WORD OF GOD

WORD OF GOD

Wednesday, July 31, 2013

வாருங்கள் வெற்றி பயணம் போவோம்.

கிறிஸ்து இயேசுவுக்குள் நேசிக்கப்பட்ட அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்..

உபாகமம்.31 அதிகாரம் வசனம்.6.
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

பயம் என்பது நம் வாழ்வின் மாபெரும் எதிரி என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? நாம் தோற்றுப்போன அனைத்து விஷயத்திற்கும் அடிப்படை காரணம் நமது பயம்தானே??? வேதாகமத்தில் பயம் நம்மை எப்படி தோல்விக்கு இட்டு செல்லும் என்பதற்கு மிகச்சிறந்த  உதாரணத்தை காணலாம், பேதுரு இயேசுவின் சீடர்களில் மூத்தவர், விசுவாசத்தில் சிறந்தவர், நீர்தான் தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று இயேசுவை அடையாளங்கண்டு அவரால் பாராட்டு பெற்றவர். ஆனால் அவருக்கு ஒரு பெலவீனம் உண்டு ஆம் அவர் தன் பிரச்சனைகளை தைரியமாய் அணுக முடியாதவர், பயந்த சுபாவம் கொண்டவர்.

மத்தேயு.14:22-32 வரையுள்ள வசனங்களில், நள்ளிரவில், கடலில், எதிர்காற்றில் படகை ஓட்ட முடியாமல் சிக்கி தவித்த சீடர்களை காக்க கடல் மீது நடந்தே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தார். அதை கண்ட பேதுரு தானும் நடக்க ஆசைப்பட்டு ஆண்டவரிடம் அனுமதி கேட்டார், தன் பிள்ளைகளின் மனவிருப்பத்தையெல்லாம் நிறைவேற்றுகிறவர் ஆயிற்றே நம் ஆண்டவர் அவர் எப்படி அனுமதியாமல் விடுவார் உடனே அனுமதித்தார், பேதுருவும் தைரியமாய் கடலில் இறங்கினார் அன்பானவர்களே, இது சாதாரண தைரியம் இல்லை, ஒரு முறை கண்களை மூடி நடுக்கடலை கண்முன் கொண்டு வாருங்கள் படகை திசை மாற்றும் புயல் வேக காற்று, ஆளை அப்படியே இமை பொழுதில் சுருட்டிக்கொண்டு போகும் ஆக்ரோஷமான அலைகள், எவரையும் அச்சுறுத்தும் காரிருள், அய்யோ நினைக்கவே அச்சம் உச்சத்தை தொடுகிறது. ஆனால் பேதுரு துணிந்தார். இயேசு ஆண்டவரை நோக்கி தைரியமாய் நடந்தார். ஆனால், காற்று மேலும் பலம் கொண்டது பாதுகாக்கும் படகையே பலமான காற்று பதம் பார்க்குமே??? இவர் என்ன செய்வார்? அச்சம் அவரை அறியாமல் ஆட்கொண்டது.. அடுத்த வினாடி, மூழ்க ஆரம்பித்தார்.. அன்பானவர்களே பயம் நம் விசுவாசத்தை கெடுத்து நம்மை மூழ்கடிக்கும்..

மத்தேயு.26 ம் அதிகாரத்தில், ஆண்டவர் கைது செய்யப்பட்டவுடன், அவரது அன்புக்குரிய சீடர்கள் அத்தனை பேரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள், ஆனால் ஒருவன் மாத்திரமே அந்த இரவில் உடனே போய் ஆண்டவருக்கு என்ன நடக்கிறது என்று பார்க்க விரும்பினான், அவன்தான் பேதுரு. அவரை விசாரிக்கும் பிரதான ஆசாரியனின் மண்டபத்திற்கு வந்து பாதகர்கள் யாவரும் சூழ்ந்திருக்கும் இடத்தில் துணிவுடன் அமர்ந்து முடிவை அறிய விரும்பினார் (58) இதுவும் சாதாரண தைரியம் இல்லை, காரணம், இவனை அடையாளம் கண்டால், அங்கே நிற்கும் கொலை பாதகர்கள் நிச்சயம் இவனையும் சும்மாவிடப்போவதில்லை, அவரொடு இவனையும் குற்றவாளியாக்கி பொய் சாட்சிகளை கொண்டு என்னவும் செய்வார்கள். சிறிது நேரத்தில் அங்கிருக்கும் சில பெண்கள் அடையாளம் கண்டுக்கொண்டனர், நடுங்கி போனார் பேதுரு, நானில்லை, நானில்லை என்று அங்கிருந்து ஓடியே போனார். தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று அவரை கண்டுகொண்டவனே அவரை யாரென்றே தெரியாது என்று மறுதலித்தான், பயம் நம் விசுவாசத்தை கெடுத்து நம்மை மூழ்கடிக்கும்.


எனவேதான் மோசே உபாகமம்.31:6 ல் நீங்கள் அவர்களுக்கு பயப்படாதீர்கள் என்று கானானுக்கு போகும் இஸ்ரவேலர்களை தைரியப்படுத்தினார், ஏனென்றால் இஸ்ரவேலர்கள், கானானுக்கு போக வேண்டுமானால், கானானியரையும், கானானை சுற்றியுள்ளோரையும் வென்றே ஆக வேண்டும்.. பயந்தால் வெற்றி வருமா?? எனவேதான் நீங்கள் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம், பலங்கொண்டு திடமனதாய் இருங்கள், உன்தேவனாகிய கர்த்தர் உன்னோடெ வருகிறார் என்றார்.. ஆம் பிரியமானவர்களே, நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடே வரும்போது நாம் ஏன் பயப்படவேண்டும். பயம் நம் விசுவாசத்தை கெடுத்து நம்மை மூழ்கடிக்கும்.. இந்த புதிய மாதத்திலும் கர்த்தர் நம்மோடே இருக்கிறார், அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதுமில்லை, நாம் ஏன் பயப்பட வேண்டும்? யாருக்கும் எந்த தீமைக்கும் பயப்படாமல் அடியெடுத்து வைப்போம் செங்கடலே வந்தாலும் நம்மை கண்டால் ஓதுங்கி நின்று வழிவிடும் ஆமேன்.. ஆமேன்..


கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews