்  இருங்கள் என்று கூறுகிறார்.  பவுல் எப்போதுமே இப்படி சாத்தியமே இல்லாத விஷயங்களை பற்றியே பேசுகிறாரே  என்ற சந்தேகம் அவர் நிரூபங்களை படிக்கிற நம் அத்தனை பேருக்குமே தோன்றும்.

ஆனால் பவுல் கூறுகிற எந்த விஷயங்களும் சாத்தியமில்லாத விஷயங்கள் இல்லை காரணம். இவை பவுலின் வார்த்தைகள் இல்லை நம்மை உண்டாக்கி வாழ்வித்து, கிறிஸ்துவைக் கொண்டு நம்மை மீட்ட சர்வ வல்லவரின் வார்த்தைகள். எப்படி எல்லா நேரத்திலும் சந்தோஷமாய் இருக்க முடியும் என்பதையும் பவுல் கற்றுத் தருகிறார்.

6 ம் வசனத்தில் உங்கள் வேண்டுதல்களை  எல்லாம் கவலை படாமல் இறைவனுக்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது தேவ சமாதானம் உங்களை ஆட்கொள்ளும் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார். 

நம்முடைய போராட்ட வாழ்வில் சந்தோஷமாய்   வாழ்வது சிரமம் தான் ஆனால்  துக்கத்தை சந்தோஷமாய்  மாற்றுகிற இறைவனிடம் நம் வேண்டுதலை சொல்லிவிடும்போது அவர் பார்ர்த்துக் கொள்கிறார். உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்  என்று நம்மை தாங்குபவர் அல்லவா அவர்,

எனவே நம் விண்ணப்பங்களை கிறிஸ்துவின் மூலமாய் இறைவனுக்கு தெரியப்படுத்தி, இந்த காலையை சந்தோஷமாய் தைரியமாய்  துவங்குவோம்.. சந்தோஷமும், சந்தோஷ பொலிவும் நம் முகத்தில் தெரிய தக்கதாய் நம் பணிகளை துவங்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்,
அருள்திரு.கில்பர்ட் ஆசிர்வாதம்.

Thursday, January 27, 2011

கவிதை பூ

இயேசு எனது தந்தை

இயேசு எனது அப்பா!
அவர் மடியில்
தவழும்
நான் ஒரு மழலை,
                                             
                                                                 
நான் அருந்திய பால்
அம்மா பால் அல்ல,
அப்பா பால்!
அவரது குருதி,
எனது தாய் பால்!

அதனால் என்னை
அப்பா பிள்ளையா?
அம்மா பிள்ளையா?
என்று யார் எப்போது
கேட்டாலும்
தப்பாது சொல்வேன்,
நான்
அப்பா பிள்ளைதான்!

என் அப்பாவின்
இதயம் ஓர்
வெள்ளைத் தாள்!
அதில்
பாவம் என்னும்
என் எழுதுகோல்
கீரியதுண்டு,
காயங்களை அவர்
பெற்று,
மீட்பு என்ற
சுகத்தை,
எனக்கு அளித்தார்!
அவர் எனக்கு
இரட்ச்சிப்பு "பூ"
வாங்கித் தந்தார்!

அவர் சொல் புதிது!
செயல் புதிது!
புதியதோர்
ஆண்டு
பூத்தது

இந்த புதிய ஆண்டில்,
அவர்
அன்னையாய்-தந்தையாய்,
அன்பராய்-நண்பராய்,
ஆசானாய்,
ஆலோசனை கர்த்தராய்,

புரிகிறது!
அவர் என் அப்பா!
நான்
அப்பா பிள்ளை!

மகிழ்ச்சி பொங்க,
மனநிறைவு
பூத்து பொங்க,
இன்பம் நிலைக்க,
என் இயேசு
எப்போதும்
இப்புத்தாண்டில்
எனக்கு வேண்டும்!

ஏனெனில் என்றும்
நான் அப்பா பிள்ளை தான்.

கவிதை பூ சூடியவர்

திரு ஆ.ஏசையன்.  கவிஞர்

காலை மன்னா 27.01.2011

எனதருமை ஆண்டவருடைய பிள்ளைகளே உங்கள் யாவருக்கும் எனது காலை நேர
ஸ்தோத்திரங்கள். இந்த நாளின் காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை,   உபாகமம் . 33-27

 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.



இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடவுளுடைய பலத்தினால் விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிற கானானை நெருங்கிக்கொண்டிருக்கிற நேரத்தில், மோசே தன் இறுதிக்காலத்தை நெருங்கி விட்டார்,

தன் மரணத்தை உணர்ந்த மோசே இஸ்ரவேல் மக்களை அழைத்து ஆசீர்வாதமாய் கூறுகிற வார்த்தைகளே 33 வது அதிகாரம். காரணம் மோசே இல்லாமல் கானானை நோக்கி நடக்கிற துணிச்சல் இஸ்ரவேல் மக்களுக்கு இல்லை. பொறுமையாகவும், வல்லமையாகவும், தைரியமாகவும், கடவுளுடைய  பெலத்தினாலும் மிக சிறப்பாக வழி நடத்தி வந்த தலைவர் இனி நம்மோடு வரமாட்டார் என்பது இஸ்ரவேல் மக்களை அசைக்க கூடிய செய்தி.

தங்கள் தைரியத்தையும், விசுவாசத்தையும் இழந்துப் போகக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது, மோசேவை விட சிறந்த தலைவனை அந்த நேரத்தில் அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எனவே  அவர்களை அழைத்து, அவர்களை தைரியமூட்டுகிற வசனங்களில் ஒரு வசனம் தான் நம்முடைய தியானப் பகுதி.

இந்த வசனத்தில் மோசே கூறுகிற செய்தி, தேவன் உனக்கு அடைக்கலம், அவருடைய புயம் உனக்கு ஆதாரம், அதாவது இதுவரை இஸ்ரவேலர்களை பாதுகாக்கும் அடைக்கலமாக இருந்தது நானல்ல கடவுள் என்கிறார், மாத்திரமல்ல, உங்களை மழையிலும், வெயிலிலும் ,  குளிரிளுமிருந்தும், எதிகரிளினால் உண்டான பயங்கர ஆபத்துகளிலிருந்தும் உங்களை விடுதலையாக்கி வழி நடத்தியது நானல்ல வல்லமையுள்ள கடவுளின் தோள்களே இதை செய்தது என்கிறார்.

தொடர்ந்து அவரே உனக்கு முன் சென்று உன்னை நடத்துவார் என்றும், உன் சத்துருக்களை துரத்துவார்  என்றும் மிக தெளிவாக இஸ்ரவேலர்களை தைரிய படுத்துகிறார், காரணம் நடத்துபவர் கடவுள். மோசேவை  நம்பியல்ல அவரை நம்பி போங்கள் என்று  உற்ச்சாகப்படுத்துகின்றார் .

நம்முடைய வாழ்விலும் இந்த உலகத்தின் ஆபத்துக்களிலும், தீவினைகளிலும் நம்மை பாதுகாத்து நடத்துகிற சக்தி அவர் ஒருவருக்கு மாத்திரமே உண்டு.

எனவே ஒன்றை மாத்திரம் நாம் மறந்துவிடக்கூடாது நாம் எங்கே  இருந்தாலும், எங்கே வாழ்ந்தாலும், எங்கே பயணமானாலும், எத்தனை சவால்கள் நம்மை சுற்றி இருந்தாலும், அவர் நமக்கு அடைக்கலமாகவும், அவருடைய புயங்கள் நமக்கு ஆதாரமாகவும் இருக்கிறது மாத்திரமல்ல அவர் நமக்கு முன் நின்று நம்மை வழி நடத்தி நமக்கு வருகிற சத்துருக்களை துரத்துகிற சக்தியை நமக்கு தருகிறார்,  யேசுகிறிஸ்து இந்த உலகத்தை விட்டு போகும்போது, சொன்ன வார்த்தைகள் இதோ யுக முடிவுபரியந்தம் நான் உன்னுடனே இருக்கிறேன் என்பது தானே.

தைரியமாய் இந்த நாளை துவங்குவோ௦ம்  அவரது, புயமும், பாதுகாப்பும், வழிநடத்தலும் நமக்கு துணையாக இருக்கிறது ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு கில்பர்ட் ஆசீர்வாதம்.

Wednesday, January 26, 2011

காலை மன்னா 26.01.2011

அன்பானவர்களே இன்றைய காலை மன்னாவை எனது நண்பரும், போதகருமான அருள் திரு மில்டன் அவர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவருக்கு என் நன்றிகள். மறக்காமல் கருத்திடுங்கள்

ஏசாயா.43 :18 -19

உலக இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள், அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். சுதந்திர இந்தியாவை நாமே ஆளும்படி குடியரசு இந்தியாவை நாம் உருவாக்கியுள்ளோம். இங்கே விடுதலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் நமக்குத் தெரியும், அடிமைக்குத்தான், விடுதலையின் ஆழம் தெரியும்.

கடவுள் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பாபிலோனிய சிறையில் இருந்து விடுதலை தந்தார்.

வசனம்.18

பழைய காரியங்களை நினைக்க வேண்டாம். நமது வாழ்வில் ஏற்பட்ட பழைய நிகழ்வுகளை நினைத்தால், நமக்கு வரபோகிற புதிய வாழ்வுகூட கசந்து போகும். பழைய வாழ்வை நினைக்க வேண்டாம். அதை நினைத்தால் துன்பமும் துயரமும் நம்மை தொடர்ந்து வரும்.

வசனம்.19

இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்  . நீங்கள் அதை நம்பவில்லையா? என்று கடவுள் நம்மிடம் கேள்வி கேட்கிறார். பல நேரங்களில் நாமும், நம்பிக்கை இழந்து விடுகிறோம். உதாரணமாக பேதுரு, இயேசுவைப் போல் கடல் மீது நடக்க முயற்ச்சித்தார், கொந்தளிக்கும் கடலை பார்த்த உடனேயே பயந்து பொய் நம்பிக்கை இழந்து போனார், ஆனாலும் இயேசு ஓடி வந்து தூக்கி நம்மை மீட்டு வாழ்வு தருகிறார், நம்பிக்கை ஊட்டுகிறார்.

இங்கே நமக்கு ஆண்டவர் சொல்லுகிறார், நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்திரவேளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன், என்கிறார்.

ஆண்டவர் நமக்கு இந்த ஆண்டு நல்ல வழியை உண்டாக்குவார், புதிய பாதை காட்டுவார், பாதைக் காட்டும் மா யெகோவா அவர். திக்கு திசை தெரியாமல் நீ குழம்பி போனாலும், நான் உன்னை வழி நடத்துவேன் என்கிறார். அவாந்திரவேளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்,

பாலை நிலத்திலே, தண்ணீர் இல்லாத இடங்களில் தண்ணீரை நான் உண்டாக்குவேன் என்கிறார். நம் ஆண்டவரால் கூடாத காரியம் இல்லை, இந்த வருடம் நம்முடைய தாகங்களைத் தீர்க்க, அவரே ஜீவ  நதியாய் பாலைவனம் போன்ற  நம் வாழ்வில் வருகிறார்  அவரை பருகி, நாம் தாகம் தீர்ப்போம், இந்த ஆண்டு நம்முடைய தாகத்தை அவர் தீர்ப்பார். எந்த பிரச்சனை என்றாலும் அவரிடம்  வாருங்கள், வழியை உண்டாக்குவார், புதிய காரியத்தை செய்கிறார், தாகம் தீர்ப்பார், நம் இந்திய தேச திரு நாட்டில் குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிற நாம் ஒற்றுமையாக, ஒரு தாயின் பிள்ளையாக வாழ்வோம். நாம் மொழி, இனம், ஜாதி, மதம், கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றால் பிரிந்து வாழ்கிறோம்.

ஆனால், நாம் அனைவரும் இந்தியர்கள், உடன்பிறவா சகோதர சகோதரிகள் நாம், ஒருவரையொருவர் மதிப்போம், மதங்களை மதிப்போம், உணர்வுகளை மதிப்போம், temple , church , mosque , இவை ஆறு  எழுத்துக்கள், Bible , Quran , Geeta , இவை ஐந்து  எழுத்துக்கள் ஒற்றுமையை பாருங்கள், எழுத்துக்களே  ஒற்றுமையாக  இருக்கும்போது நாமும் ஒற்றுமையாக வாழ்வோம்.

மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், பிரிவினை, இல்லாத சாதி, மதம், இனம், மொழி, போன்ற பிரிவினைகள் களைந்து இந்த சுதந்திர  இந்தியாவில், புது வாழ்வு வாழ்வோம். குடியரசு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம், கடவுள்   நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. மில்டன் அருண்ராஜ் BA BTh

Tuesday, January 25, 2011

விடியலை நோக்கி

 ஏசாயா.9 :1 -4

1. ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.


2. இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.


3. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.


4. மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.


கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, நம்முடைய கடவுள் பாவத்தின் மீது எந்த அளவுக்கு எரிச்சல் உள்ளவராக இருக்கிறாரோ அதே அளவுக்கு பாவிகள் மீதும் ஏழைகள் மீதும் அன்புள்ளவராகவும் இருக்கிறார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் இன்றைய நம்முடைய தியான பகுதி.

8 ம் அதிகாரம் 19 முதல் 22 வரை இருக்ககூடிய வசனங்களில் இஸ்ரவேலர்களின் பாவ வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை தெளிவாக விளக்குகிறது, அஞ்சனம் பார்க்கிறவர்களாகவும், குறி கேட்பவர்களாகவும்,  செத்தவர்களோடு   பேசுகிரவர்களாகவும், இருக்கிறார்கள் ஆனால் கடவுளுடைய வார்த்தையையோ   அசட்டை செய்கிறவர்களாக காணப்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் விடியலை காணவேமாட்டார்கள் என்று கடவுள் சொல்லுகிறார், அதாவது அவர்கள் வாழ்க்கை இருளாய் இருக்குமே தவிர வெளிச்சத்தையே காணமாட்டார்கள் என்று கடுமையாக எச்சரிக்கிறார்.

அதே நேரத்தில் இருளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற மக்கள் மீது அவர் எவ்வளவு கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை 9 வது அதிகாரத்தில் கடவுள் வெளிப்படுத்துகிறார்,  இதை புரிந்துக் கொள்வது கொஞ்சம் கடினமே.

அதாவது கடவுளுடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல், தன் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து சுகபோகத்தில் வாழ்கிறவர்களை இருளுக்கு தள்ளி, வறுமை, அடிமைத்தனம், இயலாமை, தோல்வி போன்ற இருளுக்குள் வாழ்கிற மக்களை, வெளிச்சத்திற்குள் கொண்டுவருவேன் என்கிறார்.

அதற்கு உதாரணமாகத்தான் செபுலோன், நப்தலி நாடுகளுக்கு நடக்க போகிற நன்மைகளை முன் அறிவிக்கிறார், காரணம் செபுலோன் நப்தலி ஆகிய பகுதிகள் இஸ்ரவேல் தேசத்தின் பகுதிகளாக இருந்தவை, கி.மு 732 ல் டிக்லேத் ப்லேசார் என்ற ஆசிரிய மன்னன் இந்த இரண்டு பகுதிகளையும் அசிரியாவின் கட்டு பாட்டுக்குள் கொண்டுவந்து கடுமையாக ஒடுக்கினார்.

அவர்களுடைய அடிமைத்தன வாழ்விலிருந்து கடவுள் விடுவிப்பார் என்றும் அந்த விடுதலை எப்படி நடக்கும் என்பதையும், இரண்டு  முதல் நான்கு வரை உள்ள வசனங்களில் விளக்குகிறார். அது எப்படி நடந்தது என்பதை தான் மத்தேயு 4 ம் அதிகாரம் 12 ம் வசனம் துவங்கி காண்கிறோம்.

இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தை துவங்கியதே செபுலோன், நப்தலியாகிய கலிலேயாவின் கரையோர பகுதிகளில் தான். அடிமைத்தனமும், வறுமையும் , இயலாமையும், கல்வியறிவின்மையும், மண்டிக்கிடந்த பாமரர்கள் வாழ்ந்த பகுதிகளில் தான் ஆண்டவர் தன் ஊழியத்தை துவங்கினார். காரணம் அவர் அடிமைத்தனம் வறுமை, வியாதி, கல்வியறின்மை போன்றவைகளில் இருந்து மனிதனை விடுதளியாக்கி வாழ்விக்க வந்தவர்.

எனவேதான் தனக்கு சீடர்களை கூட இந்தக் கூட்டத்தில் இருந்துதான் தெரிந்துக் கொண்டார்.  இன்று அவர் நம்மை எல்லா இருளின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாக்கி வாழ்வித்து வருகிறார் ஆனாலும் அவரது நோக்கம் இன்னும் முழுதாய் நிறைவேறவில்லை, காரணம் நமது தேசத்தில் இன்னும் எத்தனையோ பேர், கொத்தடிமைகளாகவும், ஏழைகளாகவும், கல்வி கற்கும் வசதி இல்லாதவர்களாகவும்,  பல போராட்டங்களின் நடுவில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னும் அனேகரது வாழ்க்கை உடனடியாக மீட்கப்பட வேண்டிய இருளில் இருக்கிறது, அதற்காக நாம் என்ன செய்யபோகிறோம், காரணம் ஆண்டவர் அவர் வழி வாழ நம்மை அழைத்திருக்கிறார், இருளில்லாத உலகை உண்டாக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம்.

நாளை நமது நாடு குடியரசான  நாளை கொண்டாடவிருக்கிறோம்  நம்மை நாமே ஆளும் நாட்டில் ஏன் இன்னும் இத்தனை கொடிய இருள் மிஞ்சி இருக்கிறது? இதில் கிறிஸ்துவின் தொண்டர்களாகிய நமது பங்கு என்ன?

சிந்திப்போம் செயல்படுவோம் இருளில்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்.
அருள்திரு, கில்பர்ட் ஆசீர்வாதம்.

சிறுவர்களுக்கான படக் கதை

ஹலோ குட்டீஸ் இந்த காலை  உங்களுக்கான  காலை..........

அன்பான  சிறு பிள்ளைகளே உங்களுக்கான படக்கதை ஒன்றை அறிமுகப்படுத்துகின்றேன் உங்களுடைய கருத்துகளை தவறாமல் பதிவிடுங்கள்.

யோவான் 6 : 1 - 13 

அன்பான சிறுவர்  சிறுமியரே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருநாள் திபேரியா எனப்பட்ட கலிலேயா கடலின் அக்கறைக்கு போனார்.


 அதை கேள்விப்பட்ட அனேக ஜனங்கள் அவரை பார்க்கவும் அவருடைய வார்த்தைகளை கேட்கவும் அவரை நெருங்கி வந்துவிட்டனர்.



திரளான மக்கள் வருகிறதை பார்த்த நம்முடைய ஆண்டவர் ஒரு மலையின் மீது சீடர்களோடு ஏறி உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்.


உபதேசத்தை கேட்ட மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் ஆசை  பட்டார். எனவே இயேசு சாமி தன் சீடர்களை கூப்பிட்டு இவர்களுக்கு கொடுக்க அப்பங்கள் எங்கே கிடைக்கும் என்று பிலிப்புவிடம் கேட்டார்.


அதற்கு பிலிப்பு இவ்வளவு பேருக்கு உணவு கொடுக்க ஒருவருட சம்பளம் இருந்தாலும் போதாதே  என்றார். அப்பொழுது அந்திரேயா என்ற சீடர்   ஒரு சிறுவனிடம்  , ஐந்து  அப்பமும்,  இரண்டு  மீனும் இருக்கிறது என்றார்.


உடனே இயேசு கிறிஸ்து அனைவரையும் உட்கார வைக்க சொன்னார், அந்த இடம் அழகான புல்  தரையாக இருந்ததால், அனைவரும் மிக வசதியாக அமர்ந்தனர். உட்கார்ந்தவர்களில் ஆண்கள் மட்டுமே ஐயாயிரம் பேர் இருந்தனர்.


இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, சீடர்களிடத்தில் கொடுத்தார்,




சீடர்கள் அதை வாங்கி புல்  தரையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு பரிமாற துவங்கினர், ஆச்சரியம் அந்த ஐந்து அப்பமும் இரண்டு மீனும் குறையாமல் பெருகிக்கொண்டே வந்தது..  




எல்லாரும் சாப்பிட்டு மிகவும் திருப்தியானார்கள். அதற்கு பிறகு இயேசு, மீதியானவைகளை வீணாய் போகாதபடி எடுத்து வைக்கக் சொன்னார். அப்படியே  அவர்கள் மீதியானவைகளை, சேகரித்தனர், அவைகள் 12 கூடை கிடைத்தது.



இந்த அற்புதத்தை கண்ட மக்கள் இயேசுவை மெய்யாகவே தீர்க்கதரிசி என்றார்கள், அவரை ராஜாவாக்க வேண்டும் என்று ஆசைபட்டார்கள்.

அன்பான சிறு பிள்ளைகளே இவ்வளவு பெரிய அற்புதம் எப்படி நடந்தது? அந்த சின்ன பையன் கொடுத்த ஐந்து அப்பம் இரண்டு மீனால் தானே நடந்தது, தான் சாப்பிட வைத்திருந்ததை, தனக்கென்று வைத்துக்கொள்ளாமல், அடுத்தவர்களுக்காக இயேசுவினிடம் கொடுத்தான் அதை அவர் பல மடங்கு பெருக்கி அனைவருக்கும் கொடுத்தார். எனவே கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் நன்மைகளையும், திறமைகளையும் அவரிடம் கொடுத்தால் அவர் அதை பல மடங்கு   பெருக்கி அனைவருக்கும் பயன்படும்  வகையில் ஆசீர்வதிப்பார்.

இன்னொரு படக்கதையில் விரைவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை கதையை படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் ஒகே வா.

இப்படிக்கு உங்கள்
கில்பர்ட் அங்கிள்.



Monday, January 24, 2011

காலை மன்னா 24.01.2011




அன்பான தள நண்பர்களே இந்த காலையில் உங்கள் யாவருக்கும் எனது ஸ்தோத்திரங்கள். இந்த இனிமையான பொழுதில் நாம் தியானத்திர்க்கென்று எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை     மத்தேயு 4 :23 
"பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்".


நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி பட்டவர் என்பதை மிக தெளிவாக சொல்லுகிற வசனம் தான் இன்றைக்குறிய நம்முடைய தியானப் பகுதி.
நம்முடைய ஆண்டவர் ஊழியத்தை துவங்குகிற காலம் வந்தவுடனே அவர் புறப்பட்டு போனது கலிலேயாவை நோக்கி, (மத்.4 :13 ) 

கலிலேயா என்பது புற ஜாதிகள் அதிகமாக  வாழ்கிற பகுதி, அது மாத்திரமல்ல ஏழைகளும்  பாமரர்களும் வாழ்கிற பகுதி, அந்த இடத்தில் ஆண்டவர் தன் ஊழியத்தை முதன் முதலாக துவங்குகிறார்.

எருசலேமில்  அவர் தன் ஊழியத்தை துவங்கியிருந்தால், ஒரே நாளில் அவர் மிகவும் பிரபலமாகியிருப்பார், காரணம் எருசலேம் தான் யூதர்களின் தலை நகரம். அதுமாத்திரமல்ல படித்தவர்களும், அரசாங்க அதிகாரிகளும் , மதத் தலைவர்களும்,  வாழ்கிற பகுதி  எப்போதும் மக்கள் நடமாடிகொண்டிருக்கும் புனித தலம் அங்கே ஆண்டவர் ஒரு அற்புதத்தை செய்திருந்தால் ஒரே நாளில் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்ற தீர்க்க தரிசியாக மாறியிருப்பார்.

ஆனால் ஆண்டவரோ அதை விரும்பவில்லை காரணம் இயேசு கிறிஸ்து தன்னை பிரபலமாகி கொள்ள வந்தவரல்ல,  மக்களுக்கு நன்மை செய்வதற்காக புறப்பட்டு வந்தவர், எனவே தான் துனபத்தின் நடுவில் வாழ்கிற கலிலேயர்களை தேடி போனார், மரண இருளில் வாழ்ந்துக்கொண்டிருந்த  ஜனங்களை தேடி போனார்.

அவர் இன்றும் துன்பத்தில் இருக்கிற ஜனத்தின் பிரதிநிதியாகவே பிதாவின் வலது புறம் நின்று பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் எனவே நம் துன்பங்களை நீக்கும் கிறிஸ்து நம்மோடிருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடு இந்த நாளை துவங்குவோம் ஆமென்.

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்

Saturday, January 22, 2011

இளைஞர் எழுச்சி விழா அழைப்பிதழ்


அன்பார்ந்த தள நண்பர்களே உடன் விசுவாசிகளே இளைஞர் எழுச்சி விழாவிற்கான அழைப்பிதழ், உங்களுக்காக தளம் வழியாக இணைக்கப்படுகிறது, அனைவரும் பங்குபெற்று இறையாசி பெற்றிடுங்கள்.  மேலும்  விவரங்களுக்கு  அழிப்பிதழில் உள்ள சகோதரர்களை தொடர்புக் கொள்ளவும்.

காலை மன்னா 22.01.2011



தள நண்பர்களுக்கும், உடன் விசுவாசிகளுக்கும் அதிகாலை ஸ்தோத்திரங்கள். ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்  உங்களை வாழ்த்துகிறேன். இந்த காலை வேளையில் உங்களோடு நான் பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, உபாகமம்.28 :11

" உனக்கு கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்கு பரிபூரண நன்மை உண்டாக கட்டளையிடுவார் ."

உபாகமம் 28 ம் அதிகாரம் ஆசீர்வாதத்தின் அதிகாரம். கடவுளை நம்புகிற ஜனத்தை எப்படியெல்லாம்  ஆசீர்வாதிக்கிறார் என்பதை, இந்த அதிகாரம் முழுவதும் காணலாம். குறிப்பாக நம் தியானப்பகுதியில் ஒட்டு மொத்த ஆசீர்வாதங்களையும் ஒரே வசனத்தில் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக மூன்று தேவைகளை குறிப்பிடுவோம், 1.உணவு, 2. உடை,  3 .உறைவிடம் . இந்த  மூன்றிற்காகதான்  எல்லா மனிதரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  நம் தியான பகுதியும் கடவுள் நமக்கு தருகிற மூன்று பரிபூரண ஆசீர்வாதங்களை குறிப்பிடுகிறது.

1 .உன் கர்ப்பத்தின் கனி:
கடவுளை நம்புகிற அவருடைய ஜனத்தின் கர்ப்பத்தின் கனிகளை அவர் ஆசீர்வதிக்கிறார்.  நாம் வாழும் உலகில் பிள்ளைகளை பற்றிய பயம் தான் நம்மில் மேலோங்கியுள்ளது. அவர்கள் பாதுகாப்பு, கல்வி, எதிர்காலம் என ஒவ்வொன்றையும் பற்றி கலங்கி தவிக்கிறோம், ஆனால் இந்த காலையில் இறைவன் கூறுகிறார் நம் கர்ப்பத்தின் கனி பரிபூரனப்படும், அதாவது ஒரு குறையும் இல்லாமல் நமது பிள்ளைகள் வளர்ந்து செழிப்பார்கள்.

2 .மிருக ஜீவன்களின் பலன்.
பொதுவாக பழைய ஏற்பாட்டு  காலத்தில், ஒரு மனிதனின் சொத்துக்கள் அவனுடைய மிருக ஜீவன்களை வைத்துதான் கணக்கிடப்படும், அப்படியானால் கடவுள் நம் உடைமைகளையும் (சொத்துக்களையும்) பரிபூரனப்படுத்துகிறார்.

3 .நிலத்தின் கனி
நிலத்தின் கனி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார், நிலத்தின் கனி என்பது சாதாரண வார்த்தை போல் தான் தோன்றுகிறது, ஆனால் அது சாதாரண ஆசீர்வாதம் அல்ல. காரணம் ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக நாம் மேலே கண்ட  மூன்று தேவைகளுமே, நிலத்தில் இருந்து கிடைப்பவைதான், எனவே அவைகளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டு நம்மை மீட்டு புதிய இஸ்ரவேலர்களாய்  நம்மை மீட்ட கடவுள், அடிப்படை தேவைகளை மட்டும் நமக்கு பரிபூரணமாய் தருகிறவறல்ல வாழ்வுக்கு தேவையான அத்துணை நன்மைகளையும் குறைவில்லாமல் தருகிறவர் எனவே தைரியமாய் வாழ்ந்து இறைவனின் நல்லாசி பெறுவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Friday, January 21, 2011

செய்திகள்

அன்பார்ந்த தள நண்பர்களே, இந்த தளம் இறைவனின் நாமம் மகிமையடைய துவங்கப்பட்டது, துவங்கிய நோக்கம் நிறைவேற உங்கள் முழு ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். தற்போது தின தியானங்களும், சிறு கதைகளும் பதிவேற்றம் செய்து வருகிறேன், நிச்சயமாக உங்கள் ஆவிக்குரிய வாழ்வில்  இது  புது அனுபவங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

தயவு செய்து தளத்தை பார்வையிடும் புதிய நண்பர்கள் உங்கள் கருத்துகளையும் பதிவேற்றும்படி   கேட்டுக்கொள்கிறேன் அது எனக்கு உற்சாகத்தையும், கிறிஸ்துவுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற உத்வேகத்தையும் கொடுக்கும்.  இதுவரை தங்கள் கருத்துக்களை பதிவேற்றிய  நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மிக விரைவாக, கவிதைகள், வாலிபர், மாதர் பக்கங்கள், விசுவாசத்தை தூண்டும் விவாதங்கள், மாணவர்களுக்கான அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவர்களுக்கான படக் கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே தயவு செய்து தளத்தை பார்வையிடுவோர் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். இதன் மூலம் நீங்களும் இந்த ஊழியத்தின் பங்காளர்களாகவும் இறைவனின் ஊழியர்களாகவும் இணைவீர்கள்.

தயவு செய்து இது போன்ற புதிய முயற்ச்சிகளை ஆதரித்து, ஆண்டவர் நாமம் உலகம் முழுக்க மகிமையடைய ஆதரவு தாருங்கள் நன்றி.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

காலை மன்னா 21.01,2011



விசுவாச  அன்பர்களுக்கு  அதிகாலை ஸ்தோத்திரங்கள் . இன்றைய காலை நேர தியான வசனம், நீதிமொழிகள்.8 :௦ 17௦..

 "  அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள்                  என்னை  கண்டடைவார்கள். "
காலை என்பது  எப்போதுமே இனிமையான பொழுதுதான் , காரணம் ஒவ்வொரு நாள் காலையும் இறைவனின் மகிமையால் தான் கண் விழிக்கிறோம். அநேகர் எழும்போதே அந்த நாளுக்குரிய கவலையோடு கண் விழிப்பார்கள், பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் காலையின் இனிமையை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது, சூரிய உதயத்தையும், காலை பனியையும், இள வெயிலையும்  ரசிக்க முடியாமல் அந்தந்த  நாளுக்குரிய கவலையில் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

இந்த  பாபர ஓட்டத்தின் நடுவே இறைவனை தேட நேரம் இல்லாமல், ஒரு சல்யூட் மட்டும் வைத்துவிட்டு ஓடுகிறோம்.  ஆனால் நீதி மொழிகள் 8 :௦17 தெளிவாக கூறுகிற அறிவுரை, அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவர்கள்  அவரைக் கண்டடைவார்கள் என்பதே.

 நேரம் பார்த்து கடவுளை தேடவேண்டிய அவசியம் இல்லைதான், நேரம் பார்த்து அவர் நன்மை செய்பவரும் அல்ல, ஆனாலும் காலையின் இனிமையில், அவரோடு ஒரு 15  நிமிடம் செலவிட்டு ஒரு ஜெபம் ஒரு சின்ன தியானத்தோடு ஒரு நாளை துவங்கினால் அது எப்படி , இருக்கும்,  அந்த நாள் முழுதும் ஒரு சமாதானம் நம்மை ஆட்கொள்ளுமே அதுதான் இறைவன் நம்மோடு பயனிப்பதல்லவா?  ஒரு நாள் முழுதும் அவர் நம் பக்கத்தில்  இருப்பதை உணர முடியும் அல்லவா?

அதைதான் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது, காரணம் தாவீது  தன் நாளை  துவங்கும்போதெல்லாம் ஜெபத்தோடு துவங்கினவர். (சங்கீதம்.55 :17 ) அதுதான் தன் வாழ்வுக்கு பலமாக அமைந்தது என்கிறார், என்  எதிரிகளை ஜெபத்தின் பலத்தால் தான் மேற்கொண்டேன் என்கிறார்.

இந்த ரகசியம் தெரிந்தவர் தான் சாலமன். எனவே தான் அவரும் அதையே தன் அறிவுரையாக நமக்கு அளிக்கிறார். நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து இரவு துவங்கி அதிகாலை வரை ஜெபிக்கும் வழக்கம் கொண்டவரல்லவா , எனவேதான் தான் அவரும் தன் சீடர்களை  ஜெபிக்க சொல்லி அறிவுறுத்தினார், ஜெபிக்க கற்றும் கொடுத்தார்.

நம்மை இந்த காலைவேளையில் சில நிமிடங்கள் இறைவனிடம்   அர்ப்பணிப்போம். இந்த வசனத்தின்  வழியாக நம்முடைய உள்ளத்தின் வேண்டுதல்களை அவரிடம் சமர்ப்பிப்போம். இந்த காலை வேளையை அவரோடு துவங்குவோம் நம் எதிர்ப்புகளை வேரறுக்க பலன் பெறுவோம்.

கடவுள் இந்த நாள் முழுதும் நமக்கு துணை நிற்பாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Thursday, January 20, 2011

காலை மன்னா 20.01.2011

அன்புள்ளோரே  இனிய காலை வணக்கங்கள்.

இன்றைய தியான வசனம், ஏசாயா.54 :15
எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
இஸ்ரவேல்  மக்கள் இறைவனின் மேலான அன்பை ருசித்தவர்கள், அதே நேரத்தில் இறைவனின் திரு வார்த்தைகளுக்கு விரோதமாய் நடந்த பொது இறைவனால் கடுமையாக தண்டனையும் பெற்றனர்.

எகிப்தின் அடிமைதனத்திலிருந்த இஸ்ரவேல் மக்களை, தன் சுத்த கிருபையினாலும் இரக்கத்தினாலும்  மீட்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் கொண்டுவந்து குடியமர்த்தினார். ஆனால் அவர்களோ வாழ்வளித்த இறைவனை மறந்து தன் தன் சுய இச்சையில் நடக்க ஆரம்பித்தனர்.

இதனால், இரட்சிப்பை கொடுத்த கடவுளே,  பாபிலோனியர்களால் 70 வருட சிறையிருப்பு  உண்டாக அனுமதித்தார், இதனால் மனமுடைந்த இஸ்ரவேலர்கள் இரட்ச்சிப்பு வரும் என்ற நம்பிக்கையே  அற்றுப் போனார்கள். பாபிலோனியர்களின் கடுமையான  துன்புறுத்தலால் நரக வேதனையை அனுபவித்தார்கள்.

இந்த காலக் கட்டத்தில் இறைவன் அவர்களுக்கு தந்த வாக்குத்தத்த செய்திதான் இந்த திரு வசனம்.

உனக்கு விரோதமாய் கூடுகிறவர்களே உன் பட்சத்தில் வருவார்கள் என்கிறார். அதாவது, அவர்களை துன்புறுத்திய பாபிலோனியர்களே ஆதரவாய் வருவார்கள் என்கிறார், உன் எதிரியே உனக்கு நண்பன் ஆவான் என்கிறார், சாத்தியமே இல்லாததை சத்தியமாக கூறுகிறார் இறைவன். அவர் சொன்னபடியே அதே பாபிலோன் தேசத்தில் அரசனான கோரேஸ்  என்ற மன்னனைக் கொண்டே இஸ்ரவேலரை விடுதலையாக்கினார்.

அதே வல்லமையோடுதான்  இன்று நம்மையும் வழி நடத்தி வருகிறார் நம் இறைவன்.

நம் வாழ்வில் நமக்கு விரோதமாய் எழுகின்ற சக்தி எதுவாக இருந்தாலும் அது நமக்கு ஆதரவாய் மாறும் என்பதை இந்த திருவசனம் நமக்கு தெளிவாக்குகிறது. நித்திய  மரணத்தை கொண்டுவந்த  பாவத்திலிருந்தே கிறிஸ்துவின் வழியாய் நம்மை மீட்டவர் அல்லவா நம் கடவுள்.

அந்த தைரியத்தோடு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இந்த நாளை துவங்குவோம், நமக்கு எதிராய் எழும்புகின்ற ஆயுதங்கள் வாய்க்காதே  போகும். நமக்கு ஆதரவாய் மாறும்.

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம் .

Wednesday, January 19, 2011

நன்றி நண்பா.

அன்பு நண்பன் ஜோசாம் உன் வருகைக்கு மனமார்ந்த நன்றி உன்னுடைய உற்சாகத்தில் தான் இந்த தளம் உரு பெற்றது, இப்போது மீண்டு தளம் வழியாகவே என்னை வாழ்த்துவதற்கு என் மனமார்ந்த நன்றி, தொடர்ந்து உன் ஆதரவையும் உற்சாகத்தையும் எதிர் பார்க்கின்றேன்.

காலை மன்னா 19 .01 .2011

அன்பான தள நண்பர்களுக்கும் உடன் விசுவாசிகளுக்கும் காலை ஸ்தோத்திரங்கள்.
இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை  உபாகமம்.26 :19a
"நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளை பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன்".
நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய முன்னேற்றத்திற்காக போராடி வருகிறோம். நம்ம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை பார்க்கும்போதெல்லாம் நாமும் அப்படி உயர வேண்டும் என்கிற ஆவல் நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வருகிறது.

அதற்காகத்தான் கடுமையாகவும். நம் சுய சந்தோஷங்களை மறந்தும் கூட முன்னேற்றத்திற்காக போராடுகிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள், பொருளாதார ரீதியாகவோ. சரீர ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதாவது ஒரு சிக்கலில் நாம் நிற்கும்போது, யாராவது ஒருவர் வந்து நமக்கு உதவ மாட்டார்களா? யாராவது நம் வளர்ச்சிக்கு துணை நிற்க மாட்டார்களா என்ற நோக்கம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.

ஆனால், இந்த பரந்து விரிந்த உலகில், நமக்கு உண்மையாய் உதவி செய்பவர்களை கண்டுபிடிப்பது மிக மிக கடினமாகவே இருக்கிறது.

ஆனால் நம்முடைய தியானப் பகுதியில், கடவுள் தன்னை நம்பி தன் வார்த்தையில் விசுவாசம் வைத்து வாழ்கிற இஸ்ரவேல் மக்களுக்கு, தான் கொடுக்கப் போகிற புதிய தேசமாகிய கானான் தேசத்தில்  எப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை தருவேன் என்பதை வாக்குரைக்கிறார்.

அவர் உண்டாக்கிய எல்லா ஜாதிகளிலும் அவரை நம்புகிற அவருடைய ஜனத்தை புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் சிறந்திருக்கும்படி செய்வாராம்.

அதாவது அவரை நம்புகிற அவருடைய ஜனத்தை அவரை போலவே உயர்த்தி வைப்பேன் என்கிறார், நமக்கு உதவ, நம்மை உயர்த்த, யாருமே இல்லாத நிலையில் நின்றாலும் நம்மை அழைத்து அவருடைய ஜனமாய் சேர்த்துக்  கொண்ட கடவுள் நமக்கு உதவி செய்து, நம்மை உயர்த்தி ஜாதிகளில் சிறந்த ஜனமாக வைப்பார்.

இந்த திட நம்பிக்கையோடும், நம்மை உயர்த்த சொந்த குமாரனையே சிலுவையில் தந்த கடவுள் இவைகளை அருளாமல் இருக்க முடியாது என்கிற விசுவாசத்தோடும், இந்த நாள் முழுவதும் அவர் நம்மோடு நமக்கு துணையாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடும் நம் பணிகளை தொடர கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்..

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Tuesday, January 18, 2011

காலை மன்னா 18.01.2011

சங்கீதம்.27 :1
"கர்த்தர் என் வெளிச்சமும்  என் இரட்சிப்புமுமானவர் யாருக்கு பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்".

அன்புள்ள உடன் விசுவாசிகளே அதிகாலை அன்பின்  ஸ்தோத்திரங்கள்.
பயம் என்பது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று.
பொதுவாக இருள் நமக்கு ஒரு இனம் புரியாத பயத்தை உண்டாக்குகிறது,

பாவம் நமக்குள் கடுமையான பயத்தை உண்டாக்கி குற்ற உணர்வில் செயல்பட முடியாதபடி கட்டுபடுத்திவிடுகிறது. எனவே வேதம் பாவத்தை வெறும் பாவம் என்று சொல்லாமல் பாவ இருள் என்று கூறுகிறது,  இருளை விட பல மடங்கு பயத்தை உண்டாக்குகிறது.

மேலும் , தினந்தோறும் நாம் பயந்து பயந்து வாழ்வது ஜீவனுக்காக, நம்  உயிரை,   நம் பிள்ளைகளின் உயிரை பாதுகாக்க போராடுகிறோம்.  எனவே உயிருக்கும் உடலுக்கும் ஆரோக்யத்துக்கும் தீங்கு உண்டாக்குகிற எதையும் சுத்தமாக நம்மை விட்டு விலக்கி
ஜீவனை நிறைவாய் காத்துக்கொள்ள முயலுகிறோம் .

ஆனால் தாவீதோ எனக்கு இருளை பற்றியோ ஜீவனை பற்றியோ பயம் இல்லை என்கிறார். அதற்கான காரணத்தையும் தெளிவாக முன்வைக்கிறார். கர்த்தர் என் வெளிச்சம் என்கிறார். ஆம் அவர் உலகின் ஒளியான கிறிஸ்து அல்லவா? பாவத்தின் கொடூர இருளில் இருந்து நம்மை மீட்டவர் அல்லவா?, பாதாளத்தின் வாசலில் இருந்த நம்மை பரலோக பாதைக்கு திருப்பினவர் அல்லவா? அவரை  உண்மையாய் பற்றிக்கொண்ட யாவருக்கும் அவர் உண்மையுள்ளவராய் இருந்து நம்முடைய எல்லா பயத்திலிருந்து நம்மை மீட்டு இரட்ச்சிப்பவர் அல்லவா?

அது மாத்திரமல்ல இந்த ஜீவனின் உத்தரவாதம்  இல்லாத உலகத்தில் நம் ஜீவனுக்கு அரணாக இருப்பவர் அவரே. எனவே அவரை நம்பினோர் யாதொரு தீவினைக்கும் பயப்பட வேண்டியதில்லையே.

எனவே ஜீவனின் பெலனும் வாழ்வின் ஒளியுமான கிறிஸ்துவில் சந்தோஷமாய் இந்த நாளை துவங்குவோம் ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Monday, January 17, 2011

" வேளை வந்தது " சிறுகதை

முதல் முறையாக இந்த தளத்தில் ஒரு சிறுகதை வெளியிடுகிறேன் இந்த சிறுகதை எழுதியவர் ஓய்வுப்பெற்ற ஆசிரியரும் என் தந்தையுமான          திரு ஏ. ஏசையன் அவர்கள்.  இவரது கதைகள் விசுவாசத்தை தூண்டும்  இனிமையான அனுபவங்கள். இந்த இனிமையான அனுபவத்துக்குள் பயணமாவோம். 

வேளை வந்தது

என்ன சலோமி, என்ன சொல்கிறான் உன் பையன்?

பேசாம என்   சின்ன தங்கச்சி பொண்ணு இருக்காளே "ராகேல்" அவளை கட்டிக்கச் சொல்லு, ஏழரை கழுதை வசாகுது, இன்னும் காலம் தாழ்த்த முடியாது. அவளை கட்டிக்கிட்டா அவன் போழைச்சான் இல்ல? சல்லிக்காசு தரமாட்டேன்.

உடனே சலோமியும் வம்புக்கு வந்தாள். நல்லா இருக்கே நீங்க சொல்ற நியாயம்? என் தம்பி பொண்ணு "லேயா" அவனுக்குன்னேதான் வளர்ந்திட்டு வாரா. அவளைத்தான் நான் கட்டுவேன். உங்க குடும்பத்துல நான் காலை வச்சி படுற கஷ்டம் போதும். அவனையும்  அந்த  பாழும் கிணத்துல தள்ள என்னால முடியாது.

என்னடி சொன்ன? உன் குடுமபத்துல பொண்ணு எடுத்து நான் அவஸ்த்தை படுவது போதாதா? அவனையும்  நான் கஷ்ட்டப்படுத்தனுமா? பேசாம, என் குடுமத்துல காலை வைக்கச்சொல்லு.

இந்த அப்பம்மா உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான் டேனி. அப்பா வெளியே போய்விட்டார். அம்மா அடுப்படி வேலையில் ஈடுப்பட்டாள் . மெதுவாக அடுப்படிக்குள் நுழைந்தான். அப்பாவிடம் பேசிய இதே கோபத்தில் திரும்பினாள் அம்மா.

ஏன்டா டேனி, 28 வசாகுது. இன்னும் ஏன்டா தொல்லை பன்ற? எங்க தம்பி மகள் லேயா உனக்குன்னே வளர்ந்திட்டு வரா. அவளைக் கட்டிக்கோ, கட்டிக்கோன்னு சொல்லி என தொண்டை தண்ணி வத்திப்போச்சிடா. அந்த மனுஷன் என்னடான்னா அவரு தங்கச்சி பொண்ணு, அதான் அந்த கொரங்கு மாதிரி இருக்கே, ராகேல் அவளை தான் கட்டுவேன்னு காச்சி முச்சினு  கத்திட்டு போறார் . நான் சொன்னா கேளுடா எங்க லேயா மூக்கும் முழியுமா இலட்சணமா  இருக்கா. எங்க சொந்தம் விட்டு போக குடாதுடா. என் கண்ணுல்ல? எனக்கு சாதகமா சொல்லி என் வயித்துல பாலை வாரேண்டா?

அம்மா நீங்களும் அப்பாவும் என் கேரக்டரையே புரிஞ்சிக்க மட்டேங்குரிங்க. நீதி மொழிகள் 31 ம் அதிகாரம், படிங்கம்மா, குறிப்பா, அதுல பத்தாம் வசனம் பாருங்க. குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை, முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்ததுன்னு  சொல்லியிருக்கு. இப்பவே போய் பைபிள் எடுத்து படிங்கம்மா, நான் அப்படிப்பட்ட பெண்ணைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். வாயடைத்து அமைதியானாள் சலோமி.

அன்று ஞாயிற்றுக் கிழமை, சார்லட் சுறுசுறுப்பாக ரெடியானாள். ஆலயத்திற்கு போவதைக் காட்டிலும் விருப்பமான ஒரு நிகழ்வு அவளுக்கு இருந்ததே இல்லை. ஞாயிறு வந்தாலே, அவள் மனதில் பட்டாம்பூச்சி  பறக்கும். முதல் ஆளா முதல் பெஞ்சில் உட்கார்ந்து விடுவாள். முதல் பாட்டில் இருந்து கடைசியில் ஆமென் பாடறது வரை அவள் குரல் தான் உச்சஸ்தாயில் ஓங்கி ஒலிக்கும்.

ஆலயம் அவள் வீட்டிலிருந்து சின்ன சந்தில் தொடங்கி பெரிய வீதி வழியாக  தொடர்ந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக  பத்து நிமிடம் நடை. நெடுஞ்சாலை வந்ததும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வேண்டி வரும். சார்லட் பரபரபோடு போய்க்கொண்டிருக்கிறாள். பெங்களூர் to சென்னை எக்ஸ்ப்ரஸ் பஸ் வந்துக்கொண்டிருக்கிறது.

ஒரு குழந்தை நெடுஞ்சாலையில் ஓடுகிறது. கண் இமைக்கும் நேரம், கண் மண் தெரியாமல் பஸ் ஓட்டும் டிரைவர். குழந்தையை  பஸ் அடிக்கப்போகிறது. அனைவரும் செயலிழந்தனர். ஒருத்தி மட்டும் ஓடினாள். பாய்ந்து குழந்தையை தூக்கி  சாலை ஓரத்தில் வீசினாள். அவள் சார்லட்.

சடன் பிரேக். சர்லேட்டை முத்தமிட்டு பஸ் நிற்கிறது. தலையில் இரத்தம், வண்டியில் வந்த டேனி அதிர்ந்தான் ஓடினான். அவளை துக்கி வண்டியில் அடைத்தான். அருகில் இருந்த கிறிஸ்தவ மருத்துவ மனையில் சேர்த்தான். எப்படி உங்களுக்கு இந்த துணிச்சல் வந்தது? டேனி கேட்டான்.

ஏங்க முழு உலகத்தையும் மீட்க கடைசி சொட்டு இரத்தம் வரை சிலுவையில் சிந்தியவர்  என் இயேசு.

அவர் பிள்ளை நான். ஏதும் அறியாத ஒரு பிஞ்சு பிள்ளையின் உயிரை காக்க இரத்தம் சிந்தினால் என்ன? சர்லேட் சொன்னாள்.

தேடியவள் கிடைத்தால். பெற்றோரிடம் ஓடினான். ஒரு பொழுது காலம் முடியும் வரை பெற்றோர் காத்திருந்தனர். டேனி  சார்லெட் திருமணம்  முடிந்தது.
                   
                                                            முற்றும்

மறக்காமல் கருத்துக்களை இடுங்கள்.

Sunday, January 16, 2011

இரட்ச்சிக்கப்பட்டவர்களின் அடையாளம்.

ஏசாயா.49 : 6

அன்பான உடன் விசுவாசிகளே இந்த பரிசுத்தமான ஒய்வு நாளில் மனிதன் எங்கே போகிறான் என்ற தலைப்பில் உங்களோடு இறை வார்த்தையை பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஏசாயா. 49 : 6 ல் கடவுளின் தாசனாகிய, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு பற்றி ஏசாயா தீர்க்கரின்வழியாக கடவுள் முன்னரிவிக்கிறதை   காண்கிறோம். மிக தெளிவான முறையில் கடவுள் ஏன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பினார் என்பதை இந்த ஒரு வசனத்தில் நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது.

'' யாகோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் என் தாசனாயிருப்பது அற்ப காரியமாயிருக்கிறது, நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்ச்சிப்பாயிருகும்படி, ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார் ''
அதாவது இயேசு கிறிஸ்து இந்த உலகில் வந்ததின்   நோக்கம் வெறும் இஸ்ரவேலர்களல்ல, அப்படி வந்திருந்தால் கடவுளுக்கு அற்பம் என்கிறார் அதாவது  வெறும் இஸ்ரவேலர்களுக்காக கிறிஸ்து வந்திருந்தால் கடவுளுக்கு அது கேவலம் என்கிறார் காரணம் கடவுள் பட்சபாதம் உள்ளவர் அல்ல.

யோவான் 1 :29 ன் படி அவர் முழு உலகின் பாவங்களையும் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எல்லா மனிதனுக்காகவும் தன்னையே ஒப்புக்கொடுக்க வந்தவர்.

ஆனால் அவரை  பின்பற்றுகிற நாமோ சுயநலம் உள்ளவர்களாய் இருக்கிறோம். நம்மை விட கோணலும் மாறுபாடும் உள்ள  இந்த உலகம்  முழு சுய நல உலகாய் மாறி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இருக்கிற இடத்தில் புகைப்பிடிக்கிற கொடூரர்கள், சாலையை கடக்க நினைத்த ஒருவரை இடித்துவிட்டு நிறுத்தாமல் போகும் உயிர்க் கொல்லிகள், ஓட்டுப்போட்ட மக்களையே சுரண்டும் சில திருட்டு அரசியல்வியாதிகள் என நம்மை சுற்றி இந்த உலகே சுயநலக் காடாய் மாறிவருகிறது ஆனால் நமது ஆண்டவரோ அடுத்தவனுடைய வாழ்வுக்காக தன்னை இழந்தவர்.

அவர் வழி வாழ நாமும் முனைவதே உண்மையான இரட்ச்சிக்கப்பட்டவர்களின் அடையாளம்.

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

Saturday, January 15, 2011

நன்றி அண்ணா

அருள்திரு கிளாட்சன் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் வாழ்த்து செய்தியை மின்னஞ்சல் வழியாக கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து உங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நமது ஆண்டவர் இயேசுவின் நாம மகிமைக்காக தொடர்ந்து இந்த தளம் பயன்படுத்தப்படும் என்ற உறுதி  அளிக்கிறேன். உங்கள் சக நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்து என்னை உற்ச்சாகப்படுத்தியதர்க்கு நன்றி.

இப்படிக்கு நன்றிகளுடன்,
அருள்திரு.கில்பர்ட் ஆசிர்வாதம்.

காலை மன்னா

அன்புள்ள சகோதரர்களே காலை வணக்கங்கள் ஏசாயா.43 :5  ன் வழியாக கடவுள் கூறுகிறார் பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.

ஒவ்வொரு காலையை துவங்குவதும் பெரிய சவாலாக உள்ளது  காரணம், போட்டி பொறாமை நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மை நிலை நிறுத்திக்கொள்ள தினந்தோறும் போராட வேண்டியுள்ளது, உதவி செய்யவோ  துக்கிவிடவோ ஆள் இல்லாமல் தவிக்கிறோம், உண்மையான அன்புள்ள நண்பர்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறோம்.

எந்த நாள் எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். நன்மைகளையும் நல்லவர்களையும் தேடி தேடி அலுத்து போன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த காலை வேளையில் கடவுள் நம்மோடு பேசுகிற வார்த்தை நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே என்பதே. இந்த முழு உலகையும் படைத்த நம் கடவுள் இன்று நமக்கு துணையாக இருக்கிறார். பயப்படாதே என்று தைரியமுட்டுகிறார்.

இந்த நாளில் நம்முடைய அத்துணை நிகழ்வுகளிலும் அவர் நம்மோடு   இருந்து நம்மை பாதுகாக்க போகிறார். அந்த முழு நிறைவோடு இந்த நாளை நாம் துவங்க கடவுள் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமென்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews