WORD OF GOD

WORD OF GOD

Monday, April 11, 2011

ஆவியின் வல்லமை

அன்பானவர்களே, உடன் சகோதர சகோதரிகளே சிறிய இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மகிழ்ச்சி, இன்று உங்களோடு  பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, எசேக்கியேல்.37 :7 -10 

7. எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

8. நான் பார்த்துக்கொண்டிருக்கையில் இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது.

9. அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

அன்பானவர்களே இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த காலத்தில் கடுமையான  உபத்திரவங்களை அனுபவித்தனர், கடவுளை நோக்கி, தங்கள் புலம்பலை முன் வைத்தனர். அவர்கள் புலம்பி கூறியது யாதெனில், (எசே.37 :11 ) எங்கள் எலும்புகள் உலர்ந்துப் போனது, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று, நாங்கள் அறுப்புண்டு போகிறோம் என்பதே, இதைக்கேட்ட கடவுள் அவர்களுக்கு ஒரு உண்மையை புரிய வைக்க  எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு  கடவுள் காட்டின தரிசனம் தான் இன்றைய தியானப்பகுதி.



ஒரு பள்ளத்தாக்கில் கொண்டுப்போய் நிறுத்தி உலர்ந்த எலும்புகளை கடவுள் காண்பித்து  இவைகள் உயிர் பெறுமா? என்று கேட்கின்றார். தற்போது விஞ்ஞான துறையில் குளோனிங்  முறையில் ஒரு மனிதனின் கொஞ்சம் தசை கிடைத்தால் கூட அதிலிருந்து ஒரு உயிரை உண்டாக்கி விடுகின்றனர், ஆனால் இந்த எலும்புகளோ உலர்ந்துப் போனவை ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவை, அந்த எலும்புகளை கடவுள் காட்டினார், உடனே எசேக்கியேல் தேவரீர் நீர் அறிவீர் என்று பதிலுரைக்கிறார்.


உடனே கடவுள் தன வார்த்தைகளை அந்த எலும்புகளோடு பேச சொல்லுகிறார், கர்த்தருடைய வார்த்தைகள் வந்தவுடனே அற்புதமான காட்சி எசேக்கியேல் கண்களுக்கு முன்பாக அரங்கேறுகிறது கிட்டத்தட்ட ஒரு படைப்பை நேரடியாக காண்கிறார்.

எலும்புகள் ஒன்றோடு ஒன்று இனைந்து, நரம்புகளால் இணைக்கப்பட்டு, தசைகள் உண்டாகி, தோலினால் மூடப்படுகிறது.


ஆனால் அவைகளுக்குள் ஜீவன் இல்லை உடனே கடவுள் தன ஆவியை அனுப்பினார், நான்கு புறங்களிலிருந்தும் கர்த்தருடைய ஆவி அந்த உடல்கள் மீது மோதினவுடனே அவைகள் உயிர் பெற்று சேனைகளாய் எழும்பி நின்றன.

உலர்ந்துப்போன எலும்புகளுக்கு உடல் கொடுத்தது அவர் வார்த்தை, உடல்களுக்கு உயிர் கொடுத்தது அவர் ஆவி. இவ்வளவு வல்லமை மிக்க ஆவியை தன் ஜனத்திற்கு கொடுத்திருக்கிறேன் என்று கடவுள் சொல்லுகிறார், அப்படியானால்  எவ்வளவு துன்பத்திலும் எழும்பி நிற்கிற ஆற்றலும் முன்னேறுகிற துணிவும் கடவுள் நமக்குள் வைத்திருக்கிறார்.

பரிசுத்தாவியின் அபிஷேகத்தை ஞானஸ்நானத்தின் வழியாக பெற்றுக்கொண்ட நாம் சாதாரனமானவர்களல்ல, காரணம், எவ்வளவு பெரிய துன்பத்தையும் எதிர்த்து நின்று ஜெயிக்கக்கூடிய ஆற்றலை நமக்குள் இருக்கிற ஆவியினாலே நமக்குள்ளேயே பெற்றவர்கள்.


எனவே நமக்குள் இருக்கிற வார்த்தையான கிறிஸ்துவையும்,  ஆவியானவரையும்  நம்புவோம், துன்பங்களை துணிவுடன் வென்று ஆவியில் நிலை நிற்போம் ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்




No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews