WORD OF GOD

WORD OF GOD

Monday, September 26, 2011

அன்பாலயம் (சிறுகதை)


ஒரு காலத்தில் சோலையூர் மிகவும் பின்தங்கிய, கிராமமாக இருந்தது. இன்று அப்படியல்ல. ஓலைவீடு மாடி வீடாக மாறியிருக்கிறது. கால் வயிறு கஞ்சிக்கும் ஆலாய் பறக்கும் காலம் மலையேறிவிட்டது. கைநாட்டு போட கட்டை விரலை காட்டியது அந்த காலம்.
அழகான ஆங்கிலத்தில் வெளுத்து  வாங்குவது இந்தக்காலம்.

திருஷ்டி பூசணிக்காய்  மாதிரி ஒரே  ஒரு வீடு தெரியுது பாருங்கள். ஓலை வீடு, அதிலும் ஏழெட்டு கீற்றுகளை காணோம். வாசல் உண்டு. கதவு இல்லை, சணல் பை தொங்கல், சாணம் மெழுகிய தரை, குண்டும் குழியுமாய், மண் சுவர், விரைவில் விழுந்து விடலாம்.

ஒரே ஒரு கயிற்றுக்  கட்டில். அதில்தான் ஒரு உருவம் ஒல்லிக் குச்சியாய் படுத்திருந்தது. உடம்பு கேள்விக்குறிக்கு மாறியிருந்தது. கண்களில் சாம்பல் பூத்திருந்தது. காதுகளுக்கு வேலையில்லை. முப்பத்திரண்டு பற்களும் விடைபெற்றுக் கொண்டன.

இந்த பழம் சாரி கிழம் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று விட்டுவிட முடியாது. காரணம்? பேரன், பேரனின் பெற்றோர் அவனை தாத்தாவின் கையில் ஒப்படைத்துவிட்டு தாத்தாவை முந்திக்கொண்டார்கள். கேன்சராம். இல்லாதவர்கள் என்று தெரிகிறதா இந்த நோய்க்கு? வாரி வழித்துக் கொண்டு போய்விட்டது. மாடு வாங்க தரகர், வீடு வாங்க தரகர், நிலம்  வாங்க தரகர், மனம் முடிக்க தரகர், தரகில் தான் காலம் சுழன்றுக் கொண்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் சிறுவர் சிறுமியரை வாங்கவும் தரகர்கள் தயாராகி  விட்டனர்.

அவன் பெயர் "குருசாமி" குரு, குரு என்று கூப்பிடுவார்கள்.
 பிள்ளை பிடிப்பவன் என்று விவரம் தெரிந்தவர் செல்லமாய் அழைப்பார்கள். அவன் அந்த ஓலை குடிசையில் நுழைந்தான்.
வணக்கம் பெரியவரே சௌக்கியமா? கிழவனுக்கு  குருசாமி
இரண்டாய் தெரிந்தான்.

ஐயோ ஏன் இப்படி கிழிந்த நாராய் போனிங்கோ இந்த 85 வயசுல எப்படி காலந்தள்ளப் போறீங்க ? நல்ல வேளை  பகவான் தான் என்னை இங்கு அனுப்பிச்சிருக்கிறார்.

தம்பி யார் நீங்க இந்த நாதியில்லாத கிழவன்கிட்ட இவ்வளவு
அக்கறையாய் பேசுறீங்களே ! என்ன விஷயம்? அதற்குள் மேல்
மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. குரல் கிணற்றின் ஆழத்திலிருந்து
வந்தது.

உங்கள் பேரன் எங்கே? கிழவன் கஷ்ட்டப்பட்டு கைகாட்டிய திசையை நோக்கினான் குருசாமி. ஒட்டிய வயிறுடன் சுருண்டு படுத்திருந்தான் பேரன். சாப்பிட்டு மூணு நாளாச்சி தம்பி. என்ன விடுங்க, சாகப் போகிறவன், இந்த இளம் தளிர் அன்ன ஆகாரமில்லாமல் வாடி வதங்கி கெடக்குதே. பெரிசு கண்களில் பொலபொலவென்று கண்ணீர் மடைத் திறந்த வெள்ளமாய்.

அய்யா, பெரியவரே! கவலையை விடுங்க. கண்ணீரை துடைங்க. உங்கப் பேரனை வாழவைப்பது என் பொறுப்பு. சாத்தான் வேதம் ஓதுகிறது. இந்தாங்க, இதில் ஆயிரம் ரூபா இருக்கு. பாலும் பழமும் வாங்கி சாப்பிடுங்க. நாளைக்கே இந்த குடிசையை ரிப்பேர் செய்து தரேன் கருணை வடிகிறது.


பையனை எழுப்பினான், கையில் இருந்த பிஸ்கட் பழத்தை தந்தான். புதுச்சட்டை, புதுகால்சட்டை மாட்டினான். முகம் கழுவி தலை வாரினான். ஆடு வெட்டப்படுவதற்கு தயாரானது. நான் வரட்டுமா பெரிசு? பையனை உடனே ஒரு நல்ல இடத்தில் சேர்க்கணும். நாளைக்கு வந்து பார்க்கிறேன். பையனோடு மாயமானான் குருசாமி. ஆயிரம் ருபாய் பெரியவரின் வாயை அடைத்தது.

"அன்பாலயம்" அந்த விடுதயின் பெயர். அதன் படைப்பாளர் அருள்திரு.ஏசுதாசன் 49 மாணவர்கள் இருந்தனர். அதை 50  ஆக்க அவர் முனைப்பு காட்டினார் "அனாதை இல்லம் ஆதரவற்ரறோர் பள்ளி என்றெல்லாம் பெயர் சூட்ட‌ நினைத்து அது தவறு என்று எண்ணீயதால் பெயரை அன்பாலயமாக மாற்றியவர் அவர்.

ஆதரவற்ற  பிள்ளைகளுக்காக பள்ளியுடன் கூடிய விடுதி ஒன்று நடத்திட வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. பணம் படைத்தோரிடம் அதை தெரிவித்ததும், ஒருவர் நிலம் தர, ஒருவர் கட்டிடம் கட்டிக் கொடுக்க, மூலை முடுக்கெல்லாம் தேடி, தகுதியான பிள்ளைகளைக் கண்டறிந்து அன்பாலயத்தில் சேர்த்தார்.

அரசின் அனுமதி உடனே கிடைத்தது. தினமும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தில் ஒரு மூட்டை அரிசி கிடைத்தது. உழவர் சந்தையில் காய்கறி கிடைத்தது. "கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" என்ற இயேசுவின் வாக்குத்தத்த வார்த்தைகளை விசுவாசித்த மக்கள் அன்பாலய வளர்ச்சிக்காக ஆயிரமாயிரமாய் தந்து உதவினர்.

அருள்திரு.ஏசுதாசன் அவர்கள் அன்று மாணவர் வருகை பதிவேட்டை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மூளையில் எதோ உதித்தது. சட்டென்று அழைப்பு மணியை அழுத்தினார். நாற்பது வயதில் ஒருவர் ஓடி வந்தார். என் மகன் லுத்தரை கூப்பிடு, ஐந்து நிமிட இடைவெளியில் 25 வயதில் லூத்தர் வந்தான்.

ஊர் உள்ளே போ, கோடியில் ஒரு ஓலைவீடு, அதில் பேரனுடன் முதியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் சொல்லி, அவர் பேரனை அழைத்து வா, லூத்தர் அகன்றான். 15 நிமிட இடைவெளியில் திரும்பினான்.

அப்பா! அந்த பெரியவரால் பேச முடியவில்லை. இந்த பத்திரத்தைக் கொடுத்தார். அதில் என்ன இருக்கிறது? இதில் குருசாமி என்பவன் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் பையனை பத்தாயிரம் ரூபாய்க்கு அடிமையாய் விற்றிருக்கிறான். அதுவும் மூன்று வருடத்திற்கு அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது அப்பா.

அப்படியா? இந்தா, அன்பாலய வளர்ச்சிக்காக மிஸ்டர் குணசீலன் கொடுத்த பத்தாயிரம் உன் நண்பன் மனோவை கூட்டிக் கொள். ஓடு, ஒரு வினாடியும் தாமதிக்காதே. இன்றே அந்தப் பையன் இந்த விடுதி மாணவன். "கமான் குய்க், ஐ சே" லூத்தர் வேகமாக செயல்பட்டான். இனி அந்த பையன் அன்பாலயத்தில் சுதந்திரமாய் சுற்றி திரிவான் சுகமாய் வாழ்வான்.

மனதுக்குள் எண்ணி மகிழ்ந்த அருள்திரு. ஏசுதான அவர்கள், நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செயாமல் இராதே என்ற வேத வசனத்தை அசைபோட்டார்.

சிறுகதை செல்வர்.
திரு. ஆ. ஏசையன்

    
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews