WORD OF GOD

WORD OF GOD

Sunday, July 28, 2013

அழிவில்லாத ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்வோம்..

அன்பிற்கினிய உடன் விசுவாசிகளுக்கு என் இனிய, அன்பான, காலை வணக்கங்கள்.. நமதாண்டவரும், நம் ரட்சகருமான இயேசுகிறிஸ்து, தன் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார், அந்த ஜெபம்தான் நாம் இன்றளவும் ஆராதனைகளில் பயன்படுத்திவருகிற, பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே என்று தொடங்கும் அற்புதமான ஜெபம். ஜெபத்தை கற்றுக்கொடுத்த பிறகு தன் சீடர்களுக்கு ஜெபிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த,

லூக்கா.11:9-10 ல்.. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்டும்.ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். அப்படியானால் நாம் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற அவரை நோக்கி கேட்க வேண்டும், அவரிடத்தில் தேட வேண்டும், அவரை தட்ட வேண்டும். அதுமாத்திரமல்ல கேட்கிற எவனும் பெற்றுக் கொள்வான் என்கிறார். நாம் நன்மைகளை பெற ஒரே வழிதான் அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான்.

அதற்கு சிறந்த உதாரனம் ஆபிரகாம், கடவுள் அழைத்தவுடன், அவருக்கு செவி கொடுத்து, அவரை நம்பி புறப்பட்டதன் பலன், பெரிய செல்வந்தனாகவும், பெரிய சீமானாகவும் ராஜ்ஜியங்களை வெல்லும் ஆற்றல் கொண்ட தலைவனாகவும் உருவானான். ஆனால் அவனோடிருந்த லோத்துக்கு அந்த விசுவாசம் இல்லை, ஆதியாகமம்.13ம் அதிகாரத்தில் செல்வத்திற்காக, ஆபிரகாமை விட்டு பிரிந்து, மாபெரும் வளம் பொருந்திய, கர்த்தரின் தோட்டம் போலிருந்த சோதாம் கொமாரவை கண்டு அங்கே குடியேறினான். ஆபிரகாமோ அவன் விட்டு சென்ற வளம் குறைந்த பகுதிகளில் குடியிருந்தான். ஏன்?,. அவனுக்கு தெரியும் நன்மைகள் கர்த்தரிடத்திலிருந்துதான் வருமே தவிர, வேறு எவ்வழியிலிருந்தும் வராது. கர்த்தரை கேட்டால் போதும் அவன் வீடு செல்வத்தால் நிறையும். ஆம் அவன் வீடு செல்வத்தால் நிறைந்தது. இடத்தை, வளத்தை, செல்வத்தை முக்கியமாய் தன் அறிவை நம்பி போன லோத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நிர்கதியாய் ஓடி வந்தான்.

எனவேதான் பவுல் கொலோசேயர்.3;6-7 ல்
6. ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
7. நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

இயேசுவில் வேரூன்றி, அவர் மேல் கட்டப்பட்டு, அவருக்குள் நடக்க வேண்டும் என்கிறார்.. அது எப்படி? அடுத்த வசனத்தில் பதில் கொடுக்கிறார்..

8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

கொலோசெயர் 2:8 புது மொழி பெயர்ப்பு
8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள்.

ஆம் அன்பானவர்களே, அவருக்குள் நடப்பது என்றால் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இவ்வுலக (பிசாசின்) வழிகளாகிய லெளகிக ஞானம் அதாவது மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கிற தத்துவங்கள், தந்திரம், போன்றவைகளை விட்டுவிட வேண்டும் என்பதே.. ஆம் அவர் இந்த பிரபஞ்சத்தின் எல்லா அதிபதிகளை காட்டிலும் மேலானவர்.அவரை மட்டுமே நம்புவேன் என்று வாக்குறுதி கொடுத்து பாவத்துக்காக செத்து அவர் காட்டிய வழியாகிய நீதியின் பாதையில் நடக்க ஞானஸ்நானம் பெற்று உயிர்த்தெழுந்தவர்கள். இவ்வுலகம் அதன் அதிகாரம், அதின் ஞானம் அனைத்தும் பொய் அவரை நம்புவதே மெய் என்பதற்கு அடையாளமாக, மூன்றே நாளில் மரணத்தை ஜெயித்தார். ஞானமாய் சிந்தித்து, பொய் சாட்சிகளை ஏற்பாடு செய்து அவரை ஒழித்துவிட்டோம் என்று நிம்மதியாய் இருந்த கூட்டம் மூன்றே நாளில் இருந்த தடம் தெரியாமல் ஓடிவிட்டார்கள். இனி எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். ஆம்  நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; என் அறிவில் வராது, என் பலத்தில் வராது, என் திட்டத்தில் வராது, நான் நம்புகிறவர்களிடத்திலிருந்து வராது.. கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.. ஆம் அன்பானவர்களே, அவரை நம்புவோம், அவரில் நடப்போம், அவரை கேட்போம்.. உண்மையான அழிவில்லாத ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்வோம்.

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்போம். (2கொரி.5:6) ஆமேன்....



கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...



Monday, July 22, 2013

கடவுளே, உம்மிடம் சில கேள்விகள், ??????

கடவுளே, உம்மிடம் சில கேள்விகள்,

தீமை செய்வோரை கண்டால், என் உள்ளம் பதைக்கிறது.. நீர் ஏன் பொறுமை காக்கிறீர்???

ஆலயத்தினுள் உட்கார்ந்து பொய்யும், புரட்டும், பேசுவோரை கண்டால், என்னால் சகிக்க இயலவில்லை நீர் எப்படி சகிக்கிறீர்???

பணம், பதவி, புகழ், போன்ற உழைத்து, காத்திருந்து, தகுதியடைந்த பின், தேடி வரவேண்டிய நன்மைகளை அடுத்தவரை, ஒழித்து, ஒடுக்கி, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, பிடுங்கும் வஞ்சகரை கண்டால் என் நரம்புகள் துடிக்கிறது நீர் ஏன் அமைதி காக்கிறீர்???

நாவு வரங்கள், சுகமாக்கும் வரங்கள், மற்றெல்லா ஆவியின் வரங்கள், தீர்க்கதரிசனம், விசுவாசம், நம்பிக்கை, இவை அனைத்தை காட்டிலும் மேலானது அன்பே என்று நீரே எடுத்துரைத்தபின்னும், அரக்கத்தனமாய் அடுத்தவன் வாழ்வை கெடுக்கும் குரூர மிருகங்களாய் வாழும் கிறிஸ்தவர்களை கண்டால், கண்டிக்க முடியா புழுவாய் நான் துடிக்கிறேன்.. நீரோ என்ன செய்கிறீர்???

தீமை செய்வோர் பரலோகம் செல்வதில்லைதான் ஆனால், இங்கே அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாமா?

தேவாலயத்தில் வியாபரம் கூடாதென சாட்டை எடுத்தீர், தேவாலயத்தை கள்ளதனத்தின் கோபுரமாக மாற்றும் கயவர்களை கண்டும் மறு கன்னத்தை காட்டி நிற்கிறீரே ஏன்??

மனந்திரும்புவார்க்ள் என்றா?

இல்லையே? மனந்திருமபுதலுக்கான ஞானஸ்னானம் பெற்றவர்கள் தானே??? இன்னும் என்ன கருணை?

ஓ உமது அன்பின் மேன்மையா???

ஒரு பிள்ளையை வயிற்றில் அடித்து இன்னொரு பிள்ளை சுகமாய் வாழ்வதை கண்டால் எங்கள் வீட்டு தாய்மார்களே பொறுப்பதில்லையே, நீர் என் தாயிலும் மேலானவர் அல்லவா? ஒருவனை அழித்து மற்றவன் வாழ அவன் நித்தியம் பெற காத்திருப்பது நீதி தானோ, பரவயில்லை, நானும் யோக்கியனில்லை, ஆனால் செய்த தவறுக்கு தக்க பலன் தர மறுக்கிறீரே அது என்ன நியாயம், இது அன்பா???

இன்னும் கேட்பேன்..... ஆனால் தாவிது மனந்திரும்பிய பின்னும் அவன் பிள்ளையை அடித்தவர் நீர்.. அதை பாவத்தின் பலன் என்பதை அறிந்து உணர்ந்தவன் தாவீது உணராதவர்கள் நாங்கள் நீர் என்ன செய்வீர்..

மன்னியும் இறைவா........ நீர் நல்லவரே... நீர் தடுத்தும், கண்டித்தும், தண்டித்தும், உணரா மண்ணாய் நாங்கள் இருந்தால் நீர் என்னதான் செய்ய முடியும்?????? முடியும் அவரால் எல்லாம் முடியும் ஆம் இதோ 7 ம் சங்கீதம் கொண்டு எனக்கு பதில் கொடுத்து என்னையும் தீவிரித்து கொடும்பாவம் புரியும் யாவரையும் எச்சரிக்கிறீர்....

சங்கீதம். 7 ம் அதிகாரம்

12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

13. அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.

14. இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.

15. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.

16. அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

ஆமென்.. ஆமேன்... ஆமேன்.... இது என் கோபமல்ல... கடவுளின் கோபம்....



கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

Sunday, July 21, 2013

இயேசு எனக்குள்!!


அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய காலை ஸ்தோத்திரங்கள், இன்று ஞாயிற்றுக் கிழமை, ஆலயத்திற்கு பரபரப்பாய் ஆயத்தமாகிற் நேரம், சிலர் ஆராதனை முடித்தபின் தான் பார்ப்பீர்கள், ஆராதனைக்கு செல்லும் அல்லது ஆராதனை முடிந்து வந்த உங்களிடம் ஒரு கேள்வி நாம் ஆராதனையில் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிற நேரம் எது?.. உங்கள் பதிலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..

ஜெபம்: நாம் ஆசீர்வாதத்தை கேட்கிற நேரம்
ஆராதனை முறைமை&பாடல் & துதி நேரம்: நாம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதத்திற்கு நன்றி கூறுகிற நேரம்
போதகர் ஆசீர்வாதம் கூறுகிற நேரம்: நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்தை உறுதி செய்கிற நேரம்
அப்படியானால் அசீர்வாதம் பெற்றுக் கொள்ளுகிற நேரம் எது?

சங்கீதம்.27:11 ல் தாவீது கூறுவது கர்த்தாவே, உமது வழியை எனக்கு போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும் என்பதே,

அதாவது எதிரிகளின் நடுவே சூழப்பட்டிருக்கிற தாவீது, அவர்களுக்கு முன்பாக அவன் வாழ்க்கை சிற்ப்பாய் அமைய எனக்கு போதித்து நடத்தும் என்கிறார், கர்த்தருடைய வார்த்தைதான் நாம் வெற்றியுடன் வாழ வழிக்காட்டுகிறது. அப்படியானால் நாம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிற நேரம் என்பது கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதின்படி வாழ முடிவெடுக்கிற நேரம் என்பது தெளிவாகிறது அல்லவா?

எனவேதான் ஆண்டவர் லூக்கா.10:38-42 வரை உள்ள வசனங்களில், தன் பாதத்தருகே அமர்ந்து கர்த்தருடைய வார்த்தையை கேட்கிற மரியாளை நல்ல பங்கை தெரிந்துக் கொண்டாள் என்று கூறி, மார்த்தாளை எச்சரிக்கிறார், ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற காரியம் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை செய்யாமல், அவருடைய வர்த்தையை கருத்தாய் கெட்க வேண்டும் என்பதும் அவருடைய வார்த்தையில் வாழ்ந்திட வேண்டும் என்பதே.

இன்றைய தியானப் பகுதியாகிய, கொலோசேயர்.1:21-29 வரை வசனங்களில், 2 முறை அதாவது 23 மற்றும், 26ம் வசனங்களில், நான் ஊழியக்காரனாக கடவுளால் தெரிந்துக் கொள்ளப்பட்டதே அவருடைய வார்த்தையை அறிவிப்பதற்காகத்தான் என்கிறார்.. ஆனால் அவருடைய வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு சுலபமல்ல, 24ம் வசனத்தில் உங்கள் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷம் அடைகிறேன் என்கிறார், அப்படியானால் கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு சிரமமா? இல்லையே.. நாம்தான் கேட்கிறதற்கு ஆவலாய் இருக்கிறோமே அப்படியிருக்க கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பது எப்படி சிரமமாகும் என்கிறீர்களா?!!!!

அன்பானவர்களே,, 27ம் வசனத்தில் பவுல் கூறுகிறார் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாய் உங்களுக்குள் இருக்கிறார் என்பதே கர்த்தருடைய வார்த்தை என்கிறார். இதை நாம் கேட்டிருக்கிறோமா??? இயேசுவானவர் நமக்குள்ளே மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார்... இல்லை நாம் கேட்டதில்லை, இயேசு பரலோகத்தில் இருக்கிறார், அல்லது இந்த ஆலயத்திலிருக்கிறார், அல்லது என்னோடு இருக்கிறார், அல்லது இயேசு அழைக்கிறார் என்ற செய்தியை தானே கேட்டிருக்கிறோம், ஆம் இதை அறிவிப்பது சுலபமுமல்ல இதை நம்ப நாம் தயாராகவும் இல்லை.

இயேசுவை எங்கெல்லாம், தெடுகிறோம், கோவிலில், காணிக்கையில், ஊழியக்காரனிடத்தில், உபவாசக்கூட்டங்களில், நற்செய்தி கூட்டங்களில்,  ஆனால் நமக்குள்ளிருக்கிறார் என்பதை எத்தனை பேர் நம்புகிறோம்? இதை நம்பினால் நமக்குதான் பிரச்சனை.. ஆம் உண்மைதான், பவுல் 28ம் வசனத்தில் கூறுகிறார், கிறிஸ்து வாசமாயிருக்கிற எந்த மனுஷனையும் அவருக்குள் தேறினவர்களாய் அவர்களுக்கு புத்தி சொல்லுகிறோம். நமக்குள் இருக்கிறார் என்பதை நாம் நம்பினால், அவருக்குள் தேறினவர்களாக வேண்டும், எனவே நாம் அவரை வெளியே தேடவே விரும்புகிறோம், அவர் நமக்குள் இருக்கிறார் என்ற சத்தியத்தை கேட்டுக் கொண்டால், நான் இனி புகைப்பிடிக்க முடியாது, மது அருந்த முடியாது, பொய் சொல்ல முடியாது, புரட்டு அரசியல் செய்ய முடியாது, விபச்சாரம் செய்ய முடியாது, யாரையும் ஏமாற்ற முடியாது, நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்று எண்ண முடியாது, முன்மாதிரியாய் இருக்கவேண்டும், எனவேதான் அவரை வெளியே பார்க்க விரும்புகிறோமே தவிர நமக்குள்ளே பார்க்க விரும்புவதில்லை.

ஆனால் பவுலோ 29ம் வசனத்தில் அதை புரிய வைக்க, அவருடைய பெலத்தினால் போராடி, பிராயசப்படுகிறேன் என்கிறார். எத்தனை ஆச்சரியமான மனிதர் இவ்வூழியத்தில் தன்னையே இழந்தாரே.. அவர் நம்க்குள் இருக்கிறார் என்பதை புரிய வைக்க.. அன்பானவர்களே..

நமதாண்டவர், ஆலயத்தில் வாசம் செய்யவோ, ஒரு ஊழியக்காரனின் பிடியில் சிக்கியிருக்கவோ, ஒரு நற்செய்தி கூட்டத்தில் அற்புதங்களை செய்யவோ, ஒரு உபவாச கூட்டத்தில் தன் மகிமையை காட்டவோ மாத்திரம் வரவில்லை, அவர் நமக்குள் பிரவேசித்து நம்மில் செயலாற்ற தன் ஜீவனை சிலுவையில் நமக்காய் அற்பணித்து உயிர்த்தெழுந்திருக்கிறார். இதை உணர்ந்து இந்த அறிவில் வளர்வதே கடவுள் எதிர்பார்க்கும் பிரியமான காரியம்.. இன்னும் புரியாதவனை போல அவரை வெளியே தெடி நான் தப்பித்துக்கொள்ள வகை தேடினால் அழிவை தேடி அலைகிறவர்களில் நானே முதன்மையானாவன்..

இறைவா..
என்னில் இருக்கிற உம்மில் வளர.. பெலன் கொடு
என் சுபாவ பாவங்களில் என்னை தடுத்திடு,
உமது வார்த்தையை அசட்டை செய்யமல் கேட்கும் செவியை தந்திடு..
உமது பாதையில் நடக்கும் அறிவை ஈந்திடு..
மன்னிக்கப்பட்ட நான் மன்னிக்கப்பட்டவனாகவே வாழ இன்னும் மன்னித்திடு..
அழிவின்றி என்னை பரலோகம் சேர்த்திடு.. ஆமேன்.



கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews