WORD OF GOD

WORD OF GOD

Tuesday, May 31, 2011

காக்கும் கரம்

சில சம்பவங்கள் வாசிக்கும் போது  மிகப்பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் உண்டாக்கும், அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இந்த காலை வேளையில் உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.  குமாரி என்டிகாட்  என்ற ஒரு பெண் மிஷினரி, ஒரு சமயம்  அமெரிக்காவிற்கு பயணமானார். ஆகாய விமான போக்குவரத்து  அதிகமில்லாத காலம் அது . கப்பலில் தான் பயணம் செய்ய வேண்டும்.


கப்பலில் சிறிது தூரம் பயணமானதும், கடல் பிரயாணம் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. இதனால் வாந்தி எடுக்க துவங்கிவிட்டார். என்ன மருந்து கொடுத்தும் பலனில்லை, ஒன்றும் சாப்பிடவும் முடியவில்லை. மருத்துவர் மிகவும் பிரயாசப்பட்டு கடைசியில் அவருக்கு, ஆரஞ்சு பழங்கள் ஒத்துக் கொள்ளும் என்று கண்டுப் பிடித்தார்.

கப்பலிலிருந்த ஆரஞ்சு பழங்களை எல்லாம்  அவருக்கென்று தனியாக எடுத்து வைத்தனர், ஆனால் கப்பலின் பண்டக சாலையில் சில பழங்களே இருந்தன. இரண்டு மூன்று நாட்கள் அப்பழங்களை சிக்கனமாக அவர்களுக்கு கொடுத்து வந்தனர். நான்காவது நாள் கப்பலின் சாப்பாட்டை கவனிக்கும் நிர்வாகியம்மாள், ஒரு தட்டில் சில ஆரஞ்சு பழச்சுளைகளை எடுத்துக்



 கொண்டுவந்து என்டிகாட்டிடம்  "கப்பலிலுள்ள ஆரஞ்சு பழங்கள் தீர்ந்து போய்விட்டன: இன்னும் 16  நாள் பயணம் இருக்கிறது இனி நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது" என்றார்கள். அதற்கு என்டிகாட் கவலை துளியும் இல்லாமல், "கிறிஸ்துவின் நற்செய்தியை நான் அமெரிக்காவில் கூற வேண்டும் என்பது ஆண்டவரின்  சித்தமானால் அவர் வேண்டிய ஆரஞ்சு பழங்களை தருவார்" என்று பதிலுரைத்தார்.

அதற்கு நிர்வாகியம்மாள் "இந்த நடுக் கடலிலா?" என்று கேட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டுப் பொய் விட்டார்கள். என்டிகாட்டும்  தன் வழக்கப்படி ஜெபிக்க துவங்கிவிட்டார்கள். சற்று நேரத்தில் கப்பலில் இரைச்சலும், ஆட்கள் அங்கிமிங்கும் ஓடுவதும் கேட்டது. ஆனால் என்டிகாட் அதைபற்றிக்  கவலைப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் அவரது அறைக்கதவு திறக்கப்பட்டது. நிர்வாகியம்மாள் ஒரு தட்டு நிறைய ஆரஞ்சு பழங்களுடன் நின்று, "உண்மையாகவே உன் கடவுள் நடுக்கடலில் ஆரஞ்சுப் பழங்களை மழை  போல் கொட்டிவிட்டார்" என்று சொல்லி ஆரஞ்சு பழங்களை கொடுத்தார். எப்படி என்று கேட்டபோது, நடுக்கடலில் ஒரு கப்பல் தாங்கள் வழி தப்பி அலைகிறோம், தங்களுக்கு ஆகாரம் தீர்ந்து விட்டபடியால் உதவி தேவை என்ற செய்தி ஒளிபரப்பபட்டதை கேட்டு, நமது கப்பல் சார்பாக  அவர்களுக்கு உதவும் வண்ணமாக வழிக்காட்டி, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுத்தோம், அதற்கு கைமாறாக அவர்கள் கொண்டு சென்ற பழங்களில் அனேக கூடைகளை கொடுத்தார்கள் என்று கூறினார். அக்கப்பல் தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆரஞ்சு பழங்களை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்.

சங்கீதம் 34 :10  எவ்வளவு சத்தியமான வசனம்..

 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

அன்பானவர்களே, நம் ஆண்டவர் தன் பிள்ளைகளின்  தேவையை பூர்த்தி செய்ய எவ்வளவு கரிசனைக் கொண்டுள்ளார். இந்த நாளும் அதே கரிசணையோடு நம்மோடு தாபரித்து வருகிறார். அவரது கிருபையில் குறைவில்லா நன்மைகளை இந்நாளில் அனுபவித்து மகிழ பரிசுத்தாவியானவர் நமக்கு உதவி செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews