WORD OF GOD

WORD OF GOD

Friday, September 2, 2016


இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஒரு சாதாரண அங்கத்தினனாக பல கேள்விகள் என்னுள் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. 

1. நான் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் ஒரு போதகர்      எனக்கு கொடுத்த அறிவுரை நீ ஐ.இ.எல்.சி யில் பிழைக்க  வேண்டுமானால் யாராவது ஒரு தலைவரை பிடித்துக் கொள்ள  வேண்டும் என்பது!!!! 

விசுவாசத்தால் தானே நீதிமான் பிழைப்பான்? ஒரு மனிதன் எப்படி என்னை பிழைக்க வைக்க முடியும்? இயேசுவை விசுவாசியுங்கள் என்று பிரசங்கிக்கும் அதே நாவுகள் எப்படி மனிதனை சார்ந்திருக்க அறிவுறுத்துகிறது? 


2. நான் அருட் பொழிவு பெற்று நேத்தார் நினைவு லுத்தரன் திருச்சபையில் போதகராக பணியாற்றிய காலத்தில் ஐ.இ.எல்.சி. யில் இருந்து கிறிஸ்துமஸ் பரிசு 1000ம் ரூபாய் கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும்.. ஆனால் எனக்கு 2013 ஆம் ஆண்டு கொடுக்கப்படவில்லை. 1000ம் ரூபாய் விஷயமல்ல. எனக்கு மறுக்கப்பட்டது 1000 ரூபாய் அல்ல என் உரிமை. அது எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை. எனக்கு மட்டுமல்ல என்னை போல் பலருக்கு. அப்போதைய சபை சங்க தலைவர் எடுத்துக் கொண்டார் என்கிறார்கள் எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. 

ஏன் இப்படி தலைவர்கள் நடந்துக் கொள்ளுகிறார்கள்? அடுத்தவர் உடைமைகளையோ உரிமைகளையோ பறிப்பது தரங்கெட்ட செயல் என்பது தெரியாதா? பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர் என்பது இவர்களுக்கு தெரியாதா?

3. இதுவரை போதகர்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி யாருக்கும் கொடுக்கப்பட வில்லை..!!!! ஏன்? அந்த இலட்சக் கணக்கான (ஒரு வேளை கோடிக்கணக்கான)  
பணமெல்லாம் எங்கே போனது? இது வரை பொது பொருளாளர்களாக இருந்த,  பெருந்தலைவர்களாய் இருந்த அனைவரும் இதற்கு பொறுப்பு தானே? இது வரை ஒரு நிர்வாகம் கூட இதை கண்டுக் கொள்ளவில்லையே எப்படி? 

எந்த பார்ட்டியும் இதை பற்றி பேசாதது ஏன்? இதற்காக வழக்குகள் தொடராதது ஏன்? நான் கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் பெறுகிறேன், என் பி. எப் கணக்கு எண் தெரியாது? யாரை கேட்பது? சரியான பதில் இல்லை என்றால் என்ன விதமான நடவடிக்கை எடுப்பது? இதை பற்றி எந்த போதகர் சங்கமும் கவலைப்படாதது ஏன்?

4.  LCMS க்கு உட்பட்டு நடக்கிற நிர்வாகத்தில் தான் நான் ஆரம்பம் முதல்  இருக்கிறேன், காரணம் திணிக்கப்பட்ட புதிய அமைப்பு சட்டம் தவறானது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த நிர்வாகத்தில் தான் நான் பாப்பனப்பள்ளி போதக வட்டத்தில் குரு நியமனம் பெற்றேன். தவறாமல் மாதம் தோறும்  எங்கள் சபைகள் பங்கு தொகை செலுத்தி வருகிறது. சிறிய சபைகள், மிக குறைந்த குடும்பங்கள் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சபைகள் என்பதை நிர்வாகம் நன்றாக அறியும் அப்படியிருக்க எங்கள் சபை கட்டுமான பணிகளுக்கு எந்த உதவியும் வரவில்லை. நான் முறைப்படி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 எதனடிப்படையில் சபைகளுக்கான உதவி பணம் வருகிறது? எங்கள் சபைகள் நிராகரிக்கப்பட்டிருக்குமானால் காரணம் என்ன? பங்கு தொகை செலுத்தாத சபைகளிடம் நீங்கள் பங்கு தொகை செலுத்தினால் கட்டிட நிதி வரும் என்று கூறுகிறீர்களே!! ஏன் எங்கள் சபைகள் புறக்கணிக்கப்படுகின்றன? 

5. LWF கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் எங்கள் சபைகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஏன் ? நான் கேள்விகள் கேட்பதாலா ? அல்லது IRLL உடன் தொடர்புள்ளவன்  என்பதாலா? இதை தனிப்பட்ட முறையில் தேடி போய் சிலருக்கு கொடுக்கிறீர்கள்!! எங்கள் சபைகள் என்ன பாவம் செய்தது? எப்போது கொடுத்தீர்கள்? எப்படி கொடுத்தீர்கள் எந்த தகவலும் எனக்கும் எங்கள் சபைகளுக்கும்  தரவில்லையே ஏன் ? பங்கு தொகை தவறாமல் செலுத்தும் சபைகளுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? இது எங்கள் சபைகளின் உரிமை இதை பறிக்க நீங்கள் யார்? கடவுள் பயம் உண்டா உங்களுக்கு? நானும் சபையாரும்  தனிப்பட்ட முறையில் உங்களை தேடி வந்து உங்கள் காலில் விழ வேண்டுமா? எங்களுக்கு சேவை செய்ய தான் நிர்வாகம் எங்களை மிரட்டவும் அடிமைப்படுத்தவும் அல்ல.. 

6. LCMS  நமது தாய் சபை அதை நேசிக்கிறேன். LCMS ன் அரும் பெரும் முயற்சி இல்லாமல் இன்று ஐ.இ.எல்.சி. இல்லை, ஆனால் அதற்காக LCMS கை  காட்டும் நிர்வாகத்தில் தவறு நடந்தால் தட்டி கேட்கக் கூடாதா? கேட்டால் ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்கி விடுவீர்களா? அல்லது நான் LCMS க்கு விரோதியாகிவிடுவேனா? என்ன மூடத்தனம்? LCMS  வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி பணத்தை சுருட்டுகிறவர்கள் தான் LCMS ன் விரோதிகள். 

இந்த கேள்விகள் போதகர் சங்கத்தில் எதிரொலிக்கும் (நடந்தால்) ஏற்கெனவே ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்க போவதாக மிரட்டியாகிவிட்டது. வேறு என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு நொடியும்  இந்த சம்பவம் என் நினைவில் நிற்கிறது. கேள்வி கேட்டால் நீக்குவேன் என்பது சர்வாதிகாரத்தின் உச்சம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews