WORD OF GOD

WORD OF GOD

Thursday, July 28, 2011

இயேசு அழைக்கிறார்

ம‌த்தேயு.6:35

இயேசு அவ‌ர்க‌ளை நோக்கி: ஜீவ‌ அப்பம் நானே, என்னிட‌த்தில் வ‌ருகிற‌வ‌ன் ஒருக்காலும் ப‌சிய‌டையான், என்னிட‌த்தில் விசுவாச‌மாயிருக்கிற‌வ‌ன் ஒருக்காலும் தாக‌ம‌டையான்.... என்றார்.



அன்பானவர்களே தமிழர்களாகிய நமது பண்புகளில் மிக முக்கியமான ஒரு பண்பு, வந்தவர்களை உபசரிப்பது, நம் வீட்டிற்கு நம்மை தேடி வருகிறவர்களை வரவேற்பதற்கு அடையாளமாக நாம் அவர்கள் சாப்பிட ஏதாவது கொடுப்போம், நம் மூதாதையர்கள் வந்தவர்கள் வயிறு குளிர கொடுக்கவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள், நாம் சாப்பிட கொடுப்பதன் மூலம், நாம் அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்வதை அவர்களுக்கு உறுதி செய்கிறோம்.

அதுமட்டுமல்ல உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றும் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள். நாம் எப்படி அன்பின் அடையாளமாக ஒருவருக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கிறோமோ அதே போல நமக்கு அன்போடு கொடுத்தவர்களை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை, கடவுள் இந்த உலகிற்கு கொடுத்த ஜீவ ஆகாரம் என்கிறார். மத்தேயு.6:35.


இஸ்ரவேல் மக்களை கடவுள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, வனாந்திரத்தில் வழி நடத்தி வந்த போது, அவர்கள் சாப்பிட வனாந்திரத்தில் ஒன்றும் இல்லை, எனவே ஒரு நல்ல தகப்பனாக அவர்கள் பசியாற, வானத்திலிருந்து மன்னா என்ற உணவை பொழிந்து அவர்களை ஆசீர்வதித்தார். அந்த ஆகாரத்தை நாம் ருசித்ததில்லை. அதற்கு பதிலாக கடவுள் வானத்திலிருந்து, உலக மக்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளத் தக்க ஆகாரமாய் இயேசுவை இவ்வுலகில அனுப்பினார் என்று இயேசுவே குறிப்பிடுகிறார். மத்தேயு.6:32,33.

அப்படியானால் இயேசு கடவுளால் இந்த உலகிற்கு கொடுக்கப்பட்ட, ஆகாரம். இவர் சரீரத்திற்கான ஆகாரம் அல்ல ஜீவனுக்கான ஆகாரம். அதாவது வாழ்வில் வறுமையோடும் தோல்விகளோடும், போராட்டங்களோடும், எதிர்காலத்தை பற்றிய பயத்தோடும், வியாதியோடும், வாழ்வின் பசியோடும்  போராடி வருகிற மக்களின் பசியாற்றும் ஆகாரமாக இயேசு இருக்கிறார். என்னிடத்தில் வருகிற ஒருவனும், பசியடையான், என்னை விசுவாசிக்கிறவன் தாகமடையான் என்று உறுதியாக இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

அன்பானவர்களே, வாழ்வில் சந்தோஷம் எனும் ஆகாரமில்லாமல், சந்தோஷம் எங்கே கிடைக்கும் என்ற தாகத்தோடு வாழ்ந்து வருகிறீர்களா? நான் தேடும் வெற்றி இன்னும் என் வாழ்வில் வரவில்லையே என்று சோர்வோடு காணப்படுகிறீர்களா? என்னிடத்தில் வாருங்கள் என்னை விசுவாசியுங்கள் என்று இயேசு அழைக்கிறார், செவி கொடுப்போம், அவர் தரும் சந்தோஷ வாழ்வை அனுபவிப்போம். ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, July 27, 2011

வாருங்கள்! வாழ்வில் வளம்பெற!

10 மற்றும் 12 ம் வகுப்பு தேறிய / தவறிய மாணவர்களின் வாழ்வை வளமாக்க கோவையில் வந்திருக்கிறது.

Winston INSTITUTE OF CATERING & FASHION DESIGNING

APPROVED BY BSS, PROMOTED BY GOVT. OF INDIA REF. NO. TN/5252
Cell : 8344882500, 8344882300. Ph : 0422-2410142


Sunday, July 24, 2011

கர்த்தருடைய வார்த்தை எது? ஞாயிறு செய்தி

இன்றைய தியான பகுதிகள்:

எரேமியா.28:5 9

ரோமர்.6:2 11

மத்தேயு:10:34 41


அன்பான உடன் விசுவாசிகளே நம் நாடு அடிமைத்தனத்தில் இருந்த போது மக்கள் அனைவரும் விடுதலைக்காக ஏங்கி நின்றனர். அப்போது அனேக தலைவர்கள் மக்களை சுதந்திர போராட்டத்தில் வழி நடத்தினர். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் காந்தியடிகள், இன்னொருவர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இருவருடைய லட்சியமும் ஒன்றுதான், நாடு விடுதலை பெற வேண்டும், ஆனால் இருவருடைய போராட்ட வழி வித்தியாசமானது. போர்தான் விடுதலைக்கு வழி எனவே செய் அல்லது செத்துமடி என்று சுபாஷ் அறைக்கூவல் விடுத்தார், ஆனால், காந்தியடிகளோ போர் அல்ல அறப்போர்தான் விடுதலைக்கான வழி என்றார். இரண்டு தலைவர்கள், லட்சியம் ஒன்று, ஆனால், வெற்றிக்கான வழி மட்டும் இருவருக்கும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

அதே போல‌ ந‌ம்முடைய‌ தியான‌ ப‌குதியான எரேமியா.28:5முத‌ல் 9 வ‌ரை உள்ள வ‌ச‌ன‌ங்க‌ளில், இரு தீர்க்க‌த‌ரிசிக‌ள் வ‌ருகிறார்க‌ள், இருவ‌ரும் ஒரே நோக்கத்திற்காக‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் உரைக்கின்ற‌ன‌ர். ஆனால் சொல்லுகிற‌ வ‌ழி முறையில் இருவ‌ரும் ஒருவ‌ருக்கொருவ‌ர் முர‌ண்ப‌டுகின்ற‌ன‌ர்.

அதாவ‌து இஸ்ர‌வேல‌ரில் சில‌ரை பாபிலோனிய‌ர்க‌ள் சிறைப் பிடித்து சென்றிருந்த‌ன‌ர், அவ‌ர்க‌ள் விடுத‌லை தான் அப்போது தேச‌த்தின் மிக‌ முக்கிய‌ பிர‌ச்சினையாக‌ இருந்த‌து, அவ‌ர்க‌ள் விடுத‌லையை ப‌ற்றிதான் இருவ‌ரும் தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் உரைக்கின்ற‌ன‌ர், கனனியா உரைக்கிற‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் யாதெனில், க‌ர்த்த‌ர் இர‌ண்டே வ‌ருஷ‌த்தில் இந்த‌ அடிமைத்த‌ன நுக‌த்தை உடைத்து போடுவார், பாபிலோனிய‌ர்க‌ள் கொள்ளைய‌டித்த‌ தேவால‌ய‌ ப‌ணிமுட்டுக‌ளை மீண்டும் கொண்டுவ‌ந்து வைப்பார்க‌ள் என்று க‌ர்த்த‌ர் சொன்ன‌தாக‌ சொல்லுகிறார், இது விடுத‌லையை எதிர்பார்த்து காத்திருக்கிற ம‌க்க‌ளுக்கு இனிமையான‌ செய்தியாக‌அமைகிற‌து.  

 (அனால் எரேமியாவின் செய்தி இதிலிருந்து முற்றிலும் வித்தியாச‌மான‌து, அவ‌ர் சொல்லுகிற க‌ர்த்த‌ருடைய‌ செய்தி யாதெனில், இந்த‌ அடிமைத்த‌ன‌ம் க‌ர்த்த‌ரின் சித்த‌ம், என‌வே அவ‌ரே இந்த‌ நுக‌த்தை நீக்குவார் அதுவ‌ரை அமைதியாக‌ இந்த‌ நுக‌த்தை நீங்க‌ள் சும‌க்க‌ வேண்டும், இந்த‌ கால‌த்தை க‌ர்த்த‌ரிட‌ம் நெருங்க‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என்ப‌தே எரேமியாவின் செய்தி. என‌வேதான் ம‌க்க‌ள் எரேமியாவின் வார்த்தைக‌ளை ஏற்றுக் கொள்ள‌வில்லை. அவ‌ரை க‌ண்டாலே க‌ல்லெறிந்தார்க‌ள், த‌ங்க‌ளுக்கு எதிராக‌ அவ‌ர் பேசுவ‌தாக‌ நினைத்தார்க‌ள்)

க‌னனியா சொல்வ‌தையெல்லாம் பொறுமையாக‌ கேட்ட‌ எரேமியா அவ‌ருக்கு ப‌தில் சொல்வ‌திலிருந்துதான் இன்றைய‌ தியான‌ ப‌குதி துவ‌ங்குகிற‌து. அவ‌ர் சொல்லுவ‌து மூன்று விஷ‌ய‌ங்க‌ள்.

1. ஆமேன், நானும் நீ சொல்வ‌து ந‌ட‌க்க‌ வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.

2. ஆனால் ச‌மாதான‌த்தை சொல்வ‌து ம‌ட்டுமே தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் இல்லை, அத‌ற்கு ந‌ம‌க்கு முன்னால் உரைத்த‌வ‌ர்க‌ள் உதார‌ண‌ம்.

3. நீ சொல்வ‌து ந‌ட‌ந்தால் தான் நீ சொல்வ‌து உண்மையான‌ க‌ட‌வுளுடைய‌ வார்த்தை.

கார‌ண‌ம், ம‌க்க‌ள் விரும்புகிறதை சொல்வ‌தெல்லாம் சொல்வ‌து க‌ட‌வுளுடைய‌ வார்த்தை அல்ல‌, க‌ட‌வுளின் சித்த‌தை சொல்வ‌துதான் க‌ர்த்த‌ருடைய‌ வார்த்தை. க‌ன‌னியாவோ ம‌க்க‌ள் விரும்பும் விடுத‌லையை கிடைக்கும் என்று பேசுகிறார் இர‌ண்டே வ‌ருஷ‌த்தில் கிடைக்கும் என்றெல்லாம் பேசி அவ‌ர்க‌ள் பாராட்டை பெறுகிறார். ஆனால் அடுத்த‌வ‌ர் பாராட்டுவ‌த‌ற்காக‌ பேசுவ‌து க‌ர்த்த‌ருடைய‌ வார்த்தை அல்ல. ஆனால் ம‌க்க‌ள் க‌ன‌னியா சொன்ன‌தை ஏற்றுக் கொண்டார்க‌ள் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் விரும்பிய‌து அதைதானே, அத‌னால் அடிமைத்த‌ன‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ள் க‌ல‌க‌ம் செய்ய‌வும் போராட‌வும் ஆர‌ம்பித்த‌ன‌ர். அத‌ன் ப‌ல‌ன் க‌டுமையான‌ இழ‌ப்புக‌ளை நாடு ச‌ந்தித்த‌து. தேவால‌ய‌த்தை ப‌ணிமுட்டுக‌ளை திருடிய‌வ‌ர்க‌ள், க‌டைசியில் தேவால‌ய‌த்தையே சுட்டெரித்தார்க‌ள். எரேமியா சொன்ன‌து உண்மையான‌ வார்த்தை என்ப‌து நிரூப‌ண‌மான‌து.

ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாம் கூட‌ க‌ட‌வுளுடைய‌ வார்த்தை, நாம் விரும்புகிற‌ப‌டி இருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறோம், பிர‌ச‌ங்கியார்க‌ள் கூட‌, ம‌க்க‌ள் விரும்ப‌ வேண்டும் பாராட்ட‌ வேண்டும் என்று பிர‌ச‌ங்கம் செய்கின்ற‌ன‌ர். இர‌ண்டுமே க‌ர்த்த‌ருடைய‌ சித்த‌த்திற்கு எதிரான‌வை. நாம் விரும்புவ‌தெல்லாம் ந‌ம‌க்கு ஆசீர்வாத‌மாய் இருக்கும் என்ப‌த‌ற்கு உத்த‌ரவாத‌ம் இல்லை ஆனால் க‌ட‌வுளின் விருப்ப‌மே ந‌ம்மை ஆசீர்வ‌திப்ப‌துதானே. என‌வே அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளை அப்ப‌டியே ஏற்றுக் கொண்டு வாழ்வோம். அதற்காய் உபத்திரவங்களை சுமக்க வேண்டி வருமாயின் சந்தோஷமாய் சுமப்போம்.

க‌ட‌வுளுடைய‌ வார்த்தையை அப்ப‌டி உண்மையாய் பிர‌ச‌ங்கிக்கிற‌வ‌ர்க‌ளை அடையாள‌ம் காணுவோம். அவ‌ர்க‌ளை ஏற்றுக் கொள்வோம், காரண‌ம் சுவிசேஷ‌ ப‌குதியில் ஆண்ட‌வ‌ர் அவ‌ர்க‌ளை ஏற்றுக்கொள்ளுகிறவ‌ர்க‌ள் என்னை ஏற்றுக் கொள்ளுகிறார்க‌ள் என்றும், அவர்க‌ளுக்கு ஒரு க‌ல‌ச‌ம் த‌ண்ணீர் கொடுக்கிற‌வ‌னும் அதை திரும்ப‌ பெறுவான் என்றும் தெளிவாக‌ கூறுகிறார்.

இந்த வார்த்தையில் நிலை நின்று வாழ தூயாவியானவர்தாமே நம்மை வழி நடத்தி காப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, July 23, 2011

தாமதம் அற்புதமாகும்..

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், நாம் யாரோடு நெருக்கமாய் பழகுகிறோம் என்பது நம் வாழ்வில் மிக முக்கியமானது, காரணம் நல்லவர்கள் நமக்கு நெருக்கமாக இருந்தால், நம் வாழ்க்கை நன்றாக இருக்கும், கெட்டவர்களை நமக்கு நெருக்கமாக கொண்டிருந்தால், நம் வாழ்க்கை கெட்டு போகும், எனவே நாம் யாரோடு நெருக்கமாய் இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது.
 
சங்கீதம்.145:18 ல் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அதாவது யார் கடவுளை நோக்கி உண்மையாய் கூப்பிடுகிறார்களோ, அவர்களுக்கு கடவுள் நெருக்கமானவராக வருவார். அவர் நெருக்கமாக வந்தால் என்ன நடக்கும்? நல்லவர்கள் நமக்கு நெருக்கமாக இருந்தாலே நம்முடைய வாழ்வு நன்றாக இருக்குமென்றால், இவ்வுலகம் முழுதையும் ந‌ன்மையால் முடிசூட்டுகிற‌ இறைவ‌ன் ந‌ம்மோடிருந்தால் என்ன‌ ந‌ட‌க்கும். யோவான் 11 ம் அதிகார‌த்தில் அத‌ற்கு ப‌தில் இருக்கிற‌து.
 
ஆண்ட‌வ‌ர் ஊழிய‌த்தின் நிமித்த‌மாக‌ ஊர்க‌ள் தோறும் போய்க்கொண்டிருந்தார். அந்த‌ நேர‌த்தில் பெத்தானியாவிலிருந்து, அவ‌ரை தேடி சில‌ர் வ‌ந்த‌ன‌ர், அவ‌ர்க‌ள் வ‌ந்த்து கூறிய‌ செய்தி, பெத்தானியா ஊரானான‌ லாச‌ரு சுக‌வீன‌மாய் இருக்கிறான் என்ப‌தே. யார் இந்த‌ லாச‌ரு இயேசுவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன், அவ‌னுடைய‌ ச‌கோத‌ரிக‌ளான‌, மார்த்தாள், ம‌ரியாள் என்ப‌வ‌ர்க‌ள் இயேசுவின் பெண் சீட‌ர்க‌ளாக‌ அவ‌ரோடு ஊழிய‌த்தில் உற்சாக‌மாய் ப‌ங்கெடுப்ப‌வ‌ர்க‌ள். ஆனால் ஆண்ட‌வ‌ரால் உட‌னே செல்ல‌ முடிய‌வில்லை. த‌ம்மை நோக்கி கூப்பிடுகிற‌ யாவ‌ருக்கும், உண்மையாய் த‌ம்மை நோக்கி கூப்பிடுகிற‌ யாவ‌ருக்கும், ச‌மீப‌மாய் வ‌ர‌ வேண்டிய‌வ‌ர‌ல்ல‌வா? ஆனால் ஊழிய‌த்தின் நிமித்த‌ம் அவ‌ரால் உட‌னே செல்ல‌ முடிய‌வில்லை. இரண்டு நாள் க‌ழித்தே அவ‌ர் புற‌ப்ப‌ட்டார், கார‌ண‌ம் அவ‌ன் ம‌ரித்து போனான் என்ப‌தை அறிந்திருந்தார். ஆண்ட‌வ‌ர் ச‌மீப‌த்தில் இல்லை என்றால், ந‌ம் வாழ்விலும் ந‌ம் துன்ப‌ங்க‌ள் ந‌ம்மை மேற்க்கொண்டுவிடும் என்ப‌த‌ற்கு இந்த‌ ப‌குதி தெளிவான‌ உதார‌ண‌ம்.
 
ஆண்ட‌வ‌ர் சீட‌ர்க‌ளோடு பெத்தானியாவை நெருங்கிய‌ செய்தியை, லாச‌ருவின் ச‌கோத‌ரியான‌ மார்த்தாள் கேள்விப்ப‌ட்டு ஓடிவ‌ந்து, ஆண்ட‌வ‌ரே நீர் இங்கே இருந்த்திருப்பீரானால் என் ச‌கோத‌ர‌ன் ம‌ரித்திருக்க‌மாட்டான் என்றாள், எவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌த்திய‌ம், ஆண்ட‌வ‌ர் ம‌ட்டும் அவ‌ன் வியாதியாய் இருக்கும்போதே அவ‌ர்க‌ளுக்கு ச‌மீப‌மாய் இருந்த்திருந்தால் அவ‌ன் ம‌ரித்திருக்க‌மாட்டான். ஆனால் ஆண்ட‌வர் தாம‌தமாக‌ வ‌ந்தாலும் அவ‌ர் ச‌மீப‌மாய் வ‌ந்தால் போதும் எல்லாமே மாறிவிடும்.
 
ஆம் அவ‌ர்க‌ள் துன‌ப‌மும் மாறிய‌து லாச‌ருவின் க‌ல்ல‌றையை காண்பிக்க‌ சொல்லி ம‌ரித்து நாளான‌ பிண‌மாக‌, துர் நாற்ற‌ம் வீசுகிற‌ நிலையிலிருந்த‌ பிண‌த்தை லாச‌ருவே வெளியே வா என்ற‌ ஒரே வார்த்தையில் உயிரோடு கொண்டுவ‌ந்தார்.
 அன்பான‌வ‌ர்க‌ளே, ஆண்ட‌வ‌ர் ந‌ம் ப‌க்க‌த்தில் இருந்தால் போதும், ந‌ம் வாழ்வு ம‌கிமையான‌ வாழ்வாக‌ மாறிப்போகும், தாம‌தமானாலும் ந‌ம்மை தேடி வ‌ருவார். ஆண்ட‌வ‌ரிட‌த்தில் எவ்வ‌ள‌வு நாளாய் கேட்கிறேன், இன்னும் அவ‌ர் த‌ர‌வில்லையே என்று சோர்வ‌டைகிறீர்க‌ளா? ஏன் ஆண்ட‌வ‌ரே என்று தாம‌த‌த்தை குறித்து வ‌ருத்த‌ப்ப‌டுகிறீர்க‌ளா? அன்பான‌வ‌ர்க‌ளே உண்மையாய் கூப்பிடுகிற‌ யாரையும் அவ‌ர் த‌ள்ளாத‌வ‌ர். தாமத‌மாகிற‌தா, நீங்க‌ள் அற்புத‌த்தை பெற்றுக் கொள்ள‌ போகிறீர்க‌ள். இந்த‌ ந‌ம்பிக்கையோடு, உற்சாக‌மாய் அவ‌ரை கூப்பிடுகிற‌வ‌ர்க‌ளாய் வாழ‌ ப‌ரிசுத்தாவியான‌வ‌ர் ந‌ம்மை காத்துக் கொள்வாராக‌ ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

Thursday, July 21, 2011

பொக்கிஷம் உங்கள் வீட்டிலிருக்கிறது



அன்புள்ள உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். நாம் அனைவரும் பொக்கிஷங்களை விரும்புகிறவர்கள். இரவும் பகலும் கடினமாய் உழைக்கிறோம் பொக்கிஷத்தை சேர்ப்பதற்காக. உழைப்பில் பலமுறை சோர்வையும் சிலமுறை வெற்றிகளையும் காணுகிறோம். நம் உழைப்பு ஒருக்காலும் வீணாகாதபடி வெற்றிகளை குவிக்கும் வாழ்வு கிடைத்தால் எப்படி இருக்கும்? அநேக பொக்கிஷங்களை சம்பாதித்துவிடலாமே.

பொக்கிஷங்க‌ளை அடைய‌ வேண்டும் என்றால் நாம் செய்யும் காரிய‌மெல்லாம் வாய்க்க‌ வேண்டும், நாம் செய்வ‌தெல்லாம் வாய்த்தால் தான் ந‌ம் வாழ்வு பொக்கிஷ‌ம் நிறைந்ததாகும், பொக்கிஷ‌ம் நிறைந்தால் ந‌ம் வாழ்வின் பிர‌ச்சினைக‌ள் தீரும், ச‌மாதான‌ம் பொங்கும். அப்ப‌டியானால் நாம் செய்வ‌தெல்லாம் வாய்க்க‌ வேண்டும்.

அதாவ‌து, ப‌ணி உய‌ர்வுக்காக‌ உழைத்தால் ப‌ணி உய‌ர்வு கிடைக்க‌ வேண்டும், வேலை தேடினால் கிடைக்க‌ வேண்டும், வீடு க‌ட்ட‌ துவ‌ங்கினால் த‌டையின்றி க‌ட்டி முடிக்க‌ வேண்டும், க‌ல்வி க‌ற்றால் தேர்ச்சி பெற‌ வேண்டும். வியாதிக்கு மருத்துவம் பார்த்தால் குணமாக வேண்டும்.

அதுதான் நாம் செய்வ‌தெல்லாம் வாய்ப்ப‌து. இது சாத்திய‌மா? நாம் செய்வ‌தெல்லாம் வாய்க்குமா? அத‌ற்கான‌ வ‌ழி இருக்கிற‌தா ஆம் அதற்கான வழியை வேதாகமத்தில், முதலாம் சங்கீதம் கற்றுத்தருகிறது.
சங்கீதம்.1:2 - 3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்: அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

அப்ப‌டியானால் நம‌து பொக்கிஷ‌ம் வேதாக‌ம‌ம். உங்க‌ள் வீட்டில் வேதாகம‌ம் இருக்கிறதா? எங்கே இருக்கிற‌து? எப்ப‌டி இருக்கிற‌து? தின‌ந்தோறும் ப‌டிக்கும் ப‌ழக்க‌ம் இருக்கிற‌தா? குழந்தைக‌ளோடு அதை தியானிக்கிறீர்க‌ளா? நீங்க‌ள் செய்வ‌தெல்லாம் வாய்க்கும். பொக்கிஷ‌ம் உங்க‌ள் வீடு தேடி வ‌ரும்.

அதைதானே ஆண்ட‌வ‌ர் ம‌த்தேயு.6:33 ல் கூறுகிறார், முத‌லாவ‌து க‌ட‌வுளுடைய‌ ராஜ்ஜிய‌த்தையும் நீதியையும் தேடுங்க‌ள், அப்பொழுது இவைக‌ளெல்லாம் (உல‌க ச‌ம்ப‌த்துக்க‌ள்) உங்க‌ளுக்குக்கூட‌ கொடுக்க‌ப்ப‌டும்.
க‌ர்த்த‌ருடைய‌ வார்த்தையை உங்கள் வீட்டிலுருந்தே தினந்தோறும் ப‌டிக்க‌வும் அதை தியானிக்க‌வுமே இந்த‌ த‌ள‌த்தை அர்ப்ப‌ணித்திருக்கிறேன், இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். க‌ர்த்த‌ருடைய‌ வார்த்தையில் இர‌வும் ப‌க‌லும் தியானித்து. பொக்கிஷ‌ங்க‌ளோடு நிறைவான வாழ்வு வாழ‌ இயேசு கிறிஸ்து ந‌ம் அனைவ‌ரையும் ப‌ரிசுத்தாவியினால் நிறைத்து காத்துக் கொள்வாராக‌ ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, July 20, 2011

இயேசுவின் இரத்தம் ஜெயம்


வாழ்க்கை என்பது நிரந்தரமானதல்ல, நாம் வாழும் வாழ்க்கை மிகவும் குறுகியதே, 70 வருடம் அல்லது பெலத்தின் மிகுதியால் 80 வருடம் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை குறுகியதே, அது சீக்கிரமாய் கடந்து போகிறது. எனவே வாழும்போதே நம் வாழ்வை நாம் காத்துக்கொள்ள வேண்டும். காரணம், நாம் வெறும் சரீரம் கொண்டவர்களல்ல. ஆன்மாவை கொண்டவர்கள்.

ஆன்மாவை காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எப்படி வாழும்போது, நம் சரீரத்தை எந்த சேதமுமில்லாமல் காத்துக் கொள்ள முயற்ச்சிக்கிறோமோ, அதே போல நம் ஆத்துமாவையும் காத்துக் கொள்ளவேண்டும். ஆன்மா இருக்கும் வரை மனிதன், ஆன்மா பிரிந்துவிட்டால் பிணம்.

எனவே சரீரத்தைவிட, ஆன்மா முக்கியம். எனவே தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆன்மீகவாதிகள், வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உண‌வை ம‌ற‌ந்து, ச‌ரீர‌ இன்ப‌ங்க‌ளை ம‌ற‌ந்து காடுக‌ளிலும் குகைக‌ளிலும் போய் த‌ங்க‌ள் ஆன்மாவை காத்துக் கொள்ள‌ த‌வ‌மிருந்தார்க‌ள். இது எல்லா நாடுக‌ளிலும் எல்லா ச‌மூக‌த்திலும் ந‌ட‌ந்திருக்கிற‌து. இப்போதும் கூட நடக்கிறது.

இந்த‌ ஆன்மாவை காத்துக் கொள்ளும் வ‌ழியைதான் வேதாக‌ம‌ம் ந‌ம‌க்கு போதிக்கிற‌து. நித்திய‌ ஜீவ‌னின் வ‌ழியை, அதாவ‌து அழிவ‌ற்ற‌ ஆன்மாவை பெறும் வ‌ழியை வேதாக‌ம‌ம் ந‌ம‌க்கு போதிக்கிற‌து.

யோவான்.3:16, தேவ‌ன் த‌ம்முடைய‌ ஒரே பேறான‌ குமார‌னை விசுவாசிக்கிற‌வ‌ன் எவ‌னோ அவ‌ன் கெட்டு போகாம‌ல் நித்திய‌ ஜீவ‌னை அடையும்ப‌டிக்கு அவ‌ரை த‌ந்த‌ருளி இவ்வ‌ள‌வாய் உல‌க‌த்தில் அன்பு கூர்ந்தார்.

ஆம் அன்பான‌வ‌ர்க‌ளே, நாம் அழிவில்லா ஆன்மாவை பெற‌ இயேசு ஆண்ட‌வ‌ரை விசுவாசிக்க‌ வேண்டும். அவ‌ரே ந‌ம் ஆத்துமாவை அழிவிலிருந்து மீட்க‌ வ‌ல்ல‌வ‌ர். அவ‌ர‌து இர‌த்த‌ம் அழிவில்லா ஆன்மாவை பெற‌ த‌டையாக‌ உள்ள‌ பாவ‌த்தை க‌ழுவி துடைத்து, பாவ‌ ம‌ன்னிப்பை வ‌ழ‌ங்கி ந‌ம்மை அழிவில்லா வாழ்வில் சேர்க்கிற‌து. இந்த‌ உல‌கில் பாவ‌மே செய்யாத‌ அவ‌ர் ந‌ம் பாவ‌ங்க‌ளை ம‌ன்னிக்க‌ த‌ன் உயிரை தாமே கொடுத்தார். இத‌ன் மூல‌ம் ம‌னித‌னின் பால் தான் கொண்ட‌ எல்லைய‌ற்ற‌ அன்பை இவ்வுல‌கிற்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டினார். இயேசுவைய‌ன்றி வேறொரு இர‌ட்ச‌க‌ர் இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தில் இல்லை. அவ‌ரை ந‌ம்புவோம், ந‌ம் வாழ்வையும் ஆன்மாவையும் அழிவின்றி காத்துக் கொள்வோம். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

மன்னிக்கவும். நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அன்பான உடன் விசுவாசிகளே, நாயக்கனேரியில் ஒரு அற்புதம் என்ற பதிவுக்கு கடுமையான எதிர்ப்பை யாரோ ஒரு சகோதரர் தெறிவித்து, மிக கேவலமாக, வெளியிடுவதற்கு தகுதியற்ற வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அவருக்கு நான் என்ன சொல்வதென தெரியவில்லை.


நான், என் நம்பிக்கையை பேசுகிறேன், யார் மனதையும் புண் படுத்தும் வகையிலோ, எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையிலோ இதுவரை எந்த பதிவையும் வெளியிடவில்லை. நானும் நூற்றுக்கணக்கான மக்களும் தங்கள் கண்களால் கண்டதை எழுதினேன். அது ஏன் உங்களை பாதிக்கிறது? அதை ஏன் தரக்குறைவாக விமர்சிக்கிறீர்கள்? நாகரீகமில்லாத வார்த்தைகளில் ஏன் என்னை கேவலப்படுத்துகிறீர்கள்?
அதுதான் உங்க‌ள் ச‌ந்தோஷ‌மா? அடுத்த‌வ‌ர் ம‌ன‌தை புண்ப‌டுத்துவ‌தும், அடுத்த‌வ‌ர் ந‌ம்பிக்கையை கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌தும்தான் உங்க‌ள் கொள்கையா? இந்த‌ ப‌திவிட‌ என் க‌ர‌ங்க‌ள் ந‌டுங்குகிற‌து. உங்க‌ள் ம‌ன‌ம் என் வார்த்தைக‌ளால் புண்ப‌ட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நீங்க‌ள் எப்ப‌டி இவ்வ‌ள‌வு துணிக‌ர‌மாய் உங்க‌ளுக்கு அறிமுக‌மில்லாத‌ என்னையும் என் ந‌ம்பிக்கையையும் கேவ‌ல‌ப்ப‌டுத்துகிறீர்க‌ள்?


இயேசுவை ஆண்ட‌வ‌ராய் நீங்க‌ள் ந‌ம்பாம‌ல் இருக்க‌லாம், அது உங்க‌ள் ந‌ம்பிக்கை அதை சரி என்றோ த‌வ‌று என்றோ நான் விம‌ர்சிக்க‌வே உரிமை இல்லாத‌ போது உங்க‌ள் ந‌ம்பிக்கையை கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ முடியுமோ? அனால் நீங்க‌ள் அதைதான் செய்கிறீர்க‌ள்.


உங்க‌ளுக்கு நான் இதுவ‌ரை என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தெரிந்த‌ என் ந‌ம்பிக்கையை, இதுவ‌ரை என் குடும்ப‌த்தின‌ருக்கு கூட‌ தெரியாத‌ ஒரு விஷ‌ய‌த்தை உங்க‌ளுக்காக‌ இப்போது அதை வெளிப்ப‌டுத்துகிறேன். நான் கிறிஸ்த‌வ‌ குடும்ப‌த்தில் பிற‌ந்தவ‌ன் ஆனால் நான் விட‌லை ப‌ருவ‌த்தில் க‌ட‌வுள் ந‌ம்பிக்கை முற்றிலும் அற்ற‌வ‌ன். விடுத‌லை ப‌த்திரிக்கையை நூல‌க‌த்தில் தேடி சென்று ப‌டித்து, என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் க‌ட‌வுள் ம‌றுப்பு சிந்தாத்த‌த்தை 13 வ‌ய‌திலேயே ப‌ர‌ப்பின‌வ‌ன்.
க‌ட‌வுள், புர‌ட்சிக்கார‌ன் என்ற‌ வேலு பிர‌பாக‌ர‌னின் க‌ட‌வுள் ம‌றுப்பு ப‌ட‌ங்க‌ளை தேடி சென்று பார்த்த‌வ‌ன், நான் ம‌ட்டும‌ல்ல‌ என் ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்துக்கொண்டு போய் அவ‌ர்க‌ளையும் பார்க்க‌ வைத்த‌வ‌ன்.


க‌ட‌வுள் இல்லை, இல்லை என்ப‌தினால் நான் என்ன‌ க‌ட‌வுளுக்கு விரோதியா? ஏழைக‌ளை காப்பாற்றும் அநீதிக‌ளை த‌ட்டி கேட்கும் ஒரு க‌ட‌வுள் இல்லையே என்ப‌துதான் என் க‌வ‌லை என்று வேலு பிர‌பாக‌ர‌ன் பேசுவ‌தை விசில‌டித்து ர‌சித்த‌வ‌ன். இயேசுவை ஒரு ச‌ராச‌ரி ம‌னித‌னாக‌ கூட‌ அப்போது நான் ஏற்றுக் கொண்ட‌தில்லை.

என் ந‌ண்ப‌ர்க‌ள் அத‌ற்கு சாட்சிக‌ள், என் ந‌ண்ப‌ன், ஜோ
சாம் ஒரு கிறிஸ்த‌வ‌ன், என்னுடைய‌ இன்னொரு ந‌ண்ப‌ன் பிர‌பாக‌ர‌ன் இந்து ம‌த‌த்தில் தீவிர‌மாக‌ இருந்த‌வ‌ன் இருவ‌ரையும் ஒரு சேர‌ க‌டுமையாக‌ விம‌ர்சிப்பேன். ஆனால் என் பெற்றோரின் க‌டுமையான‌ வ‌ற்புறுத்த‌லால் இறையிய‌ல் க‌ல்லூரியில் சேர்ந்தேன். க‌ல்லூரியில் கூட‌ க‌ட‌வுள் ம‌றுப்பு கொள்கையில் தீவிர‌மாக‌ இருந்த‌வ‌ன், என்னோடு ப‌யின்ற‌ என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளான‌ அருட்திரு.மில்ட‌ன், அருட்திரு.கிளாட்ச‌ன் போன்றோர்க‌ள் இதை ந‌ன்கு அறிவார்க‌ள்.


ஆனால் கால‌ ஓட்ட‌த்தில்  என் ந‌ம்பிக்கையில் சில‌ மாறுத‌ல்க‌ள் உண்டான‌து. கார‌ண‌ம் பைபிள் (வேதாக‌ம‌ம்). அதில் இயேசுவின் வாழ்க்கை என‌க்கு பிர‌மிப்பாக‌ இருந்த‌து. அவ‌ரை முத‌லில் நான் ஒரு போராளியாக‌ தான் ஏற்றுக் கொண்டேன். அவ‌ரை போல‌ ச‌மூக‌ அக்க‌றையோடு பேசின சமூக‌ போராளிக‌ள் இன்று வ‌ரை உல‌க‌த்தில் தோன்ற‌வில்லை.
அத‌ற்கு ஒரே ஒரு உதார‌ண‌ம், அவ‌ர் தான் முத‌லில் எல்லா ப‌ணியாள‌னுக்கும் ச‌ம‌மான‌ கூலி கொடுக்க‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்த‌வ‌ர். ம‌த்தேயு.20:1 முத‌ல் 15 வ‌ரை வாசித்து பாருங்க‌ள். ம‌னித‌னின் உழைப்பு திற‌ன் மாறாலாம ஆனால் அவ‌ர்க‌ளுடைய‌ தேவைக‌ள் ச‌ம‌ம் என்ப‌தையும், அனைவ‌ருக்கும், ஒரே ச‌ம்ப‌ள‌ம் கிடைக்க‌வேண்டும் என்பதையும் உங்க‌ளுக்காக எனக்காக சொல்லி வைத்த‌வ‌ர்.


ஏழைக‌ளை, ச‌மூக‌த்தால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளை, நோயாளிக‌ளை ஏன் குற்ற‌வாளிக‌ளை கூட‌ த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்று ச‌ம‌த்துவ‌ உல‌கிற்கு முத‌ல் அடி வைத்த‌வ‌ர். அவ‌ரிட‌மிருந்துதான் அத்துணை புர‌ட்சிக‌ளும் துவ‌ங்கிய‌து. என‌வேதான் முத‌லில் அவ‌ரை போராளியாக‌ அங்கீக‌ரித்தேன். ச‌ரி ஒரு ந‌ல்ல‌வ‌ரின் ந‌ல்ல‌ கொள்கைக‌ளை ம‌க்க‌ளிட‌ம் பர‌ப்ப‌ ந‌ல்ல‌ வாய்ப்பாக‌ இருக்கும் என்ற‌ ஒரே கார‌ண‌த்தால் தான் தொட‌ர்ந்து க‌ல்வியை தொட‌ர்ந்தேன். இது யாருக்கும் தெரியாது.


அந்த‌ கார‌ண‌த்திற்காக‌த்தான், போத‌க‌ ப‌ணியையும் செய்தேன். என் பிர‌ச‌ங்க‌ங்க‌ளை கேட்ட‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் இதை அறிவ‌ர். ஆனால் இதுவும் நிலைக்க‌வில்லை, நான் பணி துவ‌ங்கி இர‌ண்டு ஆண்டுக‌ள் க‌ழித்து, ஒரு நாள் ஆம்பூர் அருகே உள்ள‌ சான்றோர் குப்ப‌த்தில் மாலை ஆராத‌னை முடித்துவிட்டு, விண்ணமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகே வ‌ரும்போது ச‌ரியாக‌ 7 ம‌ணிய‌ள‌வில் என் பின்னால் வ‌ந்த‌ ஒரு கார் வேக‌மாக‌ என் இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் மீது மோதிய‌து, ஒரே நொடிதான் 10 அடி தொலைவில் தூக்கி வீச‌ப்ப‌ட்டேன், ஊரே ஓடி வ‌ந்தது, அவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌ப்த‌ம் கேட்ட‌து. எல்லாரும் சேர்ந்து என்னை தூக்கினார்க‌ள், என் இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் (ப‌ஜாஜ் பைக்) க‌டுமையாக‌ உருக்குலைந்திருந்த‌து ப‌ய‌ன்ப‌டுத்த‌ இய‌லாத‌ அள‌வுக்கு.


ஆனால் நானோ முழு சுய‌ நினைவோடு இருந்தேன். என்னை அந்த‌ ஊர் ம‌க்க‌ள் க‌ட‌வுளை போல‌ க‌வ‌னித்தார்க‌ள், என‌க்கு எங்கெல்லாம் காய‌மிருக்கிற‌து என‌ தேடினார்க‌ள், ஆனால் உண்மையென்ன‌ தெரியுமா? என‌க்கு சில‌ கீர‌ல்க‌ளை த‌விர‌ காய‌மில்லை. அதை பார்த்த‌ அங்கே இருந்து என்னை ப‌ராம‌ரித்த‌ தாய்மார்க‌ள் சொன்னார்க‌ள், இயேசுவின் கிருபையால் தான் நீங்க‌ள் உயிரோடு இருக்கிறீர்க‌ள் என்று. ச‌த்த‌ம் கேட்டபோது யாரோ செத்தார்க‌ள் என்றுதான் ஓடி வ‌ந்தோம், ஆனால் இப்ப‌டி தெளிவாக‌ உங்க‌ளை காணும்போது எங்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து என்றார்க‌ள்.


ச‌த்திய‌மாக‌ சொல்லுகிறேன் அன்றுதான் முத‌ல் முத‌ல் இயேசுவை போராளி என்ப‌தையும் தாண்டி க‌ட‌வுளாக‌ உண‌ர‌ ஆர‌ம்பித்தேன். அன்று முத‌ல் என் பாதையில் அனேக‌ மாற்ற‌ங்க‌ள். என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு தெரியுமா? இர‌ண்டாயிர‌ம் ரூபாய் அது கூட‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாய் தான் வாங்குகிறேன், அதை அப்ப‌டியே ஏழை பிள்ளைக‌ளின் க‌ல்விக்காக‌ பய‌ன்ப‌டுத்த‌தான் இந்த‌ சிறுவ‌ர் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்துகிறேன். இதுவ‌ரை என‌க்கு மிக‌வும் நெருங்கிய‌வ‌ர்க‌ள் செய்த‌ உத‌வியிலும் என் உழைப்பிலும் இந்த‌ நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்தி வ‌ருகிறேன்.


இனி இந்த‌ இயேசுதான் என் க‌ட‌வுள். அவ‌ரிட‌மிருந்துதான் இந்த‌ அன்பை நான் க‌ற்றுகொண்டேன். நான் கிறிஸ்த‌வ‌னாக‌ இருந்தாலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளில் ந‌ட‌க்கும் த‌வ‌றுக‌ளை கூட‌ க‌டுமையாக‌ விம‌ர்சிப்ப‌வ‌ன், திருச்ச‌பை எங்கே போகிற‌து என்ற‌ என் ப‌திவை இந்த‌ லின்கில் வாசித்து பாருங்க‌ள். http://jesusblessings.blogspot.com/2011/05/blog-post.html


ச‌ரி ந‌ண்ப‌ரே, உங்க‌ள் ச‌வாலை நான் ஏற்கென‌வே ஜெயித்துவிட்டேன் என‌க்கு ந‌ட‌ந்த‌ விப‌த்தில். ஆனால் அதுவ‌ல்ல‌ விஷ‌ம்தான் நீ குடிக்க‌ வேண்டுமென்றால், ம‌ன்னிக்க‌வும் நான் வெறி பிடித்த‌வ‌ன‌ல்ல‌, நான் ம‌த‌வாதியும‌ல்ல‌, என் ந‌ம்பிக்கையை பேசுகிற‌வ‌ன்.


இதுவ‌ரை நான் சொன்னவைகளில் உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்தும் வ‌கையில் ஏதாகிலும் இருந்தால் ம‌ன்னித்துவிடுங்க‌ள். நான் உண‌ர்வுள்ள‌வ‌ன், வெறிபிடித்த‌வ‌ன‌ல்ல‌. நான் சொன்ன‌வைக‌ளில் ஏதாகிலும் ச‌ந்தேக‌ங்க‌ள் இருக்குமாயின், வேலூர் மாவ‌ட்ட‌ம், விண்ண‌ம‌ங்க‌ல‌ம் என்ற‌ கிராம‌த்தில் என‌க்கே தெரியாம‌ல் வ‌ந்து விசாரித்து பாருங்க‌ள்.


உங்க‌ள் எதிர்ப்பு கூட‌ என்னை இன்னும் ப‌க்குவ‌ப்ப‌டுத்துவ‌தாக‌வே தெரிகிற‌து அத‌ற்காக‌வும் உங்க‌ளுக்கு என் ந‌ன்றி. உங்க‌ள் க‌ருத்துரைகளை நாகரீகம் கருதி அழித்துவிட்டேன் ஆனால் அவைக‌ள் என் இமெயிலில் அப்ப‌டியே உள்ள‌ன‌. நீங்க‌ள் க‌ருத்துரைக‌ளை உங்க‌ள் அடையாள‌த்தோடே ப‌கிருங்க‌ள். உங்க‌ள் பெய‌ரை, வெளியிடுங்க‌ள். நான் உங்க‌ள் ச‌கோத‌ர‌ன்தான்,  நானும் த‌மிழன் தான். ந‌ன்றி.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, July 19, 2011

நாயக்கனேரியில் நடந்த அற்புதம்.

அன்பான உடன் விசுவாசிகளே, நாயக்கனேரியில் நமது இணையதளம் சார்பாக ந்டந்த சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக வந்து ப்ங்கு பெற்றனர். நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவுற்று, பரசளிப்பதற்கு முன் முடிவு ஜெபம் செய்ய அருள்திரு மில்டன் அவர்களை அழைத்தேன். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சகோதரி, பெரும் சத்தத்தோடு எங்கள் முன் வந்து அசுத்தாவியினால் நிறைந்தவராய் ஆடினார்.


இதைக்கண்ட கிராம மக்களும் சிறு பிள்ளைகளும் மிகவும் பிரமித்தனர். என்ன ந்டக்குமோ என்கிற ஒரு பதைபதைப்பு, எல்லாருக்குள்ளும் இருந்தது. ஆனால் போதகரும் நாங்களும் விடாமல் ஊக்கத்தோடே ஜெபித்துக் கொன்டிருந்தோம்.




அதற்கு பிறகு சகோதரியை அலைக்கழித்த பிசாசு பெருமூச்சோடு அவரை விட்டு அகன்றது. உடனே அருகில் இருந்த சகோதரிகள் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து, அன்போடு அவரை அழைத்துகொண்டு போய் பராமரித்தனர்.

ஆண்டவரின் மகிமை இவ்வாறு அற்புதமாய் மலைவாழ் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. இது எனக்கும் நம் குழுவினருக்கு புதிய அனுபவத்தையும், ஆண்டவருக்காய் உழைப்பதற்கு மிக அதிகமான உற்சாகத்தையும் கொடுத்தது. இந்த அனுபவத்தை தந்த ஆண்டவருக்கும், ஜெபத்தில் தாங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். நன்றி.

ஊழியம் பெருக‌.....                                                             
ஏழை பிள்ளைக‌ளின் வாழ்வில் இயேசுவின் அன்பும் அருளும் பெருகிட‌..
ப‌ற்றாக்குறைக‌ள் நிவ‌ர்த்தியாக‌.....

ஊழிய‌த்தில் என‌க்கு உறுதுணையாக‌ இருக்கிற‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் உற்சாக‌மாய் இப்ப‌ணியில் தொட‌ந்து ஈடுப‌ட‌, அவ‌ர்க‌ள் குடும்ப‌ம் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட‌......
இதுவ‌ரை இந்த‌ ஊழிய‌த்தை தாங்கிய‌வ‌ர்களுக்காக‌...
த‌டையின்றி ப‌ண‌த்தேவைக‌ள் ச‌ந்திக்க‌ப்ப‌ட‌...
தொட‌ர்ந்து ஜெபியுங்க‌ள்..

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, July 18, 2011

சிறுவர் கொண்டாட்டம் நாயக்கனேரி

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிமையான ஸ்தோத்திரங்கள். நான் ஏற்கெனவே தெறிவித்தபடி, நாயக்கனேரி என்ற மலை கிராமத்தில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.சிறுவர்கள் மட்டுமல்லாது, கிராம பெரியவர்கள், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துக்கொண்டு கர்த்தருடைய பெரிதான ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர். அன்று ஒரு மிகப்பெரிய அற்புதத்தை கர்த்தர் செய்தார் அதை புகைப்படத்தில் நீங்கள் காணலாம். அதன் புகைப்பட தொகுப்பை தொடர்ந்து காணுங்கள், இன்னும் இந்த நிகழ்ச்சி தமிழ் நாடு முழுக்க சிறுவர்களை சென்றடைய தொடர்ந்து ஜெபியுங்கள்.

நிகழ்ச்சியில் இறுதி ஜெபம் செய்த போது ஒரு பெண்மணி அசுத்தாவியால், அலைக்கழிக்கப்பட்டு, நேராக முன்பாக வந்து விழுந்து புரண்டார். எல்லா மக்களும் பிரமிப்போடு கண்டுகொண்டிருக்க, மில்டன் போதகர் ஆவியில் நிரம்பி அவரோடு நாங்கள் அனைவரும் இறைவனிடம் மன்றாட அசுத்தாவி அவரைவிட்டு ஓடிப்போனது, கிராமமே இந்த காட்சியால் இறவனை மகிமைப்படுத்தியது.
 


Friday, July 15, 2011

இறைவன் நமக்கு காவலிருப்பார்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். நாட்டில் நடக்கிற தீவிரவாத சூழ்நிலைகளை கண்டால் மனம் மிகவும் வேதனையாகிறது. மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்து 100க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் மக்கள் நடமாடும் இடத்தில் குண்டு வைத்துள்ளனர்.

கொள்கைகள் மனிதனுக்கு அவசியமானவைகள், ஆனால் ஓர் உயிரை கொல்வது கொள்கையாகுமா? இந்த போக்கு எதிர்காலத்தை அச்சத்துக்குள்ளாக்குகிறது. மனிதன் நடக்கிற பாதையெல்லாம் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. யார் மீதோ இருக்கிற கோபத்தை அப்பாவி மக்கள் மீது காட்டும் கோழைத்தன தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது.
பாதுகாக்க வேண்டியவர்களோ மெத்தனமாக செயல்பட்டு, நம் வாழ்வை மேலும் கேள்வி குறியாக்குகின்றனர்.

தாவீதின் வாழ்க்கை கிட்ட‌த்தட்ட‌ இதே திகிலோடுதான் இருந்த‌து. கோலியாத்தை கொன்ற‌ பிற‌கு, அவ‌ன் மிது பொறாமை ப‌ட்டு, தாவீதை கொலை செய்ய சவுல் க‌ட்ட‌ளை பிற‌ப்பித்தான். கோலியாத்தின் ப‌டை ஒருபுற‌ம் அவ‌னை தேடி வ‌ருகிற‌து. இப்ப‌டி த‌வீதின் வாழ்வு ம‌ர‌ண‌த்தின் ந‌டுவில் ஊச‌லாடிய‌து.

ஆனால் தாவீதின் தைரிய‌ம் மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌து, ச‌ங்கீத‌ம்.23:4 ல் நான் ம‌ர‌ண‌ இருளின் ப‌ள்ள‌த்தாக்கிலே ந‌ட‌ந்தாலும் பொல்லாப்புக்கு ப‌ய‌ப்ப‌டேன். என்று தில்லாக‌ கூறுகிறார். எப்ப‌டி இவ்வ‌ள‌வு தைரிய‌ம் அவ‌ரே சொல்லுகிறார், தேவ‌ரீர் என்னோடு கூட‌ இருக்கிறீர் உம‌து கோலும் உம‌து த‌டியும் என்னை தேற்றும் என்ப‌தே.

ஆம் அன்பான‌வ‌ர்க‌ளே ந‌ம்மை சுற்றி ந‌ம் தேவ‌ன் ந‌ம‌க்கு காவ‌லிருக்கிறார். ந‌ம்மை எல்லா தீங்குக்கும் வில‌க்கி காப்பார். கிறிஸ்துவில் ஜீவ‌னை த‌ந்து ந‌ம்மை காத்த‌வ‌ர், இப்போது தூயாவியான‌வ‌ராய் ந‌ம்மோடு வாழ்வெல்லாம் ப‌ய‌ணிப்ப‌வ‌ர் ந‌ம்மை வேட‌ன் க‌ண்ணியினின்றும், பாழாக்கும் கொள்ளை நோயினின்றும் காத்து ந‌ட‌த்துவார்.

அதே வேளையில் உயிரிழந்த‌வ‌ர்க‌ளுக்காக‌, அவ‌ர்க‌ள் குடும்ப‌ம் அச்ச‌த்திலிருந்து மீண்டுவ‌ர‌, காய‌ங்க‌ளால் அவ‌தியுறுவோர் விரைவில் குண‌ம் பெற‌ ந‌ம் ஆண்ட‌வ‌ரை ஒரு நிமிட‌மாவ‌து வேண்டுத‌ல் செய்வோம். தொட‌ர்ந்து இதுபோன்ற‌ கோழைத்த‌ன‌ தாக்குத‌ல்க‌ள் தொட‌ராம‌ல் இருக்க‌வும் வேண்டுத‌ல் செய்வோம்

நாமும் ந‌ம் நாடும் ச‌மாதான‌மாய் இருக்க‌ முழ‌ங்காலில் நிற்போம். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

Thursday, July 14, 2011

ஒத்தாசையும், ஆதரவும் வேண்டுமா? (காலை மன்னா)


காலை வேளையில் இயேசுவின் கண்மணிகளை வாழ்த்துகிறேன். ஒவ்வொரு காலையும் நல்ல காலையாக மலர வேண்டும் என்பதே நம் விருப்பம். ஒவ்வொரு காலையும் நல்ல காலையாக மலர வேண்டும் என்றால், ஒவ்வொரு காலையும் நன்மைகள் கிடைக்க வேண்டுமே. நம் பணியில், நம் குடும்ப பாரத்தில், அன்றாட தேவைகளில் ஒரு ஒத்தாசை தேவைப்படுகிறது. நம்மை ஆதரிப்பவர்கள் தேவைப்படுகிறார்க‌ள்.

இது நமக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் தேவை அப்படியானால், நமக்கு அடுத்தவர்கள் ஒத்தாசையாகவோ, ஆதரவாகவோ இருக்க முடியுமா? பல நேரங்களில், நமக்கு நெருங்கினவர்கள் ஒத்தாசையாகவோ, ஆதரவாகவோ இல்லாமல் போனால் நாம் பெரிதும் வருந்துகிறோம். ஆனால் அவர்களும் ஒத்தாசையை எதிர் பார்ப்பவர்கள் தான் என்பதை மறந்து போகிறோம்.

அப்படியானால் ஒத்தாசையையும், ஆதரவையும் எதிர்பாராத ஒருவர்தான் நமக்கு ஒத்தாசையுடனும், ஆதரவுடனும் இருக்க முடியும். அப்படி ஒருவரை அடையாளம் காண முடியுமா? வேதாகமம் அப்படி ஒருவரை அடையாளம் காட்டுகிறது.

ச‌ங்கீத‌ம்.20:2.. க‌ட‌வுள் பரிசுத்த‌ ஸ்த‌ல‌த்திலிருந்து உமக்கு ஒத்தாசை அனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆத‌ரிப்பார்.

அன்பான‌வ‌ர்க‌ளே வானிலும் பூமியிலும் ச‌ர்வ‌ அதிகார‌ம் கொண்ட‌ க‌ட‌வுள், ந‌ம‌க்கு ப‌ர‌லோக‌த்திலிருந்து ஒத்தாசை அனுப்புகிறாராம், அவரே ந‌ம்மை ஆத‌ரிக்கிறாராம். அவ‌ருக்கு ந‌ம்முடைய‌ ஒத்தாசையோ ஆத‌ர‌வோ தேவையில்லையே.

அதைதானே அன்பு ஆண்ட‌வ‌ர் இயேசுவின் வாழ்வில் காண்கிறோம், க‌ண்ணீரோடு வேத‌னையோடு அவ‌ரிட‌ம் வ‌ந்த‌ அனைவ‌ருக்கும் ஒத்தாசை செய்து, அவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நின்றாரே.

இன்றும் ந‌ம‌க்காக‌, ந‌ம்மோடிருந்து, ந‌ம்மை ஆத‌ரித்துவ‌ருகிறார். என‌வே உற்சாக‌மாய் இந்நாளை துவ‌ங்குவோம். ஆண்ட‌வ‌ரின் ஆத‌ர‌வில் மேன்மைக‌ளை பெறுவோம். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, July 13, 2011

நூற்றைம்பது (150)

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள், இன்று இந்த இணைய தளத்திற்கு ஒரு விசேஷ நாள். ஆம் கர்த்தருடைய பெரிதான கிருபையால், இன்று நான் இடுகிற இந்த பதிவு 150 வது பதிவாகும். இந்த மிகப்பெரிய சாதனைக்கு உறுதுணையாக இருந்த என் அன்பு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு என் முதல் கோடி ஸ்தோத்திரங்கள்.

அவரில்லையேல் இந்த மகா பணி எனக்கு சாத்தியமேயில்லாத காரியம். சுவிசேஷகனுடைய பாதங்கள் மலையின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கிறது (ஏசாயா.52:7) என்று தன் ஊழியர்களின் கால்களை கூட ரசிக்கும் கடவுளல்லவா அவர், இந்த ஊழியத்தை நான் எதிர்பாரா விதம் துவங்க கிருபை செய்தார். நடத்தி வருகிறார்.

இதை முதன் முதல் துவங்கியபோது, அனேகர் என்னை மிகவும் பாராட்டி ஊக்குவித்தனர். அருள்திரு ராஜகம்பீரம் அவர்கள் ஜெபித்து துவங்கி வைத்தார். அருள்திரு கிளாட்சன் அண்ணன் அவர்கள் தனது சொந்த செலவில் 1000 கை பிரதிகளை இந்த ஊழியத்திற்காக அச்சிட்டு கொடுத்தார்.அவரை நன்றியோடு நினைக்கிறேன். அதன் பின்னர் என் மாமனார் திரு சா.பிச்சை அவர்கள் 500 பிரதிகள் அச்சிட்டு கொடுத்து உதவினார். அவரே அதை இன்று வரை வினியோகித்தும் வருகிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த தளத்தில் முதல் விசுவாசியாக தன் கருத்தை பதிவு செய்தவர் சகோதரி மேரி கேதலின் அவர்கள், தொடர்ந்து ஊக்கமான வாசகராக தொடர்கிறவர். அவரது தந்தை திரு.டேனியல் அவர்கள் 3000 கை பிரதிகளை சமீபத்தில் அச்சிட்டு கொடுத்து இந்த ஊழியத்தை தாங்கினார். அவரையும் அவர் குடும்பத்தினரையும் கூட இப்போது நன்றியோடு நினைக்கிறேன்.

அதே போல‌ இந்த‌ த‌ள‌த்தின் மிக‌ சிற‌ப்பான‌ ப‌டைப்பாக‌ பெரும் வ‌ர‌வேற்பை அனைத்து த‌ர‌ப்பிலும் பெற்றுவ‌ருவ‌து என‌து த‌ந்தை திரு.ஆ.ஏசைய‌ன் அவ‌ர்க‌ளின் சிறு க‌தைக‌ள். அவ‌ர‌து க‌தைக‌ள் ஆழமான‌ ந‌ற்செய்தியை ப‌ரைசாற்றி வ‌ருகின்ற‌ன‌. அவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

ஆர‌ம்ப‌ம் முத‌லே இந்த‌ த‌ள‌த்தின் ஒரு அங்க‌மாக‌ என‌து ந‌ண்ப‌ர் அருள்திரு மில்ட‌ன் அவ‌ர்க‌ளும் என்னோடு இணைந்து ந‌ற்செய்தி ப‌ணியாற்றி வ‌ருகிறார். அவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

அதே போல‌ ச‌கோத‌ர‌ர் சாந்த‌ குமார் அவ‌ர்க‌ள் இதில் ம‌ருத்துவ‌ குறிப்புக‌ளை எழுதி கொடுத்தார். என‌து நேர‌மின்மையால் தொட‌ர்ந்து அவ‌ரிட‌ம் என்னால் தொட‌ர்பு வைக்க‌ இய‌ல‌வில்லை. அவ‌ருக்கும் என் ந‌ன்றிக‌ள்.

மேலும் ஒரு மாத‌ர்ப‌குதி வேண்டும் என‌ கேட்ட‌ போது மிகுந்த‌ ச‌ந்தோஷ‌த்தோடு எழுதி த‌ந்த‌வ‌ர் திரும‌தி உஷா ராஜ்குமார் அவ‌ர்க‌ள்.அவ‌ர்க‌ளையும் ச‌மீப‌த்தில் என்னால் தொட‌ர்பு கொள்ள‌ இய‌ல‌வில்லை விரைவில் அவ‌ர‌து திருப்ப‌ணி இதில் தொட‌ரும் என‌ ந‌ம்புகிறேன். அவ‌ர்க‌ளுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

இந்த‌ த‌ள‌த்தை இமெயில் மூல‌ம் தொட‌ர்புக் கொண்டு பாராட்டிய‌ திரு வீர‌ம‌ணி அவ‌ர்க‌ள், அறிவும‌ணி அவ‌ர்க‌ள், அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் ஆகியோருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். இம‌யில் மூல‌ம் மிக‌ அதிகமாக‌ என்னை வாழ்த்தின‌ ச‌கோத‌ரி ஸ்டார்லெட் எஸ்த‌ர் அவ‌ர்க‌ள் ஆகியோருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

இந்த‌ த‌ள‌ம் வாயிலாக‌ சிறுவ‌ர் கொண்டாட்ட‌ம் என்ற‌ மிக‌ அற்புத‌மான‌ ஊழிய‌த்தை துவ‌ங்க‌‌ தேவ‌ன் ம‌காபெரிய‌ கிருபை புரிந்தார். இன்று இத‌ன் மூல‌ம் 600க்கும் அதிக‌மான‌ பிள்ளைக‌ளை ச‌ந்தித்துவிட்டோம். அத‌ற்கு மிக‌வும் உத‌விய‌வ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரையும் ந‌ன்றியோடு நினைவு கூறுகிறேன். அருள்திரு.ராஜ‌க‌ம்பீர‌ம் முன்னாள் பெருந்த‌லைவ‌ர் இ.சு.லு.ச‌ அவ‌ர்க‌ள்,திரு.பார‌த் அவ‌ர்க‌ள், அருள்திரு.கிளாட்ச‌ன் அவ‌ர்க‌ள், அருள்திரு.மில்ட‌ன் அவ‌ர்க‌ள், என‌து குடும்ப‌த்தார், எனது மாமனார் குடும்பத்தார்  அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்.

என் சொற்ப‌ வ‌ருமான‌த்தை சாரிபாத் வித‌வையின் அட்ச‌ய‌ பாத்திர‌ம் போல் மாற்றி குறைவில்லாம‌ல் இந்த‌ திரு ப‌ணிக‌ளை ஆற்ற‌ தேவ‌ன் பெரும் அற்புத‌மாய் என்னை ந‌ட‌த்தி வ‌ருகிறார்.

உங்க‌ளுக்கு என் வேண்டுகோள். இணைய‌த்தில் எத்த‌னையோ ப‌க்க‌ங்க‌ள், இன்றைக்கு உல‌கையே த‌ன் க‌ட்டுப்பாட்டில் வைத்துள்ள‌து. ஏன் இந்த‌ த‌ள‌ம் அப்ப‌டி வ‌ர‌க்கூடாது, சிற்றின்ப‌த்தை த‌ரும் த‌ள‌ங்க‌ளெல்லாம் பெரும‌ள‌வில் பிர‌ப‌ல‌மாயுள்ள‌து. பேரின்ப‌த்தை த‌ரும் இந்த‌ த‌ள‌ம் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ உறுப்பின‌ர்களை கொண்ட‌தாய் வ‌ள‌ர‌ வேண்டாமா? உங்க‌ள் க‌ர‌ங்க‌ளில் தான் அந்த‌ வ‌ல்ல‌மையுள்ள‌து, காண்போரிட‌த்திலெல்லாம் இதை பேசுங்க‌ள். என்னை அல்ல‌ இந்த‌ ஊழிய‌த்தை முழு அர்ப்ப‌ணிப்போடு தாங்குங்க‌ள். தேவ‌ன் உங்க‌ளை வ‌ல்ல‌மையாய் ஆசீர்வ‌திப்ப‌ர். ச‌பை பாகுபாடின்றி, அனைவ‌ருக்கும் இந்த‌ ஊழிய‌த்தை அறிவியுங்க‌ள். ஆண்ட‌வ‌ரின் பெரும் ஆசீர்வாத‌ங்க‌ளை பெற்றிடுங்க‌ள்.

இந்த‌ த‌ள‌ம் வ‌ழியாக‌ அனுப்பப‌டும் வாக்குத‌த்த‌ குறுஞ்செய்தியை(sms) உங்க‌ள் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ள் எண்ணையும் என‌க்கு அனுப்புங்க‌ள்.

த‌ய‌வு செய்து உங்க‌ள் க‌ருத்துக‌ள் எதுவாயினும் ப‌கிருங்க‌ள். அதுவே இவ்வூழிய‌த்தை தாங்கும், உங்க‌ள் அத்த‌னை ஜெப‌ தேவைக‌ளையும் என‌க்கு எழுதுங்க‌ள். பெற்றுக்கொண்ட‌ ந‌ன்மையை சாட்சியாய் அறிவியுங்க‌ள். க‌ருத்திடாமால் போகாதீர். இணைந்து செய‌லாற்றி இறைவ‌னை மேன்மை ப‌டுத்துவோம். ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, July 11, 2011

யாரும் எதுவும் நம்மை வெல்ல முடியது.

ஞாயிற்று கிழமைக்கான திருவசனங்கள்.

யாத்திராகமம்.19:2-6

ரோமர்.5:6-11

மத்தேயு.9:35-10:7

பிரசங்க வாக்கியம். யாத்திராகமம்.19:2-6


அன்பான உடன் விசுவாசிகளே, கடவுள் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். அவர் என்ன சொல்லுகிறாரோ அது நடக்கும். இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது அவர்கள் மீது இரக்கப்படவோ அவர்களை காப்பாற்றவோ ஆளே இல்லாமல் நாதியற்று வாடினர். கடவுள் மட்டுமே அவர்கள் கூக்குரலை கேட்டார் அவர்களை விடுதலையாக்க சித்தம் கொண்டார். அந்த பெரிய பொறுப்பை மோசேவிடம் கடவுள் கொடுத்தார். மோசேவோ அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. யாத்திராகமம் 3:12 ல் அதை காணலாம் அனால் கடவுளோ அவரை விடவில்லை.

எந்த மலையிலிருந்து உன்னை அழைக்கிறேனோ அதே மலைக்கு நீ திரும்ப இஸ்ரவேல் ஜனத்தோடு வந்து எனக்கு ஆராதனை செய்வாய் என வாக்குறுதி கொடுத்தார். கடவுள் சொன்ன அந்த வாக்குறுதி நிறைவேறின பகுதிதான் இந்த தியான பகுதி. மோசே இஸ்ரவேல் ஜனத்தோடு சினாய் மலைக்கு எதிரில் இஸ்ரவேல் மக்களோடு வந்து சேர்ந்தார்.

உடனே கடவுள் மோசேவை மலை மீது அழைக்கிறார். மோசே ஓடுகிறார். அங்கே கடவுள் இஸ்ரவேல் ஜனத்திற்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறார். அது யாதெனில் நீங்கள் தொடர்ந்து என் வார்த்தைகளை கைக்கொண்டு வாழ்ந்தால், நீங்கள் என் சொந்த சம்பத்தாய் இருப்பீர்கள் என்கிறார். பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது.  எல்லாம் தனக்கு சொந்தமாக கொண்டுள்ள கடவுள் இந்த ஜனத்தை விசேஷமாக தன் சொந்த சொத்தாக தெரிந்துக் கொள்ளுகிறேன் என்று கூறுகிறார்.

சொந்த சொத்தாக இருந்தால் என்ன பயன்? நம் சொந்த சொத்தை யாராவது  தொட முடியுமா? அதை கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக் கொள்வோம். அதே போலதான் அவர்கள் கடவுளின் சொந்த சொத்தானால் கடவுள் அவர்களை ஒருவனும் தொட முடியாதபடி, தன் சொந்த பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக காத்துக் கொள்வார். அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது, அவருடைய வார்த்தையை தொடர்ந்து கை கொள்ள வேண்டும்.

அப்படியானால் நமக்கும் கடவுளுக்கும் என்ன உறவு?   இஸ்ரவேலர் அவருடைய சொந்த சம்பத்தானால்? நாம் இயேசு ஆண்டவரால் இரட்ச்சிப்பை பெற்று புதிய இஸ்ரவேலர்களாய் வாழ்பவர்களல்லவா? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? அதைதான் ரோமர் 5 ல் 6 முதல் உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். நாம் அவர் ரத்தத்தால் ரட்சிப்பை பெற்றதால், அவர் ரத்த உறவுகளாய் மாறுகிறோம், அதைதான் திருவிருந்தில் பங்கு பெறும்போதெல்லாம் உணருகிறோம், அவருடைய ரத்தத்தில், சரீரத்தில் பங்கு பெற்று நாமும் அவரது சரீரத்தையும், ரத்தத்தையும் நம் சரீரத்தில் தரித்து, அவருடைய ரத்த உறவுகளாய் வாழ்ந்து வருகிறோம்.

அப்படியானால் நம்மை யார் ஜெயிக்க முடியும்? ஒருவனும் ஜெயிக்க முடியாது. காரணம் இயேசுவை ஒருவனும் இவ்வுலகில் ஜெயித்ததில்லையே அவரது ரத்தம்தானே நம் சரீரத்தில் ஓடுகிறது. அப்படியானால் நம்மையும் ஒருவனும் வெல்ல முடியாது. ஆனால் இந்த வாழ்வின் உத்தரவாதம் அவருடைய வார்த்தைகளை கை கொள்ளுகிறவர்களுக்கு மாத்திரமே சாத்தியம்.


எனவே நம் வாழ்வில் இந்த மேன்மையை அனுபவிக்க அவர் வார்த்தையை கை கொள்ள வேண்டும். அவர் வார்த்தையை படிப்பதில், ஆலயத்திற்கு போய் அவருடைய வார்த்தையை கேட்பதில், உற்சாகம் உள்ளவர்களாய் இருத்தல்தானே கிறிஸ்தவ வாழ்க்கை, அது மட்டும் போதாது படித்த கர்த்தருடைய வார்த்தையை, கேட்ட கர்த்தருடைய வார்த்தையை கடைபிடிக்க வேண்டும், அப்படி செய்தால் நாம் அவரது ரத்த உறவுகளாய் நீடிப்போம், தகப்பன் வார்த்தைக்கு கீழ்படிந்து நடப்பவந்தானே உண்மையான பிள்ளை இல்லையேல் தகப்பனே நீயெல்லாம் ஒரு பிள்ளையா? என்று கேட்பாரே.

நாமும் கர்த்தரின் வார்த்தையை கைக்கொண்டு அவருடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இவ்வுலகில் வெல்லமுடியா வெற்றி வாழ்வு வாழ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, July 9, 2011

ஜெபியுங்கள்.

இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார். (மத்.10:40-42).


இணையற்ற என் இணையதள நண்பர்களே, உங்கள் யாவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள். இன்று நம்முடைய இணைய தளம் வாயிலாக துவங்கப்பட்ட சிறுவர் ஊழியத்தின் மூன்றாவது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நாக்குனேரி என்ற ஒரு மலை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மத்தியில் நடைபெற உள்ளது. அதற்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். இன்றைய ஊழியத்தை பொருளாதார ரீதியாக தாங்குகிற சகோதரி ஜூலியட் செல்வம் அவர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்திற்க்காகவும் ஜெபியுங்கள். நாம் சந்திக்க போகிற பிள்ளைகளின் மனதில் ஆண்டவரின் திருவசனம் வல்லமையாய் விதைக்கப்பட ஜெபியுங்கள். பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் வாயிலாக பிள்ளைகளை ஊக்குவிக்கப்போகிற சகோதரர்களுக்காக ஜெபியுங்கள். பயணங்களும், திட்டமிட்ட நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள். உங்கள் யாவருக்கும் கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நன்றிகள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, July 6, 2011

" இனி ஒரு உதயம் " சிறுகதை

செல்வபுரி அந்த ஊரின் பெயர். ஆனால் வறுமை தாண்டவமாடியது. காடு சுற்றுவார்கள், கடுமையாய் உழைப்பார்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், படுக்க இடமும் இன்றி அவ்வூர் மக்கள் தவிப்பார்கள். கல்வியறிவும் மிகக் குறைவு, மலைவாழ் மக்கள்.

அவ்வூர் மக்களின் வறுமையையும், வாட்டத்தையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டவர் ஒருவர் மட்டும்தான். அவர்தான் கந்துவட்டி கனகராஜ். கடல்போல வீடு, காணும் இடமெல்லாம் தோட்டங்கள், தோப்புகள், கண்ணுக்கெட்டியவரை வயல்கள், அவருடைய அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் எவ்வளவு? அவருக்கே தெரியாது.


அவ்வளவு சொத்துகளும் மக்களிடம் சுரண்டியவை, அவர்கள் அறியாமையால் அபகரித்தவை, அவர்களின்  ஏழ்மை நிலையை பயன்படுத்தி பறிக்கப்பட்டவை. கடன் கேட்க, பெற்ற கடனுக்கு கடும் வட்டி கொடுக்க அவர் வீட்டு வாசலில் தினமும் கூட்டம் காக்கைகளாய் கூடியிருக்கும்.

கனகராஜ் வாரத்தின் முதல் நாள் ஞாயிறு தோறும் ஆலயம் செல்வார். வசனம் கேட்கவோ, அதை மனதில் வைக்கவோ அதன்படி வாழவோ அல்ல. அங்கு வருவோரிடம் வட்டி வசூலிக்க.

மாதத்தின் முதல் ஞாயிறு திருவிருந்து பெறுவார். ஆனால் பாவ மன்னிப்பு பெறுவதற்காக அல்ல. கடமைக்காக. வழிபாடு முடிந்ததும் வெளியே அவரின் காட்டுக் கத்தல் ஆலயத்தில் எதிரொலிக்கும்.

அடேய்! ஜோசப், மரியாதையாய் பணத்தை எண்ணி வை! இல்ல, உன் வீடு அவ்வளவுதான். அடியே ஞானப்பூ, வாங்கிய பணத்துக்கு வட்டி எங்கேடி? எண்ணி பத்து நாளுக்குள்ள தரலை ..... உன் நிலம் என் கைக்கு மாறிடும்.

இதே போல் அனேக கண்டிப்புகள், பயமுறுத்தல்கள், அடி உதைகள், வாரம் தவறாமல் நடக்கும் வழக்கமான சம்பவங்கள். மனைவி திட்டிப் பார்த்தாள் பயனில்லை. பிள்ளைகள் வேண்டிப் பார்த்தனர், அவர் விடுவதாய் இல்லை. போதகர் அன்பாய் பேசிப் பார்த்தார். அவர் மசியவில்லை. எல்லாமே பாறையில் விதைத்தது போல் பலனற்றுப் போனது.

கந்து வட்டி கனகராஜின் அடாவடித்தனத்தால் அவ்வூர் மக்கள் வீடுகளை இழந்தனர். ஆடுமாடுகளை இழந்தனர். நிலபுலன்களை இழந்தனர். பெண்கள் நகை நட்டுகளை மறந்தனர். மொத்தத்தில் செல்வபுரி எழமைபுரியாக மெல்ல மெல்ல உருமாறியது. கனகராஜோ பணராஜாவாக பவனி வந்தார். ஊர் மக்கள் விடியலை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

மலர்விழி... மலர்விழி கனகராஜ் தனது மனைவியை தான் கூப்பிடுகிறார். மனைவி ஓடி வந்தாள். நான் டவுனுக்கு பொய் வருகிறேன். அந்த சைக்கிள் கடை ராபர்ட்டு, மளிகைக்கடை  மனோகரன் மூணுமாசமா வட்டி தராம டிமிக்கி குடுத்துட்டு வரானுங்க. எட்டி மிதிச்சி பைசல் பண்ணிட்டு வர்ரேன். இங்க யாராச்சும் வட்டி கொண்டுவந்தா வாங்கி வை. கண்ணை கசக்கராங்கனு மன்னிச்சி விட்டுடாத.

கனகராஜை சுமந்த கப்பல் கார் டவுனை நோக்கி உறுமி, ஊர்ந்து, பின் வேகம் பிடித்தது. அப்படியே  நாளைய புத்தாண்டு தினத்திற்கான பிரியாணி செலவையும், புதுத்துனிமனிகளையும் வாங்கி வண்டியில் நிரப்பிக் கொள்ளலாம். நினைவுகளை அசைப்போட்டபடி காரில் பயணித்தார் கனகராஜ். தப்பு தப்பு.. கந்து வட்டி கனகராஜ்.

உழவர் சந்தையில் புத்தாண்டு களைக்கட்டியிருந்தது. டிரைவர் ரவி வண்டியை ஓரங்கட்டினார். ரவி இந்தா லிஸ்ட்டு. பணம் அதிலேயே வச்சிருக்கேன் போய் வாங்கிட்டு வா. டிரைவர் வாங்கிக் கொண்டு ஜனக்கூட்டத்தில் சங்கமித்தான். கூட்ட நெரிசலை கிழித்துக்கொண்டு ஓர்  குரல் ஓங்கி ஒலித்தது. புத்தாண்டு பம்பர் பரிசு - புத்தாண்டு பம்பர் பரிசு.. என்று ஒரு இளைஞன் கூவிக் கொண்டிருந்தான்.

அவன் கனகராஜ் காரை நெருங்கினான். உள்ளே எட்டிப் பார்த்தான். ஐயா புத்தாண்டு பம்பர் பரிசு இந்தாங்க ... இந்த கைப் பிரதியை படிங்க. அவர் கையில் ஒரு பிரதியை திணித்தான், மறைந்து போனான். கனகராஜ் படிக்கலானார்.

புத்தாண்டு பம்பர் பரிசு என்று தலைப்பு கொடுக்கப்பட்டு அச்சாகியிருந்தது.
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4 .22 -24 

கனகராஜ் கண்களில் கண்ணீர் கரை பிரண்டது. மீண்டும் சந்தைக்கே ஓடினார், 500 புடவை 500  வேட்டி வாங்கினார். அன்று இரவு முழுவதும் பீரோவை குடைந்தார். பொழுது  புத்தாண்டை மலர்ந்தது. அதிகாலை ஊரை கூட்டினார். அடமான பத்திரங்கள், நகைகள் கை மாறின. கூடவே வேட்டியும், புடவையும் பரிசாக ஊர் மக்கள் மகிழ்ந்து பெற்றனர். தலைக்கு ஐந்நூறு ரூபாய் பரிசாக வழங்கினார் . கனகராஜின் குடும்பத்தோடு ஊரே புத்தாண்டை இன்பம் பொங்க கொண்டாடியது. ஆலயம் நிரம்பி வழிந்தது, இவனும் ஆபிரகாமின் குமாரனே என்று இறைமைந்தர் இயேசு தன காதில் சொல்வது போல் கனகராஜ்  உணர்ந்து மகிழ்ந்தார். அவர் குடும்பம் அளவில்லா ஆனந்தத்தில் மிதந்தது. புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்றது.

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்
 
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்



Tuesday, July 5, 2011

நமது தலைவர் இயேசு ராஜன்



அன்பானவர்களே, இந்த காலையில் உங்களை வாழ்த்துகிறேன். தலைவன் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. ஒரு குடும்பம் என்றால், அதில் குடும்பத்தலைவர் இருக்கிறார். ஒரு ஊருக்கு ஊர் தலைவர் இருக்கிறார், ஒரு மாநிலத்திற்கு முதல்வர் தலைவராக இருக்கிறார், ஒரு நாட்டிற்கு பிரதமர் அல்லது அதிபர்  தலைவராக இருக்கிறார். தலைவர்களின் நோக்கம் என்னவென்றால், மக்களை வழி நடத்துவது.

வழி நடத்துகிற பணி சாதாரணமானதல்ல. ஒரு முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்தும்போது, தடைகள் அநேகம் வரும், அந்த தடைகளை தகர்ப்பதில் வழி நடத்துகிறவரின் பங்குதான் பிரதானம். தடைகளை தகர்க்கும்  வீரமும், எளிதாக முன்னேறிச் செல்லும் யுக்தியும் தலைவர்களுக்கு அத்தியாவசியம். இந்த திறமை இல்லாத தலைவர்கள் மக்கள் மீது சவாரி செய்வதை நாம் காண முடியும்.

வேதாகமத்தில் மீகா என்ற புத்தகத்தின் இரண்டாவது அதிகாரம் கடைசி வசனத்தில் தடைகளை நீக்கி மக்களை வழி நடத்தி செல்லும் ஒரு தலைவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார். மீகா.2 :13 

 
இவர் மக்களையும் மக்களின் தலைவர்களையும் ஒருசேர நடத்துகிறவர். அவரது குணம் யாதெனில், தடைகளை நீக்கி போடுகிறார், தன் மக்களுக்கு முன்பாக நடந்து போகிறார், தலைவனையும் மக்களையும் முன் நின்று வழி நடத்துகிறார்.

அன்பானவர்களே இந்த தலைவர்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நானே நல்ல மேய்ப்பன் என்று தெளிவாக சொன்னவர். அதாவது ஆடுகளுக்கு தலைவனாயிருக்கிற மேய்ப்பனை போல நான் மக்களுக்கு தலைவனாயிருந்து வழிநடத்துகிற நல்ல மேய்ப்பன் என்று தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன்  ஜீவனையும் கொடுப்பான் என்று சொல்லி தன் ஜனம் முன்னேறி செல்ல, தடைகளை தகர்க்க தன் ஜீவனையும் சிலுவையில் கொடுத்தார்.

அதே அன்போடு இன்றும் நம்மை வழி நடத்தி வருகிறார்.

குடும்ப வாழ்வில், பணியில், வியாபாரத்தில், திட்டமிடுகிற காரியங்களில், சரீரத்தில், தடைகள் இருக்கிறதா? முன்னேறவிடாமல் நம்மை தடுக்கிறதா? நமது தலைவர் இயேசு ராஜன் நம்மோடு இருக்கிறார், இயேசு ராஜா!!!  என் தலைவா!!! என்று ஒரு குரல் கொடுப்போம், நம்மை முன் நின்று வழி நடத்தி தெளிவான பாதையில் வழி நடத்தி மேன்மையான வெற்றியை கொடுத்திடுவார். ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, July 2, 2011

கடவுள் பரிகாசம் செய்கிறார். (காலை மன்னா)

அன்பானவர்களே, உங்கள் யாவருக்கும் எனது இனிய காலை  வணக்கங்கள்.  இன்றைய தியான வசனம். சங்கீதம்.2 :4 

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்


கேலி செய்வது பரிகாசம் செய்வது இதெல்லாம், மனிதர்களாகிய நமது குணங்களில் ஒன்று. ஒரு நாளில் ஒரு முறையாவது யாராவது ஒருவரை பார்த்து, நகைத்து, இகழும் சுபாவம் நமக்கு உண்டு. நம்மையும்  நமக்கு தெரியாமல் பார்த்து நகைப்பவர்களும், இகழுகிறவர்களும் உண்டு. அடுத்தவர்களை பார்த்து இகழ்வதையும், நகைப்பதையும் தொழிலாகவே செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தியான வசனத்தில் ஒரு சுவாரஸ்யமான செய்தியை காண முடிகிறது. அது யாதெனில் கடவுள், ஒரு மனிதனை போல சிலரை கண்டு நகைப்பார் என்றும், இகழுவார் என்றும் சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அப்படியானால் கடவுள் கூட பரிகாசம் செய்வாரா?

ஆம் கடவுள் பரிகாசம் செய்கிறார். யாரை என்பதை நாம் அறிந்துக் கொண்டால் நம் வாழ்வில் துன்பமே வராது. யாரை என்பதை அறிந்துக்கொள்ள 2  வது, 3 வது வசனத்தை பார்க்க வேண்டும்.

2. கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

3. அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

 
ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய அபிஷேகத்தை பெற்றவர்களுக்கு எதிராக எழும்புகிற துன்பங்களையும், எதிராக எழும்பி சதி செய்கிற மனிதர்களையும் கண்டு கடவுள் நகைக்கிறார், இகழுகிறார். அது எப்படி என் பிள்ளையை தொடுகிறது பார்க்கலாம் என்று பரிகாசம் செய்கிறார். யார் அபிஷேகம் பெற்றவர்கள்? யாரெல்லாம் அவருடைய பிள்ளை என்கிற உரிமையின் அடையாளத்தை, திரு முழுக்கின் வழியாக பெற்றுக் கொண்டார்களோ அவர்கள் அத்தனை பெரும் பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றவர்கள்.

எனவே திரு முழுக்கு பெற்ற நாம் நமக்கு எதிராக  எழும்புகிற மனிதர்களையோ,  துன்பங்களையோ கண்டு  துளி கூட பயப்பட தேவையில்லை. அவைகள் நம்மை நெருங்க வாய்ப்பே இல்லை என்று தைரியமாய் சந்தோஷமாய் நம் துன்பங்களின் நடுவே வாழ்ந்து இறைவனை மகிமைப்படுத்துவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews