WORD OF GOD

WORD OF GOD

Wednesday, October 5, 2011

தூதர்களை கொண்டு நம்மை காத்திடுவார்.

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், இந்த காலை வேளையில் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் தியாநிக்கப்போகிற வசனம். சங்கீதம்.34:7.

கர்த்தருடைய தூதன் அவருக்கு பயந்தவர்களை சூழ
 பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.  

சாது  சுந்தர்சிங் ஐயா அவர்கள், வட மாநிலங்களில் ஊழியம் செய்த காலத்தில் ஒரு மலை கிராமத்தில் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க சென்றாராம், அவருடைய வார்த்தைகளை கேட்க திரளான மக்கள் கூடி விட்டார்களாம், இதைக் கண்ட கிராம தலைவன், கடும் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய ஆட்களை ஏவினான், அதன் படி ஆயுதம் ஏந்திய ரவுடி கும்பல் ஒன்று அவரை துரத்தியது, சாது ஐயா அவர்கள், தன் உயிரை காத்துக் கொள்ள மலை பகுதியில் ஓடி ஒரு குகைக்குள் ஒளிந்துக் கொண்டாராம். அவரை விரட்டிய கும்பல் அந்த குகையை
முற்றுகையிட்டது. அதை அறிந்த ஐயா அவர்கள் செய்வதறியாமல், முழங்கால் படியிட்டு ஜெபிக்க துவங்கிவிட்டார்கள், பல மணி நேரம் ஜெப நிலையில் இருந்துவிட்டு வெளியே எட்டி பார்த்தாராம், அப்போதும் அந்த கும்பல் குகைக்கு வெளியே எதோ குழப்பத்தோடு நின்றுக் கொண்டிருந்ததாம்.

மீண்டும் பயத்தோடு உள்ளே பொய் ஜெபித்துக் கொண்டே இரவு நெருங்கியதால் உறங்கிப்போனாராம். அடுத்த நாள் காலை அவர் வெளியே எட்டிப் பார்த்தால், அதே கும்பல் நின்றுக் கொண்டிருந்தது, ஆனால் கையில் ஆயுதங்கள் இல்லை, திரளான கூட்டம் இருந்ததாம். அவர் வேறு வழி இல்லாமல் அமைதியாக வெளியே வந்தார்களாம். அப்போது அவர்கள் அனைவரும் அவர் பக்கத்தில் ஓடி வந்து அவரை பிரமிப்போடு பார்த்தார்களாம், அவர் ஏன் இப்படி பார்க்கிறார்கள் என்று குழப்பத்தோடு அவர்களை நெருங்க, அவர்கள் கேட்டார்களாம்,

ஐயா நேற்று இரவு, நாங்கள் இந்த குகை வரை உங்களை விரட்டினோம், நீங்கள் உள்ளே போனதையும் கண்டோம், ஆனால் சிறிது நேரத்தில் உங்கள் குகையை சுற்றி, ஆயுதம் ஏந்திய அநேகர்  வெள்ளை ஆடையில் பிரகாசமாய் நின்றார்களே அவர்கள் யார் என்று கேட்டார்களாம். அப்போதுதான் சாது ஐயா அவர்களுக்கு புரிந்தது, அந்த கொஞ்ச நேரம் என்பது தான் ஜெபிக்க துவங்கிய நேரம் என்பதும், ஜெபிக்கும்போதே, கடவுள் தன் தூதர்களை தன்னை காக்க காவலுக்கு அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர் புரிந்துக் கொண்டாராம்.

அன்பானவர்களே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும், பய பக்தியும் கொண்டவர்களை சூழ கடவுள் தன் தூதர்களை பாளையமிறக்குகிறார். பாளையமிறக்குவது என்றால் போருக்கு ஆயத்தாமாக இறங்குவது என்று அர்த்தம், ஆண்டவராம் இயேசுவை நம்புகிற அவருக்கு பயந்து வாழ்கிற நம்மை அவர் தூதர்களை கொண்டு காத்து வருகிறார். பயப்படாதீர்கள். நாம் சந்திக்க போகிற துன்பங்கள் ஆபத்துக்கள் விபத்துக்கள், அனைத்திலிருந்தும் தூதர்களை கொண்டு நம்மை காத்திடுவார்.

இந்த விசுவாசத்தோடு  இந்நாளை துவங்கி இனிமையாய் வாழ, பரிசுத்தாவியானவர் நம்மை காத்தருள்வாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews