WORD OF GOD

WORD OF GOD

Tuesday, April 5, 2011

நம்மை அறிந்தவர்

அன்பார்ந்த உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம், நாகூம்.1 :7 

 கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் நம்மை புரிந்துக் கொள்ளுகிறவர்கள்  மிக மிக குறைவே, நம்மை தவறாக புரிந்துக் கொள்ளுகிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம்மை சரியாக புரிந்து கொள்ளுகிறவர்கள் மிக மிக குறைவே.

காரணம் அடுத்தவர்களையும், அடுத்தவர்களின் சூழ்நிலையையும் புரிந்துக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. தற்சமயம் நமது தமிழ் நாட்டில் தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களும், அவர்களது தலைவர்களும், கட்சிக்காரர்களும், மிகத்துரிதமாக ஒட்டு சேகரித்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் மக்களை புரிந்துக்கொண்டு, மக்களின் சூழல் தெரிந்து, அவர்கள் தேவை அறிந்து, ஆட்சி நடத்திய யாரும் ஒட்டு கேட்டு மக்களை தேடி போக வேண்டியதில்லை, ஒட்டு அவர்களை தேடி வரும். அதுதான் உண்மையான மக்களை ஆளுகிறவர்களின் பண்பாக இருக்கவேண்டும்.

நம்முடைய தியானப் பகுதியில் கடவுள், தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் என்று நாகூம் தீர்க்கதரிசி, மிக தெளிவாக கூறுகிறார். காரணம் அவர் நல்லவர், இக்கட்டு நாளில் அரணான கோட்டையாக விளங்குகிறார்.

இதுதான் மக்களை வழி நடத்துகிற உண்மையான அரசனின் குறிக்கோள். காரணம் நம் ஆண்டவர் நம்மை உருவாக்கினவர், நம் தேவைகளை அறிந்து நமக்கு நன்மை செய்கிறவர்.

எனவே நம்மை, நம் தேவைகளை, நம் சூழ்நிலையை புரிந்துக் கொண்டவர்கள் யாருமே இல்லை என்ற தவிப்பு இருக்கிறதா? உடனே தூக்கி எறியுங்கள், ஆண்டவர் நமக்கு துணையாக நம்மை உண்மையாக புரிந்துக்கொண்டவர்.

நம் இக்கட்டில் அவர் நமக்கு துணை. இந்த உலகின் மனிதர்களல்ல, இந்த அண்டசராசரத்தின்  கடவுள் நமக்கு துணையாக இருக்கிறார். தைரியமாய் இந்நாளை துவங்குவோம், ஆசீர்வாதங்களை பெறுவோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

அன்பானவர்களே, நான் ஏற்கெனவே தெரிவித்தபடி என்னுடைய Diploma in Clinical Pastoral Counselling  என்ற Course ஐ முடித்துவிட்டேன், நாளை முதல் அதற்கான தேர்வுகள் சென்னையில் நடைபெறுகிறது, எனவே அதற்காக ஜெபியுங்கள், எனவே தொடர்ந்து வருகிற நான்கு  நாட்களில் என்னால் பதிவிட முடியாது என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறேன். தற்சமயம் நமது இணையதள பக்கம் துவங்கி நான்கு மாதங்களை வெற்றிகரமாக கண்டுவிட்டோம், தொடர்ந்து இதன் வளர்ச்சிக்காக இணையதள சீரழிவிலிருந்து இளைஞர்கள் இத்தளம் வழியாக
 காக்கப்பட ஜெபியுங்கள் அநேகருக்கு தொடர்ந்து அறிமுகம் செய்யுங்கள்.  
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எல்லா பதிவுகளையும் படித்து உங்கள் ஆத்தும அனுபவத்தை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்



No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews