WORD OF GOD

WORD OF GOD

Tuesday, February 1, 2011

காலை மன்னா 1.02.2011

அன்பானவர்களே  இந்த புதிய வருடத்தின்,  இரண்டாவது மாதத்தின் முதல் நாளில் உங்களை இந்த ஊடகம் வழியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நல்ல நாளில் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை 1யோவான்.2 :1

என் அருமை பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாத படி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன், ஒருவன் பாவம் செய்வானானால், நீதிபரரான இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடம் பரிந்து பேசும் சகாயர்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி நமக்கு அனேக விஷயங்கள் தெரியும், அவரை பற்றி உங்களுக்கு என்னெவெல்லாம் தெரியும் என்று கேட்டால், நீங்கள் அனேக விஷயங்களை மிக அழகாக கோர்வையாக  உடனே சொல்லி விடுவீர்கள், பொதுவாக அவரை ரட்சகர், மீட்பர், அதிசயமானவர், நன்மை செய்பவர், மெய்யான மனிதன், மெய்யான கடவுள், இப்படி அனேக விஷயங்களை சொல்லுவோம், ஆனால் அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் என்பதை  எத்தனை பேர் சொல்லுவோம் என்று தெரியாது, காரணம் அதை பற்றி நாம் யோசிப்பதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவை பற்றிய நம்பிக்கையில், அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் என்பது மிக முக்கியம்.

நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் சுற்றி திரிந்த காலமெல்லாம் நன்மை செய்பவராகவே சுற்றி திரிந்தார், தனது வல்லமைகள்  அனைத்தையும் நன்மை செய்வதற்காகவே பயன்படுத்தினார். அதுமட்டுமா தன் பரிசுத்தமான உடலையும், விலைமதிப்பில்லா அவருடைய ஜீவனையும், அற்ப பாவிகளான நமக்காக கொடுத்தார். இப்படி இந்த உலகில் வாழ்ந்த போது நமக்காகவே செயல் பட்டவர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

உயிர்த்தெழுந்த பிறகு பரலோகத்துக்கு போன ஆண்டவர் அங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்றால் பிதாவின் வலது பக்கம் நின்று  நமக்காகவும், நம்முடைய பாவங்களுக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார், அதாவது பரத்துக்கு ஏறின பிறகும் நமக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

பல நேரங்களில் எனக்காக பரிந்து பேச யார் இருக்கிறார்கள்? எனக்கு நன்மை செய்ய யார் இருக்கிறார்கள், என்று கலங்கி நிற்கிறோம் ஆனால் இந்த வசனம் தெளிவாக சொல்லுகிறது அவர் நமக்காக 24 மணி நேரமும் பரிந்து பேசி நமக்கான நன்மைகளை கடவுளிடமிருந்து பெற்று தருகிறார். நமக்காக இன்னும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த புதிய மாதத்திலும் நம் ஆண்டவர் நமக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், நாம் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள் எல்லாவற்றிலும் நமக்காக நம் பக்கம் துணை நிற்பார், மாத்திரமல்ல நாம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்களிலிருந்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசி நம்மை ரட்சிப்பார்.

எனவே தைரியமாய் விசுவாச மிகுதியோடு இந்த மாதத்தை துவங்க  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews